ஜூன் மாத நாவல் - இது வானின் பூபாளம்

Image
  NM tamil novel world தளத்தில் நேற்று முதல் ஆரம்பம். குடும்ப அரசியலால் பிரியும் வான்மதியும் பூபாலனும் இணைவார்களா? தெரிந்துகொள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! இது வானின் பூபாளம் – Tamil Novels | Nithya Mariappan

அலைவரிசை 49

 



“ஒருத்தர் ஃபேக்கா பழகுறாங்கனு எப்பிடி கண்டுபிடிக்கலாம் தெரியுமா? அவங்க எல்லார் கிட்டவும் நல்ல பேர் வாங்குவாங்க... ஒருத்தரால எல்லார் கிட்டவும் நல்லவங்க பட்டம் வாங்க முடியுதுனா அவங்க கண்டிப்பா நடிக்கிறாங்கனு அர்த்தம்... நீங்க உண்மையானவங்களா இருந்தா யூ மஸ்ட் கெட் ஃபியூ எனிமீஸ்... எதிரியா தான் இருக்கணும்னு அவசியமில்ல... அட்லீஸ்ட் உங்களை பிடிக்காதவங்க கொஞ்சபேராச்சும் இருப்பாங்க... சோ எல்லார் கிட்டவும் நல்ல பேர் வாங்குறதுக்காக உங்க ஒரிஜினாலிட்டிய இழந்துடாதிங்க... ஃபேக் பெர்சனா மாறிடாதிங்க... நாலு பேர் நாலு விதமா பேசுவாங்கனு நம்மளை நம்ம மாத்துனா நோ யூஸ், பிகாஸ் அந்த நாலு பேர் நம்ம வாழ்க்கைய வாழப்போறதில்லயே”

                                              -கே.கேவின் மனதின் குரல்

“காலம் மாறிப்போச்சும்மா... இப்பல்லாம் நம்ம ஊர் கல்யாணத்துலயும் மெஹந்தி, சங்கீத்னு வடக்கத்தி பழக்கத்த கொண்டு வந்துட்டாங்க... சொன்னா இந்த பொண்ணு எங்க கேக்குறா?”

சலித்துக்கொண்டபடியே கைகளில் மருதாணியிட்டுக் கொண்டிருந்தவர் மணப்பெண் அஞ்சலியின் அன்னை.

“கல்யாணம்ங்கிறது வாழ்க்கைல ஒரு தடவை வர்ற விசேசம்... அதை அவ இஷ்டப்படியே நடத்திட்டா நல்லது தானக்கா” இது அவரது தங்கை.

அவர்களின் பேச்சைக் கேட்டபடி மருதாணியை ஊதி ஊதி காய வைத்துக்கொண்டிருந்த பிரக்ருதி தன்னருகே அமர்ந்திருந்த மஹதியின் தோளை இடித்தாள். அவள் மஹதியோடு அஞ்சலியின் மெஹந்தி நிகழ்வுக்கு வந்திருந்தாள்.

கடைசி நேரத்தில் அணியவிருந்த ஆடையில் பிரச்சனை ஏற்பட்டதால் பிரக்யா கவினோடு சற்று தாமதமாக வந்து சேர்ந்தாள். வந்தவள் அஞ்சலியோடு பேசிப் பழகி அவளுடனே மேடையில் சென்று நடனமாடிக் கொண்டிருந்தாள்.

அவளை ஊக்குவித்தபடியே “உன் பெரியம்மாக்கு மெஹந்தி சங்கீத் வைக்குறது பிடிக்கலயாம்... ஊரையே சுத்தி சுத்தி அடிச்ச மண்டூஸ் புயல் உன் பெரியம்மாவையும் தூக்கிட்டுப் போயிருந்தா நல்லா இருக்கும்ல... ஆனா உன் சித்தி பரவாயில்லடி” என்றாள் பிரக்ருதி.



மஹதி அவளை முறைக்கவும் தோள்களைக் குலுக்கிக் கொண்டாள்.

“அவங்க காலத்துல கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை முகத்த பாத்திருக்க கூட மாட்டாங்க... இப்ப ப்ரீ-வெட்டிங் போட்டோஷூட், மெஹந்தி, சங்கீத்னு பொண்ணும் மாப்பிள்ளையும் கேஸ்வலா பழகிக்கிறதுக்கு நிறைய வழி இருக்கு.. அஞ்சுவும் தனா மாமாவும் டுமாரோ நைட் பார்ட்டி வேற குடுக்குறாங்க... அது இன்னும் பெரியம்மாக்குத் தெரியாது”

“என்ன பார்ட்டி? ‘இது’வா?”

