ஜூன் மாத நாவல் - இது வானின் பூபாளம்

Image
  NM tamil novel world தளத்தில் நேற்று முதல் ஆரம்பம். குடும்ப அரசியலால் பிரியும் வான்மதியும் பூபாலனும் இணைவார்களா? தெரிந்துகொள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! இது வானின் பூபாளம் – Tamil Novels | Nithya Mariappan

அலைவரிசை 57

 



“வானம் நிரந்தரமா அங்க இருக்குற சூரியன், நிலா, நட்சத்திரங்களுக்கு மட்டுமில்ல, அதுல பறக்குற பறவைங்களுக்கும் சொந்தம்... இவ்ளோ பெரிய வானமே பொதுச்சொத்தா இருக்குறப்ப மனுசங்க மட்டும் ஏன் செல்வாக்கு, அதிகாரத்த தனக்கு மட்டும் சொந்தமாக்கிக்க துடிக்கிறாங்கனு புரியல... ஒரு மனுசனுக்கு அடிப்படையான தேவை ஃபுட், ஷெல்டர், ட்ரஸ்... இப்ப அது கூட வேலையையும் சேர்த்துக்கலாம்... பிகாஸ் வேலைனு ஒன்னு இல்லனா மத்த மூனும் இம்பாசிபிள்... அதிகாரமோ செல்வாக்கோ அடிப்படையானது இல்ல... அது சமுதாயத்தால நமக்கு குடுக்கப்படணுமே தவிர கீழ்த்தரமா இறங்கி அதை அடையக்கூடாது... எந்த ஒரு மனுசன் அதிகாரவெறி, செல்வாக்குப்பசிக்கு அடிமையா மாறிட்டானோ அவனுக்கு வாழ்க்கையில திருப்திங்கிற ஒன்னு வரவே வராது... சாதாரண மக்களை மாதிரி சின்ன சின்ன சந்தோசங்களை அவங்களுக்கு ரசிக்கத் தெரியாது.

                                              -கே.கேவின் மனதின் குரல்

அபராஜித் ஷ்ரவனையும் கேசவையும் தவிப்போடு பார்த்தான்.

“எனக்குப் பொண்ணுங்க கூட முன்ன பின்ன பேசி பழக்கமில்ல சார்” என்றான் லட்சம் முறையாக.

“நிகிதா கிட்ட பேசுனியே, அது என்ன கணக்கு?” என ஷ்ரவன் கிடுக்குப்பிடி போட 

“அது நீங்க எனக்குக் குடுத்த வேலை சார்... வேலை விசயத்தை தவிர வேற எதுக்காகவும் நான் பொண்ணுங்க கிட்ட பேச மாட்டேன்” என்றான் பரிதாபமாக.

“இதுவும் வேலை தான் அபி... எனக்காக செய்ய மாட்டிங்களா?” என கேசவ் கேட்கவும் அமைதியானவன் வேறு வழியின்றி சென்னை சிட்டி பண்பலைக்கு அழைக்க துவங்கினான்.

கால் வெயிட்டிங்கில் இருக்க “ஆல்ரெடி யாரோ லைன்ல இருக்காங்க சார்... அவங்க பேசி சாங் போட்டதுக்கு அப்புறம் நான் ட்ரை பண்ணட்டுமா?” என்றவனை கேசவ் முறைக்க அவன் மீண்டும் முயற்சி செய்தான்.

கிட்டத்தட்ட பத்து நிமிட காத்திருப்புக்குப் பிறகு பிரக்ருதி அவனது அழைப்பை ஏற்றாள்.

“நம்மளோட அடுத்த காலர் வந்தாச்சு... ஹாய் சொல்லுங்க... உங்க நேம் என்ன?” என அவள் ஆர்.ஜேவின் உற்சாகத்தோடு படபடவென கேட்க



“செங்கல்பட்டுல இருந்து அபி பேசுறேன் மேடம்” என பொய்யுரைத்தான் அபராஜித்.

“ஓ.கே அபி... இன்னைக்கு நம்ம ப்ரோகிராம்ல கேட்ட கேள்விக்கு நீங்க என்ன பதில் வச்சிருக்கீங்க?” என அவள் வினவவும் 

“கேள்வியா? என்ன கேள்வி மேடம்?” என புரியாமல் கேட்டான்.

