பூங்காற்று 42

Image
  நீரஜாட்சி திருமணம் முடிந்த மறுநாளே ரகுநந்தனிடம் தனது நிறைவேறாத திட்டம் பற்றி சொல்ல தக்க தருணத்தை எதிர்நோக்கியிருக்க அவன் ஹோட்டலின் வேலை காரணமாக சென்றுவிட அவளால் அவனிடம் அதை கூறவே முடியவில்லை. அதை தொடர்ந்த நாட்களில் வீட்டில் அனைவரும் ஒரு புறம் ஹர்சவர்தனின் ஹோட்டல் திறப்புவிழாவை பற்றி பேசிக் கொண்டிருக்க இன்னொரு புறம் கிருஷ்ணஜாட்சியும் கரோலினும் சேர்ந்து அவர்கள் திறக்கப் போகிற " டாம் ' ஸ் கஃபே" தொடர்பான வேலைகளில் அலைந்து திரிய இந்த இரண்டு திறப்புவிழாக்களே அங்கிருந்தவர்களின் மொத்த நேரத்தையும் எடுத்துக் கொண்டன. ஹர்சவர்தன் அது விஷயமாக ரகுநந்தனை அழைத்துச் சென்றுவிட நீரஜாட்சி அலுவலக வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினாள். பெரும்பாலான நேரங்களில் அவன் வீடு திரும்பும் போது அவள் உறங்கிப் போயிருக்க அந்த உண்மை வெளிவராமலே இருந்தது. ஆனால் அவளது தோழி கவிதா இது ரகுநந்தனுக்கு தெரியவருவது அவர்களின் உறவுக்கு நல்லதல்ல என்று ஒவ்வொரு முறை போனில் பேசும் போதும் நீரஜாட்சிக்கு அறிவுறுத்துவாள். நீரஜாட்சிக்கு தன்னை இவ்வளவு காதலிக்கும் தன் கணவனிடம் அவன் சம்பந்தப்பட்ட விஷயத்தை மறைத...

🌺 பூங்காற்று 37 🌺

 

🌺 பூங்காற்று 37 🌺

ஸ்ரீனிவாசவிலாசம் நிச்சயதார்த்தத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்க மைத்திரேயியும், ஸ்ருதிகீர்த்தியும் மைதிலி சொன்னபடி முன்னரே வந்து அவருக்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகளில் உதவினர். ஸ்ருதிகீர்த்தியின் கணவன் ராகுலை அச்சமயத்தில் அலுவலகத்திலிருந்து டெல்லிக்கு ஏதோ மீட்டிங்குக்காக அனுப்பிவிட வீட்டில் தனித்திருக்க பிடிக்காதவள் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டாள். வழக்கமாக இப்படி வெளியூர் பயணங்களில் அவனுடன் அவளும் செல்வது வழக்கம். ஆனால் அவளது வயிற்றில் வளரும் குழந்தையைக் கருத்தில் கொண்டு ராகுல் அவளை  வரவேண்டாமென்று கூறிவிட்டான்.

சகோதரனின் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொள்ள பிறந்த வீட்டுக்கு வந்தவள் நீரஜாட்சியிடம் மட்டும் சற்று விலகியே இருந்துகொண்டாள். நீரஜாட்சியும் அவளை புருவத்தூக்கலோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிடுவாள். அன்றும் அப்படி நடந்த போது ஸ்ருதிகீர்த்தி நீரஜாட்சியை பார்த்தபடி நடந்து சென்றவள் தரைவிரிப்பில் கால் சிக்கிக் கொள்ள தடுமாறி விழப்போனாள். நீரஜாட்சி பதறிப்போனவளாய் ஓடி வந்து அவள் கையை பிடித்து அவளை விழாமல் நிறுத்தியவள் "உனக்கு அறிவு இல்ல? ஆகாயத்தை பார்த்து தான் நடப்பியோ?" என்று கடிந்து கொள்ள

ஸ்ருதிகீர்த்தி "நான் கவனிக்கல" என்றாள் மொட்டையாக.

