அலைவரிசை 23
- Get link
- Other Apps
“யாரால நம்ம மனநிம்மதி
குறையுதோ அவங்களை விட்டு விலகி இருக்குறது நல்லது... அதுக்குப் பேர் பயமில்ல... நம்ம
மனநிம்மதிக்காக குடுக்குற சின்ன விலை... பட் ஒதுங்கி போறதுக்கும் ஒரு எல்லைய ஃபிக்ஸ்
பண்ணிக்கணும்... ஒரேயடியா ஒதுங்கி போனா சிலர் நம்மளை கோழை, கையாலாகாதவன்னு முத்திரை
குத்திடுவாங்க... அந்த மாதிரி இடத்துல மனநிம்மதிய விட நம்மளோட தன்மானத்த தான் பெருசா
நினைக்கணும்... யார் நம்மளை கீழ்க்கண்ணால பாக்குறாங்களோ அவங்களுக்கு எந்த லாங்வேஜ்ல
சொன்னா புரியுமோ அந்த லாங்வேஜ்ல தெளிவா பாடம் எடுத்துடணும்... என்னைப் பொறுத்தவரைக்கும்
சண்டைக்காரன்னு பேர் வாங்குறதை விட கோழைனு பேர் வாங்குறது ரொம்ப அசிங்கமானது”
-கே.கேவின்
மனதின் குரல்
சாக்சனி அப்பார்ட்மெண்ட்ஸ்...
ஷ்ரவனுடன் அவுட்டிங் சென்றுவிட்டு
திரும்பியதிலிருந்து பிரக்ருதியை யோசனையோடு பார்த்தவண்ணம் இருந்தாள் பிரக்யா. காரணம்
ஜேக்கப்பின் வீட்டில் நடந்த அனைத்தையும் ஷ்ரவனிடம் கேசவ் கூறியிருக்க அதை அவன் வாயிலாக
அறிந்து கொண்டிருந்தாள்.
பிரணவிக்குச் செய்ய வேண்டிய சிசுருசைகளை
முடித்துவிட்டு பிரக்ருதியை தங்களது அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
பிரக்ருதி கைவிரல் நகங்களை ஆராய்ந்தபடி
என்ன விசயமென கேட்டாள்.
“கிரிஷ் உன்னை லவ் பண்ணுறாரா?”
“அவன் அப்பிடி தான் சொன்னான்...
உனக்கு எப்பிடி தெரியும்? திடீர்னு ஏன் இந்தக் கேள்வி?”
பிரக்யா கேள்விகளுக்குப் பதில்
கூறாது அவளது மோதிரவிரலில் அணிந்திருந்த வைர மோதிரத்தை எடுத்துக் காட்டினாள்
“இதுக்கு என்னடி அர்த்தம்?”
“ப்ச்! நீயும் அவனை மாதிரியே
கேட்டா என்ன அர்த்தம் பிரகி? காஸ்ட்லி ரிங்கை தூக்கிப் போட மனசில்லாம கையிலயே போட்டிருக்குறேன்”
பிரக்ருதி பதிலளித்த அடுத்த நொடியில்
பிரக்யாவின் கரம் அவளது கன்னத்தைப் பதம் பார்த்தது.
அதில் அவள் அதிர பிரக்யாவோ ஆட்காட்டிவிரலை
நீட்டி எச்சரித்தபடி அவளிடம் பேச ஆரம்பித்தாள்.
“ஒரு பொறுக்கி குடுத்த மோதிரத்த
இவ்ளோ தைரியமா கையில போட்டுக்க உனக்கு உடம்பு கூசல? இதுல உன்னை லவ் பண்ணுன மனுசனை வேற
ஹர்ட் பண்ணிட்டு வந்திருக்க... அவர் கிட்ட என்ன கேட்ட? அவரால நாலு க்ளாஸ் ஃப்ராப்புசீனோ
தான் வாங்கி தர முடியும்னு எகத்தாளமா பேசிட்டு வந்திருக்கல்ல...
