பூங்காற்று 42

🌺 பூங்காற்று 28 🌺
நீரஜாட்சி தோட்டத்தின் ஊஞ்சலில் அமர்ந்திருந்தவள் கிருஷ்ணஜாட்சி ஏன் இன்னும் வரவில்லை என்ற யோசனையுடன் நகம் கடித்தபடி அமர்ந்திருந்தாள். அவளது மொபைலும் சுவிட் ஆப் ஆகியிருக்க அவளுக்காக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை நீரஜாட்சிக்கு. அப்போது தான் வீடு வந்து சேர்ந்தான் ரகுநந்தன்.
தோட்டத்தில் அமர்ந்திருப்பவளைக் கண்டதும் அவளை நோக்கிச் சென்றவன் "இங்கே உக்காந்து என்ன பண்ணிண்டிருக்க?" என்ற கேள்வியுடன் அவனும் ஊஞ்சலில் அமர நீரஜாட்சி நகம் கடிப்பதை நிறுத்திவிட்டு கவலையுடன் அவனைப் பார்த்தாள்.
"கிருஷ்ணாவும் லின்னும் வரலை! அவங்களுக்கு தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன். ரெண்டு பேரோட மொபைலும் சுவிட்ஸ் ஆஃப்னு வருது" என்றாள் கவலையுடன்.
ரகுநந்தன் கேலியுடன் "மன்னி என்ன குழந்தையா? ரொம்ப யோசிக்காம நேத்தைக்கு மாதிரி போய் தூங்கு. அவா ரெண்டு பேரும் வந்துடுவா" என்க
நீரஜாட்சி "உனக்கு என்ன கவலை? அவ எப்போவும் லேட் ஆனா எனக்கு இன்ஃபார்ம் பண்ணிடுவா. இன்னைக்கு அப்பிடி எதுவும் சொல்லலையே. அதான் எனக்கு டென்சன்" என்று யோசனையுடன் வாசலைப் பார்த்தாள் அவள்.
ரகுநந்தனும் யோசனையுடன் அவளைப் பார்த்தபடி அங்கேயே அமர்ந்துவிட நீரஜாட்சி "ஆமா நீ ஏன் இங்கே இருக்க?" என்று கேட்க
"நான் என் அண்ணனுக்கு வெயிட் பண்ணுறேன்" என்றான் அவன் சாதாரணமாக.
"உன் அண்ணன் என்ன குழந்தையா? அந்த ஆறடி பனைமரத்தை யாரும் கடத்திட்டுலாம் போயிட மாட்டாங்க. நீ கிளம்பு" என்ற நீரஜாட்சியை முறைத்தான் அவன்.
"நோக்கு உன் அக்கா ஒசத்தினா நேக்கு என் அண்ணா ஒசத்திடி! நான் அப்பிடி தான் வெயிட் பண்ணுவேன். மிஸ்டர் பட்டாபிராமன் இந்த ஊஞ்சலை நோக்குனு எழுதி வச்சிட்டாரா என்ன?" என்று வம்புக்கு வந்தவனிடம் சண்டையிடும் தெம்பு அவளுக்கு இல்லை.
அவனைப் பார்த்து கும்பிடு போட்டபடியே "உன் கிட்ட ஃபைட் பண்ணுற அளவுக்கு எனக்கு எனர்ஜி இல்ல. ஆபிஸ்ல எம்.டினு ஒரு எருமை மாடு இது தான் சாக்குனு எனக்கு வேலையா குடுத்து கொல்லுது. இங்கே நீ என்னை டார்ச்சர் பண்ணாதே" என்று கடுப்புடன் உரைக்கும் போதே பத்மாவதியும் வீட்டின் வராண்டாவில் நிற்பது அவள் கண்ணில் பட்டுவிட்டது.
எப்போதும் ஹர்சவர்தன் இந்த நேரத்துக்கு வீட்டுக்கு வந்துவிடுவான். அன்று மிகவும் தாமதம் ஆனதால் பதறிப் போய் நின்றார் அவர். வராண்டாவில் அவர் அங்குமிங்கும் நடை போடுவது நீரஜாட்சிக்கே பார்க்க பரிதாபமாகத் தான் இருந்தது.
அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வாயிலில் கார் வரும் சத்தம் கேட்க திரும்பி பார்த்தாள் அவள். ரகுநந்தனோ ஹர்சவர்தன் தான் வருவான் என்று நினைத்தபடி எழுந்தன. ஆனால் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட காரிலிருந்து ஹர்சவர்தனும் கிருஷ்ணஜாட்சியும் இறங்கி நடந்து வர அதைப் பார்த்த மூவருக்குமே அது அதிர்ச்சி.
நீரஜாட்சி சட்டென்று திரும்பி பத்மாவதியை பார்த்தவள் மனதிற்குள் "கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனேள் மாமி? என்னவோ லோகத்துல இல்லாதை பிள்ளைய பெத்த மாதிரி என்ன ஒரு ஆணவப்பேச்சு, இப்போ அவரே அதுக்கு ஆப்பு வச்சிட்டாரா? கம் ஆன் நீரு, இது இப்பிடியே விட்டுட்டா மாமிக்கு சின்ன ஷாக்கா போயிடும். நீ போய் உன் பெர்பார்மன்சை காட்டு" என்று பேசியபடியே முப்பத்திரெண்டு பற்களையும் காட்டியபடி அவர்களை நோக்க அவளின் உடன் பிறந்தவள் தங்கை ஏதோ யோசிக்கிறாள் என்பதை கண்டுகொண்டாள்.
அதற்குள் அவர்கள் இருவரும் வீட்டை நோக்கிய நடைபாதைக்கு வந்துவிட்டனர். ரகுநந்தன் இருவரை ஜோடியாகப் பார்த்ததில் சந்தோசப்பட்டவன் தனது பேச்சுக்கு ஏதோ கொஞ்சம் பலன் இருக்கிறது போலும் என்று எண்ணி திருப்தியடைந்தான்.
ஆனால் நீரஜாட்சியின் இந்தச் சிரிப்பு நல்லதிற்கான அறிகுறி இல்லையென்று கிருஷ்ணஜாட்சியைப் போலவே அவனும் ஊகித்து விட்டான். அவள் அண்ணன் மற்றும் கிருஷ்ணஜாட்சியை நோக்கி முன்னேறிய போது அவனும் கூடவே சேர்ந்து சென்றான்.
நீரஜாட்சி ஹர்சவர்தனை நோக்கி புன்னகைத்தவள் "அத்திம்பேர் நீங்க உங்க ஆத்துக்காரியோட வெளியே போறேனு சொன்னேள், ஆனா எப்போ வருவேள்னு சொல்லலையோன்னோ, அதான் நானும் உங்க தம்பியும் இங்கே வெயிட் பண்ணிண்டிருந்தோம்" என்று கேலியாகச் சொல்லிவிட்டு பத்மாவதியை நோக்கி ஒரு அலட்சியப்பார்வையை வீச ஹர்சவர்தன் கிருஷ்ணஜாட்சி இருவருமே அவளது பேச்சில் அதிர்ந்தனர். ரகுநந்தன் மனதிற்குள் "சரியான டிரமா குயின்" என்று அவளைத் திட்டிக் கொண்டான், செல்லமாக தான்.
ஆனால் பத்மாவதிக்கோ நீரஜாட்சியின் "அத்திம்பேர்" "ஆத்துக்காரி" என்ற வார்த்தை இதயத்தைப் பிசைய மூத்தமகனை அதிர்ச்சியோடு பார்த்தார் அவர். ஆனால் அவரது புத்திரனோ மைத்துனியை இமைக்காமல் பார்த்தபடி நின்றான்.
அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துவிட்டு ஒன்றும் அறியாதவள் போல "சரி அத்திம்பேர், நீங்க களைச்சுப் போயிருப்பேள்! போய் ரெஸ்ட் எடுங்கோ. பத்து மாமி வேற உங்களுக்காக வழி மேல் விழி வச்சு காத்திருந்தாங்க. இப்போ பையனையும் மருமாளையும் ஒன்னா பார்த்த சந்தோசத்துல பேச முடியாம நிக்கிறாங்க. அப்பிடி தானே மாமி?" என்று அவரை நோக்கி கேலி பேச கிருஷ்ணஜாட்சி அவள் கையைப் பிடித்தாள்.
"ஷ்ஷ் நீரு! என்னடி பேசறே? சம்பந்தம் இல்லாதவங்களைப் பத்தி பேசி மனநிம்மதியை கெடுத்துக்கணுமா? ஒழுங்கா உள்ளே வா" என்று தங்கையை அதட்டினாள்.
நீரஜாட்சி "கிருஷ்ணா! நீ ஒரு லெஜண்ட் முன்னாடி என்னை உயர்த்தி வச்சு பேசற! இந்த மனநிம்மதியை கெடுக்கறது, வாய்க்கு வந்தபடி காச்மூச்னு கத்தறது, அன்புனா என்னன்னே தெரியாம தன்னோட அதிகாரத்தால எல்லாரையும் அரட்டி பணிய வைக்கிறதுக்கு நான் ஒன்னும் பத்மாவதி அம்மா இல்லையே. இந்த விஷயத்துல அவங்க கால்தூசிக்கு வருவேனா நான்?" என்று மொத்த கோபத்தையும் தன் வார்த்தைகளில் வெளிப்படுத்த கிருஷ்ணஜாட்சி இனி அவளைத் தன்னால் கட்டுப்படுத்த இயலாது என்று அமைதியாகிவிட்டாள்.
ரகுநந்தனுக்கு நீரஜாட்சியிடம் பிடிக்காதது இது ஒன்று தான். தன் அன்னையை அவள் மதிப்பு குறைவாக பேசுவது எந்த ஆண்மகனுக்குமே பிடிக்காது தான். ஆனால் கிருஷ்ணஜாட்சியின் விஷயத்தில் அவனுமே அன்னையை நினைத்து அதிருப்தியில் தான் இருந்தான். எனவே அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் என்ன பேசினாலும் இனி தன் அன்னை அதைக் கேட்டுத் தான் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் அவன் எதுவும் கூறவில்லை.
பத்மாவதி நீண்டநாள் கழித்து தன்னை சீண்டியவளை உஷ்ணத்துடன் பார்த்தவர் "பகவான் நோக்கு நாக்கை குடுக்கலடி! தேள் கொடுக்கை குடுத்திருக்கார். வயசு வித்தியாசம் இல்லாம என்ன பேச்சு பேசற நீ?" என்று ஆவேசமாகி விட
நீரஜாட்சி அவருக்கு குறையாத உஷ்ணத்துடன் "அதான் தெரியுதுல்ல மாமி! அப்போ ஏன் என் பேச்சுக்கு வர்றேள்? நான் என்ன பட்டாபிராமன் மருமாள் பத்மாவதினா சொன்னேன்? இந்த லோகத்துல உங்க ஒருத்தருக்கு மட்டும் தான் பத்மாவதினு பேர் இருக்கா?" என்று பதிலுக்குப் பதில் பேச
பத்மாவதி "என் ஆத்துல நின்னுண்டு பத்மாவதினு சொன்னா அது வேற யாரையோனு நினைக்க நான் ஒன்னும் பைத்தியக்காரி இல்லடி. இந்த குத்தல் பேச்சுலாம் என்னண்ட வச்சுக்காதே" என்று அவளுக்கு பதிலடி கொடுத்தார்.