கண் சிமிட்டிவிட்டு தண்ணீர் குடிப்பது போல சைகை காட்டினாள் பிரக்ருதி.

“அடியே!” என்ற மஹதி அவளது தோளில் பட்டென்று அடி வைத்தாள்.

“ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேன்டி... ஆல்கஹால்னு ஸ்பெல் பண்ணுனா கூட எங்கப்பா என்னைய வீட்டை விட்டு துரத்திடுவார்”

“நீ அப்பிடியே பயந்துட்ட... நான் அதை நம்பிட்டேன்”

மஹதி கிண்டல் செய்த போது மணப்பெண் அஞ்சலி வந்து இருவரையும் எழுப்பி விட்டாள். ஏன் என புரியாது விழித்தவர்களிடம்

“ஸ்டேஜ்கு வாங்க... டான்ஸ் பண்ணலாம்” என்று இழுத்துச் சென்றாள்.

“எனக்கு டான்ஸ்கும் ஏழாம் பொருத்தம்” என புலம்பியபடி சென்ற பிரக்ருதி வேறு வழியின்றி கையை காலை ஆட்டி வைத்தாள்.

மஹதிக்கு நடனம் வருமென்பதால் அவள் லாவகமாக ஆட அதைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த கவின் விட்ட ஜொள்ளில் அந்த ஐந்துநட்சத்திர ஹோட்டல் மிதந்தது.

பிரக்ருதி ஆடத் தெரியாமல் அதிக நேரம் சமாளிக்காமல் கீழே இறங்கி வந்தவள் கவினிடம் வம்பளக்க ஆரம்பித்தாள்.

“இங்க ஒரு மினி டைட்டானிக் விடுற அளவுக்கு தண்ணியா இருக்குப்பா” என்று கலாய்த்தபடி அணிந்திருந்த லெஹங்காவை விரல்களால் பிடித்துக்கொண்டாள்.

“அப்பிடியா? அப்ப வா நம்ம தண்ணில முங்கி முங்கி விளையாடலாம்” என்றபடி அவளது கழுத்தை கரத்தால் வளைத்தவன் முழுகுவது போல நடிக்க ஆரம்பித்தான்.

“ஐயோ! கொலை கொலை... யாராச்சும் காப்பாத்துங்க” 

“க்ஹூம்”

இருவரும் விளையாட்டிலிருந்து கவனம் சிதறி யார் தங்கள் பின்னே நிற்பது என பார்க்க அங்கே இருவரையும் கேலி கலந்த பார்வையும் அலட்சியமான உடல்மொழியுமாக பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் கேசவ்.

அவனை அங்கே எதிர்பாராத பிரக்ருதி திருதிருவென விழிக்க அவளது காதில் மெதுவாக முணுமுணுத்தான் கவின்.

“உன்னோட எக்ஸ் ரோமியோ எங்க போனாலும் உன்னை விடாம துரத்துறான்டி... காதலோட வலிமைய பாரேன்... உண்மை காதல் யாரென்றால் உன்னையும் அவனையும் சொல்வேனே” 

அவன் பாட்டு வேறு பாடியதில் பிரக்ருதிக்கு கடுப்பு மேலிட அவனது காலை நறுக்கென தனது ஸ்டில்லட்டோவால் மிதித்தாள்.

“அவுச்” 

வலியோடு நொண்டி அடித்தவன் “ஏன்டி மிதிச்ச?” என பிரக்ருதியிடம் சண்டை பிடிக்க கேசவின் எரிச்சல் அவனது ‘டி’யில் இருமடங்கானது.

கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி “உங்க கொஞ்சல் குலாவல் லவ் ட்ராமாவ ஒரு ஓரமா போய் வச்சுக்கோங்க... இது டீசண்டான பீபிள் வந்து போற இடம்” என அமர்த்தலாக அவன் மொழிந்ததும் பிரக்ருதிக்குக் காதில் புகை வராத குறை.

“டீசண்டான பீபிள் வர்ற இடத்துல சாருக்கு என்ன வேலையாம் கவின்?”

“அதை ஏன்டி என் கிட்ட கேக்குற?”