குசேலன் அன்பா குடுத்த அவலை பாசமா
வாங்கி சாப்பிட்டாறாம் பகவான் கிருஷ்ணன்... கடவுளே விலையுயர்ந்த எதையும் கேக்கல...
நம்ம ஆஃப்டர் ஆல் மனுசங்க கிருதி... உன்னை லவ் பண்ணுற மனுசன் உனக்கு பழைய சாதத்த குடுத்தாலும்
அதுல உன் மேல இருக்குற காதல் நிரம்பியிருக்கும்டி... ஆனா அந்தப் பொறுக்கி உன்னை எந்த
மாதிரி கண்ணோட்டத்துல பாத்து இந்த மோதிரத்த போட்டுவிட்டான்னு யோசி... அவனுக்குத் தேவை
உன் மனசு இல்ல... உன் உடம்பு... அவனுக்கு உடம்பை குடுக்குற எந்தப் பொண்ணுக்கும் அவன்
இப்பிடி தான் காஸ்ட்லி கிப்ட் குடுப்பானா இருக்கும்... அவன் குடுத்த இந்த கருமத்துக்கு
நாலு கப் ஃப்ராப்புசீனோ எவ்ளோவோ பரவாயில்ல”
பிரக்ருதியின் கண்களில் கண்ணீர்
நிரம்பிவிட்டது. கன்னம் விண்விண்னென்று வலித்தது அவளுக்கு. இதுவரை பொறுமையே உருவாக
இருந்த பிரக்யாவே பத்ரகாளி அவதாரம் எடுத்து அறைகிறாள் என்றால், தான் மிகப்பெரிய தவறை
செய்திருக்கிறோம் என்பதை வேதனையோடு புரிந்து கொண்டாள்.
இருப்பினு தன் பக்கத்து நியாயத்தை
அவளிடமாவது கூறவேண்டுமென்ற அவசரம் பிரக்ருதிக்கு.
“நீயும் அவனை மாதிரி அவசரப்படாத
பிரகி... நான் கிரிஷை திட்டுனதுக்குக் காரணம் அவன் என்னை பேசவே விடாதது தான்”
“பேச விடாமலா நீ பக்கம் பக்கமா
பணம் தான் முக்கியம்னு சொல்லிட்டு வந்த?”
“ஐயோ பிரகி! அது கோவத்துல சொன்னதுடி”
“கோவத்துல என்ன வேணும்னாலும்
சொல்லுவியா கிருதி?”
பிரக்ருதி கண்ணீருடன் தலை குனிந்தாள்.
அக்கணத்தில் அறைக்கதவு தட்டப்பட பிரக்யா போய் திறந்தாள். அங்கே பிருத்வி நின்று கொண்டிருந்தான்.
அவனது பார்வை சிவந்த கன்னத்தில் கண்ணீர் கோடுகளுடன் இருந்த பிரக்ருதியின் மீது பட
“கிருதிக்கு என்னாச்சு? யார்
அறைஞ்சது?” என படபடத்தான்.
“நான் தான் அறைஞ்சேன்ணா” என்றாள்
பிரக்யா சற்றும் அலட்டாமல்.
“வாட் ரப்பிஷ் பிரகி? ஏன் அவளை
அறைஞ்ச? பாவம்” என்று அவளைத் திட்ட ஆரம்பித்தவனை நிதானமாக பார்த்தவள்
“இது எனக்கும் அவளுக்கும் உள்ள
பிரச்சனை அண்ணா... நீ போய் அண்ணிய கவனி” என்றாள்.
பிருத்வியின் பின்னே நின்றிருந்த
பிரணவியும் “ஃப்ரெண்ட்சுக்குள்ள என்னமோ பண்ணிக்குறாங்க... அதுல நம்ம தலையிட வேண்டாம்
பிருத்வி” என்றவாறு கணவனை அழைத்துச் சென்றுவிட கதவைத் தாழிட்டாள் பிரக்யா.