“ஓ! நீங்க கேள்விய கவனிக்கலையா? இட்ஸ் ஓ.கே... மறுபடியும் சொல்லுறேன்... காதலோட அருமை ஒன்னா சேர்ந்திருக்குறப்ப புரியுமா? இல்லனா பிரிஞ்சதுக்கு அப்புறம் புரியுமா?” 

“ஒன்னா இருக்குறப்ப தான் மேடம்”

“ஏன்னு ரீசன் சொல்லுங்க கேப்போம்”

அபராஜித் என்ன காரணம் கூறுவான்? அவனுக்கும் காதலுக்கும் காத தூரம். இதில் எங்கிருந்து காதல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு அவன் பதிலளிப்பான்?

“என்ன சார் பேசவே மாட்றிங்க?”

அபராஜித் பரிதாபமாக கேசவைப் பார்க்க, டோஷிபா ரேடியோவில் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தவன் மடமடவென எதையோ தட்டச்சு செய்து மொபைலை அபராஜித்திடம் காட்டினான்.

‘காதலை புரிஞ்சிக்க காரணம் தேவையில்ல’ என எழுதியிருக்க அதை அப்படியே ஒப்பித்தான் அபராஜித்.

மறுமுனையில் பேசிக்கொண்டிருந்த பிரக்ருதி “பார்றா! பாயிண்டா பேசுறிங்களே” என சிலாகிக்க

“இந்தக் கேள்விக்கு உங்களோட பதில் என்ன மேடம்?” என்று நைச்சியமாக வினவினான்.

“என் கிட்டவே கேள்வியா? என்னோட பதில் பிரிவு தான் காதலோட அருமைய புரியவைக்கும்... எப்பேர்ப்பட்ட ஒருத்தரோட லவ்வ நம்ம இழந்திருக்குறோம்னு ஃபீல் பண்ணுற டைம் அது தான்... பட் இழந்தவங்களுக்குத் தான் அது அருமைய புரியவைக்குற காலகட்டம்... அவங்க யாரை இழந்தாங்களோ அந்த பெர்ஷன் மூவ் ஆன் பண்ணிட்டுப் போயிட்டே இருப்பாங்க”

“என்ன மேடம் இப்பிடி சொல்லுறிங்க?”

“பின்ன என்னவாம்? ஒரு செடில ஒரு தடவை மட்டும் தான் பூ பூக்கும்னு இருக்குறதுலாம் ஓல்ட் ஸ்டைல் சார்... லவ்ல ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர நம்பிக்கையா சப்போர்ட்டா இருந்தா மட்டும் தான் அந்தப் பிரிவு ரெண்டு பேருக்கும் வலிக்கும்... இல்லனா விட்டா போதும்டா சாமினு மூவ் ஆன் ஆக தான் செய்வாங்க”

பிரக்ருதி நகைச்சுவை ததும்ப பேசுவதாக எண்ணி தனது மனதிலுள்ள எண்ணத்தை வெளிப்படையாக கொட்டிவிட எதற்காக அபராஜித்தை அவளிடம் நிகழ்ச்சியில் பேச சொன்னானோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டதாக எண்ணினான் கேசவ்.

அழைப்பு முடிந்து அபராஜித்துக்காக பிரக்ருதி ஒரு காதல் பிரிவு பாடலை ஒலிபரப்பினாள்.

அபராஜித் பேசி முடித்துவிட்டு நண்பர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

எவ்வளவு பெரிய வேலையைச் செய்து முடித்திருக்கிறார்கள் என அவர்களை பற்றி மலைப்பாக நினைத்தவனுக்கு இப்போது பண்பலையின் ஆர்.ஜே பெண்ணிடம் தன்னை பேச வைக்கும் இந்தச் சிறுபிள்ளைத்தனத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

பேச்சின் சாராம்சம் ஏதோ ஒருவகையில் கேசவைப் பாதித்துவிட்டதென அவனது முகம் போன போக்கிலிருந்து புரிந்துகொண்டவன் இருவரிடமிருந்தும் விடைபெற்றான்.

அவன் சென்றதும் நண்பர்கள் மட்டும் தனித்திருந்தனர்.

“நான் தான் ரொம்ப ஓவரா அவளை பத்தி யோசிச்சு டென்சன் ஆகுறேனோ? அவ ஜாலியா தான இருக்குறா ஷ்ரவன்?” என்றான் கேசவ்.

“இதுவே உனக்கு இப்ப தான் புரியுதா?”

நண்பன் கேட்டதும் குழப்பமாக ஏறிட்டான்.

