அலைவரிசை 7
- Get link
- Other Apps
“உங்களுக்கு அற்புதமான
மனுசங்க கிடைச்சாங்கனா அவங்களை தக்க வச்சுக்க நீங்க போராடணும்... ஏன்னா இந்த உலகத்துல
அற்புதமான விசயங்களை சொந்தமாக்கிக்கிறதுக்கு காம்படிசன் அதிகம்... சோ யாருக்காகவும்
எதுக்காகவும் அவங்களை விட்டுக்குடுத்துடக்கூடாது... சில நேரம் நம்ம அவங்க மேல கோவப்படலாம்,
சண்டை போடலாம்... ஆனா வேண்டாம்னு தூக்கிப்போடக்கூடாது... நம்ம கூழாங்கல்னு நினைச்சு
தூக்கிப் போட்டவங்க உண்மையிலயே வைரம்னு தெரிய வர்றப்ப அந்த வைரம் வேற யாருக்கோ சொந்தமாகிருக்கும்”
-கே.கேவின் மனதின் குரல்
மெடிக்கல் சிட்டி டல்லாஸ் மருத்துவமனை...
மகப்பேறு மருத்துவரிடம் மாதாந்திர பரிசோதனைக்காக
பிரணவியை அழைத்து வந்திருந்தான் பிருத்வி. அவர்களோடு பிரக்யாவும் பிரக்ருதியும் வந்திருந்தனர்.
பரிசோதனை முடிந்ததும் பிருத்வி
அலுவலகம் சென்று விடுவான் என்பதால் அவர்கள் பிரணவிக்குத் துணயாக வந்திருந்தனர்.
கணவனும் மனைவியும் ஐந்தாவது மாதத்துக்கான
அனாமலி ஸ்கேனை எடுப்பதற்காக மருத்துவருடன் சென்றிருக்க பிரக்யாவும் பிரக்ருதியும் அவர்களுக்காக
மருத்துவமனையின் வரவேற்பரையில் காத்திருந்தனர்.
பிரக்ருதி தனது நகப்பூச்சைக்
காட்டி பேசிக்கொண்டிருந்தாள்.
“ஹூடா பியூட்டி நல்ல பிக்மெண்ட்
குடுக்குதுல்ல”
“எப்ப வாங்குன கிருதி? என் கிட்ட
சொல்லவேல்ல?”
“வாங்கி ஒன் வீக் ஆகுது பிரகி”
இருவரும் பேசிக்கொண்டிருக்கையில்
முழங்கையில் இரத்தம் வழிய மருத்துவமனைக்குள் வந்தான் கே.கே. அவனோடு ஷ்ரவனும் வந்திருந்தான்.
இருவரும் பிரக்யாவும் பிரக்ருதியும்
அமர்ந்திருப்பதைக் கவனிக்கவில்லை. ஆனால் கடந்து செல்பவர்களைக் கவனித்துவிட்ட பிரக்ருதி
“கே.கேவுக்கு ஏதோ இன்ஜுரி போல”
என்று அவர்கள் சென்ற திசையைக் காட்டினாள்.
பிரக்யாவும் அங்கே பார்க்க இருவரின்
முதுகும் தெரிந்தது. பிரக்ருதி உடனே எழுந்திருக்கவும் அவளது கரத்தைப் பற்றியவள்
“எங்க போற கிருதி?” என்க
“பாவம் பிரகி... என்ன இருந்தாலும்
நம்ம நெய்பர்... என்னாச்சுனு கேட்டுட்டு வந்துடுறேன்டி” என்று பதிலளித்துவிட்டு அவர்கள்
சென்ற திசையை நோக்கி ஓட முற்பட பிரக்யா அவளை இழுத்துப் பிடித்து அமர வைத்தாள்.
“அவன் பின்னாடி போனேனா கொன்னுடுவேன்
பாத்துக்க.. ஒழுங்கா உக்காரு”
பிரக்ருதி வேறு வழியின்றி அமர்ந்தாள்.
“ஏன் முகம் இப்பிடி போகுது? அவன்
உன்னை அடிச்சதை மறந்துட்டியா?”