மீண்டும் அவன் ‘டி’ போட கேசவ் அடுத்தகணம் அவனை நெருங்க கவின் வேகமாக ஓடிச்சென்று பிரக்ருதியின் பின்னே ஒளிந்து கொண்டான். 

“உங்க சண்டையில என்னை இழுத்துவிடாத பக்கி... இந்த ஆளு வேற பாக்குறதுக்கு பல்கா இருக்கான்... உங்க பகையில எனக்குப் பால் ஊத்திடாதிங்க தெய்வங்களே... அப்புறம் மஹதி வாழ்க்கை பாழாயிடும்” என்று அவன் புலம்ப பிரக்ருதி அவனுக்குத் தைரியம் கூறுவது போல அவனது கையை அழுத்தினாள்.



கேசவ் அவளுக்குப் பின்னே நின்றவனை முறைத்துவிட்டு “இன்னொரு தடவை நீ இவளை ‘டி’ போட்டு கூப்பிட்டா உன் உடம்புல உயிர் இருக்காது” என்று அடிக்குரலில் மிரட்டியதில் கவினோடு சேர்ந்து பிரக்ருதியும் மிரண்டு போனாள்.

“என் ஃப்ரெண்ட் என்னை எப்பிடி வேணும்னாலும் கூப்பிடுவான்... உனக்கென்ன? ஃபங்சனுக்கு வந்தோமா கிப்ட் குடுத்தோமா சாப்பிட்டோமானு இருக்கணும்... என் பெர்ஷ்னல்ல தலையிடுற உரிமை உனக்கு இல்ல கிரிஷ்”

அவள் அதிகாரமாக சொல்லும் போதே மெதுவாக நழுவினான் கவின்.

“எனக்குத் தான் முழு உரிமை இருக்கு... எக்ஸ் லவ்வரா இருந்தாலும் நான் தான் உன்னோட ஃபர்ஸ்ட் லவ்வர்... அந்த உரிமைய சொல்லுறேன்”

“எக்ஸ் லவ்வர், ஃபர்ஸ்ட் லவ்வர் வரிசையில ஒர்ஸ்ட் லவ்வரையும் சேர்த்துக்க... ரைமிங்கா இருக்கும்”

உதட்டைச் சுழித்து அலட்சியாமாக மொழிந்துவிட்டு நகர தனஞ்செயன் கேசவை அழைத்துச் செல்ல வந்தான்.

“வாங்க சார்... நீங்க ரிசப்சனுக்குத் தான் வருவிங்கனு நினைச்சேன்” என்றபடி வரவேற்றான்.

“நானும் ஷ்ரவனும் அப்பிடி தான் ப்ளான் பண்ணிருந்தோம்... பட் எங்க ப்ளான்ல சின்னதா சேஞ்ச் நடந்துடுச்சு... அதுக்குக் காரணம் உங்க வருங்கால மனைவி கூட டான்ஸ் ஆடிட்டிருக்குறாங்களோ பிரக்யா அவங்க தான்”

“அவங்க?”

“ஷ்ரவனோட கேர்ள் ஃப்ரெண்ட்”

தனஞ்செயன் அடக்கப்பட்ட சிரிப்போடு அவனை தன்னோடு அழைத்துச் சென்றான்.

கேசவின் கண்கள் பிரக்ருதியைத் தேட அவளோ இன்னும் கவினோடு தான் அமர்ந்திருந்தாள்.

அவன் சும்மா இல்லாமல் மெஹந்தி வைத்திருந்தவளின் உள்ளங்கையில் எலுமிச்சை சாறை பஞ்சினால் ஒற்றிக்கொண்டிருக்க இக்காட்சி கேசவின் பார்வைக்குத் தப்பவில்லை.



“விட்டா கால்லயே விழுந்துடுவான் போல” அலட்சியமாக மனதிற்குள் சொல்லிக்கொண்டான் கேசவ்.

கவின் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்துவிட்டு “உன் ஆளு என்னையவே பாக்குறான் கிருதி” என்க

“இன்னொரு தடவை அவனை என் ஆளுனு சொன்னா உன் பல்லை உடைச்சிடுவேன் எருமை” என்றபடி அவனை முறைத்தாள் பிரக்ருதி.