"மாமி! இது ஒன்னும் உங்க வீடு இல்ல. இது என் தாத்தாவோட சம்பாத்தியம். நான் அப்பிடி தான் பேசுவேன். அதுவும் உங்களை பேசறதுன்னா எனக்கு எப்போவுமே ஹல்வா சாப்பிடற மாதிரி. யாருமே உங்களைப் பத்தியோ நீங்க பண்ணுன கேவலமான காரியத்தைப் பத்தியோ உங்க கிட்ட பேச மாட்டாங்க. அப்பிடி யாருமே உங்க தப்பை சுட்டிக்காட்டலைனா நீங்க பண்ணுன காரியத்தோட வீரியம் உங்களுக்கு புரியாமலே போயிடும். பூனைக்கு யார் தான் மணி கட்டுறது மாமி?" என்று அவருக்கு இன்னும் இரத்த அழுத்தத்தை ஏற்றிவிட அதை வேடிக்கை பார்த்த மூவருக்கும் இந்த நவீன குருஷேத்திரப்போர் எப்போதடா முடியும் என்றே தோன்றிவிட்டது.
ரகுநந்தன் விட்டால் இவர்கள் விடிய விடிய வார்த்தைபோர் செய்வார்கள் என்று எண்ணியவன் ஹர்சவர்தனிடம் "டேய் அண்ணா நீ அம்மாவை அழைச்சிண்டு போ! மன்னி ப்ளீஸ் உங்க தங்கையை அழைச்சிண்டு போங்கோ" என்று வேண்டுகோள் வைக்க நீரஜாட்சியை கிருஷ்ணஜாட்சியும், பத்மாவதியை ஹர்சவர்தனும் இழுத்துச் சென்றனர்.
ஹர்சவர்தன் அன்னையை அமைதிப்படுத்தி உறங்கச் சொல்லிவிட்டு தனது அறையை நோக்கிச் சென்றான். சென்றவனின் மனதில் கிருஷ்ணஜாட்சியின் வார்த்தைகளே ஓடியது.
அதே நேரம் கிருஷ்ணஜாட்சி தங்கையிடம் "ஏன்டி அவங்க கிட்ட சண்டைக்குப் போற? நம்ம அவுட் ஹவுஸில இருக்கிறது பட்டு, சித்தம்மாவுக்காக மட்டும் தான். நீ ஏன் மத்தவங்களைப் பத்தி யோசிக்கிற?" என்று அவளுக்கு அறிவுரை கூற முயற்சிக்க நீரஜாட்சியை அதை ஊதித் தள்ளிவிட்டாள்.
"லிசன் கிருஷ்ணா! நான் ஒன்னும் நீ இல்ல! எனக்கு பிடிக்காதவங்க கிட்ட நான் அப்பிடி தான் வம்பு இழுப்பேன். முன்னாடி மாதிரி நம்ம விலகிப் போனா அவங்களுக்கு பயந்துட்டோம்னு அந்தம்மா நினைச்சுக்கும். பின்னே அது பண்ணுன தப்பு எப்போ தான் அதுக்கு புரிய வரும்? நீ வேஸ்ட் கிருஷ்ணா, நான் மட்டும் அந்த பத்து மாமியோட மருமாளா இருந்தேன்னு வை, இப்போ சீனே வேற" என்று படபடத்த தங்கையின் கடைசி வாக்கியத்தில் அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
"அப்பிடி ஒரு விஷயம் நடந்துச்சுனா ஸ்ரீனிவாசவிலாசத்துல தினமும் ஒரு வார் நடக்கும்" என்று நமட்டுச்சிரிப்புடன் கூறிய கிருஷ்ணஜாட்சியை குறுகுறுவென்று பார்த்த நீரஜாட்சி அவள் ஹர்சவர்தனுடன் வந்ததற்கான காரணத்தைக் கேட்க கிருஷ்ணஜாட்சி காலையில் இருந்து நடந்த அனைத்தையும் மூச்சு விடாமல் ஒப்பித்தாள்.
வர்ஷா வந்தது, அவளது விளக்கம், அடுத்து மெர்லினின் உடல் நலமின்மையை விவரித்தவள் ஹர்சவர்தனுடன் காரில் வந்ததற்கான காரணத்தையும் கூறிவிட்டாள்.