“அதுக்கு நானும் அவனை அறைஞ்சிட்டேன்...
பிரச்சனை சரியா போச்சு பிரகி”
“சோ நீ பழையபடி அவன் கூட ஃப்ளர்ட்
பண்ண அடி போடுற”
“இதுல என்னடி தப்பு இருக்கு?”
“தப்பு தான்... உனக்குனு ஒருத்தன்
வர வரைக்கும் காத்திரு”
“அஹான்! அந்த ஒருத்தன் எனக்காக
எந்தப் பொண்ணையும் சைட் கூட அடிக்காம இருப்பானாக்கும்... போடி இவளே”
முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு
அமர்ந்தாள் பிரக்ருதி.
அவளைச் சிரிக்க வைக்க பிரக்யா
முயற்சி செய்ய அந்த முயற்சியின் இடையே கையில் கட்டுப்போட்டுவிட்டு கே.கேவும் ஷ்ரவனும்
வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் அருகில் வரவும் பிரக்ருதி
ஓடி சென்று கே.கேவிடம் நலம் விசாரிக்க ஆரம்பித்தாள்.
“ஹாய்! கையில என்ன காயம்?”
அவள் திடுதிடுப்பென வந்து கேட்கவும்
அவன் திணற அவனுக்குப் பதிலாக ஷ்ரவன் பதிலளித்தான்.
“கமிஷரில வேலை பாக்குறப்ப காயம்
பட்டுடுச்சு”
“ஓ! ஐயோ பாவம்... வலிக்குதா?”
என மீண்டும் கே.கேவிடம் அவள் கேட்க
“இல்ல... சுகமா இருக்குதாம்”
என ஷ்ரவனே பதில் கூற
“நான் உன் கிட்ட கேக்கல மேன்”
என கே.கேவைப் பார்த்தாள் பிரக்ருதி.
“ஏன் நீ பதில் சொல்ல மாட்டியா?
உனக்குப் பதிலா உன்னோட ப்ராக்சி தான் பதில் சொல்லுமா?”
அவள் கேலியாக கேட்கவும் அவனது
இதழில் புன்முறுவல். அதை அடக்கியபடியே
“நானும் ஒன் வீக்கா பாத்துட்டிருக்கேன்...
நீ அடிக்கடி என் ரூட்ல க்ராஸ் பண்ணுற... உனக்கு என்ன தான் வேணும்?” என்றான் கே.கே.
பிரக்ருதி முகம் மலர “ஒன் வீக்கா
நான் உன் கிட்ட பேச ட்ரை பண்ணுறது தெரிஞ்சும் ஏன் அவாய்ட் பண்ணுற?” என்று கேட்க
“உன்னோட கொள்கை கோட்பாடுல உள்ள
வெறுப்பு தான் காரணம்” என்றவனிடம்
“சரி சரி! நம்ம பொறுமையா பேசலாம்...
அங்க வந்து உக்காரு... ஹலோ மிஸ்டர் ப்ராக்சி, நீயும் தான்” என்று கே.கேவோடு ஷ்ரவனையும்
அழைத்தாள் பிரக்ருதி.
மூவரும் அங்கே சென்று அமர பிரக்யா
தனது கண்ணாடியின் வழியே பிரக்ருதியிடம் “என்னடி இது?” என்று முட்டைக்கண்களை உருட்டி
சைகையால் வினவினாளே தவிர அவர்களிடம் பேசவில்லை.
அமர்ந்ததும் “எதிரெதிர் கொள்கை
இருக்குறவங்க எதிரிகளா ஒருத்தரை ஒருத்தர் முறைச்சிக்கிட்டே தான் திரியணும்னு எந்த அவசியமும்
இல்லை... இப்ப எனக்கும் எங்க மாமாக்கும் கொள்கை ஒத்துப்போகாது... எங்கப்பாக்கும் எனக்கும்
கூட ஒத்துப்போகாது... அதுக்காக நாங்க ஒரே குடும்பமா வாழலையா?” என்று நீண்ட பிரசங்கம்
ஒன்றை நிகழ்த்தினாள் பிரக்ருதி.
மற்ற மூவரும் கதை கேட்பது போல
ஆர்வமாய் கேட்டுக்கொண்டிருந்தனர்.