அறைக்குள் கிடந்த நாற்காலியில்
அமர்ந்தவள் “உன் மனசுல என்ன ஓடுதுனு சொல்லு கிருதி... உனக்கு கிரிஷை பிடிக்கலயா?” என
வினவ பிரக்ருதி இல்லையென மறுத்தாள்.
“அப்புறம் என்ன தான் பிரச்சனை?”
“எனக்கு கிரிஷை ரொம்ப பிடிக்கும்...
அது தான் என் பிரச்சனை”
“ஒன்னும் புரியலடி”
பிரக்ருதி தனது மனதிலுள்ள எண்ணங்களை
வார்த்தைகளில் விவரிக்க ஆரம்பித்தாள்.
“எனக்கு கிரிஷை ரொம்ப பிடிக்கும்...
அவன் மேல எனக்கு ஒரு க்ரஷ் உண்டு பிரகி... பப்ல பாத்ததுல இருந்து இப்ப வரைக்கும் அவனை
நான் ரசிக்கிறது எனக்கும் அவனுக்கும் மட்டும் தான் தெரியும்... எனக்கு அவன் கூட ஃப்ளர்ட்
பண்ண, சண்டை போட ரொம்ப பிடிச்சிருக்கு... அன்னைக்கு நிஷாந்த் கூட பிரச்சனைனு வந்தப்ப
நீங்க யாரும் என் ஞாபகத்துக்கு வரல... அவன் தான் வந்தான்... அந்தளவுக்கு எனக்கு அவனைப்
பிடிக்கும்”
மூச்சு விடாமல் கேசவ் மீது இருக்கும்
அபிமானத்தைக் கூறி முடித்தாள் அவள். ஆனால் அது மட்டும் பிரக்யாவுக்குப் போதாது. பிரக்ருதியின்
அன்றைய நடத்தைக்கான விளக்கமும் அவளுக்கு வேண்டும்.
அதை அவளது பார்வையிலேயே புரிந்து
கொண்டாள் பிரக்ருதி.
“அவன் என் கிட்ட ப்ரபோஸ் பண்ணுனப்ப
எனக்கு ஒன்னுமே புரியல பிரகி... அவன் என்னை கம்பெல் பண்ணாம இருந்தது பிடிச்சுது...
பட் என்னோட மூளைக்கும் மனசுக்கும் அந்த இடத்துல தான் சண்டை ஆரம்பிச்சுது... என் லைஃப்
பார்ட்னர் எனக்கு லக்சரியான லைஃபை குடுக்கணும்னு வருசக்கணக்கா நான் என்னோட மைண்ட்ல
ஃபிக்ஸ் பண்ணி வச்சிருந்தேன்... ஆனா கிரிஷால எனக்கு ஒரு நார்மல் லைஃபை தான் தர முடியும்...
அந்த லைஃபை ஏத்துக்க என் மனசு தயாரா இருந்துச்சு... அப்ப என் மூளையும் மனசும் வேற வேற
சொல்லி நான் கிட்டத்தட்ட ஒரு டைலமால இருந்தேன்...
அப்ப தான் எனக்கு ஒன்னு தோணுச்சு...
கிரிஷை இப்பிடியே ஏத்துக்க நான் தயாரா இருந்தாலும் நாளைக்கு எங்களுக்கு குழந்தை குடும்பம்னு
வந்தா கண்டிப்பா நாங்க கஷ்டப்படணும்... அதுக்காகவாச்சும் அவன் நல்ல வேலையில செட்டில்
ஆகணும்னு நினைச்சேன்... அப்பிடி ஆனதுக்கு அப்புறம் அவன் கிட்ட லவ்வ சொல்லலாம்னு நினைச்சிருந்தேன்...
இன்னைக்கு என்னை அவன் பேசவே விடல
பிரகி... இந்த ரிங்க் காஸ்ட்லியானது... எனக்கு அதை கழட்ட மனசில்ல... அது தான் உண்மை...
