அலைவரிசை 53
- Get link
- Other Apps
“நமக்கு நெருக்கமானவங்களுக்கு நம்ம குடுக்க வேண்டிய அதிகபட்ச மரியாதை என்ன தெரியுமா? அவங்களை நம்புறது... அவங்க எப்பவுமே நமக்கு நல்லது தான் நினைப்பாங்கனு நம்பணும்... நமக்காக அவங்க ஒரு காரியத்த செஞ்சு பிரச்சனையில மாட்டிக்கிட்டா கூட அவங்க எந்தத் தப்பும் பண்ணிருக்க மாட்டாங்கனு நம்பி அவங்களுக்குத் துணையா நிக்கணும்... நம்பிக்கையில்லாத உறவு எவ்ளோ நெருக்கமானதா இருந்தாலும் ஒரு கட்டத்துல அதுல விரிச்சல் விழுந்துடும்... சோ உங்களுக்குப் பிடிச்சவங்களுக்கு ஆடம்பரமான லைஃபையும் காஸ்ட்லி கிப்டையும் குடுக்குறத விட உங்களோட முழு நம்பிக்கையை மட்டும் குடுத்துப் பாருங்க, லைஃப் ப்ளசன்ட்டா இருக்கும்”
-கே.கேவின் மனதின் குரல்
“நீ சொல்லுறத நான் கேப்பேன்னு உனக்குத் தோணுதா கிரிஷ்?”
மகனுக்கு எதிரே அமர்ந்து அமர்த்தலாக கேட்டார் பத்மானந்த்.
இரவின் கருமையைத் துடைத்தெடுக்க முயன்ற விளக்குகளின் மஞ்சள் ஒளி வெள்ளத்தில் தூங்குமூஞ்சி மரத்தின் இலைகளின் நிழல் பொட்டு பொட்டாக அந்த பெர்கோலாவின் இடைவெளி வழியே அவர்கள் இருவர் மீதும் விழுந்து கொண்டிருந்தது.
கேசவ் காபி கோப்பையைப் பக்கவாட்டில் கிடந்த சிறிய டீபாய் மீது வைத்தான்.
“யூ ஹேவ் நோ ஆப்சன் டாட்” என்றான் நிதானமாக.
பத்மானந்த் அவன் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாதென்பதை புன்னகை மூலமாக வெளிப்படுத்தினார்.
“கமல் என் தம்பி... அவனை என்னால அம்போனு மாட்டிவிட முடியாது”
“சொந்த மகனோட சாவு, மனைவியோட தற்கொலை இந்த ரெண்டையும் நீங்க எப்பிடி ஹேண்டில் பண்ணுனிங்கனு எனக்கு நல்லா தெரியும்... அவங்க இறப்பு கம்பெனியோட குட்வில்லை பாதிக்குனு எவ்ளோ எரிச்சல்பட்டிங்க? இப்ப ஏன் நீங்க தயங்குறிங்க?”
“அப்ப செஞ்ச தப்பை மறுபடியும் நான் செய்ய விரும்பல கிரிஷ்”
அவரது குரலில் வேதனை ஒளிந்திருந்ததோ! ஒரு நொடி நிதானித்தான் கேசவ். ஆனால் அப்படி வேதனைப்பட்டாலும் என்ன பயன்? அன்னையும் தமையனும் மறைந்த தருணத்தில் கூட அவர் தொழில் குறித்து கவலைப்பட்டது இல்லையென ஆகிவிடுமா?
“இப்ப நீங்க கமலானந்தை காப்பாத்த நினைச்சிங்கனா, யூ ஹேவ் டு ப்ரிப்பேர் யுவர்செல்ஃப் டு லாஸ் கார்கி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ்... ரெண்டுல ஒன்னு மட்டும் தான் உங்களுக்கு நிலைக்கும்”
பத்மானந்த் அமைதி காத்தார். கேசவ் நிலமையை அவருக்குப் புரிய வைக்க முயன்றான்.
