அலைவரிசை 55
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMD8DXfY3rktvWSgO2cQ2dFeWfnS31g2JKgORUJQGwyrKt6835yD5oEw8Z3V5B1tKynExrafQMGRE5iSj_wa8IjRavtlh5MQREJXyNoCPKNuEvSHVEW9UTj4hKlbZuBer_BUBG0ExPy31o2Lq0wTLxmn4Aq8iowcEOlTBZUOLyvuAxW3gO99r0y79K0MkY/w408-h640/310339561_2164283213753631_1416832543624635427_n.jpg)
“அடிக்கடி கேள்வி கேக்குறது
அறிவை அதிகமாக்கும்னு பீட்டர் அப்லார்ட் சொல்லுறார்... எந்த இடத்துல கேள்வி கேக்குறோமோ
அந்த இடத்துல தான் தெளிவு இருக்கும்... கேள்வி கேக்குறவங்களுக்குத் தான் நியாயம் கிடைக்கும்...
பிரச்சனை தீரணும்னா பாதிக்கப்பட்டவங்க கேள்வி கேக்கணும்... ஒரு புத்திசாலி எல்லாத்துக்கும்
கேள்வி கேக்கணும்... அது மூலமா சில விசயங்களை மட்டும் கத்துக்கணும்... ஆனா அனாவசியமான
யூஸ்லெஸ்சான கேள்வி எதுக்கும் பதில் சொல்லக்கூடாதுனு க்ரீக் ட்ரமாடிஸ்ட் யூரிப்பிடிஸ்
சொல்லுறார்... இவ்ளோ தடவை கேள்வி கேள்வினு நான் ஏன் சொல்லுறேன்னு புரியுதா? கேள்வி
கேக்குற பொண்ணுங்களை எல்லாரும் வாயாடி, பிடிவாதமானவங்க, பெரியவங்களை எதிர்த்து பேசுறவங்கனு
சொல்லுவாங்க... அடுத்தவங்க நம்மளை பிடிவாதக்காரங்கனு சொல்லுவாங்களேனு கேள்வி கேக்காம
எல்லாத்துக்கும் தலையாட்டுனா நமக்கு அடக்கமான பொண்ணுங்கிற பேர் வேணும்னா கிடைக்கும்...
ஆனா கடைசி வரைக்கும் உங்களுக்கு எது தேவையோ அது கிடைக்காது”
-கிருதியின்
கிறுக்கல் மொழிகள்
வழக்கமாக டிசம்பருடன் விடைபெறும் வடகிழக்கு
பருவமழை ஜனவரி முதல் வாரத்தில் கடுமையாக பெய்து கொண்டிருந்தது. சென்னை, காரைக்கால்,
ராயலசீமா, தெற்கு உள்கர்நாடகம் மற்றும் கேரள பகுதிகளிலிருந்து இன்னும் இரு தினங்களில்
வடகிழக்கு பருவமழை விடைபெறுமென வானிலை ஆராய்ச்சி மையம் கூறிய கணிப்பு கூட பொய்யானது.
கேரளாவின் இடுக்கி மாவட்டம் கடுமையான மழையைச்
சந்தித்துக் கொண்டிருந்த சமயம் அது. மும்பை போவதாகச் சொல்லிவிட்டு சரண் வந்திருந்தது
இடையாத்தூர். அது இடுக்கி மாவட்டத்தில் தான் இருக்கிறது.
வந்தவன் அவனது கெஸ்ட் ஹவுஸில் நிகிதாவோடு தங்கியிருந்தான்.
“ஊர் முழுக்க மழை பத்தி நியூஸ் தான்... நீங்க
எப்பிடி சென்னைக்கு கிளம்புவிங்க சரண்?”
அவள் பேசிக்கொண்டிருக்க சரணோ டிவியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அதில் இடுக்கி மாவட்டத்தில் சில பகுதிகளில்
நிலச்சரிவு அபாயம் இருப்பதால் வெளியூர், வெளிமாநிலத்திலிருந்து வரும் மக்கள் கவனமாக
இருக்கும்படி கேட்டுக்கொண்டனர் அதிகாரிகள்.
