பூங்காற்று 42

Image
  நீரஜாட்சி திருமணம் முடிந்த மறுநாளே ரகுநந்தனிடம் தனது நிறைவேறாத திட்டம் பற்றி சொல்ல தக்க தருணத்தை எதிர்நோக்கியிருக்க அவன் ஹோட்டலின் வேலை காரணமாக சென்றுவிட அவளால் அவனிடம் அதை கூறவே முடியவில்லை. அதை தொடர்ந்த நாட்களில் வீட்டில் அனைவரும் ஒரு புறம் ஹர்சவர்தனின் ஹோட்டல் திறப்புவிழாவை பற்றி பேசிக் கொண்டிருக்க இன்னொரு புறம் கிருஷ்ணஜாட்சியும் கரோலினும் சேர்ந்து அவர்கள் திறக்கப் போகிற " டாம் ' ஸ் கஃபே" தொடர்பான வேலைகளில் அலைந்து திரிய இந்த இரண்டு திறப்புவிழாக்களே அங்கிருந்தவர்களின் மொத்த நேரத்தையும் எடுத்துக் கொண்டன. ஹர்சவர்தன் அது விஷயமாக ரகுநந்தனை அழைத்துச் சென்றுவிட நீரஜாட்சி அலுவலக வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினாள். பெரும்பாலான நேரங்களில் அவன் வீடு திரும்பும் போது அவள் உறங்கிப் போயிருக்க அந்த உண்மை வெளிவராமலே இருந்தது. ஆனால் அவளது தோழி கவிதா இது ரகுநந்தனுக்கு தெரியவருவது அவர்களின் உறவுக்கு நல்லதல்ல என்று ஒவ்வொரு முறை போனில் பேசும் போதும் நீரஜாட்சிக்கு அறிவுறுத்துவாள். நீரஜாட்சிக்கு தன்னை இவ்வளவு காதலிக்கும் தன் கணவனிடம் அவன் சம்பந்தப்பட்ட விஷயத்தை மறைத...

🌺 பூங்காற்று 25 🌺

🌺 பூங்காற்று 25 🌺

மாலை அலுவலகம் முடிந்து வீட்டுக்கு நீரஜாட்சி திரும்பிய போது நேரம் கிட்டத்தட்ட ஏழு மணியை நெருங்கியிருந்தது. ஸ்கூட்டியைப் பூட்டிவிட்டு சாவியுடன் அவுட் ஹவுஸை நோக்கி நடைப்போட்ட போது ரகுநந்தனின் கார் வீட்டின் நுழைவாயிலில் உள்ளே வருவதைக் கண்டவள் அதைக் கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் செல்ல முற்பட்டாள். அதற்குள் காரில் இருந்து இறங்கியவன் "நீரு" என்று அழைத்ததில் அங்கேயே நின்றபடி திரும்பினாள் அவள்.

என்ன என்றவாறு அவனைப் பார்க்க ரகுநந்தன் சாவகாசமாக அவள் அருகில் வந்தவன் அவள் கையைப் பிடித்து அதில் டேபை வைக்கவும் நீரஜாட்சி திகைத்தவாறு "இதை ஏன் இப்போ என் கிட்ட குடுக்கிற நீ?" என்று வினவினாள்.

ரகுநந்தன் "சப்போஸ் எனக்கு ஏதாச்சும் ரிப்போர்ட் வேணும்னா உன் கிட்ட எப்போ வேணும்னாலும் நான் கேப்பேன். அதுக்கு இந்த டேப் உன் கிட்ட இருக்கிறது அவசியம். இதுல நான் உனக்கு கால் பண்ணுனா நீ கண்டிப்பா அட்டெண்ட் பண்ணியே ஆகணும். அது வீடா இருந்தாலும் சரி, ஆபிஸா இருந்தாலும் சரி. புரிஞ்சுதா? இப்போ போய் கைவிரலுக்கு எண்ணெய் போட்டு நீவி விட்டுக்கோ. பிகாஸ் டுமாரோ உனக்கு இதை விட நிறைய டைப்பிங் ஒர்க்ஸ் இருக்கும்.  வரட்டா?" என்றவன் விசிலடித்தபடி வீட்டை நோக்கிச் சென்றான்.