“லிசன் டாட்! நீங்க என்ன தான் ரூலிங் பார்ட்டிக்கு கோடி கோடியா டொனேசன் குடுத்தாலும் இந்த 4G விவகாரத்துல அவங்க எதிர்கட்சி ஆளை மாட்டிவிடுறதுல குறியா இருக்காங்க... ஏன்னா இப்ப அவங்களுக்கு தமிழ்நாடு அசெம்ப்ளி எலக்சன்ல ஜெயிக்கணும்... அதுக்காக இந்தப் பிரச்சனைய கையில எடுத்திருக்காங்க... கமலானந்த் சபீனா சர்மா கிட்ட போன்ல பேசுன டேப்ஸ், சரண் அவங்களை மீட் பண்ணுன வீடியோஸ் எல்லாமே குமாரவேலு தரப்புல ஆதாரமா வச்சாங்கனா கண்டிப்பா அவங்க ரெண்டு பேரும் சட்டத்துக்கு முன்னாடி நின்னே ஆகணும்... அதுக்கு முன்னாடி நம்ம போர்ட் ஆப் டைரக்டர் எல்லாரும் சேர்ந்து அவங்களை போர்ட்ல இருந்து ரிமூவ் பண்ணிட்டோம்னா அட்லீஸ்ட் கார்கி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸோட மரியாதையாச்சும் மிஞ்சும்... அவங்க செஞ்ச தப்புக்கும் கம்பெனிக்கும் சம்பந்தம் இல்லனு போர்ட் முடிவெடுக்குறதுக்கு உங்களோட ஆதரவு அவசியம் டாட்... சீக்கிரமா நம்ம ஒரு முடிவுக்கு வரணும்”
“கிரிஷ்...”
அவர் தயங்க கேசவ் எழுந்து வந்து அவரருகே முழங்காலிட்டு அமர்ந்தான்.
“ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் யுவர் ஃபீலிங்ஸ்... நீரவும் நானும் மாதிரி தான நீங்களும் சித்தப்பாவும்... சொந்த தம்பிய விட்டுக்குடுக்க உங்களுக்கு மனசில்ல... ஆனா அவரும் சரணும் உங்க முதுகுக்குப் பின்னாடி என்னென்ன பண்ணுனாங்கனு தெரிஞ்சா நீங்க இப்பிடி யோசிக்க மாட்டிங்க... அதை நான் ஆதாரத்தோட உங்களுக்கு நிரூபிப்பேன்... பிசினஸுக்காக நீங்க யாரை வேணும்னாலும் இழக்க தயாரா இருப்பிங்கல்ல... இந்த தடவை உங்க தம்பியை இழக்க ரெடியாகுங்கப்பா... நமக்கு வேற வழியில்ல... கார்கி குரூப்போட குட்நேமை காப்பாத்த வீ ஹேவ் டு சேக்ரிஃபைஸ் கமலானந்த்... டுமாரோ நீங்க குமாரவேலுவ மீட் பண்ணணும்... ஷ்ரவன் உங்க கூட வருவான்... அங்க என்ன பேசணும்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்... கார்கி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸோட வருங்காலம் இப்ப உங்க கையில தான் இருக்கு... புரிஞ்சு நடந்துக்குவிங்கனு நம்புறேன்”
பத்மானந்த் வேறு வழியின்றி மைந்தன் கூறியதற்கு தலையாட்டி வைத்தார்.
அவருக்கும் வேறு வழி தெரியவில்லை. இப்போதும் கூட கேசவ் கமலானந்தும் சரணும் சதி செய்ததாக கூறியதை அவர் நம்பவில்லை என்பது தான் அவலம்.
******
பார்க் அவென்யூ அப்பார்ட்மெண்ட், ஷெனாய் நகர்...