“அப்ப அவ என்னை லவ் பண்ணவேல்லனு எடுத்துக்கலாமா? பிகாஸ் ட்ரூவா லவ் பண்ணிருந்தா ரெண்டு பேருக்கும் இந்த செப்பரேசன் பெயினா தானே இருக்கணும்? நான் அவளை மறக்க முடியாம டெய்லி நைட் இந்த ரேடியோல அவ குரலை கேட்டுட்டுத் தான் தூங்குறேன்... ஆனா அவளுக்கு கிரிஷ்னு ஒருத்தனை யூ.எஸ்ல பாத்த ஞாபகம் கூட இருக்காது போல... ஊருக்கு வந்ததும் புது ஜாப், புது ஃப்ரெண்ட்னு அவ என்னமோ ஜாலியா தான் இருக்குறா”



வாய் விட்டுப் புலம்பியவனைப் பார்க்க ஷ்ரவனுக்குப் பரிதாபமாக இருந்தது. இத்தனை நாட்கள் பிரக்ருதி மீது அவன் பூசி வைத்திருந்த வெறுப்பு சாயத்தை அவளை மறக்கமுடியாமல் வானொலி நிகழ்ச்சியில் அவள் குரலைக் கேட்கிறேன் என்று சொன்னதன் வாயிலாக அவனே போக்கிவிட்டான் கேசவ்.

பிரக்ருதியை இன்னும் காதலிக்கிறான் என்பது இப்போதும் அவனுக்குப் புரியவில்லை என்றால் ஒரு நண்பனாக அதை புரியவைப்பது தனது கடமையென நம்பினான் அவன்.

“அவளால ஈசியா மூவ் ஆன் ஆக முடியுதுனா தப்பு அவ பக்கம் இல்லனு அர்த்தம் கிரிஷ்”

“அப்ப நான் தப்பு பண்ணுனேன்னு சொல்லுறியா? டேய் பணத்துக்காக என்னை லவ் பண்ணுறேன்னு சொன்னவடா அவ”

“அப்பிடினு யார் சொன்னாங்க? உங்கப்பா அவ கிட்ட நீ யார்னு சொன்னதுக்கு அப்புறமா அவ உன் கிட்ட லவ்வ சொன்னது தான உனக்குப் பிரச்சனை... உங்கப்பா, கிருதி ரெண்டு பேருல யாரோ ஒருத்தர் பொய் சொல்லுறாங்க... அது யார்னு யோசிக்காம நீ கிருதிய ப்ளேம் பண்ணி அவ மனசை உடைச்சது நியாயமாடா?”

“அத்தனை மாசம் அவ கூடவே இருந்திருக்குறேன்... எத்தனை தடவை அவளை லவ் பண்ணுறத ஓப்பனா சொல்லிருப்பேன்? அதை விடு... அவளும் என் கிட்ட எத்தனை தடவை ஃப்ளர்ட் பண்ணிருப்பா! அப்ப அவ நினைச்சா லவ்வ சொல்லிருக்கலாமே... கரெக்டா என் அப்பா கிட்ட பேசுனதுக்கு அப்புறம் தான் அவளுக்கு காதல் ஞானம் பிறந்துச்சாக்கும்?”

“இப்பிடி எதிர்வாதம் பண்ணுனா எந்த தீர்வும் கிடைக்காது கிரிஷ்... இப்ப உன் மனசு வலிக்குதுனா அதுக்கான காரணத்தை நீ தான் தேடணும்... தேட விருப்பமில்லனா அவளை மறந்துடு... சும்மா நைட் நைட் இந்த ரேடியோவ தலைமாட்டுல வச்சி அவ குரலை கேட்டு உன்னை நீயே ஏமாத்திக்காத”

“நான் உன் கிட்ட ஏற்கெனவே சொன்ன மாதிரி அவ கிட்ட டேரக்டா விளக்கம் கேக்கப்போறேன்”

“அவ கிட்ட மட்டும் கேட்டா எந்த யூஸும் இல்ல... உங்கப்பா கிட்டவும் கேக்கணும்”

“ஓ.கே... நாளைக்கு மானிங் சரணைப் பாத்ததும் அவர் எப்பிடி ரியாக்ட் பண்ணுவார்னு தெரியல... சோ...”