தனக்கு முதுகு காட்டி நடந்துச் செல்பவனை என்ன செய்வது என்று புரியாமல் விழித்தவள் கையில் இருந்த டேபை வேண்டாவெறுப்பாக பார்த்துவிட்டு வீட்டினுள் நுழைந்தாள். சிறிது நேரத்தில் கிருஷ்ணஜாட்சியிடம் இருந்து போன் வந்தது.

"ஹலோ நீரு, இன்னைக்கு நைட் நானும், கரோலினும் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகும்டி.  லோன் விஷயமா சில பேப்பர்ஸ் வாங்க ஆடிட்டரை பார்க்க போயிருக்கோம். இங்க எல்லாம் முடிய குறைஞ்சது த்ரீ ஹவர்ஸ் ஆகும்னு ஆடிட்டர் மேம் சொல்லுறாங்க. நீ டைமுக்கு சாப்பிட்டிட்டு தூங்கு. நாங்க வந்துடுவோம்" என்றுச் சொல்லிவிட்டு அவள் போனை வைத்துவிட்டாள்.

நீரஜாட்சி அவர்கள் மூவருக்கும் உப்புமாவைக் கிண்டிவிட்டு தனக்கு ஒரு தட்டில் எடுத்துக் கொண்டவள் அவர்களுக்கு ஒரு ஹாட்பாக்சில் வைத்துவிட்டு தட்டுடன் ஹாலுக்கு வந்தாள். டிவியைப் போட்டுவிட்டு அமர்ந்தவள் பாடல்களில் மூழ்கத் தொடங்கிய தருணத்தில் டேபில் கால் வந்தது.

அதை எரிச்சலுடன் பார்த்தவள் டேபை அணைத்துவிட்டு மீண்டும் பாடல்ளை ரசித்தபடியே உப்புமாவை ஸ்பூனா எடுக்கப் போக ஏனோ விரல்கள் வலிக்கத் தொடங்கியது.

கடுப்புடன் ஸ்பூனை தட்டில் எறிந்துவிட்டு "எல்லாம் அந்த நந்துவால தான். ஃபிங்கர்ஸ் எப்பிடி வலிக்குது? பேசாம கட் பண்ணி தூர எறிஞ்சிடலாம் போல. பெருமாளே! எனக்கு இவன் கிட்ட இருந்து தப்பிக்க ஒரு உபாயத்தைக் காட்டு" என்று வேண்டிக்கொள்ளும் போதே வாயில் கதவை யாரோ திறந்து மூடும் சத்தம் கேட்டது.

யாரென்று பார்க்க அவள் எழும் முன்னரே அந்த அறைக்குள் பிரவேசித்தவனைக் கண்டவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

அதே ஆச்சரியத்துடன் "நீ இங்கே ஏன் வந்த? ஆபிஸ்ல என் உயிரை வாங்குனது பத்தாதா? இன்னும் எதாச்சும் வேலை குடுத்து டார்ச்சர் பண்ணலானு வந்தியோ?" என்று அவள் கேட்க வாயில் நிலையை அடைத்தபடி நின்ற ரகுநந்தன் புன்னகைத்தான்.

அதே புன்னகையுடன் உள்ளே வரவும் நீரஜாட்சி "கிருஷ்ணா உங்க வீட்டுல இருந்து யாரும் இங்கே வரக் கூடாதுனு சொன்னதை மறந்துட்டியா? முதல்ல வெளியே போ" என்று வாசலைக் கை காட்ட அவனோ அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் சோபாவில் அமர்ந்து ரிமோட்டால் சேனலை மாற்றிப் பார்க்க ஆரம்பித்தான்.