"நான் கார்ல வர்றச்ச வர்ஷா வந்த விஷயத்தைச் சொன்னதும் அவர் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்திட்டார் நீரு. அதுலயே புரியுது வர்ஷா எந்த அளவுக்கு அவரை பாதிச்சிருக்கான்னு. மனசுல வேற ஒருத்தியை வச்சிருக்கிற புருசன் பிடிக்காதவனா இருந்தாலும் அது மனசுக்கு கஷ்டத்தை தான் குடுக்குது நீரு" என்று சோகம் கப்பிய குரலில் கூற நீரஜாட்சி அவளின் கரத்தை அழுத்தி ஆறுதல் கூறினாள்.
கிருஷ்ணஜாட்சி "இன்னைக்கு நான் அந்த ரவுடி பசங்க கிட்ட மாட்டிக்க கூடாதுனு அவர் எனக்கு ஹெல்ப் பண்ணுனார், அவ்ளோ தான். இதை வச்சு எங்களோட ரிலேசன்ஷிப்ல பெரிய முன்னேற்றம் வந்துடுச்சுனு நினைச்சுக்க முடியாது. இன்னைக்கு அவங்க அம்மா வேற நாங்க ஒன்னா வர்றதை பார்த்துட்டாங்க. இனி ஹர்சா நான் இருக்கிற திசை பக்கமே தலை வச்சு படுக்க மாட்டார்" என்றாள் உறுதியான குரலில்.
ஆனால் வரப் போகிற நாட்களில் அவள் கணவன் அவளிடம் மன்னிப்பு வேண்டி விதவிதமாக அவளைத் தொல்லை செய்யவே அவனை எதைக் கொண்டு அடிக்கலாம் என்னுமளவுக்கு அவளுக்குக் கோபம் வந்துவிட்டது.
நீரஜாட்சி அலுவலகம் சென்ற பின்னர் அவுட் ஹவுஸ் வாசலில் வந்து நிற்கும் ஹர்சவர்தன் கிருஷ்ணஜாட்சி மறுத்தாலும் அவளை வற்புறுத்தி தன் காரிலேயே அவளை பேக்கரிக்கு அழைத்துச் செல்வான். மாலையிலும் அவள் வரும் வரை மெர்லினின் பொக்கே ஷாப் அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்து அவருடன் அரட்டை அடித்தபடி அவளுக்காக காத்திருப்பான்.
அவள் வந்ததும் குண்டுக்கட்டாக தூக்காத குறையாக அவளை காரில் ஏற்றி மீண்டும் வீட்டில் கொண்டு வந்து விடுவான். ரகுநந்தன் கூட கேலியாக "டேய் அண்ணா! உன்னை மன்னிப்பு கேட்டு லைபை ரெஸ்டோர் பண்ணச் சொன்னா நீ மன்னிக்கு ஃபுல் டைம் டிரைவரா வேலை பார்க்கிறியேடா?" என்று சொல்ல
அவனோ "யாருக்குடா பண்ணுறேன் என் ஆத்துக்காரிக்கு தானே" என்று சொல்லிவிட்டு நகருபவனை மொத்தக் குடும்பமுமே ஆச்சரியத்துடன் பார்த்தது.
வேங்கடநாதன் ஒரு படி மேலே சென்று "ஏதோ இப்போவாச்சும் பகவான் இவனுக்கு புத்தியை குடுத்தாரே" என்று மட்டும் சொல்லிக் கொண்டார் அவரது தம்பியிடம்.
மைதிலி மாமனார் மாமியாரிடம் "நீங்க வேணும்னா பாருங்கோ இன்னும் கொஞ்சநாள்ல ஹர்சா கிருஷ்ணாவை நம்ம ஆத்துக்கே அழைச்சிண்டு வந்துடுவான். அவனால தான் அவ மனசை மாத்த முடியும்னு நேக்கு தோணறதுப்பா" என்றுச் சொல்ல அந்த வயோதிக தம்பதியினருக்குமே ஏதாவது ஒரு அதிசயம் நடந்து மூத்த பேரனும், பேத்தியும் வாழ்வில் ஒன்று சேர மாட்டார்களா என்ற எண்ணம் தான்.