“சரி! இது மூலம் தாங்கள் கூற
வருவதென்னவோ?” என ஷ்ரவன் கிண்டலாய் கேட்க
“சிம்பிள்! ஒரு பணக்காரனை கல்யாணம்
பண்ணி செட்டில் ஆகணும்ங்கிறது என்னோட கனவு... அதை நான் யாருக்காகவும் மாத்திக்க மாட்டேன்...
ஆனா அதுக்கும் நீ என்னை அவாய்ட் பண்ணுறதுக்கும் என்ன லிங்க் இருக்கு? நம்ம மொழிக்காரனை
பாத்ததும் உண்டாகுற ஃப்ரெண்ட்லி ஃபீல்ல தான் நான் உன் கிட்ட பேச ட்ரை பண்ணுறேன்...
நான் இன்னும் ஃபைவ் மன்த்ஸ் தான் இங்க இருப்பேன்... அது வரைக்கும் ஃப்ரெண்டா இருக்கலாமே?”
என்றாள் பிரக்ருதி.
இது தனக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்
இல்லை என்று ஷ்ரவன் கே.கேவின் புஜத்தை இடிக்க அவனோ புருவம் நெறிய யோசித்தான்.
“நீ இவ்ளோ யோசிக்க ஒன்னும் இல்ல”
கே.கே ஷ்ரவனை பார்க்க அவனோ “லாஸ்ட்
வீக் செஷன்ல டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்குதா? உன்னோட கம்ஃபர்டபிள் ஜோனை விட்டு வெளிய
வந்து புது மனுசங்க கிட்ட பழகுனா யூ வில் ரெகவர் சூன்... இந்த அமிர்தாஞ்சன் பாட்டிலால
எந்த ஆபத்தும் வராது” என்றான்.
பிரக்ருதியும் பிரக்யாவும் என்ன
செஷன் என்று புரியாமல் விழிக்க கே.கேவே அதற்கு பதிலளித்தான்.
“நான் சைக்யாட்ரிஷ்ட் கிட்ட சைகோதெரபி
எடுத்துக்குறேன்... டிப்ரசன்., ஆன்சைட்டி, ஆங்கர் இஷ்யூனு எனக்கு இருக்குற ப்ராப்ளமோட
லிஸ்ட் பெருசு... இப்ப தான் ரெகவர் ஆகிட்டு இருக்குறேன்... சில நேரம் என்னால எமோஷன்ஸை
கரெக்டா ஹேண்டில் பண்ண முடியாது... அதனால தான் ஜேக்கப், ஷ்ரவனை தவிர வேற யாரோடவும்
நான் பழகுறதில்ல”
பிரக்யா அவனை மேலும் கீழுமாகப்
பார்த்தவள் “நீங்க ரொம்ப லக்கி... பிகாஸ் உங்களுக்கு இருக்குற சைக்காலஜிக்கல் ப்ராப்ளம்ஸை
நீங்க கண்டுபிடிச்சு அதுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்குறிங்க... சைகோதெரபிக்குப் போனாலே
பைத்தியம்னு ஒதுக்கி வைக்குறவங்களுக்கு நடுவுல உங்களுக்கு சப்போர்டிவான ஃப்ரெண்ட்ஸ்
கிடைச்சிருக்காங்க... இங்க நிறைய பேருக்குத் தன்னோட சைகாலஜிக்கல் ப்ராப்ளம் என்னனு
கூட தெரியாது... வெளிய சொல்லி ட்ரீட்மெண்ட் எடுத்தா பைத்தியக்காரப்பட்டம் வந்திடுமோங்கிற
பயத்தோட வாழ்ந்து செத்தும் போயிடுவாங்க... நீங்க அப்பிடி இல்ல” என்றாள்.
அவளது பேச்சில் இரு நண்பர்களும்
நிம்மதி புன்னகை பூக்க பிரக்ருதியோ “அதான் பிரகியே எக்ஸ்ப்ளனேஷன் குடுத்துட்டாளே! இனியாச்சும்
ஃப்ரெண்ட்ஸ்?” என்றபடி அவனிடம் கரம் நீட்ட
“என்ன நடந்தாலும் நீ உன் காரியத்துல
கண்ணா இருக்க... பிழைச்சுப்பம்மா” என்றான் ஷ்ரவன் கேலியாக.