“என்ன சோ? ஒழுங்கா அவரைப் பிடிச்சு கேளு... இல்லனா அவர் உன் கிட்ட உண்மைய சொல்லவே மாட்டார்... நீரவ் பிரச்சனைக்கு முடிவு வந்தாச்சு... இப்ப உன் லைஃப் கிளியர் ஆகணும்... உனக்கு கேக்க இஷ்டமில்லனா நீ சைலண்டா இரு கிரிஷ்... நான் அவர் கிட்ட கிருதி பத்தி பேசுறேன்... நீ அதுல தலையிடாம இருந்தா மட்டும் போதும்”

ஷ்ரவன் கட்டளையிட அதற்கு அடிபணிந்தான் கேசவ்.

மறுநாள் காலையில் சரண் வந்து சேர்ந்தான். வந்தவன் தந்தையைத் தேட அவனோடு எதையும் பேசாதவண்ணம் கமலானந்தை கண்காணித்த சுசித்ரா அவர் உறங்குவதாக பொய்யுரைத்தார்.

மெய்யாகவே கமலானந்த் இரவு முழுவதும் உறங்கவில்லை. காலையிலும் கண்ணயராது அதிர்ச்சியில் அமர்ந்திருந்தார். எங்கே சரணை எச்சரித்து எங்கேயும் அனுப்பிவிடுவாரோ என்ற பதற்றமும், பத்மானந்த் தனது மகனுக்கு என்ன தண்டனை கொடுக்கப்போகிறாரோ என்ற கவலையும் அவருக்குள் இருந்தது.

சற்று நேரத்தில் சந்திரமௌலியோடு வந்து சேர்ந்தார் பத்மானந்த். வந்தவரின் கண்கள் சரணைக் கண்டதும் கோபத்தில் இடுங்கியது.

“குட் மானிங் பெரியப்பா” என்றவனிடம் பதில் பேசாமல் சோபாவில் அமர்ந்தவர் “கிரிஷ்” என்று குரல் கொடுக்கவும் கேசவும் ஷ்ரவனும் வந்தனர்.

அவர்களிடம் “சாருக்கு இன்னும் என்ன நடந்துச்சுனு தெரியாது போல... கமலை கூப்பிடுங்க... அவனே சொல்லட்டும்” என்றார்.

சுசித்ரா கணவரை ஹாலுக்கு அழைத்துவர அவரோ அண்ணனை கண்டதும் பயத்தில் எச்சில் விழுங்கினார்.

“பெரியப்பா” என்றவன் பம்மி நின்ற தந்தையைப் பார்த்ததும் என்னவோ தவறாகப்பட பத்மானந்தை தயக்கத்தோடு நோக்கினான்.

பத்மானந்த் இருவரையும் அடக்கப்பட்ட சினத்தோடு பார்த்தார்.

“ஒரு கதை சொல்லட்டுமா உங்க ரெண்டு பேருக்கும்?”

வெகு இலகுவான குரல். இம்மாதிரியான குரலில் அவர் பேசும் தருணங்கள் மிகவும் அபாயமானவை. அவருக்கு எதிராக உள்வேலை செய்யும் சிலரை ஒழித்துக் கட்டிய நேரங்களில் அவரது உடல்மொழியும் குரலும் இலகுவாக இருக்கும் என்பதை அறிந்த இருவர் சந்திரமௌலியும் கமலானந்தும் மட்டுமே.

இப்போது அங்கே நிற்கும் மூன்று இளைஞர்களுக்கும் பத்மானந்தின் நடவடிக்கை புதிராக இருந்தது.

பத்மானந்த் சரணின் குழப்பத்தை ரசித்தார்.