ஆனால் நீரஜாட்சிக்கு அவனது இந்த முயற்சிகள் எல்லாம் சற்று தாமதமாக தான் தெரிய வந்தது. அவளுக்கோ அவனை முன்பு போல் திட்டுவதா, இல்லை அக்காவின் வாழ்க்கைக்காக அவனிடம் அமைதியாகச் செல்லுவதா என்ற குழப்பம். அதனால் அவள் அதைக் கண்டும் காணாமல் கடந்தாள்.
ஆனால் அவளது பொறுமையும் ஒரு நாள் தூர பறந்தது. அன்று அவர்கள் ஹோட்டலின் வடிவமைப்பு பிளான் பற்றி இன்ஜினியர்களுடன் சேர்ந்து பேச ஹர்சவர்தன் கட்டுமான நிறுவனத்திற்கு வருகை தந்திருந்தான். கட்டிட வடிவமைப்புக்கான பிளான் மற்றும் அதற்கான கணிப்புகள் அடங்கிய பவர்பாயிண்ட் பிரசண்டேசனில் திருப்தியானவன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டான்.
அதன் பின் ரகுநந்தனும், அவனும் அலுவலக அறைக்குச் செல்ல நீரஜாட்சிக்கு போன் செய்து இருவருக்கும் காபி வேண்டுமென்று ரகுநந்தன் கட்டளையிட்டான்.
அவளும் சிறிது நேரத்தில் காபி கோப்பைகளுடன் கதவைத் தட்டியவள் உள்ளே ஏதோ அவர்கள் தீவிரமாக பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுவிட்டு அவர்களின் அனுமதிக்கு காத்திருக்காமல் உள்ளே சென்றாள்.
"நீ டிரைவர் வேலையை விட்டுட்டு சீக்கிரமா ஒரு ஹஸ்பெண்டா புரமோட் ஆகுடா அண்ணா. மன்னி ஒன்னும் அவ தங்கை மாதிரி கிடையாது. பொறுமைசாலிடா, நீ விளக்கி சொன்னா அவ புரிஞ்சிப்பா" என்ற ரகுநந்தனின் குரலில் கடுப்பானவள்
"அப்போ இவன் தான் அந்த என்.கே நம்பர் ஒன் பண்ணுற அட்டூழியத்துக்கு பிளான் போட்டுக் குடுக்கறவனா? இருடா இதோ வர்றேன்" என்றபடி அவர்கள் முன் சென்று நின்றாள்.
திடீரென்று அவளின் வருகையை எதிர்ப்பார்க்காத இருவரும் திகைத்துப் போய்விட ரகுநந்தன் மட்டும் சுதாரித்தவனாய் "மிஸ் நீரஜாட்சி இப்பிடி பர்மிசன் இல்லாம என் ஆபிஸ் ரூம்குள்ள நீங்க நுழையக் கூடாது" என்று அமர்த்தலாக மொழிந்துவிட்டு ஏற்கெனவே கொதித்துப் போனவள் அவனைப் பார்த்த பார்வையில் அமைதியானான்.
"நீங்க ரெண்டு பேரும் என் கிருஷ்ணாவை பத்தி தானே பேசிட்டிருந்திங்க. ஏன்டா இதெல்லாம் உன்னோட பிளானா? மிஸ்டர் ஹர்சவர்தன் உங்களுக்குனு சுயபுத்தி இல்லவே இல்லையா? ஒன்னு அம்மா சொல்லுறதை கேட்டு ஆடுறிங்க, இல்லனா இதோ இவன் சொல்லுறதை கேட்டு ஆடுறிங்க. எப்போ தான் நீங்க உங்க மனசு சொல்லுறதை கேட்டு சுயமா முடிவெடுக்க போறிங்க?" என்றவளின் பேச்சில் இரு ஆண்களும் வாயடைத்துப் போயினர்.