அவனது மனம் விபரீதமாக திட்டம் தீட்டியது அப்போது
தான். தன்னருகே அமர்ந்திருந்த நிகிதாவிடம் திரும்பியவன்
“நீ நீரவ்கு கால் பண்ணு பேபி” என்கவும் அவள்
திகைத்தாள்.
“எதுக்கு சரண்?”
“எல்லாம் காரணமா தான்... கால் பண்ணு”
“ஐயோ இங்க மழை பெய்யுதே”
“பெய்யட்டும்... அவன் இங்க வரணும்”
“எதுக்கு? ஊருல லேண்ட்ஸ்லைட் வரும்னு நியூஸ்
வருது”
அவள் பதற்றமாக உரைக்கவும் புருவச்சுருக்கத்தோடு
அவளைப் பார்த்தான் சரண்.
“காதலன் மேல திடீர்னு அன்பு பொங்குது... என்ன
மேட்டர்?”
அவன் குற்றத்தை விசாரிக்கும் தொனியில் கேட்கவும்
நிகிதா சுதாரித்தாள்.
“அவன் மேல எனக்கென்ன அன்பு? இப்ப இங்க வந்து
அவன் என்ன செய்யப்போறான்னு நினைச்சேன்”
சொன்னபடியே மொபைலில் நீரவின் எண்ணுக்கு அழைத்தாள்
அவள்.
பல மாதங்களுக்குப் பிறகு அவளிடமிருந்து அழைப்பு
வரவும் நீரவ் உற்சாகமாக அழைப்பை ஏற்றான்.
“நிகிதா... நீ எப்பிடி இருக்க? ஏன் என்னை அவாய்ட்
பண்ணுற? ஆபிஸ்ல கேட்டா நீ லீவ் போட்டுட்டு போயிட்டனு சொன்னாங்க... ஆன்சர் மீ நிகிதா”
“எல்லா கேள்விக்கும் நேர்ல ஆன்சர் பண்ணுறேன்
நீரவ்... நீங்க நான் சொல்லுற அட்ரசுக்கு வாங்க”
சரண் புதிதாக வாங்கிய கெஸ்ட் ஹவுஸின் முகவரியை
அவனுக்கு வாட்சப் செய்தாள் நிகிதா.
அது இரவுநேரம். கூடவே பருவமழைக்காலம் வேறு.
கொச்சிக்கு விமானம் கிடைக்குமா என அவனது மனம் தவித்த தவிப்புக்கு காலையில் ப்ரைவேட்
ஜெட் விமானம் ஆறுதலாக அமைந்தது.
விமானத்தில் கொச்சியை அடைந்தவன் வாடகை காரில்
இடுக்கியை அடைந்து அங்கிருந்து வாகமனுக்குச் சென்றான். வாகமனில் அவர்களது கெஸ்ட் ஹவுசில்
அவர்களின் உபயோகத்துக்காக எப்போதும் ஒரு கார் இருக்கும். அந்நேரத்தில் இன்னும் கெஸ்ட்
ஹவுஸ் ஊழியர்கள் வரவில்லை. மழை அந்தளவுக்குக் கடுமையாக இருந்தது.
எனவே வேறு யாரையும் எதிர்பார்க்காமல் காரைக்
கிளப்பினான் நீரவ். மனமோ நிகிதாவை இத்தனை நாட்கள் கழித்து சந்திக்கப் போகும் ஆனந்தத்தில்
திளைத்திருந்தது. அதில் வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்த வெள்ள அபாயம் கூட அவனைத் தடுத்து
நிறுத்தவில்லை.
இடையாத்தூரை அடைந்த போதே வழியில் சென்ற மக்கள்
கூட்டம் அவனை எச்சரித்தது.
நிலச்சரிவு அபாயமுள்ள பகுதியென காவல்துறை செய்த
எச்சரிக்கையையும் மீறி காரில் விரைந்தவன் எப்படியோ நிகிதா கொடுத்த விலாசத்திற்கு வந்து
சேர்ந்தான்.
அந்த கெஸ்ட் ஹவுசை பார்த்ததுமே நீரவுக்கு ஏதோ
முரண்டியது. ஆடம்பரமான இந்த கெஸ்ட் ஹவுசில் நிகிதா என்ன செய்கிறாள் என்ற கேள்வி உதித்தது.