“ஒரு காட்டுல சிங்கம் ராஜாவா இருந்துச்சாம்... அந்த ராஜாக்கு மந்திரினு சொல்லிட்டு குள்ளநரி ஒன்னு அவர் கூடவே சுத்துமாம்... சிங்கம் அதை ரொம்ப நம்பி மதிக்குமாம்... எப்பலாம் வேட்டையாடுதோ அப்பலாம் தனக்குச் சமமான பாகத்தை குள்ளநரிக்கும் குடுக்குமாம்... ஆனா குள்ளநரிக்கு மந்திரியா இருந்து சலிச்சு போச்சு... எத்தனை நாள் தான் பாதி சாப்பாட்டுல காலம் கழிக்குறது? முழு சாப்பாடும் எனக்கே வேணும்னு ஆசைப்பட்டுச்சாம்... சிங்கத்துக்கு எல்லாரும் குடுக்குற மரியாதைய பாத்து குள்ளநரிக்குப் பொறாமை வந்து சிங்கத்துக்குத் தெரியாம அதை கொல்ல ப்ளான் போட்டுச்சாம்... சிங்கம் குகையில ஓய்வெடுக்குறப்ப நம்பிக்கையா வாசல்ல காவலுக்கு குள்ளநரியை நிக்க சொல்லும்... அந்தக் குகைக்குள்ள சிங்கம் நுழைஞ்சதும் அதோட உடம்பை கிழிச்சு கொல்லுற மாதிரி ஷார்ப்பான கல்லை கட்டி பொறி மாதிரி உயரத்துல மாட்டி விட்டு சிங்கத்தை அங்க அனுப்புச்சாம் குள்ளநரி... ஆனா சிங்கத்தோட கெட்டநேரம் அதோட குட்டி முதல் ஆளா குகைக்குள்ள போய் அந்த பொறியில சிக்கி கல் குத்தி இறந்துடுச்சாம்... சிங்கத்தால குட்டி சாவை மறக்க முடியல... ஒரு நாள் அதோட குட்டி செத்ததுக்குக் காரணமான பொறிய வச்சது குள்ளநரினு சிங்கம் கண்டுபிடிச்சு அதை விசாரணைக்கு அதே குகைக்குள்ள அழைச்சிட்டு வந்துச்சாம்...

குள்ளநரி கல்லை தீட்டுன இடத்துல இருந்த மத்த மிருகம் எல்லாம் அதுக்கு எதிரா சாட்சி சொல்ல கோவப்பட்ட சிங்கம் ஒரே அறையில குள்ளநரிய அறைஞ்சு கொன்னு தூக்கு வீசிடுச்சாம்... சரண்! இதுல இருந்து என்ன தெரியுது கண்ணா?”



அவர் கேட்ட விதத்தில் குழம்பிய சரண் பதில் பேசாமல் அமைதியாய் நின்றான்.

“வாட் இஸ் த மாரல் ஆப் திஸ் ஸ்டோரி கமல்?”

அங்கேயும் அமைதி.

பத்மானந்தே அமைதியை உடைத்து பதிலை கூறினார்.

“குள்ளநரிய தனக்குச் சமமா மதிச்சது சிங்கத்தோட தப்பு... தான் சாப்பிட்டு மிச்சமீதிய திங்க வேண்டிய குள்ளநரிக்கு பாதி சாப்பாட்டைக் குடுத்தது ரொம்ப பெரிய தப்பு... யாரை எங்க வைக்கணுமோ அங்க வைக்கலனா அவங்க நம்ம இடத்துக்கு வரணும்னு பேராசைப்பட்டு நம்ம அடிமடியில கை வச்சிடுவாங்க... இப்ப புரியுதா?”

இப்போது அதட்டலாக ஒலித்தது அவரது குரல்.

“என்னாச்சு பெரியப்பா? ஏன் வித்தியாசமா நடந்துக்குறிங்க? பிசினஸ்ல எதாச்சும் பிரச்சனையா?” நல்லவன் போல கேட்டான் சரண்.

“நீ இத்தனை நாளா வயநாட்டுல என்ன பண்ணுன?”

பத்மானந்த் கேட்கவும் “அது ஒரு பிசினஸ் டீலிங் பெரியப்பா” என சளைக்காமல் பொய் கூறினான் அவ.

“யார் கூட டீலிங்? உன் குழந்தைய சுமந்திட்டிருந்த நிகிதா கூடவா?”

“பெரியப்பா”

நடுங்கியபடி வெளியே வந்தது அவனது குரல்.

பத்மானந்த் தலைகுனிந்து நிற்கும் கமலானந்தையும் நடுங்கி கொண்டிருந்த சரணையும் பார்த்து உரத்த குரலில் நகைக்க ஆரம்பித்தார்.

“ஆனந்த்” என அவரை அமைதிப்படுத்த முயன்ற சந்திரமௌலியிடம் 

“பாருடா அப்பனும் மகனும் பயப்படுறதை... என் முதுக்குக்குப் பின்னாடி அவ்ளோ சதி பண்ணிட்டு இப்ப நடுங்குறானுங்க... இவனுங்க தைரியம் இவ்ளோ தான்” என்றார் பத்மானந்த்.

“நயவஞ்சகம் பிடிச்ச ஆளுங்க எல்லாருமே கோழைகள் தான் ஆனந்த்... அவங்களால நேருக்கு நேர் யாரோடவும் தைரியமா மோத முடியாது... அதனால முதுகுல குத்திட்டு ஓடிடுவாங்க” என்றார் சந்திரமௌலி.