கே.கே அவளது கரத்தில் தன் கையை
வைக்கவும் குலுக்கியவள் “உன்னோட இன்னொரு தயக்கம் என்னனு எனக்கு நல்லா தெரியும்... நான்
எப்பவும் உன்னை லவ் பண்ண மாட்டேன்... மதர் ப்ராமிஸ்” என்றாள்.
அவர்கள் கரம் கோர்த்த நிலையில்
இருக்கும் போதே “நீ ஹாஸ்பிட்டலுக்கு எதுக்கு வந்திருக்க?” என வினவினான் அவன்.
பிரக்ருதியோ “எதுக்கு வருவாங்க? எல்லாம்
மன்த்லி செக்கப்புக்குத் தான்” என்றபடி தனது கரத்தை விலக்கிக்கொண்டாள்.
“என்ன மன்த்லி செக்கப்?” என அவனும்
ஷ்ரவனும் குழப்பமாக ஏறிட
“ப்ரெக்னென்சி செக்கப்” என்றனர்
பிரக்ருதியும் பிரக்யாவும் ஒரே குரலில்.
நண்பர்கள் இருவரும் அதிர்ந்தனர்.
கே.கேவோ குழப்பமும் குமுறலுமாய் “வாட்? ஆர் யூ ப்ரெக்னெண்ட்? ப்ரெக்னெண்டா இருக்குறப்ப
ஏன் ட்ரிங்க் பண்ணுன? பொதுவா பொண்ணுங்கனாலே இப்பிடி தான்னு சொன்னா மட்டும் உனக்கு கோவம்
வருது... ஆனா செய்யுறது எல்லாமே ஈவிள் திங்க்ஸ்” என்கவும்
“ஹலோ ஹலோ! நான் எங்கயா ப்ரெக்னெண்டா
இருக்கேன்? என் அக்கா தான் ப்ரெக்னெண்டா இருக்கா... நானும் பிரகியும் அவ கூட துணைக்கு
வந்திருக்கோம்” என்று பதறிப்போய் விளக்கமளித்தாள் பிரக்ருதி.
கூடவே “எந்த ஆங்கில்ல நான் பாக்குறதுக்கு
ப்ரெக்னெண்ட் லேடி மாதிரி இருக்கேன்? இந்த ஹாஸ்பிட்டல்ல ஐ டாக்டர்சும் இருக்காங்க...
போய் உன் கண்ணை செக் பண்ணு” என்று பொரும அந்நேரத்தில் பிருத்வி பிரணவியை அழைத்துக்கொண்டு
வந்தான்.
வந்தவன் ஷ்ரவனையும் கே.கேவையும்
பார்த்து புன்னகைத்தான். பிரக்ருதி கே.கேவை பழிக்குப் பழி வாங்கிய விதத்தை நகைச்சுவை
பொங்க அவனிடம் ஏற்கெனவே விவரித்திருந்தாள். கூடவே பிரக்யாவும் அவன் போதைக்கு அடிமையானவன்
இல்லை என்று கூறியிருந்ததால் சினேகமாகவே அவர்களை நோக்கினான்.
“கங்கிராட்ஸ் சார்... ஜூனியர்
வரப் போறாங்களேமே... நெய்பரா இருந்தாலும் இத்தனை நாள் நம்ம ஒருத்தரை ஒருத்தர் பாத்தது
கூட இல்லை... இப்ப தான் உங்க சிஸ்டர் இன் லா சொன்னாங்க” என்று வாழ்த்தினான் ஷ்ரவன்.
“தேங்க்யூப்பா... நெக்ஸ்ட் வீக்
‘ஜெண்டர் ரிவீலிங் பார்ட்டி’ (Gender Revealing Party) வைக்கப் போறோம்... நீங்க ரெண்டு
பேரும் கண்டிப்பா வரணும்... இன்விடேசனை நானே நேர்ல வந்து குடுக்குறேன்” – பிருத்வி.