உடனே நிஷாந்தோட குப்பை எண்ணத்தை நான் ஒத்துக்கிட்டேன்னு அர்த்தமில்ல... நானும் சராசரி
பொண்ணு தான் பிரகி... எனக்கு நகை மேல ஆர்வமிருக்க கூடாதா? இதை அவன் கிட்ட என்னால புரிய
வைக்கவே முடியல... அவன் பிஹேவியர் என்னை கோவப்பட வச்சிடுச்சு... அவன் பேசுனான், நானும்
பேசுனேன்... பணக்காரனா பாத்து ஃப்ரெண்ட்ஷிப்
வச்சுக்கனு அவன் சொன்னது என்னை ஹர்ட் பண்ணிடுச்சு... அவனை ஹர்ட் பண்ணுறதுக்காக
தான் நான் ஃப்ராப்புசீனோ கதை சொன்னேன்”
அவள் பேசிவிட்டு மூச்சு வாங்க
நிற்க பிரக்யாவோ இன்னும் நம்பாத பாவனையில் பார்த்தாள்.
“அப்பிடி பாக்காத பிரகி... நான்
அவனை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்டி... ஆனா அவன் கிட்ட சொல்லல... அவ்ளோ தான்... இந்த
ரிங் இவ்ளோ பெரிய பிரச்சனைய கிளப்பும்னு நான் யோசிக்கல... இதோ இப்பவே இதை கழட்டி வீசிடுறேன்”
என்றவள் அந்த சாலிட்டர் டைமண்ட் ரிங்கை கழற்றி அவர்கள் அறையிலிருந்த குப்பைத்தொட்டியில்
வீசினாள்.
“இன்னும் நீ நம்பலனா நான் என்ன
சொல்லி புரியவைப்பேன்? உனக்கு நல்லா தெரியும்ல, பொதுவா வெளி ஆம்பளைங்களை நான் நெருங்க
விடமாட்டேன்னு... இந்த ரிங்கை போட்டுவிட்ட நிஷாந்தை கூட நான் கிஸ் பண்ண அலோ பண்ணல...
ஆனா லவ் ப்ரபோஸ் பண்ணுறதுக்கு முன்னாடி இருந்து இப்ப வரைக்கும் கிரிஷ் என்னை டூ டைம்ஸ்
கிஸ் பண்ணிருக்குறான்... என் மனசுல இடம் இல்லனா அவனை கிஸ் பண்ண நான் அலோ பண்ணிருப்பேனா?
இல்ல கிஸ் பண்ணுனதுக்கு அப்புறமும் அவனை உயிரோட விட்டு வச்சிருப்பேனா? அவன் தான் இதை
யோசிக்கல, நீயாச்சும் யோசி பிரகி”
பிரக்ருதி முத்தமிட்ட நிகழ்வை
எல்லாம் விவரிக்க பிரக்யாவின் முகமோ சிவந்து போனது. கண்ணாடியைச் சரி செய்து கொண்டவள்
“போதும்டி... நான் உன்னை நம்புறேன்...
பட் உன்னோட ஸ்டேட் ஆப் மைண்ட் என்னனு எனக்குத் தெளிவா சொல்லு” என்றாள்.
“சிம்பிள்! கிரிஷ் பம்பிள் பி
தான் உலகம்னு இருக்குறதை விட்டுட்டு பொறுப்பா நல்ல சேலரி வர்ற வேலைக்குப் போகணும்...
ரொம்ப சம்பாதிக்க வேண்டாம்... மன்த்லி ஃபிப்டி டூ சிக்ஸ்டி தவுசண்ட் சேலரி வாங்குனா
கூட போதும்... உனக்கே சென்னையோட காஸ்ட் ஆப் லிவிங் என்னனு தெரியும்... நாங்க தங்குறதுக்கு
வீட்டு வாடகை, எலக்ட்ரிசிட்டி, வாட்டர் சார்ஜ், பெட்ரோல் செலவுனு எல்லாமே இருக்குல்ல...