ஆனால் அதை ஒதுக்கிவிட்டு கதவைத் தொட்டவன் அது திறந்திருக்கவும் உள்ளே மெதுவாக அடியெடுத்து
வைத்தான்.
ஹாலில் நுழைந்ததுமே நிகிதாவின் சிரிப்பு சத்தம்
கேட்டது. அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்போமென சப்தமெழுப்பாமல் சிரிப்பொலி கேட்ட திசையை
நோக்கி சென்றவன் அங்கே ஒரு அறையின் கதவு பாதி திறந்திருப்பதை பார்த்துவிட்டு யோசனையின்றி
தட்டாமல் வேகமாக உள்ளே நுழைந்தான்.
“நிகி....” பெயர் சொல்லி அழைக்கப் போனவன் அங்கே
கண்ட காட்சியில் அதிர்ந்து போய் நின்றான்.
அவன் நுழைந்தது படுக்கையறை. அதில் நிகிதாவும்
சரணும் நெருக்கமாக இருக்க, அவளைக் காதலித்தவன் கண்ணெதிரே இக்காட்சியைக் கண்டதும் எவ்விதம்
எதிர்வினையாற்றுவான்?
நீரவ் தனது கண்கள் மீதும் புத்தியின் மீதும்
அந்நொடியில் சந்தேகம் கொண்டான். இது கனவு என்ற நம்பிக்கையோடு தலையை உலுக்கி கண்களைக்
கசக்கிக் கொண்டு அவன் பார்த்த போதும் அவர்கள் இருவரும் தங்களை மறைத்தபடி மெத்தை மீது
அமர்ந்திருந்தனர் எகத்தாளமான பார்வையோடு.
அப்போது தான் அனைத்தும் தன் கண் முன்னே நடந்து
கொண்டிருக்கும் உண்மை என்பது அவனுக்கு உறைத்தது. இது வரை காதலியாய் மனதில் வைத்து பூஜித்த
நிகிதா மீது கடுஞ்சினம் எழுந்தது.
கோபமாக அவளை நெருங்கியவன் தொடுவதற்கு அருவருத்து
“என்ன நிகிதா இதெல்லாம்?” என்று உறும
“காதலிச்ச உன்னை நம்புனா கையில காசில்லாம நடுத்தெருவுல
நிக்க வேண்டியது தான்... ஆனா சரண் எனக்கு எல்லா வசதியும் செஞ்சு தர்றதா சொல்லிருக்கார்...
அதுக்கு முன்பணமா ரெண்டு கோடி ரூபா குடுத்தார்... சோ நான் அவர் கூட இருக்கேன்” என்றாள்
நிகிதா தெனாவட்டாக.
“பணம்... கேவலம் பணத்துக்காகவா நம்ம காதலை
தூக்கியெறிஞ்சிட்டு இவன் கூட இருக்குற?” என்ற நீரவின் விழிகள் இப்போது அருவருப்பாக
பார்த்தது சரணை.
அவனோ நிகிதாவோடு சேர்ந்து உரக்க சிரித்தான்.
ஏளனமாக உதட்டை வளைத்த நிகிதா “அந்தப் பணத்துக்காக
தான் நான் உன்னை காதலிக்கிறது மாதிரி நடிச்சேன்... உன்னை என் வலையில விழ வைக்க திட்டம்
போட்டு அப்பாவி மாதிரி ஏமாத்துனேன்... நீயும் உன் ஃப்ரெண்டும் என்னோட நடிப்பை நம்புனாலும்
உன் தம்பி நம்பல... அவன் உன்னை விட புத்திசாலி... என்னை சிக்க வைக்க என்னென்னமோ செஞ்சு
பாத்தான்... ஆனா பாவம், நீ தான் என்னை அந்தளவுக்கு நம்புனியே... உன் நம்பிக்கையும்
காதலும் கால் பைசாவுக்கு யூஸ் ஆகுமா? உங்கப்பன் உன்னை காசில்லாம நடுத்தெருவுல நிறுத்திட்டா
உனக்கும் சேர்த்து நான் தானே வேலைக்குப் போய் வடிச்சுக் கொட்டணும்... அந்த நேரத்துல
தான் சரண் தெய்வம் மாதிரி வந்து எனக்கு நிலமைய புரியவச்சார்... உன்னை மாதிரி காதல்
கண்றாவினு டயலாக் பேசாம கை நிறைய பணத்தைக் குடுத்தார்... காதலிச்ச பொண்ணோட ஃபீலிங்சை
புரிஞ்சுக்காம விலகி நிக்காம என்னை ‘எல்லா’ விதத்துலயும் சந்தோசப்படுத்துனார்... இங்க
கூட” என்றவாறு மெத்தையைத் தட்டிக் காட்டியவள் சரணை மையலோடு பார்க்க அப்போதே நீரவ் உடைந்து
போனான்.