நீரஜாட்சி "நீ எதை தான் கவனிச்ச? முன்னாடி எப்பிடியோ, இப்போ உன் வயித்துல இருக்கிற குழந்தையை மனசுல வச்சு நடந்துக்கோ. அதே மாதிரி குழந்தை வயித்துல இருக்கறச்ச மனசை நிர்மலமா வச்சுக்கணும்னு நான் ஒரு புக்ல படிச்சேன். ஏன்னா அம்மா நினைக்கறது குழந்தைக்கு புரியுமாம். நீ பாட்டுக்கு வழக்கம் போல என்னையும் கிருஷ்ணாவையும் பத்தி கன்னாபின்னானு நினைச்சு வைக்காதே. அது உன் குழந்தையோட மனசையும் பாதிக்கும்" என்று சொல்லிவிட்டு  அங்கிருந்து நகர முற்பட அவளது கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினாள் ஸ்ருதிகீர்த்தி.

என்னவென்று பார்த்தவளிடம் "நான் சின்னப்பிள்ளைத்தனமா நிறைய காரியம் பண்ணிருக்கேன். ஆனா என்னைக்கும் மனசார நீங்க கெட்டுப் போகணும்னு நான் நினைச்சது இல்ல. மன்னி என்னை விட அழகா இருக்கானு நேக்கு கொஞ்சம் பொறாமை உண்டு. அதுவும் சின்ன வயசுல தான். மத்தப்படி நேக்கு உங்க ரெண்டு பேர் மேலயும் எந்த துவேசமும் இல்ல" என்று மெதுவாகக் கூற நீரஜாட்சி ஒன்றும் பதிலளிக்காமல் அவள் கையை மட்டும் தட்டிக்கொடுத்துவிட்டுச் சென்றாள். அவளால் எப்போதும் மனிதர்களை உடனுக்குடன் நம்பமுடியாது. அது அவளது பிறவிகுணம்.

அதே சமயம் கிருஷ்ணஜாட்சி ஹர்சவர்தனிடம் "இன்னைக்கு மேரேஜ் ஹால் மேனேஜர் கிட்ட பேசறேனு சொன்னிங்களே, பேசிட்டிங்களா? கேட்டரிங் வெளியே வேண்டாம்னு பட்டு சொல்லிட்டார். சோ அதுல எந்த கரெக்சனும் இல்ல. வெளியூர்ல இருந்து வர்ற ரிலேட்டிவ்ஸை எங்க ஸ்டே பண்ண வைக்கறது?" என்று அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டே செல்ல அவனோ கன்னத்தில் வைத்தபடி மனைவி பேசும்போது அவளது முகத்தில் செல்லமாக தொட்டுவிட்டுச் செல்லும் கூந்தல் கற்றையை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

கிருஷ்ணஜாட்சி தான் கேட்ட எதற்கும் பதில் வராததால் அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவனது நிலைத்த பார்வை அவள் முகத்தை விட்டு அகலாததால் அவன் கண் முன் கையை ஆட்டினாள்.

அவன் புன்னகைத்துவிட்டு அந்த கூந்தல் சுருளை அவள் காது மடலின் பின்புறம் ஒதுக்கியபடி "இந்த நூடுல்ஸ் ஹேரை மெயிண்டெயின் பண்ணுறது ரொம்ப கஷ்டம்ல" என்று கேட்க கிருஷ்ணஜாட்சி அவனை முறைத்தாள்.

"இப்போ இது ரொம்ப முக்கியமா? நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டிருக்கேன்? நீங்க......" என்று படபடத்தவளின் உதட்டில் விரல் வைத்து தடுத்தவன்

"கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க மிசஸ்.ஹர்சா. நான் எல்லா அரேஜ்மெண்டும் பக்காவா பண்ணிட்டேன். நீ அழகா ரெடியாகி நிச்சயத்தார்த்தத்துல நின்னா மட்டும் போதும்" என்று கூறிவிட்டு விரலை எடுத்துக் கொண்டான்.

கிருஷ்ணஜாட்சி தோளை குலுக்கிவிட்டு எழ முயல அவளை கரம் பற்றி தன் அருகில் இருத்திக் கொண்டவன் "நீங்க பாட்டுக்கு எழுந்து போனா என்ன அர்த்தம் மேடம்? எவ்ளோ கஷ்டப்பட்டு இந்த அரேஜ்ன்மெண்டை தனியொருவனா நின்னு முடிச்சிருக்கேன். எதாச்சும் பார்த்து பண்ணுங்க" என்று கூற

கிருஷ்ணஜாட்சி ஏளனமாக "அஹான்! பண்ணிட்டா போச்சு" என்றவள் தன்னுடைய பர்சில் எதையோ தேடினாள்.