“இன்விடேசன்லாம் எதுக்கு சார்?
டேட் மட்டும் சொல்லுங்க... நாங்க ஆஜர் ஆகிடுவோம்... இது வரைக்கும் நாங்க ஜெண்டர் ரிவீலிங்
பார்ட்டி அட்டெண்ட் பண்ணுனதேயில்ல” என்றான் ஷ்ரவன்.
கே.கே நடந்ததை வேடிக்கை பார்த்தானே
ஒழிய பேசவில்லை. அவனது கண்ணுக்கு இன்னும் சில மாதங்களில் தாயாகப் போகிற பிரணவி அவனது
தாயை பிரதிபலித்தாள்.
அன்னையின் நினைவில் முகம் மலர்ந்தவன்
கட்டாயம் அந்தப் பார்ட்டிக்குச் செல்ல வேண்டும் என முடிவெடுத்தான் அக்கணமே.
“பார்ட்டிக்கு எதுவும் ஹெல்ப்
பண்ணணும்னா சொல்லுங்க சார்... நாங்க பண்ணுறோம்” என அவன் கூற
“கண்டிப்பா... நீங்க ஃபுட் ட்ரக்
நடத்துறதா கிருதி சொன்னா... உங்களோட வேஃபிள்ஸ் சாக்லேட் ட்ரிங்னா என் ஒய்புக்கு உயிர்...
பார்ட்டிக்கு வர்றவங்களுக்கு ஸ்னாக்ஸ், ட்ரிங்ஸ் ப்ரிப்பேர் பண்ணி தர முடியுமா? என்னடா
இந்த இடத்துல பிசினஸ் பேசுறானேனு நினைச்சுக்காதிங்கப்பா” என்றான் பிருத்வி.
“எங்களுக்கு ஆர்டர் கிடைச்சிருக்குனு
நாங்க சந்தோசம் தான் படுவோம் சார்... எல்லாமே பெர்ஃபெக்டா பண்ணிக் குடுத்துடுறோம்”
என தங்களுக்கு ஒரு டீல் கிடைத்த மகிழ்ச்சியில் குதூகலித்தான் ஷ்ரவன்.
பிருத்வி அலுவலகம் செல்ல விடைபெற
பிரணவியை அழைத்துக்கொண்டு சாக்சனி அப்பார்ட்மெண்டுக்குக் கிளம்ப ஷ்ரவனை ஃபுட் ட்ரக்கை
எடுத்து வர கமிஷரிக்கு அழைத்தான் கே.கே.
“கையில அடி பட்டிருக்கு மச்சி...
இதை வச்சுட்டு எப்பிடி வேலை செய்வ?”
“வேலை செய்யலைனா மனசு தேவையில்லாததை
யோசிக்கும் ஷ்ரவன்”
இவ்வளவு நேரமிருந்த இலகுவான குரல்
மாறிப்போனது கே.கேவிடம்.
“நான் இருக்குறப்ப உன் மனசு எப்பிடி
தேவையில்லாததை யோசிக்கும்? ஒழுங்கா நான் சொல்லுறதை கேளு... இன்னைக்கு ரெஸ்ட் எடு...
நாளைக்குப் போகலாம்” என்று அவனை மிரட்டி தன்னோடு அழைத்துச் சென்றான்.
கார் கிளம்பும் போதே ஷ்ரவனின்
மொபைல் இசைத்தது. தொடுதிரையைப் பார்த்ததும் அதில் வந்த பெயரில் ஷ்ரவன் கொதிநிலைக்குச்
சென்றுவிட்டான்.
அந்தக் கொதிப்பு குறையாமல் அழைப்பை
ஏற்றவன் “எதுக்கு இப்ப கால் பண்ணுனடா?” என்று ஏகவசனத்தில் பேச
மறுமுனையிலிருந்தவனோ “ஓ! சார்
இப்ப ‘டா’வா மாறிடுச்சா?” என்று எகத்தாளமாக வினவினான்.