கவின் வாயைக் கைகளால் பொத்திக்கொண்டவன் “எதுல ஒத்து போறிங்களோ இல்லையோ அடிதடில ரெண்டு பேரும் செமயா ஒத்து போறிங்கடி... பிசாத்து காரணத்துக்காக சண்டை போட்டுக்குறத மட்டும் நிறுத்துனிங்கனா வருங்காலத்துல வரலாறு உங்களை ஆதர்ச தம்பதிகள்னு கொண்டாட கூட வாய்ப்பு இருக்கு” என்றான்.

பிரக்ருதி முறைப்பை விடுத்து புன்னகைத்தாள்.

“நீயும் ஆம்பளை தானே... சோ உனக்கு நான் சொன்ன ரீசன் பிசாத்தா தான் தோணும்” என்றவள் மஹதி அவர்களை நோக்கி வரவும் “மஹி வர்றா... அநேகமா உன்னை அவ கூட டான்ஸ் பண்ண கூப்பிடுவானு தோணுதுடா” என்றாள்.

“அடப்போம்மா” என அவன் சலிக்கும் போதே அவர்களிடம் வந்து நின்ற மஹதி பிரக்ருதி கூறியது போலவே கவினைத் தன்னோடு நடனம் ஆடும்படி அழைப்பு விடுக்க அவனுக்குச் சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை.

இருவரும் சென்று மேடையில் நடனமாட பிரக்ருதி அதை ரசித்துக் கொண்டிருந்தாள். அப்போது தான் அவளது வேலை நேரத்துக்கு இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே பாக்கி இருப்பதை மொபைலில் பார்த்துவிட்டு பதறி எழுந்தாள்.

பிரக்யாவை அழைத்தவள் “நான் ரூம்ல போய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிக்கிறேன்... நீ என்னோட லெஹங்காவ எடுத்துட்டுப் போயிடு” என்க

“ஒரு நாள் கூட லீவ் போடமாட்டியாக்கும்? போடி” என்று குறை சொன்னபடி அவளைத் தொடர்ந்தாள் பிரக்யா.

இருவரும் மணப்பெண்ணுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையை அடைந்ததும் பிரக்ருதி தனது ஷோல்டர் பேக்கில் வைத்திருந்த ஜீன்ஸ் ஷேர்ட்டுக்கு மாறினாள்.

கையிலிருந்த மெஹந்தி காய்ந்துவிட அதை கழுவி விட்டு தனது கரம் சிவந்திருப்பதை பிரக்யாவிடம் காட்டி பெருமை பேசிக்கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.

மணமக்களிடம் விடைபெற வந்தவளின் பார்வை வேண்டுமென்றே கேசவின் பக்கம் சென்று மீண்டது.

“நான் கிளம்புறேன் ப்ரோ... நாளைக்குப் பார்ட்டில மீட் பண்ணலாம் அஞ்சு” என்றவள் அவர்களிடம் கைகுலுக்கிய போது அவளது கரத்தில் சிவந்திருந்த மெஹந்தியைப் பார்த்தும் பார்க்காதது போல இருந்தான் கேசவ்.

“ஏன் அதுக்குள்ள கிளம்புறிங்க? நீங்க செம ஃபன்னு மஹி சொன்னா... கொஞ்சநேரம் இருங்க ப்ளீஸ்” என்று அஞ்சலி வேண்டிக்கொள்ள

“நாளைக்குப் பார்ட்டிக்கு கண்டிப்பா வருவேன் அஞ்சு... இட்ஸ் மை ப்ராமிஸ்... என்னை விட இவ நல்லா ஃபன் பண்ணுவா... நானே கூப்பிட்டாலும் இவ வரமாட்டா... ஏன்னா வேண்டியவங்க இங்க இருக்காங்க” என்று குறும்பாக பிரக்யாவையும் ஷ்ரவனையும் பார்வையால் காட்டியபடி கூறியவள் கிளம்பினாள்.

அவர்களுக்கு இருக்கும் பிரச்சனையைப் பேசித் தீர்த்துக்கொள்ளட்டுமென இடத்தைக் காலி செய்தாள் பிரக்ருதி.

பிரக்யாவோ ஷ்ரவனை லட்சியம் செய்யாமல் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இருக்க மஹதி அவளைத் தங்களோடு ஆட வரும்படி அழைத்தாள்.