பர்சிலிருந்து ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்தவள் "அம்பது ரூபா போதுமா?" என்று கேட்டபடி அவன் கையில் அதை திணிக்க ஹர்சவர்தன் "என்ன கிண்டலா?" என்று கூறிவிட்டு அவள் கையிலிலேயே அதை திருப்பி திணித்தான்.

"இதை நீயே வச்சுக்கோ" என்று கூறிவிட்டு செல்ல முயன்றவனை தடுத்து நிறுத்தியது கிருஷ்ணஜாட்சிக்கு வந்த மொபை அழைப்பு.

கிருஷ்ணஜாட்சி போனை எடுத்தவள் "சொல்லு வர்ஷா" என்று கூற ஹர்சவர்தனும் நின்று அவள் என்ன பேசுகிறாள் என்று கவனிக்க ஆரம்பித்தான்.

கிருஷ்ணஜாட்சி "அதுல்லாம் முடியாது.......நீ இப்பிடிலாம் பண்ணக் கூடாது, நீருக்கு தெரிஞ்சா அவ ரணகளம் பண்ணிடுவாடி....உன்னை அழைச்சே ஆகணும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டா" என்று பேசிக் கொண்டே செல்ல வர்ஷா நிச்சயதார்த்தத்துக்கு வர தயங்குகிறாள் என்பதை புரிந்து கொண்டான் அவன்.

பொறுத்துப் பார்த்துவிட்டு ஹர்சவர்தன் அவள் கையிலிருக்கும் போனை பிடுங்கியவன் "ஹலோ வர்ஷா, நான் தான் பேசறேன். இப்போ நீ ஏன் என்கேஜ்மெண்டுக்கு வரமாட்டேனு பிடிவாதம் பிடிக்கற?" என்று படபடக்க மறுமுனையில் வர்ஷா மவுனமானாள்.

அவனிடம் பேசத் தொண்டை அடைத்தது அவளுக்கு. பின்னர் தயங்கி தயங்கி "ஹர்சா மாமா, மாமில்லாம் இருப்பா! அவாளுக்கு என் மேல கோவம் இருக்குமேடா. அதுவும் இல்லாம இப்போ நான் இருக்கிற நிலமையில நான் எமோசனல் ஆகக் கூடாதுனு டாக்டர் வார்ன் பண்ணிருக்கார்!" என்று அவள் கூற

ஹர்சா "நீ அப்பிடி என்ன நிலமையில இருக்க?" என்றான் புரியாமல்.

அவன் அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணஜாட்சி மனதிற்குள் "என்ன நடந்துச்சுனு தெரியாம இடையில எண்ட்ரி குடுத்தா இப்பிடி தான் ஆகும்" என்று கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

மறுமுனையில் வர்ஷா "ஹர்சா நோக்கு எல்லாத்தையும் விளக்கணுமாடா? அருண் அப்பாவா புரொமோட் ஆயிட்டார், போதுமா?" என்று கூற

ஹர்சா "ஏய் எவ்ளோ ஹேப்பியான நியூஸ்டி இதுஇவ்ளோ சலிப்பா சொல்லுற? உடம்பை கவனமா பார்த்துக்கோ. நீ அருண் கூட சேர்ந்து கல்யாணத்துக்கு வந்தா போதும். இந்த அக்கா தங்கையை நான் பார்த்துக்கிறேன். பை, டேக் கேர்" என்று பேசிமுடித்துவிட்டு கிருஷ்ணஜாட்சியிடம் நீட்டினான்.

"அவ டேரக்டா மேரேஜுக்கு வருவா. நீரு கிட்ட சொல்லிடு" என்று கூறிவிட்டு நகர

கிருஷ்ணஜாட்சி "மாமா மகள் மேல சார்க்கு ரொம்ப அக்கறையோ?" என்று எவ்வளவோ முயன்றும் பொறுக்க முடியாமல் கேட்டுவிட

ஹர்சவர்தன் அவள் புறம் திரும்பியவன் "மாமா மகள் மேல அக்கறை மட்டும் தான் இருக்கு. ஆனா அத்தை மகள் பின்னாடி தானே என் மனசு பிடிவாதமா போகுது" என்று கூறி விஷமமாக புன்னகைக்க