சரண் அந்த தருணத்தை உபயோகித்துக்கொண்டு நீரவின்
முன்னிலையில் நிகிதாவை முத்தமிட அவன் உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்க ஆரம்பித்தான்.
அவனது நொறுங்கிய தோற்றம் சரணுக்கு உற்சாகமளிக்க
“இங்க பாருடா... தெய்வீக காதல் அது இதுனு டயலாக் பேசி காதலிச்ச பொண்ணுக்கு கால் பைசா
செலவளிக்காம, இவன்லாம் ஆம்பளையானு அவளை சந்தேகப்படவச்சா இந்த நிலமை தான் வரும்... லுக்
நீரவ்! உன் காதலிய என் பெட்ரூம் பார்ட்னரா ஆக்குறதுக்கு நான் யூஸ் பண்ணுன வெபன் ரெண்டே
ரெண்டு தான்... ஒன்னு பணம், இன்னொன்னு பிசிக்கல் இண்டிமசி... அந்த ரெண்டையும் நீ குடுத்திருந்தா
அவ ஏன் வேற ஆம்பளைய தேடப் போறா? உன்னால காதலிச்சவளையே மேனேஜ் பண்ண முடியல... நீ இவ்ளோ
பெரிய கார்கி குரூப்ஸை மேனேஜ் பண்ண போறியாக்கும்? நல்லா கேட்டுக்க, வாழ்க்கையில நீ
ஆசைப்பட்டவளை எனக்குச் சொந்தமா ஆக்குன மாதிரி இனிமே நீ என்னென்ன ஆசைப்படுறியோ அதை எல்லாம்
சொந்தமாக்குவேன்... உன்னால முடிஞ்சதை பாத்துக்க... இப்ப கிளம்புறியா? அடுத்தவங்க பெட்ரூமை
எட்டிப் பாக்குறது ரொம்ப கேவலம்” என்று திமிராக பேசி நீரவுக்குள் இருந்த கடைசித்துளி
நம்பிக்கையையும் உடைத்தெறிந்தான்.
ஒரு ஆணை எங்கே அடித்தால் வலிக்குமென தெரிந்து
அந்த இடத்தில் அடித்து அவனது சுயமரியாதையைத் தரைமட்டமாக்கினான் சரண்.
நீரவால் எதுவும் பேச முடியவில்லை. பேசுவதற்கு
அவனுக்குள் எதுவும் உயிர்ப்போடு இல்லையே. வாழ்க்கைத்துணையாய் வருவாள் என எண்ணியிருந்தவள்
பணத்தேவை உடற்தேவைக்காக தன்னை துச்சமென ஒதுக்கியதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
வெளிப்பார்வைக்கு இறுமாப்பாக காட்டிக்கொள்ளும்
ஆண்கள் மனதளவில் பெண்களை விட மிகவும் மென்மையானவர்கள். அவர்களது நம்பிக்கை தரைமட்டமானால்
அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது.
பெண்களைப் போலன்றி ஒரு ஆண் காயப்படும் போது
கட்டாயம் தனக்கான ஆறுதலையும் ஆதரவையும் நெருங்கியவர்களிடம் தேடுவான். ஆனால் நெருங்கியவர்களே
நம்பிக்கை துரோகம் செய்தால் அவனால் அத்தோல்வியை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவனுக்கு
வாழ்க்கையே இருளாகத் தோன்றும்.
அந்த கணத்தில் அவன் எடுக்கும் முடிவுகள் பல
நேரங்களில் விபரீதமான விளைவுகளை உண்டாக்கும். அதற்கு நீரவ் மட்டும் விதிவிலக்கா என்ன?