“சீ! வாயை மூடு... இனிமே உனக்கென்ன
மரியாதை? காசு இருக்குனு ஆடாதடா... கடவுள் எல்லா ஆட்டத்துக்கும் ஒரு முடிவை கொண்டு
வருவாரு”
ஷ்ரவன் கொதிக்கும் போதே அவன்
யாரிடம் பேசுகிறான் என்பதை புரிந்துகொண்டான் கே.கே.
“கடவுளே இப்ப என் பக்கம் தான்
ஷ்ரவன்... நீயும் என் பக்கம் இருந்திருந்தா இந்நேரம் ராஜவாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்...
அதை விட்டுட்டு அந்தப் பைத்தியக்காரன் கூட சுத்திட்டிருக்க” என்றான் மறுமுனையில் பேசியவன்
திமிராக.
“உன் கூட இருந்து ராஜவாழ்க்கை
வாழுறதுக்குப் பதிலா என் ஃப்ரெண்டுக்கு உறுதுணையா இருந்து வாழுற இந்த வாழ்க்கை தான்
எனக்குப் பிடிச்சிருக்கு... நீ இந்த பொசிசனுக்கு வர்றதுக்கு உன் அப்பன் என்னென்ன தகிடுதத்தம்
பண்ணுனான்னு எனக்கு நல்லாவே தெரியும்... வாயைத் திறந்தா அசிங்கமாயிடும்... அதுக்கு
முன்னாடி போனை கட் பண்ணு”
மறுமுனையில் பேசுபவனது பேச்சை
காதில் போட்டுக்கொள்ளாமல் அழைப்பைத் துண்டித்தான் ஷ்ரவன். இன்னும் அவனுக்குக் கோபம்
அடங்கவில்லை.
கே.கே அவனது தோளைத் தொடவும்
“வேண்டாம் மச்சி... நீ எனக்கு அட்வைஸ் பண்ணாத... நான் கொலைவெறில இருக்குறேன்டா” என்றான்.
“உன்னோட பாஸ் தானே பேசுனான்?
விட்டுத் தள்ளு... எந்தத் தொல்லையும் வேண்டாம்னு தானே இங்க வந்த... அப்ப ஏன் அதை யோசிக்குற?”
“டேய்! நான் எங்க யோசிச்சேன்?
அந்த துரோகி தான் அடிக்கடி கால் பண்ணி அவன் ஒருத்தன் இருக்கான்னு சீன் போட்டுட்டு இருக்குறான்டா...
இப்பிடிலாம் செஞ்சு நம்மளை கடுப்பேத்துறானாம்மா”
“அவன் உன்னை இரிட்டேட் பண்ண தான்
இவ்ளோவும் செய்யுறான்னு தெரிஞ்சும் நீ ஏன் டென்சன் ஆகுற? நீ டென்சன் ஆனா அவனோட நோக்கம்
நிறைவேறிடுச்சுனு அர்த்தம்... கூலா இரு... நெக்ஸ்ட் டைம் அவன் கால் பண்ணுனா நீ இரிட்டேட்
ஆகக்கூடாது... ஏன்டா இவனுக்குக் கால் பண்ணுனோம்னு அவன் டென்சன் ஆகணும்... அப்பிடி கெத்தா
ஹேண்டில் பண்ணு”
நண்பனின் அறிவுரைக்குத் தலையாட்டியவன்
அரைகுறை மனதுடன் காரை சாக்சனி அப்பார்ட்மெண்டை நோக்கி விரட்ட ஆரம்பித்தான்.
மனமோ மொபைலில்
பேசியவனையும் அவனை இந்த உயரத்துக்கு அனுப்பியவரையும் சேர்த்து சபித்தது. இவர்களைப்
போன்ற பணத்திமிரும் பகட்டும் தான் வாழ்க்கை என்ற எண்ணம் கொண்டவர்களிடம் ஒரு காலத்தில்
கை நீட்டி சம்பளம் வாங்கியதை எண்ணி மானசீகமாக வெட்கி தலைகுனிந்தான் ஷ்ரவன்.
அவனது முகத்தில் உண்டாகும் உணர்ச்சிக்கலவையை வேடிக்கை பார்த்த கே.கேவின் மனமோ எவ்வித உணர்ச்சிகளுக்கும் இடமின்றி வெறுமையானது.
- Get link
- Other Apps
Comments
Post a Comment