கிருஷ்ணஜாட்சி உதட்டைச் சுழித்தவள் "எதுக்கும் உங்க மனசை செயின் போட்டு கட்டி வச்சுக்கோங்க. இல்லனா பார்க்கிறவங்க பின்னாடிலாம் போயிடப்போகுது" என்று அலட்சியமாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர குறுநகையுடன் முதல் முறையாக மனைவியிடமிருந்து வந்த உரிமையுடன் கூடிய கேலிப்பேச்சை ரசித்தபடி அலுவலகம் செல்ல தயாரானான் ஹர்சவர்தன்.

*************

நிச்சயதார்த்த நாளின் காலையிலேயே அனைவரும் பரபரப்பாக சுற்றிக் கொண்டிருக்க மைதிலியும் ஸ்ருதிகீர்த்தியும் கரோலினுடன் சேர்ந்து நீரஜாட்சியை அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.

கிருஷ்ணஜாட்சி புடவையில் தயாரானவள் வீட்டுக்குள் செல்லலாமா வேண்டாமா என்று மதில் மேல் பூனையாக யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவளுடன் வந்து சேர்ந்த ஹர்சவர்தன் "என்ன யோசிச்சிண்டிருக்க? ஆத்துக்குள்ள போகலாமா வேண்டாமானா? அம்மா ஆத்துக்குள்ள வரக்கூடாதுனு சொன்னது மதுரா அத்தையோட பொண்ணை. ஆனா எப்போ ஆதி மாமா உன்னை தாரை வார்த்து குடுத்தாரோ அப்போவே நீ என்னோட ஆம்படையாளா ஆயிட்ட! உனக்கு இந்தாத்துக்குள்ள போறதுக்கு எல்லா உரிமையும் இருக்கு" என்று சொன்னதோடு நிற்காமல் மனைவியின் கரம் பற்றி தன்னுடன் வீட்டினுள் அழைத்துச் செல்ல ஆரம்பித்தான்.

இக்காட்சி பட்டாபிராமன், சீதாலெட்சுமி தம்பதியினரின் கண்ணில் பட்டு அவர்களின் மனதை குளிர்விக்க வேங்கடநாதன் முதல் முறையாக மகனின் செய்கையில் பூரித்துப்போனார்.

ஹர்சவர்தன் கிருஷ்ணஜாட்சியுடன் வரும் காட்சியை கண்ட பத்மாவதிக்கு பெரிதாக வருத்தமும் இல்லை; அதே நேரம் சந்தோசத்திலும் அவர் துள்ளிக் குதிக்கவில்லை.

மைதிலி இருவரையும் வாசலில் நிற்குமாறு கூறியவர் சிறிது நேரத்தில் ஆரத்தி எடுக்கும் தட்டுடன் திரும்பி வர கிருஷ்ணஜாட்சிக்கு ஏனோ திருமணநாள் நினைவில் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

மைதிலியும் அதை கண்டு கொண்டவராய் "என்னடிம்மா இது குழந்தையாட்டம்? ஏன்டா கண்ணா உன் ஆம்படையாள் கிட்ட சொல்லுடா, நான் ஒன்னும் அவ்ளோ மோசமான மாமியார் இல்லனு" என்று கேலி செய்தவாறே ஆரத்தி எடுத்துவிட்டு இருவருக்கும் திலகம் வைத்தவர் கிருஷ்ணஜாட்சியின் முன்வகிட்டில் மறக்காமல் குங்குமத்தையும் வைத்து உள்ளே செல்லுமாறு கூறிவிட்டு ஆரத்தியை வெளியே கொட்டிவிட்டு வந்தார்.

வீட்டினுள் வந்தவரை "அம்மா மைதிலி, கொஞ்சம் இங்கே வந்துட்டு போடிம்மா" என்ற மாமனாரின் குரல் காதில் விழ "இதோ வர்றேன்பா" என்றபடி அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்றவரின் விழியில் பதிந்தது மாமனார், மாமியாரின் கலங்கியிருந்த கண்கள்.