“மூட் சரியில்ல மஹி... நீ கவின் கூட டூயட் பண்ணு போ”

அவள் சரியென்று கூறிவிட்டு வேலையைக் கவனிக்க சென்றுவிட அஞ்சலியின் அன்னை இன்னும் பிரக்யா மெஹந்தியிடாமல் இருப்பதை பார்த்துவிட்டு அவளைத் தன்னோடு அழைத்துச் சென்றார்.

“எனக்கு என்னமோ இந்த பங்சன்ல பெருசா இன்ட்ரெஸ்ட் இல்லடாமா... இந்தப் பொண்ணு அடம்பிடிச்சாளேனு இவங்கப்பா அரேஞ்ச் பண்ணிருக்குறார்” என்றவர் மெஹந்தியிடும் பெண்ணிடம் அவளை அமரச் சொன்னார்.




“நம்ம அஞ்சலியோட ஃப்ரெண்ட்... எங்களுக்கு வச்ச மாதிரி இல்லாம க்ராண்டா வச்சு விடும்மா”

மணப்பெண்ணின் அன்னையே கூறியபிறகு சும்மாவா இருப்பார்கள்? மெஹந்தி பெண் தனது கைவண்ணத்தைப் பிரக்யாவின் கைகளில் காட்ட ஆரம்பித்தார்.

இரு பெண்களும் எதிர்பாராவண்ணம் ஷ்ரவன் அங்கே வந்து அமரவும் சற்று திகைத்தார் மெஹந்தி பெண்.

“சார்?”

“நான் இவங்க பாய் ஃப்ரெண்ட் தான்... கேரி ஆன்” என்றவன் நகரப்போவதில்லை என்பது புரிந்தும் பிரக்யா அவனைக் கண்டுகொள்ளவில்லை.

ஷ்ரவன் ஒரு நிமிடம் பொறுமை காத்தான். பின்னர் அவளது கன்னத்தை நிமிண்டியவன் “ஓவரா பண்ணாத... கொஞ்சம் அபிஷியல் வொர்க்... அதான் உன்னோட கால்சை எடுக்க முடியல... பதிலுக்கு நீயும் தான் நான் ஃபிப்டி மிஸ்ட் கால்ஸ் குடுத்தும் அட்டெண்ட் பண்ணலையே... ரெண்டுக்கும் சரியா போச்சு... இப்ப ஸ்மைல் ப்ளீஸ்” என்க பிரக்யாவோ வேகமாக விலக எத்தனித்தாள்.

“மேடம் நகர்ந்தா மெஹந்தி அலுங்கிடும்” 

“நல்லா சொல்லுங்க... எப்பவும் அவசரம் தான்” என்று மீண்டும் அவளது கன்னத்தை நிமிண்ட வந்தவன் பிரக்யா எரிமலைக்குழம்பை விழிகளில் கக்கவும் ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டான்.



“இடத்த காலி பண்ணு ஷ்ரவன்... என்னை இரிட்டேட் பண்ணாத” 

“சாரி சாரி சாரி... நான் இனிமே இப்பிடி நடந்துக்க மாட்டேன்”

அவன் மன்னிப்பு கேட்கும் போதே அவனது மொபைல் இசைத்தது. பிரக்யா அவசரமாக தொடுதிரையைப் பார்க்க அதில் ‘நிகிதா காலிங்’ என்ற எழுத்து வந்தது.

அதை ஷ்ரவனும் பார்த்துவிட்டான். 

“நிகிதா யாரு?”

வேகமாக கேட்டாள் பிரக்யா. ஷ்ரவனோ உடனே தேடியது கேசவைத் தான். அவன் அங்கே இல்லை என்றதும் அவசரமாக எழுந்தவன் பிரக்யாவிடம் சொல்லிக்கொள்ளாமல் “ஹலோ நிகிதா” என்றபடி நகர்ந்துவிட்டான்.

பிரக்யா செல்பவனைப் பார்த்தபடி சிலையாக அமர்ந்திருந்தாள். யாரந்த பெண் என்ற கேள்வி அவளுக்குள் அரிக்க ஆரம்பித்தது. ஒருவேளை இவளால் தான் ஷ்ரவன் தன்னிடம் முன்பு போல பேசுவதில்லையோ என்ற சந்தேகம் அசட்டுத்தனமாக எழுந்தது.

அதே நேரம் பிரக்ருதியோ ஹோட்டல் வாயிலில் ரேபிடோ பைக் டாக்சிக்காக காத்திருந்தாள். ஆனால் வந்தது என்னவோ கேசவின் கார் தான். அதிலிருப்பவன் அவன் தான் என்று தெரியாததால் அவள் கண்டுகொள்ளாமல் நிற்க மெதுவாக முன்பக்க கண்ணாடி இறங்கியது.