அஞ்சலியின் பார்ட்டியிலிருந்து வீட்டுக்குத் திரும்பியிருந்தாள் பிரக்ருதி. வீட்டின் மாற்றுச்சாவி அவளிடம் இருப்பதால் சத்தம் எழுப்பாமல் கதவைத் திறந்தவள் பூனை போல அடி மேல் அடி வைத்து வீட்டுக்குள் நுழைந்தாள். கையில் ஒரு ஜம்போ பை இருந்தது.
இருளில் மூழ்கி கிடந்தது வீடு. அனைவரும் உறங்கிக்கொண்டிருக்க மெதுவாக பிரக்யாவின் அறைக்கதவைத் திறந்து உள்ளே சென்றவள் இரகசியக்குரலில் “பிரகி எழுந்திருடி” என்க அவளும் சோம்பல் முறித்து கண்களைக் கசக்கிவிட்டு படுக்கையின் மீது எழுந்தமர்ந்தாள்.
அவசரமாக கண்ணாடியைத் தேடி போட்டுக்கொண்டவள் “இவ்ளோ லேட்டா வந்திருக்க? எல்லாம் ரெடியா இருக்கு... ஆரம்பிச்சிடுவோமா?” என்க பிரக்ருதியும் சரியென தலையசைத்தாள்.
இருவரும் அந்த ஜம்போ பையிலிருந்து பெரிய அட்டைபெட்டியை எடுத்தனர்.
“ஐபேக்கோ இந்நேரத்துக்கு திறந்திருந்துச்சா?” பிரக்யா கேட்டபடியே அட்டைப்பெட்டியிலிருந்த கேக்கை காட்ட
“ஒரே ஒரு அவுட்லெட் மட்டும் ஓப்பன் ஆகியிருந்துச்சு... கடைசி நேரத்துல போய் நானும் கவினும் வாங்குனோம்” என்றபடி ஐஸ்க்ரீம் கேக் டப்பாவை தட்டிக் கட்டினாள் பிரக்ருதி.
“நான் அங்கிளை எழுப்பட்டுமா?”
“நான் அவரை எழுப்புறேன்... நீ மாமாவையும் அக்காவையும் எழுப்பு”
பிரக்யாவை அனுப்பி வைத்துவிட்டு தந்தையின் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள் பிரக்ருதி.
விளக்கை போட்டவள் உறங்கி கொண்டிருந்த வாசனை உசுப்ப துவங்கினாள்.
“ப்பா! எழுந்திரி”
வாசன் அசைந்து கொடுத்துவிட்டு மீண்டும் உறங்க “அப்பாஆஆஆ” என அவரது காதில் கத்தியவள் அவர் அடித்து பிடித்து எழுந்து அமரவும் சாவகாசமாக “குட் நைட்பா” என்றாள்.
“இதை சொல்லுறதுக்காகவா நடுராத்திரில எழுப்புன? சின்னக்கழுதை போய் தூங்கு” என்று அரைத்தூக்கத்தில் கூறியவர் மீண்டும் உறங்க போக அவரது கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினாள் பிரக்ருதி.
“அட தூங்கவிடும்மா”
“சரி நீ தூங்குப்பா... நான் கவின் கூட ஓடிப்போறதா இருக்குறேன்... அதை சொல்ல தான் வந்தேன்... சொல்லிட்டேன்... கிளம்புறேன்... டாட்டா” என கையசைத்தவள் அவரது தலையில் போட்ட இடியின் சத்தத்தை டெசிபலால் அளவிட முடியாது.
“என்னது?” என பதறியடித்துக்கொண்டு எழுந்த வாசன் அவள் வேகமாக வெளியேறவும் “கிருதி என்னம்மா சொல்லுற? டேய் மனோ, அம்மா நவி, பிரகி எங்க போனிங்க எல்லாரும்? கிருதி என்னமோ சொல்லுறா... அவளைத் தடுத்து நிறுத்துங்க” என்று வேகமாக அவளைத் தொடர்ந்து ஹாலுக்கு வந்தார்.