அவனது செய்கையில் அயர்ந்து போனவள் "ஹலோ நான் கத்துறது உன் காதுல விழுதா இல்லையா?" என்று அவன் முகத்துக்கு நேராக கை நீட்டிப் பேச அவள் கரத்தைப் பற்றியவன் தன்னருகே அமர வைத்துக் கொண்டான்.

நீரஜாட்சி கோபத்தில் ஏதோ சொல்ல போக அவள் உதட்டில் விரல் வைத்து தடுத்தவன் "பிளீஸ்! ரொம்ப பேசாதே நீரு. ஆல்ரெடி ஐ அம் சோ டயர்ட்! சோ உன் அக்கா சொன்ன உப்பு பெறாத ரூல்ஸை சொல்லி என்னை இன்னும் டயர்ட் ஆக்காதே! அதுக்கான பதிலை நான் அன்னைக்கே மன்னி கிட்ட சொல்லிட்டேன். எந்த ரூலும் என்னை தடுக்காது. புரிஞ்சுதா? இப்போ விரலை நீட்டு" என்றுச் சொல்ல அவளோ அவனது அடுக்கடுக்கான செய்கைகளுக்கு அர்த்தம் புரியாமல் விழித்தாள்.

இது சரி வராது என்று எண்ணியபடி அவளின் கரத்தை தன் கரங்களின் மீது வைத்துக் கொண்டவன் தான் கையோடு கொண்டு வந்திருந்த ஏதோ மூலிகை தைலத்தை அவள் விரல்களில் போட்டு நீவி விட இப்போது தான் நீரஜாட்சிக்கு விரல்களின் வலி தெரிந்தது.

வலியில் முகம் சுளித்தவள் கையை உருவிக்கொள்ள முயல ரகுநந்தன் விடாப்பிடியாக கையை இறுக்கமாகப் பற்றிக் கொள்ளவே முடியாமல் அமைதியானாள்.

"ஃபர்ஸ்ட் நாள்ல ஃபோர் ஹண்ட்ரெட் பேஜ் டைப் பண்ணுறது கொஞ்சம் கஷ்டம் தான். இன்னைக்கு கொஞ்சம் வலிக்கும். டுமாரோல இருந்து உனக்கு இது பழகிப் போயிடும்" என்று அவன் சாதாரணக் குரலில் கூறவே நீரஜாட்சிக்கு எதை வைத்து இவனை அடிக்கலாம் என்னுமளவுக்கு கோபம் வரவே வெடுக்கென்று கையைப் பிடுங்கிக் கொண்டாள்.

"டோண்ட் ஆக்ட் டூ ஸ்மார்ட். ஆபிஸ்ல கொஞ்சம் கூட இரக்கமில்லாம வேலை வாங்கிட்டு இங்கே வந்து டிராமா பண்ணிட்டு இருக்கே. இதுக்கு பேரு தான் பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டி விடுறடதா? ஆபிஸ்ல ராட்சசன் மாதிரி வேலை வாங்கிட்டு இங்கே வந்து கைக்கு மருந்து போட்டு விடலைனு யாரு அழுதாங்க?"

"ஓகே! நானும் தைலம் போட்டு முடிச்சிட்டேன். இனி கையை காத்தாலே எழுந்து வாஷ் பண்ணிக்கோ" என்றவனின் பார்வை டீபாயின் மீது வைக்கப்பட்டிருந்த தட்டின் மீது படவே "இன்னும் சாப்பிடலையா? சிட் டவுன். நான் ஊட்டிவிடறேன்" என்று சொல்ல நீரஜாட்சிக்கு இவனுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது என்ற சிந்தனை தோன்றாமல் இல்லை.