ஒரே சமயத்தில் காதல் தோல்வியையும் நம்பிக்கை
துரோகத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாதவனின் மனம் ஒரு நிலையில் இல்லை.
வீட்டை விட்டு நடைபிணமாக வெளியேறி தனது காரைக்
கிளப்பியவன் போர்வையை இடையில் சுற்றிக்கொண்டு வெளியே வந்த சரணைக் கண்டதும் வெறித்தான்.
“இப்ப உனக்கு ஏன் வாழணும்னு தோணுதுல்ல... இப்பிடியே
போனா ஒரு மலைப்பாதை வரும்... அங்க காரோட போ... சீக்கிரம் பரலோகப்ராப்தி கிடைக்கும்...
இத்தனை அசிங்கப்பட்டும் நீ உயிரோட இருந்தனா ஒவ்வொரு நாள் நீ என்னைப் பாக்குறப்பவும்
நீ ஒரு ஏமாளினு உன் மனசாட்சி உன்னை காறி துப்பாதா நீரவ்?”
வேண்டுமென்றே ஏளனமும் வன்மமும் தொனிக்கும்
குரலில் அவன் கத்த ஏற்கெனவே உடைந்திருந்தவனின் மனம் அவமானத்தில் கூசியது. அதற்காக சாகும்
அளவுக்கு அவன் கோழையில்லை.
“அடுத்தவன் காதலிக்கிறவளை பணத்தையும் செக்ஸையும்
காட்டி உன் ஆசைக்கு இணங்க வச்ச நீயே வெக்கமில்லாம நடமாடுறப்ப நான் ஏன்டா சாகணும்?”
கடைசியாக சரணிடம் அவன் கேட்ட போது வீட்டுக்குள்ளிருந்து
நிகிதாவும் எட்டிப் பார்த்தாள்.
இப்படி பொய்யாகி போனாயே என்ற வேதனை சூழ பெய்த
கடும் மழையில் காரைக் கிளப்பி இலக்கின்றி விரட்டியவன் பெருகி வந்த கண்ணீரை அடக்க முடியாமல்
துடைத்துக்கொண்டான்.
எத்தனை முறை நிகிதாவைப் பற்றி கேசவ் எடுத்துக்
கூறியிருப்பான்? அவனை மதிக்காமல் தந்தையை எதிர்த்துப் பேசி என்னவெல்லாம் செய்து விட்டான்?
இத்தனை பிரயத்தனப்பட்டு காப்பாற்ற வேண்டிய உறவா நிகிதாவுக்கும் அவனுக்குமிடையே இருந்திருக்கிறது?
காதல் என எண்ணியது கடைசியில் வெறும் பணத்திற்கான நாடகமாக தானே இருந்திருக்கிறது.
நீரவ் பிடிவாதமாக நின்றளவுக்கு இல்லையென்றாலும்
காதல் என்ற உறவுக்காவது நிகிதா மரியாதை கொடுத்திருக்கலாம். அவள் விலகியதற்கு கூட வேறு
விதமாக அல்லவா அவன் நியாயம் கற்பித்திருந்தான்.
சரணுடன் உறவைத் தொடங்குவதற்காக தன்னை உதாசீனம்
செய்திருக்கிறாள்! எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறோம் என்ற எண்ணத்தோடு காரை
ஓட்டியவன் பெருமழையில் உண்டான சகதியில் காரின் டயர் சிக்கி முன்னேறாமல் முரண்டு பிடிக்கவும்
காரை நிறுத்தினான்.
அப்போது தான் வாகமனில் அவர்களின் தேயிலைத்
தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர் ஒருவர் நீரவின் காரை கவனித்தார்.
அவரும் அவரது மனைவியும் வெள்ளம் வருமோ என பயந்து
இடையாத்தூரிலிருந்து முக்கியமான உடைமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஆட்டோவில் ஏறியிருந்தனர்.
“முதலாளி தம்பி மாதிரி இருக்கே” என அவர் கூர்ந்து
நோக்க
“அவருக்கு எதுவும் பிரச்சனையா இருக்குமோ?”
என்றார் அவரது மனைவி.