அது போக புரொவிசன், எல்.பி.ஜி வேற... நாளைக்கே குழந்தை பிறந்துச்சுனா அதுக்கு மெடிக்கல்
எக்பென்சஸ், எஜுகேசன்னு ஏகப்பட்ட செலவு வரும்... அதுக்குலாம் அந்த சேலரி இருந்தா தான்
கட்டுப்படி ஆகும்”
பிரக்ருதி அடுக்கிக்கொண்டே செல்ல
செல்ல பிரக்யா கண்ணிமைக்க மறந்து போனாள்.
“அடியே! இவ்ளோ ப்ளானை மனசுல வச்சுக்கிட்டு
ஏன்டி அவர் கிட்ட சொல்லாம இருக்குற?” என ஆதங்கமாக கேட்டாள்.
“நான் தான் சொன்னேன்ல, கிரிஷ்
நல்லா ஜாப்ல உக்காரட்டும்... செட்டில் ஆகட்டும்... ஐ வில் பி வெய்ட் ஃபார் தட் மொமண்ட்...
பட் அது வரைக்கும் நீ அவன் கிட்டவோ ஷ்ரவன் கிட்டவோ நான் சொன்ன ப்ளானை பத்தி மூச்சு
கூட விடாத... இது என் மேல ப்ராமிஸ்” என்ற பிரக்ருதி அவளது கரத்தை தன் தலை மீது வைத்து
சத்தியம் வாங்கி கொண்டாள்.
“எதுக்குடி சத்தியம்லாம்? உன்
மனசுக்குச் சரினு தோணுறப்ப நீ சொல்லு... அட்லீஸ்ட் பணக்காரனை தான் கல்யாணம் பண்ணுவேன்னு
நீ பிடிச்ச பிடிவாதத்தை விட்டுட்டனு அவர் கிட்ட சொல்லலாமே?”
“இன்னைக்கு நான் பேசுன பேச்சு
கண்டிப்பா அவனுக்குள்ள ஈகோவ கிளறிருக்கும்... இப்பவாச்சும் அவன் ரோஷப்பட்டு பம்பிள்
பிய விட்டுட்டு லைஃப்ல முன்னேற அடியெடுத்து வைப்பான்னு தோணுது... இந்த நேரத்துல அவன்
கிட்ட எதையும் சொல்ல வேண்டாம் பிரகி”
பிரக்ருதி நீண்ட விளக்கம் அளித்ததும்
பிரக்யாவும் சரியென்றுவிட்டாள்.
“என் ஃப்ரெண்ட் இந்தளவுக்கு இறங்கி
வந்ததே எனக்குச் சந்தோசம் தான்... நீயா சொல்லுற வரைக்கும் இன்னைக்கு நம்ம பேசுன எதுவும்
ஷ்ரவனுக்கோ கிரிஷுக்கோ தெரிய வராது... இட்ஸ் மை ப்ராமிஸ்”
இரு தோழிகளும் பிரச்சனைகளை பேசி
தீர்த்துவிட்டு வெளியே வந்த போது அவர்களுக்காக காத்திருந்தான் பிருத்வி. அவர்கள் முகத்தில்
மலர்ச்சியைக் கண்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டவன்
“இப்ப தான் உங்களை பாக்க நல்லா
இருக்கு.... சின்னப்பிள்ளைங்க மாதிரி சண்டை போடாதிங்க இனிமே” என்று அறிவுரை வழங்கிவிட்டு
பிரணவியை வாக்கிங் அழைத்துச் செல்ல கிளம்பினான்.
அதே நேரம் ஃப்ளாட் E15ல் ஷ்ரவன்
கேசவிடம் அபராஜித் அனுப்பிய மின்னஞ்சலை காட்டிக்கொண்டிருந்தான்.