"உனக்கு என் கிட்ட பயம் விட்டுப் போச்சுனு நினைக்கிறேன்" என்றவளை இழுத்துப் பிடித்து அமர வைத்தபடியே

"அப்போ நேக்கு உன் மேல இருந்தது பயம் இல்ல நீரு. தயக்கம் தான். பிகாஸ் என்னோட ஒன் சைட் எமோசனை உன் மேல திணிக்க நான் விரும்பல. இப்போ தான் எல்லாம் தெளிவா தெரிஞ்சுடுச்சே. இனிமே நான் ஏன் தயங்கி தயங்கி உன் கிட்ட பேசணும்?" என்று தெளிவான குரலில் பேசியபடி உப்புமா தட்டை கையில் எடுத்தவன் ஸ்பூனில் எடுத்து அவளுக்கு ஊட்ட முற்பட அவள் சாப்பிட மறுத்தாள்.

"என்னடா தெளிவா தெரிஞ்சு போச்சு உனக்கு?" என்றவளை பார்த்து புன்னகைத்தவன் தட்டை மீண்டும் டீபாய் மீது வைத்துவிட்டு

"எல்லாமே தெரிஞ்சு போச்சு. உன்னோட குட்டி ஹார்ட்ல என் மேல ஏதோ ஒரு ஃபீலிங் இருக்குனு தெரிஞ்சுடுச்சு. அதை நீ சொல்ல வேண்டிய அவசியம் இல்ல நீரு, உன்னோட கண்ணே உன் மனசை நேக்கு காமிச்சு குடுத்துடுத்து. சோ தேவை இல்லாம டயலாக் பேசாம இனிமே ஒழுங்கா ஆபிஸ் வர்ற. சமத்துப்பொண்ணா வேலை எல்லாத்தையும் அடம் பிடிக்காம ஃபினிஷ் பண்ணுற. இப்போ இந்த தட்டுல இருக்கிற உப்புமாவை ஃபினிஷ் பண்ணு பார்ப்போம்" என்றபடி ஸ்பூனை அவள் வாயில் வைக்க அவளுமே எவ்வளவு நேரம் தான் சாப்பாட்டை கண் முன் வைத்துக் கொண்டு அடம்பிடிப்பாள்?

அவன் ஊட்ட நல்லப்பிள்ளையாகச் சாப்பிட்டு முடித்தவள் அவனைக் கேலியாகப் பார்த்தபடி "இந்த கண்கொள்ளா காட்சியை பத்து மாமி மிஸ் பண்ணிட்டாங்களே" என்று உச்சுக் கொட்ட ரகுநந்தன் அந்த தட்டை அலம்பி வைத்துவிட்டு வந்தவன் அவளிடம்

"டோண்ட் வொர்ரி! இப்போ பார்க்கலைனா என்ன? ஃபியூச்சர்ல அவங்காத்துல தானே நீ இருக்கப் போற! அப்போ பார்த்துப்பாங்க" என்றபடி அங்கிருந்து கிளம்ப தயாரானான்.

தைலப்பாட்டிலை எடுத்துக் கொண்டவன் "கதவை உள்பக்கமா லாக் பண்ணிக்கோ. எப்பிடியும் இன்னொரு கீ மன்னி கிட்ட இருக்கும் தானே" என்று சொல்ல அவள் தலையாட்டியபடி அவன் பின்னே சென்றாள்.

அவளுக்கு குட் நைட் சொல்லிவிட்டு தோட்டத்தின் நடுவில் ஓடும் சிமெண்ட் நடைபாதை மீது நடந்துச் செல்பவனை நினைத்து அவளுக்கு ஏனோ கோபம் வரவில்லை. அதன் பின் கதவை தாழிட்டுவிட்டு உள்ளே வந்தவள் சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள்.

அதே நேரம் ஹோட்டலில் இருந்து திரும்பிய ஹர்சவர்தன் அவுட் ஹவுஸில் இருந்து வெளியே வந்த தம்பியைப் பார்த்து திகைத்தவன் அவனை யோசனையுடன் பார்வையிட அவனோ மூத்தவனைக் கண்டுகொள்ளாமல் வீட்டுக்குள் சென்றான். அவனது புறக்கணிப்பு மனதுக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும் அவன் பின்னே சென்ற ஹர்சவர்தன் ரகுநந்தன் அறைக்குள் செல்லும் முன் வேகமாகச் சென்று தம்பியின் கையைப் பிடித்துக் கொண்டான்.