அங்கே பிரணவியும் மனோகரும் நிற்க, பிரக்யா ஒரு டீபாயை நகர்த்தி வந்தாள்.
வாசன் புரியாமல் விழிக்கும் போது அதன் மீது ஐஸ்க்ரீம் கேக்கை வைத்த பிரக்யா ‘Happy birthday’ என்று எழுதப்பட்ட பொன்னிற கேக் டாப்பரை அதன் நடுவே குத்தி வைத்தாள்.
“பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா வாசன்” என புன்னகையோடு வந்து மனோகர் அவரைக் கட்டிக்கொள்ள வாசனுக்குத் திகைப்பில் பேச்சு வரவில்லை.
பிரக்ருதி போட்ட வெடிகுண்டு அத்தகையது. அவள் நமட்டுச்சிரிப்போடு ஸ்பார்க்கில் கேண்டிலை ஏற்றிவிட்டு “ப்பா வந்து கேக் கட் பண்ணு” என்க வாசன் அவளை முறைத்த முறைப்பின் தீவிரத்தை வார்த்தையில் விவரிக்க இயலாது.
“அட கழுதை! ஒரு நிமிசத்துல எனக்கு நெஞ்சுவலி வர வச்சிட்டியே” என்று மகளின் காதைப் பிடித்து திருகியவர்
“விடுப்பா விடுப்பா... உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு குறும்புத்தனமா உன்னை எழுப்பி விட்டுருப்பா... கிருதியோட குறும்புத்தனம் உனக்கென்ன புதுசா?” என மனோகர் கூறவும் விடுவித்தார்.
“ப்ச்! அதை விடுங்க... முதல்ல கேக்கை கட் பண்ணுங்கப்பா... இல்லனா உருக ஆரம்பிச்சிடும்” என்று நாக்கு ஊற கூறினாள் பிரணவி.
பிரக்யா அவளை முறைக்க “ஒரு பீஸ் கேக் தான பிரகி” என பரிதாபமாக நடித்தாள்.
வாசன் மூத்தமகள் ஆசைப்படுவதால் கேக்கை வெட்டினார்.
பிரக்ருதியும் பிரக்யாவும் கரங்களைத் தட்டியபடி பிறந்தநாள் பாடலை பாட வாசன் முதல் துண்டு கேக்கை நண்பருக்கு ஊட்டினார்.
“ஹேப்பி பர்த்டே” என்று கட்டியணைத்த மனோகர் வாசனுக்கும் ஊட்டிவிட்டார்.
அடுத்து பிரணவிக்கு.
“இன்னொரு பீஸ் ஊட்டுங்கப்பா” என்றவள் பிரக்யா மீண்டும் முறைக்கவும் “நான் உன்னோட மருமகப்பிள்ளைக்குத் தான் கேக்குறேன்” என்றாள் அப்பாவியாக.
வாசனும் சிரித்தபடி மகளுக்கு இன்னொரு துண்டை ஊட்டினார்.
பின்னர் பிரக்ருதிக்கும் பிரக்யாவுக்கும் ஊட்டிய பிறகு மீதமிருந்த கேக்கை எடுத்துக்கொண்டாள் பிரணவி.
“ஏய்! இதை எங்க எடுத்துட்டுப் போற?” என பிரக்ருதி கேட்க
“அதான் எல்லாரும் சாப்பிட்டிங்கல்ல, இனிமே இது எனக்குச் சொந்தம்” என்றபடி ஃப்ரிட்ஜை நோக்கி சென்றாள்.
“என்னது? அடிப்பாவி, நாங்க இத்துணூண்டு தான் சாப்பிட்டோம்... இதுல்லாம் பகல் கொள்ளை” என்றாள் அவள்.