இருவரையும் பார்த்தவர் "என்னாச்சு உங்களுக்கு? தாத்தா, பாட்டி, பேத்தி எல்லாருமா சேர்ந்து இன்னைக்கு அழுதே தீருவோம்னு ஏதும் சபதம் போட்டிருக்கேளா?" என்று கேலி செய்வது போல பேச்சை மாற்ற முயல

சீதாலெட்சுமி எழுந்து மைதிலியின் கரங்களைப் பிடித்துக் கொண்டபடி "எங்களுக்கு அப்புறம் அவா ரெண்டு பேரும் தனிச்சு நின்னிடுவாளோனு நாங்க கவலைப்படாத நாளே இல்ல மைதிலி. நீ அவா ரெண்டு பேரையும் இவ்ளோ அக்கறையா கவனிச்சிக்கறதை பாக்கறச்ச எங்களுக்கு நிம்மதியா இருக்குடிம்மா! இனி பகவான் எப்போ அழைச்சாலும் பயப்படாம அவரண்ட போயிடுவோம்" என்று கூற பட்டாபிராமனும் மனைவியின் கூற்றை ஆமோதித்தவாறே தலையசைத்தார்.

மைதிலி "நன்னா இருக்கே நீங்க பேசறது? அது எப்பிடி பகவான் உங்களை அழைப்பார்? உங்க பேத்திகளோட பிள்ளைகளை தூக்கி கொஞ்ச வேண்டாமா? அப்பா நீங்களே சொல்லுங்கோ" என்று பொய்க்கோபத்துடன் கேட்டு இருவரையும் சிரிக்க வைத்துவிட்டு அங்கிருந்து அகன்று மற்ற வேலைகளை கவனிக்கச் சென்றார்.

அதே நேரம் ரகுநந்தன் தனது அறையில் தயாராகிக் கொண்டிருக்க ஹர்சவர்தன் கதவைத் தட்டவும் "உள்ளே வாங்க" என்று கூறியபடியே சட்டையின் கைகளை மடித்துவிட துவங்க ஹர்சவர்தன் உள்ளே நுழைந்தான்.

"டேய் ஸ்லீவை ஏன்டா மடிச்சு விடற?" என்றவாறு தம்பியின் அருகில் வந்தவன் கழுத்தின் காலர் பட்டனை போட்டுவிட

ரகுநந்தன் "டேய் அண்ணா! எனக்கு காலர் பட்டன் போடற பழக்கம் சுத்தமா பிடிக்காதுடா. மூச்சு முட்டற மாதிரி ஃபீலிங்" என்றபடி கழற்றிவிட்டான்.

ஹர்சவர்தன் "டேய் என்கேஜ்மெண்ட் அன்னைக்கு ஃபார்மலா அழகா இருக்க வேண்டாமா?" என்று கேட்க

"இதிலேயே நான் அழகா தான்டா இருக்கேன்" என்றபடி அடம்பிடித்தவனை கீழே அழைத்துச் சென்றான் ஹர்சவர்தன்.

இவன் இவ்வாறு அடம்பிடிக்க நீரஜாட்சியோ ஒவ்வொரு விஷயத்துக்கும் அடம்பிடித்து அவளுக்கு அலங்காரம் செய்பவர்களை அயரவைத்துக் கொண்டிருந்தாள்.

"இவ்ளோ பூவா? ஒரு ஊருக்கு தேவையான பூவை என் தலையில வைக்கப் பாக்கிறிங்களே" என்று அதிலும் குறை கண்டுபிடித்துக் கூற மைத்திரேயி பொறுமையிழந்து விட்டாள்.

"சித்தநாழி உன் திருவாயை மூடிண்டிருக்கியாடி? தினத்துக்குமா உனக்கு இவ்ளோ பூ வச்சு அலங்காரம் பண்ணப் போறோம்? சத்தம் போடாம இருக்கணும்" என்று அவள் போட்ட அதட்டலில் அமைதியானவள் முழு அலங்காரமும் முடிந்ததும் ஓடிச் சென்று ஆளுயரக் கண்ணாடியில் தன்னை முன்னும் பின்னுமாக பார்த்துக் கொண்டாள்.

"நாட் பேட் மைத்திக்கா! நீ அழகா தான் ஜோடிச்சிருக்க. இதுக்காக நீ என்னை திட்டுனதை நான் மன்னிச்சிடுறேன்" என்று பெருந்தன்மையுடன் கூற கீழே "சாஸ்திரி வந்துட்டார்" என்ற சத்தம் வரவும் பெண்கள் அனைவரும் கீழே சென்றனர்.