"நந்து! வீட்டில யாருமே என் கிட்ட பேசறதில்லடா. நீயும் என்னை ஒதுக்கி வச்சா என்ன அர்த்தம்?" என்று நைந்த குரலில் கேட்ட அண்ணனை ஒரு கணம் அளவிட்டன ரகுநந்தனின் விழிகள். 

பின்னர் ஒரு பெருமூச்சுடன் "உன்னை ஒதுக்கி வைக்கிறதுக்கு நான் யார்? அப்பிடியே ஒதுக்கி வச்சாலும் நீ ஏன் கவலைப்படறே? நோக்கு அம்மாவை தவிர வேற யாரு எப்பிடி போனாலும் கவலை இல்லையே. அதே மாதிரி என்னையும் நினைச்சுக்கோ. இப்போ கையை விடுறியா? நேக்கு தூக்கம் வர்றது" என்றான் அவன்.

பொட்டில் அடித்தாற்போல பேசும் தம்பியின் வார்த்தைகள் ஹர்சவர்தனின் வருத்தத்தை இன்னும் அதிகரிக்கத் தான் செய்தது.

ரகுநந்தன் அவனது கையை உதறிவிட்டு தனது அறைக்குள் செல்ல ஹர்சவர்தன் விடாப்பிடியாக தொடர்ந்து சென்றான்.

"நந்து அப்பிடி சொல்லாதேடா! நேக்கு நீங்க எல்லாருமே உயிர்டா! உங்களைப் பார்க்காமலோ, உங்களண்ட பேசாமலோ என்னால இருக்க முடியாதுனு தெரிஞ்சும் உன்னால எப்பிடி இந்த மாதிரி பேச முடியுது?"

"நாங்கலாம் நோக்கு உயிர்னே வச்சிப்போம். தென் வாட் அபவுட் கிருஷ்ணா? அவ நோக்கு என்ன பாவம் பண்ணுனானு அம்மா அன்னைக்கு அவ்ளோ பேசறச்ச அவளுக்கு ஆதரவா ஒரு வார்த்தை கூட பேசாம நின்ன நீ? நியாயம்னா எல்லாருக்கும் நியாயம் தான் ஹர்சா. அது என்ன அம்மானு வந்துட்டா மட்டும் உன் நியாயம் ஜகா வாங்கிட்டுப் போயிடறது?"

"நான் அன்னைக்கு அமைதியா இருந்ததுக்கு அது காரணம் இல்லடா நந்து. நான் என்ன நினைச்சேன்னா அம்மா வழக்கம் போல பேசுவா, அப்புறம் சமாதானம் ஆயிடுவானு நினைச்சேன். ஆனா ம்மா கோவத்துல சொன்ன வார்த்தைக்காக கிருஷ்ணா மாங்கல்யத்தைக் கழட்டி குடுப்பானு நான் யோசிக்கவே இல்லடா" என்று சொல்லிவிட்டு சிகையைக் கோதிக் கொண்டவனை என்ன செய்வது என்ற ஆத்திரம் தான் ரகுநந்தனுக்கு.

"அப்போ கோவம் வந்தா அம்மா என்ன வேணும்னாலும் பேசலாம், நோக்கு ஆம்படையாளா வந்த ஒரே காரணத்துக்காக கிருஷ்ணா அதை எல்லாம் ஜடம் மாதிரி கேட்டுட்டே உன் பின்னாடி வந்துடணும். அது தானே சொல்ல வர்றே. சே! டிபிக்கல் இந்தியன் மேள் மெண்டாலிட்டி. அப்ராட் போய் படிச்சா மட்டும் அது மாறவா போறது?"

"நான் அப்பிடி சொல்ல வரலை நந்து..." என்றவனை நிறுத்துமாறு கையுயர்த்தினான் ரகுநந்தன்.