“இப்ப மிச்சம் இருக்குற ஷேர்ஸ்
எல்லாத்தையும் சரண் பேருக்கு மாத்துறதுக்கான வேலை அங்க மும்முரமா நடந்துட்டிருக்கு
கிரிஷ்... ஆல்ரெடி கார்கி ஆன்ட்டியோட ஷேர்ஸை சுசித்ரா மேடம்கு மாத்திட்டாங்க... உன்னோட
ஷேர்சும் நீரவோட ஷேர்சும் தான் பாக்கி... அதை உன் பெர்மிசன் இல்லாம சேஞ்ச் பண்ண முடியாதுங்கிறதுக்காக
தான் பத்மானந்த் சார் உனக்குக் கால் பண்ணிருக்குறார்”
பங்குமாற்றம் குறித்த கூட்டங்கள்,
கார்கி குழுமத்தின் இதர பங்குதாரர்கள் மற்றும் இயக்குனர்களிடம் பங்குமாற்றம் பற்றிய
தகவலை தெரிவிக்கும் அறிவிப்பு என அனைத்தையும் அனுப்பியிருந்தான் அபராஜித்.
அனைத்தையும் பார்த்தபடி ஒற்றை
புருவத்தை உயர்த்தியவாறு மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான்
கேசவ்.
“இப்ப என்ன செய்யலாம் கிரிஷ்?”
மடிக்கணினியிலிருந்து பார்வையை
அவன் பக்கம் திருப்பி வினவினான் ஷ்ரவன்.
“கார்கி குரூப்ஸ்ல பத்மானந்துக்கு
அப்புறம் அதிகமா ஷேர்ஸ் வச்சுருக்குறது நான் தான்... நீரவோட ஷேரும் அம்மாவோட ஷேரும்
என் கைக்கு வரணும்னா அந்த குள்ளநரிங்க கட்டுப்பாட்டை மீறி மத்த டைரக்டர்சும் அதுக்கு
ஒத்துக்கணும்... ஆனா அதுக்கான வாய்ப்பு கம்மி... அங்க நான் முடிவெடுக்குற அதிகாரத்துக்குப்
போயே ஆகணும் ஷ்ரவன்... என்னை எவ்ளோ கம்மியா எடை போட்டுருக்காங்க? அவங்க மூஞ்சில நான்
கரிய பூசியே ஆகணும்”
தீர்மானமாக உரைத்தான் கேசவ்.
“என்ன ப்ளான்னு சொல்லு கிரிஷ்”
“சிம்பிள்... பேலன்ஸ் இருக்குற
நாப்பத்தஞ்சு பர்சென்டேஜ் ஷேர்ஸை யாருலாம் பல்க் அமவுண்ட்ல வச்சிருக்காங்கனு பாத்து
ஷேர் மார்க்கெட்ல இருந்து வாங்கணும்... அவங்களை ஷேர்ஸை விக்க வைக்க எந்த டெக்னிக்கை
வேணும்னாலும் யூஸ் பண்ணு... பட் பத்மானந்த் வச்சிருக்குற இருபது பர்சென்டேஜ் ஷேர்சை
விட எனக்கு ஒரு சதவிகித ஷேராவது அதிகமா இருக்கணும்... ஏ.ஜி.எம் நடக்கட்டும்... அதுல
நான் யார்னு அவங்களுக்குக் காட்டுறேன்”
“இன்னொரு விசயத்த மறந்துட்டேன்
பாரு” என்றவன் மின்னஞ்சலில் வந்த இன்னொரு ஆவணத்தையும் காட்டினான்.
“இது கார்கி டெலிகாம் லிமிட்டடோட
மேனேஜ்மெண்டை சரணுக்கு குடுத்ததுக்கான ஆதாரம்... இது நீரவோட கனவு கம்பெனி... 4G லைசன்சுக்காக
அவன் எப்பிடி போராடுனான்னு எனக்கு நல்லா தெரியும்... அதை கொஞ்சம் கூட தகுதியில்லாத
ஒருத்தனுக்குத் தாரை வார்த்துக் குடுக்கப்
போறார் மிஸ்டர் பத்மானந்த்”
“இனிமே அவர் நினைக்குறது எதுவும்
நடக்காது... ஏ.ஜி.எம் எப்ப?”