“சாரி! இட்ஸ் நைட் டைம்” என்று இரண்டு விரலை காட்டி கண்ணைச் சிமிட்டிவிட்டு பிரணவி செல்ல
“பாத்தியாப்பா இவளுக்கு குசும்பை?” என கால்களைத் தரையில் உதைத்தாள் பிரக்ருதி.
“உன்னை விட கம்மி தான்” என இளையமகளை வார்த்தையால் வாரிவிட்டு சிரித்தார் வாசன்.
“இந்த கேக் அவளுக்கு... ஹோட்டல்ல கட் பண்ணப்போற கேக் எனக்கும் பிரகிக்கும்... அதுலயும் அவ ஷேருக்கு வந்தான்னா கிருதியோட கிரிமினல் முகத்த காட்ட வேண்டியிருக்கும்... சொல்லி வைங்க மிஸ்டர் வாசன்” என அவள் எச்சரிக்க அங்கே சிரிப்பு வெடித்தது.
மறுநாள் விடிந்ததும் பிரணவி தந்தையின் பிறந்தநாளுக்காக சமையலில் தனது கைவண்ணத்தைக் காட்ட அன்றைய காலையுணவு சிரிப்பும் சந்தோசமுமாக முடிந்தது.
பின்னர் பெரியவர்களிருவரும் கோவிலுக்குச் சென்றனர்.
பிரணவி கர்ப்பவதி என்பதால் அவள் வீட்டில் இருந்துவிட அவளுக்குத் துணையாக பிரக்ருதியும் பிரக்யாவும் இருந்து கொண்டனர்.
கோவிலில் வாசன் பிரணவிக்கும் பிருத்விக்கும் இடையே இருக்கும் இடைவெளி சீக்கிரம் அகன்று அவர்கள் மீண்டும் ஒரே குடும்பமாக வாழ வேண்டுமென மனமுருக வேண்டிக்கொண்டார்.
மனோகரோ மகனின் திருவிளையாடல் எதுவும் மருமகளின் மனதையோ பிறக்கவிருக்கும் சிசுவையோ பாதித்துவிடக்கூடாதென வேண்டிக்கொண்டார்.
திருநீறை கீற்றாக பூசிக்கொண்டு இரு நண்பர்களும் அவர்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் செல்லலாம் என திட்டமிட மதியவுணவுக்கு வீட்டுக்கு வந்துவிட வேண்டுமென்ற கட்டளையோடு அனுமதி கொடுத்தனர் மூன்று பெண்களும்.
“கன்னிமாராக்குப் போய் உக்கார்றதுக்கு எவ்ளோ சீன் பாரு” என பிரக்ருதி கிண்டல் செய்தபடி மதியவுணவுக்குக் காய்கறி நறுக்கிக் கொண்டிருக்க பிரக்யாவோ வெகு கவனமாக மொபைலில் ஷ்ரவனின் அழைப்புகள் அனைத்தையும் துண்டித்துக் கொண்டிருந்தாள்.
சைலண்டில் இருந்ததால் அழைப்பு வந்ததை சகோதரிகள் இருவரும் கவனிக்கவில்லை.
“கேரட்ட ரவுண்டா கட் பண்ணணுமா? ரெக்டாங்கிளா கட் பண்ணணுமா?” என்று கேட்டபடி பிரணவியை நெருங்கிய போது பிரக்யா அழைப்பைத் துண்டிப்பதை பார்த்துவிட்டாள் பிரக்ருதி.
அதை உடனே கேட்காமல் தமக்கை நவரத்ன குருமாவுக்காக கேட்ட காய்கறிகள் பழங்கள் மற்றும் நட்ஸை எடுத்துக் கொடுத்துவிட்டு பிரக்யாவை அழைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
“என்னடி?” என வினவியவளிடம்
“ஏன் ஷ்ரவனோட காலை கட் பண்ணுன?” என நேரடியாக கேட்டாள் பிரக்ருதி.