"மனுசனா பிறந்தா அவனுக்கு கொஞ்சமாச்சும் மனசுல நீதி, நேர்மை, நியாயம்லாம் இருக்கணும். என் அம்மா தானேனு அதை விட்டு விலகுனா அவனை மாதிரி கடைஞ்செடுத்த சுயநலவாதி யாரும் இருக்கமாட்டா. அன்னைக்கு நடந்த பிரச்சனைக்கு முழுக்க முழுக்க காரணம் அம்மா தான், அம்மா மட்டும் தான். ஆனா கிருஷ்ணா இப்பிடி நம்ம குடும்பத்து ஆட்களே ஆகாதுனு ஒதுக்கி வச்சதுக்கு காரணம் நீ மட்டும் தான்டா அண்ணா. ஆம்படையானா லெட்சணமா நீ ஒரு வார்த்தை 'அம்மா கிருஷ்ணாவை இப்பிடிலாம் பேசாதேள்னு' சொல்லிருந்தா நானே உன்னை பாராட்டியிருப்பேனே.

நீ அப்போவும் அம்மாப்பிள்ளையா தானே இருந்த. நான் ஒன்னு சொல்லவா! நல்லா நெடுநெடுனு வளர்ந்துருக்கிறதாலயோ, மீசை வச்சிக்கிறதாலயோ மட்டும் ஆம்பளைனு சொல்லிக்க கூடாது. ஒரு நல்ல ஆம்பளைக்கு அழகு தன்னை நம்பி வந்த பொண்ணை யாரு முன்னாடியும் விட்டுக் குடுக்காம இருக்கிறது தான். உத்யோகம் மட்டும் புருஷலெட்சணம் இல்லண்ணா! தைரியமும் புருஷலெட்சணம் தான். அது என்னைக்கு நோக்கு வர்றதோ அன்னைக்குத் தான் உன் வாழ்க்கையில மாற்றம் வரும்" என்று நீண்ட உரையாற்றி முடித்தான்.

தம்பியின் வார்த்தை ஒவ்வொன்றும் செருப்பால் அடித்ததை போல இருக்க ஹர்சவர்தன் முதல் முறையாக தான் அமைதியாக இருந்து கிருஷ்ணஜாட்சிக்கு அநியாயம் இழைத்துவிட்டோமோ என்ற குற்றவுணர்வு தோன்ற அமைதியாக வெளியேறினான்.

சோர்வுடன் நடந்து செல்லும் ஹர்சவர்தனின் தளர்ந்த நடை ரகுநந்தனுக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும் தான் இன்று பேசியது சரியே என்று மனதை தேற்றிக் கொண்டான். ஹர்சவர்தனின் வாழ்க்கையை நேர்ப்படுத்தும் சக்தி அவன் கையில் மட்டுமே உள்ளது என்று ரகுநந்தன் நம்பினான். அதற்கு முதல் அடி அவன் செய்த தவறு என்னவென்று அவனுக்கு உணரவைப்பதே என்பதைப் புரிந்து கொண்டவன் அவனிடம் அதைப் பேசியேவிட்டான்.

இனியாவது அண்ணன் கொஞ்சம் யோசிப்பான் என்பது அவனது நம்பிக்கை. அடுத்த அடியாக அவனுக்கும் கிருஷ்ணஜாட்சிக்கும் உள்ள உறவின் தீவிரத்தை அவர்கள் இருவருக்கும் உணர்த்துவதே! ஆனால் அதற்கு அவனுக்கு நீரஜாட்சியின் உதவி கட்டாயமாக தேவை. முதலில் அவளுக்கு இவர்களின் உறவைப் பற்றி புரியவைக்கவேண்டும். அதன் பின் தான் கோடு போட்டால் அவள் அதில் ரோடே போட்டு விடுவாள் என்ற நம்பிக்கையுடன் அவனும் படுக்கையில் விழுந்து நித்திராதேவியை தழுவிக் கொண்டான்.

Comments

Popular posts from this blog

பூங்காற்று 1