“இங்க பாருங்க... ஏதோ நீங்க தெரிஞ்சவங்கனு
தான் ஊருக்குப் போக ரெடியா இருந்தவன் உங்களை ஆட்டோல தொடுபுழாக்கு கூட்டிட்டுப் போறேன்னு
சொன்னேன்... இப்ப முதலாளிக்கு உதவி செய்யணும்னு போனிங்கனா நானும் கிளம்பி போயிட்டே
இருப்பேன்... என் பொண்டாட்டி நேத்துல இருந்தே நியூஸ் பாத்து பயந்து எப்பய்யா நாரோயில்
(நாகர்கோவில்) வாரனு கேட்டுட்ட இருக்கா... ஆட்டோவ என் மச்சினன் கிட்ட குடுத்துட்டு
பிள்ளை குட்டிய பாக்க நான் கிளம்பணும்.... என்ன சொல்லுதியோ?” என்று கேட்டான் தமிழனான
ஆட்டோ டிரைவர்.
அந்தப் பெரியவருக்கும் வேறு வழியில்லை. எனவே
கிளம்புமாறு கூறிவிட்டார்.
“ச்சே”
என்ற சலிப்போடு காரிலிருந்து வெளியே வந்த நீரவின் கண்ணீரை யாரும் கண்டுகொள்ளக்கூடாதென
இரக்கப்பட்ட வானமங்கை அளவற்ற தண்ணீரை மேலிருந்து ஊற்றிக்கொண்டிருந்தாள்.
டயருடனும் காருடனும் போராடுமளவுக்கு நீரவுக்குத்
தெம்பில்லை. மனம் உடல் இரண்டும் சோர்ந்து மூளை இலக்கற்ற விரக்தியில் சிந்திக்கும் திறனை
இழந்திருந்தது.
காரை அப்படியே நிறுத்திவிட்டு மழையைப் பொருட்படுத்தாமல்
நடக்க ஆரம்பித்தவன் சரண் கூறிய மலைப்பாதையின் கீழே நடந்து கொண்டிருப்பதை அறியவில்லை.
மனம் முழுவதும் இருந்த வேதனை அவனைச் சுற்றி
இருக்கும் அபாயத்தை உணரவிடாமல் செய்ய சிறிது சிறிதாக மண் சரிந்து கொண்டிருப்பதை காணாமல்
அவன் நடந்து கொண்டிருந்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து கொண்டிருந்த மண்
மழையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மொத்தமாக சரிந்த கடைசி நொடியில் நீரவ் தனக்கு
வந்த ஆபத்தைப் புரிந்துகொண்டான்.
சுதாரித்து அவன் ஓடுவதற்குள் சகதி வழுக்கி
கீழே விழுந்தான்.
மொத்த மலைப்பாதையும் மழைத்தண்ணீரில் கரைந்து
சகதியாய் சரிய அம்மாபெரும் நிலச்சரிவில் “ஐயோ! யாராவது வாங்க” “அம்மாஆஆஆ” என இரு கூக்குரல்கள்
அரைகுறையாக கேட்டுக்கொண்டிருந்த தருணத்தில் கீழே விழுந்து எழ முடியாமல் கிடந்த நீரவை
மூச்சு விட கூட முடியாதளவுக்கு மலைப்பாதையின் ஒட்டுமொத்த மண்ணும் மழைத்தண்ணீரும் கலந்த
சகதி மூடியது.
சரணின் வாய் முகூர்த்தம் பலித்து சகதிக்குள்
சமாதியானான் நீரவ்.
*********
கார்கி டெலிகாம் அலுவலகத்திற்கு ஷ்ரவனை சந்திக்க
வந்த கேசவ் தமையனைக் காணாமல் குழம்பி தவித்தான்.
அவனது உதவியாளனிடம் விசாரித்தபோது காலையிலேயே
அலுவலகம் வந்தவன் வெளியே கிளம்புவதாக கூறி கார் ஓட்டுனரை கிளம்ப சொல்லிவிட்டு அவனே
காரை எடுத்துச் சென்ற தகவல் கிடைத்தது.
ஷ்ரவன் ஓட்டுனரை அழைத்து விசாரித்த போது “ஏர்போர்ட்டுக்குப்
போகணும்னு சார் கிளம்புனாருங்க” என்றார் அவர்.
“இவ்ளோ காலையில அவன் ஃப்ளைட்ல எங்க போயிருப்பான்?”