“ஆயிரத்துல ஒரு வார்த்தை... சரி! நீங்க பண்ணுன தப்பு எல்லாம் ஆதாரத்தோட வெளிவந்தாச்சு... இப்ப நான் உங்களை மன்னிக்கணுமா? தண்டிக்கணுமா” 

மார்பின் குறுக்கே கைகளைக் கட்டியபடி கேட்டார் பத்மானந்த்.

சரணும் கமலானந்தும் சற்றும் யோசிக்காமல் அவரது காலில் விழுந்தனர்.

“ஏதோ புத்தி தடுமாறி தப்பு பண்ணிட்டோம்... எங்களை மன்னிச்சிடுங்க”

கண்ணீர் விட்டு கதறினர் இருவரும். அவர்களை வெறுப்போடு ஏறிட்டனர் கேசவும் ஷ்ரவனும்.

பத்மானந்த் என்ன சொல்ல போகிறார் என அனைவரும் காத்திருக்க அவரோ “உங்களை நான் மன்னிச்சிட்டேன்... எழுந்திருங்க” என்றார்.

அவரது பதிலில் நயவஞ்சகர்கள் இருவரும் நிம்மதியுற கேசவோ கடுப்பானான்.

“என்னப்பா பண்ணுறிங்க?” என ஆவேசமுற்றவனை அமைதிப்படுத்தினான் ஷ்ரவன்.

“கூல் கிரிஷ்... என் தண்டனைய விட மன்னிப்பு ரொம்ப டேஞ்சரானதுனு இவங்களுக்கு நான் புரியவைப்பேன்” 

பத்மானந்த் புதிரோடு பேசிவிட்டு சந்திரமௌலியைத் தனது அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

சரணும் கமலானந்தும் பத்மானந்தின் மன்னிப்புக்காக சந்தோசப்படவா அவரது புதிர்பேச்சுக்காக பயப்படவா என புரியாமல் குழம்பி நின்றனர்.

அறைக்குள் சென்றதும் சந்திரமௌலி நண்பனிடம் என்ன செய்ய போகிறாய் என வினவ “ரெண்டு பேருக்கும் நான் தண்டனை குடுக்கணும்னா என் கையால கொல்லணும்... ஆனா என் கையில ரத்தக்கறை படியிறதுல எனக்கு விருப்பமில்ல... சோ அவங்களை மன்னிக்கிற விதமா ரெண்டு கிப்ட் குடுக்கலாம்னு இருக்குறேன்” என்றார் அவர்.

“என்னடா?”

“கமலானந்துக்கு நான் குடுக்க போற கிப்ட் புத்திரசோகம்”



“அப்ப சரணுக்கு?”

“அவங்கப்பனுக்குப் புத்திரசோகம் வரணுமா மகனுக்கு என்ன கிப்ட் குடுக்கப்போறேன்னு நீயே யோசிச்சுக்க மௌலி”

மீண்டும் புதிராக பேசியவர் அமைதியாய் இருக்க அவரது வழக்கத்துக்கு மாறான நிதானம் ஏதோ ஒரு பெரிய அசம்பாவிதத்துக்கு முன்னுரை எழுதுவதாக பட்டது சந்திரமௌலிக்கு.

Comments

Post a Comment

புத்தக வெளியீடு அறிவிப்பு

உன்னில் இதயம் அளாவுதே, மதுரமாய் நின் காதல், ஒரு காதலும் சில கவிதைகளும், அன்பனின் ஆரபி - இந்த நான்கு நாவல்களும் இப்போது அருணோதயம் பதிப்பகத்தில் கிடைக்கும். வாங்க விரும்புகிறவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்
உறவுகளால் இணைந்து உறவுகளால் பிணையும் சங்கவி - சரபேஸ்வரனின் காதல் கதை - குடும்ப நாவல்

Follow this blog for story Updates - என்னுடன் இணைந்திருங்கள் மக்களே!

Followers

Nithya Mariappan Audio Novels

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்
யாவும் நீயாக மாறினாய் - புத்தம் புது முழு நாவல் - நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள் சேனலில்

Copyright ©️ 2018 - 2025 Nithya Mariappan. All rights reserved .

This blog is managed by Nithya Mariappan. All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this blog will result in immediate legal action against the person concerned.