ஹர்சவர்தன் பொறுமையாக "இப்போ நான் என் மனசு சொல்லுறதை தான் கேட்டு நடக்கிறேன் நீரு. ஆனா முன்னமே அப்பிடி நடந்திருந்தா இந்த பிரச்சனை எதுவும் வந்திருக்காது. என் மனசு கிருஷ்ணா தான் எனக்கானவள்னு சொல்றது" என்று முடிக்க
நீரஜாட்சி அவனை நம்பாதவளாய் "நீங்க சொல்லுற எதுவுமே நம்புற மாதிரியில்லயே. அது எப்பிடி வர்ஷாக்கா கூட மணமேடை வரைக்கும் வந்த நீங்க வேற வழியில்லாம மேரேஜ் பண்ணிகிட்ட என் கிருஷ்ணாவை மனசால நினைக்க ஆரம்பிச்சிங்க? நீங்க சொல்லுறதை இதோ இங்கே நிக்கிறானே உங்க தம்பி வேணும்னா நம்புவான். நான் நம்ப மாட்டேன்" என்றாள் பிடிவாதமாக.
ரகுநந்தன் அவளது பிடிவாதமான பேச்சில் எரிச்சலானவன் "நீ நம்பணும்னு நாங்க ஒன்னும் தவம் இருக்கலடி! அவா ரெண்டு பேருக்கு இடையில பஞ்சாயத்து பண்ணறதுக்கு நோக்கு எந்த உரிமையும் கிடையாது. உன் அக்கா வாழ்க்கை நல்லபடியா மாறணும்னு அக்கறை இருக்கா இல்லையா?" என்று கேட்க
நீரஜாட்சி "எனக்கு என் அக்கா வாழ்க்கையில அக்கறை இருக்கறதால தான் இந்த ஹர்சவர்தனை நான் நம்பாம பேசறேன்டா. அது எப்பிடி உங்க மனசு இப்பிடி டக்கு டக்குனு மாறுது. சட்டையை மாத்துற மாதிரி ஆளை மாத்துறது உங்களுக்கு ஈசியா போயிடுச்சுல்ல" என்றவளின் கடைசி வார்த்தை அவனை வெகுவாய் தாக்க ஹர்சவர்தன் இதுவரை யாரிடமும் சொல்லாத விஷயத்தை அவர்களிடம் சொல்லிவிட்டான்.
"ஷட் அப் நீரு. நான் ஒன்னும் ஆளை மாத்துற டைப் இல்ல. எனக்கு எப்போவுமே கிருஷ்ணானா ரொம்ப பிடிக்கும். அவுட் ஹவுஸ் வாசல்ல தலை துவட்டுனது, கிருஷ்ணஜெயந்தியில கையில தீபத்தோட அப்சரஸ் மாதிரி நின்னது, ஒவ்வொரு தடவை அவ தடுமாறி விழறப்போவும் என் கையில் தாங்குனது இது எல்லாமே எனக்கு ரொம்ப நல்லாவே நியாபகம் இருக்கு. ஒவ்வொரு தடவையும் அவ கிட்ட நான் தோத்துப் போய் நின்னது கூட எனக்கு நியாபகம் இருக்கு. இது எல்லாத்துக்கும் என்ன பேர்னு யோசிச்சு யோசிச்சு மூளை குழம்புனதும் கூட நியாபகம் இருக்கு. கடைசியா அது காதல்னு நான் கண்டுபிடிச்சப்போ காலம் கடந்து போயிடுச்சு" என்று அவன் முடிக்க ரகுநந்தனும் நீரஜாட்சியும் அதிர்ந்தவர்களாய் "காதலா?" என்று ஒரே குரலில் கேட்க ஹர்சவர்தன் அவர்களை உறுதியோடு பார்த்தான்.
"யெஸ்! ஐ லவ் கிருஷ்ணா!" என்று அவன் பிசிறின்றி கூற நீரஜாட்சியும் ரகுநந்தனும் சிலையாய் சமைந்தனர்.
Comments
Post a Comment