சந்தேகம் முகிழ்த்தது ஷ்ரவனுக்கும் கேசவுக்கும்.
“ஒருவேளை நிகிதாவ பாக்க போயிருப்பானா?”
ஷ்ரவன் கேட்க கேசவும் அப்படி தான் இருக்குமென
ஆமோதித்தான்.
உடனே நீரவின் எண்ணுக்கு அழைத்தான் அவன்.
“த நம்பர் யூ ஹேவ் டயல்ட் இஸ் கரண்ட்லி ஸ்விச்ட்
ஆப்” என்றது பதிவு செய்யப்பட்ட குரல்.
நீரவின் உதவியாளன் மூலம் விமானநிலைய அதிகாரியை
விசாரித்த போது அவரும் நீரவ் கொச்சிக்கு ப்ரைவேட் ஜெட் விமானம் மூலம் சென்றதை உறுதி
செய்தார்.
கூடவே கேரளாவில் மழை வெள்ள அபாயம் இருப்பதையும்
சுட்டிக்காட்டினார் அவர்.
கேசவும் ஷ்ரவனும் ப்ரைவேட் ஜெட்டில் செல்லுமளவுக்கு
அவனுக்கு அங்கே என்ன அவசரம் என்று யோசித்தனர். யாரிடமும் கூறாமல் வேறு சென்றிருக்கிறான்.
உடனே தனஞ்செயனுக்கு அழைத்தான் ஷ்ரவன்.
“சொல்லுங்க ஷ்ரவன் சார்”
“நீரவ் அங்க வந்தானா தனா?”
“நீரவ் சார் இங்க வந்த மாதிரி தெரியல சார்...
எப்ப வாகமன் வந்தாலும் எனக்கு இன்ஃபார்ம் பண்ணுவார்... இங்க ஹெவி ரெய்ன் ஃபால்... சோ
கவர்மெண்ட் லீவ் விட சொல்லிட்டாங்க... நம்ம எஸ்டேட் ஆபிஸ் கூட லீவ் தான்”
“இன்னைக்கு மானிங் ப்ரைவேட் ஜெட் மூலமா நீரவ்
கொச்சிக்கு வந்திருக்குறான்... அவனோட நம்பருக்குக் கால் பண்ணுனா ஸ்விச்ட் ஆப்னு வருது...
இப்ப நாங்க கிளம்பலாம்னா மழையால கேரளா போற ஃப்ளைட் எல்லாமே கேன்சல் பண்ணிட்டாங்க...
நீரவ் உங்களை கான்டாக்ட் பண்ணுனா எங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க தனா”
“கண்டிப்பா சார்”
தனஞ்செயன் கூறிய தகவலைச் சொன்னதும் கேசவின்
மூளை என்னென்னவோ யோசித்தது. உடனே அவன் அழைத்தது சரணின் உதவியாளனை.
அவனிடம் சரணின் மும்பை பயணம் பற்றி கேட்க
“சார் மும்பைல இருந்து திரும்பி த்ரீ டேய்ஸ் ஆகுது” என்றான். ஆனால் அவனுக்குச் சரண்
எங்கிருக்கிறான் என்ற விவரம் தெரியவில்லை.
சரணின் எண்ணும் மூன்று நாட்களாக தொடர்பில்
இல்லை என்ற செய்தி கிடைக்க நண்பர்கள் இருவரும் நீரவ் இருக்கும் இடத்தை அறிந்தாலும்
அங்கே செல்ல முடியாமல் தவித்தனர்.
தங்களது தொழில் அதிகாரத்தைப் பயன்படுத்தி கேரள
காவல்துறை மூலம் நீரவைத் தேடும்படி பணித்தவர்கள் அன்று வீட்டுக்கு வந்ததும் நீரவ் எங்கே
என கார்கி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போயினர்.
தாங்கள் தேடுபவன் யாருமே தேட முடியாத இடத்துக்குச் சென்று வெகுநேரம் ஆகிவிட்டது என்பதை அவர்களும் அறியவில்லை, அவனைத் தற்கொலைக்குத் தூண்டிய சரணும் அறியவில்லை.
Super epi👍
ReplyDeleteVery sad for nirav
ReplyDelete