கிருஷ்ணஜாட்சி மட்டும் நீரஜாட்சியின் அருகில் வந்தவள் தங்கையின் முகத்தை வழித்து நெட்டி முறித்து திருஷ்டி கழித்தாள்.

"நீ அழகுடி நீரு. இன்னைக்கு சின்ன அம்மாஞ்சி கண்ணை எடுக்காம உன்னை மட்டும் தான் பார்க்க போறார்" என்று கேலி செய்ய கீழே நிச்சயம் ஆரம்பிப்பதற்கான நேரம் ஆகிவிட்டது என்ற குரல் கேட்கவும் தங்கையின் கையைப் பற்றி கீழே அழைத்துச் சென்றாள்.

நீரஜாட்சி தமக்கையுடன் கீழே வர அவளுக்கு ஆரத்தி எடுக்க பத்மாவதியும் மைதிலியும் வந்து நின்றனர். அவளுக்கு ஆரத்தி எடுத்து அமர வைக்க ரகுநந்தன் அமர்ந்திருக்கும் இடத்தின் எதிர்ப்பக்கம் அமர்ந்தாள் நீரஜாட்சி.

சாஸ்திரி "பொண்ணை பெத்தவா வந்து மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுங்கோ" என்று கூற கிருஷ்ணஜாட்சி தானே ரகுநந்தனுக்கு எடுத்துவிட்டு நீரஜாட்சியுடன் அமர்ந்து கொண்டாள். ரகுநந்தன் ஹர்சவர்தனின் காதில் ஏதோ சொல்ல அவனும் சரியென்று தலையாட்டிவிட்டு கிருஷ்ணஜாட்சியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

அவனை கேள்வியாய் நோக்கியவளிடம் "அவளுக்கு பெத்தவா ஸ்தானத்திலிருந்து இன்னைக்கு எல்லா சடங்கையும் நம்ம தான் பண்ணனும்னு நந்து சொல்லறான் கிருஷ்ணா" என்று பதிலிறுத்துவிட்டு நடப்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.

நிச்சயதார்த்தத்தின் முதல் சடங்காக முறைப்படி  தானே சென்று நீரஜாட்சியிடம் அவள் அணிந்து கொள்ள வேண்டிய பட்டுப்புடவையை அளித்தார் பத்மாவதி.

அவளும் எதுவும் சொல்லாமல் மைத்திரேயியுடன் மாடிக்கு அதை மாற்ற சென்றவிட ரகுநந்தனுக்கு வேஷ்டி சட்டையை வழங்கிவிட்டு ஹர்சவர்தன் அவனை அழைத்துச் சென்றான்.

இதற்கிடையில் மணமகனின் தாய்மாமா என்பதால் ஆதிவராஹனும் அவரது மனைவி விஜயலெட்சுமியும் வர பட்டாபிராமன் "தாய்மாமாவே இவ்ளோ தாமதமா வரலாமோ?" என்று கேள்வியுடம் அவரை வரவேற்க விஜயலெட்சுமியை தன்னுடன் அழைத்துக் கொண்டார் பத்மாவதி.

முகத்தில் சுரத்தே இல்லாமல் வெறித்தபடி அமர்ந்திருந்தவரை பார்த்து பத்மாவதிக்கு மனதுக்குக் கஷ்டமாக இருந்தது.

அவர் வருந்திக் கொண்டிருக்கையிலேயே ரகுநந்தனும், நீரஜாட்சியும் திரும்பிவிட மருமகளின் கழுத்தில் மாலை அணிவிக்க எழுந்தார் அவர்.

அதேநேரம் ஹர்சவர்தன் ரகுநந்தனுக்கு அணிவிக்க இருவரும் அருகருகே அமரவைக்கப் பட்டனர். லக்னப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டு தட்டுகளும் மாற்றப்பட மணமக்கள் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க எழ முதலில் பட்டாபிராமன்  சீதாலெட்சுமியிடம் சென்றனர்.

இருவரும் காலில் விழ மலர்களைத்  தூவி பேரன் பேத்தியை ஆசிர்வதித்தனர் அந்த வயோதிக தம்பதியினர். அதன் பின் வேங்கடநாதன் பத்மாவதியின் முறை வர நீரஜாட்சி ரகுநந்தனிடம் "நந்து நீ என் சைடுக்கு வா, நான் அந்த சைட் வர்றேன்" என்று கூற அவன் குழம்ப அவளே அவனின் மறுபுறம் மாறி நின்று கொண்டாள்.