பிரக்யாவும் தயங்காமல் அன்று வந்த நிகிதா என்ற பெண்ணின் அழைப்பைப் பற்றி அவளிடம் கூறிவிட்டாள்.
“சென்னைக்கு வந்ததுல இருந்து அவன் சரியில்ல... இப்ப எவளோ ஒரு நிகிதா வந்ததும் என்னை அவாய்ட் பண்ணுறான் கிருதி” என குற்றப்பத்திரிக்கை வாசித்தாள் அவள்.
“அவனுமா?” பிரக்ருதி ஆச்சரியத்துடன் இழுக்க
“என்ன அவனுமானு இழுக்குற? அப்ப இன்னொருத்தரும் இப்பிடி நடந்துக்குறாங்களா? யார் அவங்க?” என பிரக்யா அடுத்தடுத்து கேள்விக்கணைகளை தொடுக்க கேசவைப் பற்றி அவளிடம் கூற விரும்பாமல்
“நான் பொதுவா சொன்னேன்டி... பசங்க இன்னொரு பொண்ணு வந்தாலே இப்பிடி தானே பிஹேவ் பண்ணுவாங்க... அதுக்கு அவனும் எக்சப்சன் இல்லையாங்கிற அர்த்தத்துல கேட்டேன்” என்று சமாளித்து வைத்தாள்.
பிரக்யாவும் அதை நம்பி ஷ்ரவனைப் பற்றி புலம்பித் தீர்த்தாள். அனைத்தையும் நட்புக்காக காது கொடுத்து கேட்ட பிரக்ருதி புலம்பல் படலம் முடிந்ததும் பிரக்யாவுக்கு அறிவுரை கூறும் படலத்தை ஆரம்பித்தாள்.
“ஷ்ரவன் எப்பிடிப்பட்டவன்னு உனக்கு நல்லாவே தெரியும்... உன்னைப் பாக்குற வரைக்கும் அவன் எந்த சீரியஸ் ரிலேசன்ஷிப்லயும் சிக்கல... உன் கிட்ட தான் அவன் லவ்வ ஃபீல் பண்ணிருக்குறான்... அவன் உன்னை சீட் பண்ண மாட்டான் பிரகி... நீ அவனோட பாஸ்டை ப்ரசெண்டோட ஒவ்வொரு இன்சிடெண்ட் கூடவும் ஒட்டி வச்சு பாக்குற... அதான் அவன் சாதாரணமா உன்னை அவாய்ட் பண்ணுனா கூட வேற ஒருத்திக்காக அவாய்ட் பண்ணுறதா தோணுது... நீ அவனை ரொம்ப லவ் பண்ணுற... ஆனா கொஞ்சம் கூட நம்பல... இட்ஸ் யுவர் ஃபால்ட்... ஒரு ஃப்ரெண்டா நீ தப்பு செஞ்சா நான் அதை உனக்குச் சுட்டிக்காட்டணும்... இப்ப நீ தான் தப்பு பண்ணுற... அவனுக்கு எக்ஸ்ப்ளெய்ன் பண்ண வாய்ப்பு குடுக்காம நீயா அஸ்யூம் பண்ணி எந்த முடிவுக்கும் வராத பிரகி... பேசுனா தான் தெளிவு வரும்... அவன் காலை கட் பண்ணாம என்னனு எடுத்து கேளு”
நீண்ட அறிவுரை ஒன்றை வழங்கிவிட்டு பிரணவிக்கு உதவியாக சமைக்கச் சென்றுவிட்டாள் பிரக்ருதி.
பிரக்யாவோ தோழியின் அறிவுரையிலும், தனது மீது தான் தவறுள்ளது என அவள் சுட்டிக்காட்டியதிலும் கொஞ்சம் ஜெர்க் ஆகி யோசனையில் ஆழ்ந்தாள். இனியாவது அவள் ஷ்ரவனின் விளக்கத்துக்குக் காது கொடுப்பாளா?
- Get link
- Other Apps
Comments
Post a Comment