“ஜூலைல அனவுன்ஸ் பண்ணலாம்னு பேசிருக்கிறதா
அபி சொன்னான்... எனக்கு என்னமோ இந்த தடவை சீக்கிரம் ஏற்பாடு பண்ணுவாங்கனு தோணுது”
“ஜூலைல அனவுன்ஸ் பண்ணுனா கூட
நமக்கு இன்னும் ஆறு மாசம் இருக்கு ஷ்ரவன்... கண்டிப்பா நம்மளால ஷேர்சை வாங்க முடியும்...
ஏ.ஜி.எம் டேட் வரைக்கும் அது உன் பேர்ல இருக்கட்டும்... அதுக்கு அப்புறம் நான் என்
பேருக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிக்குறேன்... ஏன்னா நான் ஷேர்ஸ் வாங்குனா அதை போர்டுக்கு
இன்ஃபார்ம் பண்ணணும்”
“ஓ.கே கிரிஷ்... இனிமே நான் அதுக்கான
வேலைய பாக்குறேன்... இப்ப கொஞ்சம் பெர்ஷ்னலா
பேசலாமா?”
ஷ்ரவன் அனுமதி கேட்கவும் திகைத்தான்
கேசவ்.
“நான் கிருதிய பத்தி பேசலாமானு
கேட்டேன்டா”
இப்போது கேசவின் முகம் கோபவண்ணம்
பூசிக்கொண்டது.
“இன்னொரு தடவை அவ பேரை என் முன்னாடி
சொல்லாத ஷ்ரவன்... இந்தியா பக்கமே தலை வச்சு படுக்கக்கூடாதுனு தீர்மானமா இருந்தவன்
இப்ப ஏன் அங்க போக துடிக்குறேன்? எல்லாம் அவளால தான்... என் லவ்வ புரிஞ்சிக்காம பணமில்லங்கிற
காரணத்துக்காக என்னை இளப்பமா பேசுனாடா அவ... என்னால அவ பேசுனதை மறக்க முடியாது”
“என்னடா இப்பிடி சொல்லுற? இன்னைக்குத்
தான் நீ அவளை லவ் பண்ணுனேங்கிற விசயமே எனக்குத் தெரியும்... அதுக்குள்ள பிரியணுங்கிற
முடிவையும் எடுக்குறியே கிரிஷ்?”
“எங்க நம்ம உணர்வுகளுக்கு மரியாதை
இல்லயோ அங்க பிரிவு தான் முடிவு ஷ்ரவன்... அவளுக்கு ஆடம்பரமான லைஃபை குடுக்க திராணி
இருக்குற இன்னொருத்தன் கிடைப்பான்... அந்த ரிங்கை பாத்ததும் எனக்கு வெறுத்துப் போச்சுடா...
என்னால அவளுக்கு காஸ்ட்லி ரிங்கை வாங்கி குடுக்க முடியுமானு கிண்டலா அவ கேட்டது என்
காதுக்குள்ளவே மறுபடி மறுபடி கேக்குது ஷ்ரவன்... என் மனபாரத்த உன் கிட்ட இறக்கி வச்சதும்
தான் நிம்மதியா இருந்துச்சு... சோ ப்ளீஸ், இனிமே அவளைப் பத்தி பேசாத”
பிடிவாதமாக கூறிவிட்டு வேறு வேலையைக்
கவனிக்கச் சென்றவனை கவலை நிரம்ப பார்த்தான் ஷ்ரவன். அவனுக்கு கேசவை பற்றி நன்றாக தெரியும்.
அவனிடம் நல்லப்பெயர் வாங்குவதோ அவனது அன்புக்குப் பாத்திரமாவதோ அவ்வளவு எளிதில்லை.
அதை அனுபவத்தில் அறிந்தவன் ஷ்ரவன்.
இப்போது பிரக்ருதியின் நிலையும் அப்படி தான் என்றால் கேசவின் மனதில் முகிழ்த்த காதல்
இனி கானல் தானா?
- Get link
- Other Apps
Comments
Post a Comment