அதில் அவனைக் கண்டதும் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டாள் பிரக்ருதி.



“ஹலோ” விரலை சொடுக்கி அவன் அழைத்த தொனியில் புருவத்தை உயர்த்தியபடி திரும்பினாள்.

“எக்மோர் தான? நான் அங்க தான் போறேன்... கம் அண்ட் சிட்” என்றான்.

“நோ தேங்க்ஸ்... நான் ரேபிடோல போயிடுவேன்”

கேசவ் சற்றும் தயங்காமல் “ஐ டோண்ட் ஹேவ் எனி ஃபீலிங்ஸ் அபவுட் அவர் பாஸ்ட்... நீயும் அப்பிடி தான்னா கார்ல வரலாம்” என்றான்.

பிரக்ருதிக்கு அவனது நடவடிக்கை புதிராக இருக்க ஏறாமல் தயங்கி நின்றாள்.

“உன் மேல எனக்குச் செம கோவம் தான்... பட் கொலை பண்ணுற அளவுக்குலாம் போகமாட்டேன்... என் கிட்ட ஆசிட் பாட்டில் கூட இல்ல... வேணும்னா செக் பண்ணிக்க” என்றபடி அவன் காரிலிருந்து இறங்க முற்பட

“உனக்கு எதுக்கு ஆசிட்? நீ வாயை திறந்தாலே லாவா வழியும்... தெரிஞ்சும் உன் கூட கார்ல வருவேனா? நீ இவ்ளோ கம்பெல் பண்ணுறப்ப இன்னும் யோசனையா இருக்கு” என்றாள் பிரக்ருதி.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே ரேபிடோ பைக் வந்துவிட கேசவிற்கு கிண்டலாக டாட்டா காட்டியபடி அதில் ஏறிக்கொண்டாள் பிரக்ருதி.

கவினோடு அவள் நெருங்கி பழகுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் கடுப்போடு இருந்தவன் பிரக்ருதி பண்பலை நிலையத்துக்குக் கிளம்புவதை பார்த்ததும் அவள் பின்னே வந்த கவினைக் கண்டதும் இன்னும் எரிச்சலுற்றான். அது பொறாமை என்பதெல்லாம் அவனுக்குப் புரிந்துவிட்டால் தான் எவ்வளவோ நல்லதே! ஆனால் அம்மாதிரி அதிசயங்கள் உடனே நிகழ்வதில்லையே!

மாறாக அவன் வேறு விதமாக யோசித்தான். அந்த யோசனையில் உதித்தது தான் பிரக்ருதியைக் காரில் ஏற்றும் அசட்டு எண்ணம்.

“உன்னோட இந்நாள் காதலனுக்கு முன்னாள் காதலைப் பத்தி ஒரு டெமோ காட்ட வேண்டாமா?” என்ற மைண்ட் வாய்ஸ் வேறு.

ஆனால் அவனது எண்ணத்தை உடைப்பதை போல் சரியான நேரத்துக்கு ரேபிடோ பைக் டாக்சியும் வர மெய்யாகவே எக்மோர் வரை செல்ல வேண்டியதிருந்ததால் காரைக் கிளப்பினான் கேசவ்.

Comments

புத்தக வெளியீடு அறிவிப்பு

உன்னில் இதயம் அளாவுதே, மதுரமாய் நின் காதல், ஒரு காதலும் சில கவிதைகளும், அன்பனின் ஆரபி - இந்த நான்கு நாவல்களும் இப்போது அருணோதயம் பதிப்பகத்தில் கிடைக்கும். வாங்க விரும்புகிறவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்
உறவுகளால் இணைந்து உறவுகளால் பிணையும் சங்கவி - சரபேஸ்வரனின் காதல் கதை - குடும்ப நாவல்

Follow this blog for story Updates - என்னுடன் இணைந்திருங்கள் மக்களே!

Followers

Nithya Mariappan Audio Novels

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்
யாவும் நீயாக மாறினாய் - புத்தம் புது முழு நாவல் - நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள் சேனலில்

Copyright ©️ 2018 - 2025 Nithya Mariappan. All rights reserved .

This blog is managed by Nithya Mariappan. All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this blog will result in immediate legal action against the person concerned.