இருவரும் வேங்கடநாதன் தம்பதியினரிடம் ஆசிர்வாதம் வாங்க குனியும் போதே ரகுநந்தன் மெதுவாக "ஏன்டி  சைட் மாத்தி வந்து நின்ன?" என்று கேட்க

நீரஜாட்சி "ம்ம்ம்.. என்னால பத்து மாமி கால்ல விழ முடியாது. அதான்" என்று பதிலிறுத்து விட்டு தனது தலையின் மீது கை வைத்து ஆசிர்வதிக்கும் மாமாவை பார்த்துப் புன்னகைத்தவாறே எழுந்தாள்.  ரகுநந்தன் இந்த சூழ்நிலையில் கூட பிடிவாதம் பிடிப்பவளை எண்ணி திகைத்தவனாக எழுந்தான்.

இருவரும் அடுத்து கோதண்டராமன், மைதிலியிடம் செல்ல அவர்களும் மகன், மருமகளை மனதார ஆசிர்வதித்தனர். அவர்களிடம் ஆசிர்வாதம்  வாங்கிக் கொண்டு தங்களை நோக்கி வந்தவர்களை கிருஷ்ணஜாட்சியும் ஹர்சவர்தனும் அணைத்துக்கொண்டனர்.

மைத்திரேயி, அவளது கணவன் மற்றும் குழந்தையுடன்  குடும்பமாக வாழ்த்த ஸ்ருதிகீர்த்தி இருவருக்கும் கை கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தாள்.

அதன் பின் மணையில் அமரவைக்கப் பட்ட பின்னர் ரகுநந்தன் நீரஜாட்சியின் காதில் "எத்தனை கோட்டிங் மேக்கப்டி?" என்று கேட்டுவைக்க அவள் "உன்னை விட ஒரு கோட்டிங் கம்மி தான்டா" என்று பதிலடி கொடுத்துவிட்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தாள்.

"நான் நேச்சுரல் பியூட்டி நீருகுட்டி. உன்னை மாதிரி நிப்பான் பெயிண்ட் இல்ல" என்று அவன் இன்னும் சீண்ட

அவள் கடுப்பில் "என்கேஜ்மெண்ட் முடிஞ்ச ஆணவத்துல தலை கால் புரியாம ஆடாதேடா" என்றாள் முறைத்தபடி.

"நீ முறைக்கறது வீடியோல ரெக்கார்ட் ஆகும்டி. சோ கொஞ்சம் வெக்கப்படு... சாரி சாரி... வெக்கப்படற மாதிரி ஆக்ட் பண்ணு பார்ப்போம்" என்று அவன் மீண்டும் மீண்டும் கேலி செய்ய ஒரு கட்டத்தில் கடுப்பானவள் அவன் கால் விரலை நறுக்கென்று கிள்ளி விட "அம்மா" என்றவனின் அலறலில் அனைவரும் இவர்களை நோக்கி திரும்பிவிட்டனர்.

"அடியே ராட்சசி" என்றவாறு சிரித்து சமாளித்தவாறே அவளைத் திட்டியவனிடம்

"இனிமே நீ என்னை கிண்டல் பண்ணுனேனு வையேன், ஆட்கள் இருக்காங்கன்னு கூட பார்க்க மாட்டேன். அந்த தாம்பளத்துல ஒன்னை எடுத்து மண்டையிலேயே போட்டுடுவேன். பீ கேர்ஃபுல்" என்று கூறிவிட்டு புகைப்படத்துக்காக அத்தனை பற்களையும் காட்டி போஸ் கொடுக்க ஆரம்பித்தாள் நீரஜாட்சி.

இந்த ஜோடிகளின் செல்லச் சண்டையை அவர்களுக்கு தெரியாமல் பார்த்து சிரித்துக்கொண்டனர் அவர்களின் குடும்பத்தார். இவ்வாறு அன்றைய நிச்சயதார்த்தம் ஒரு அழகிய நிகழ்வாக ஆரம்பித்து சிறப்பாக முடிவுற்றது.

Comments

Popular posts from this blog

பூங்காற்று 1