அலைவரிசை 24
- Get link
- Other Apps
“நீங்க சுஜாதாவோட
‘பிரிவோம் சந்திப்போம்’ நாவலை படிச்சிருக்கிங்களா? அதுல வர்ற மதுமிதாவோட கேரக்டர் எங்கப்பாவுக்குக்
கொஞ்சமும் பிடிக்காது... ஏன்னா அவளுக்கு என்ன வேணும்ங்கிறதை தீர்மானிக்குற குறைஞ்சபட்ச
அறிவு கூட அவளுக்கு இல்லனு சொல்லுவார்... ஃபார் எக்சாம்பிள், அவளுக்கு ரகுபதி மேல தான்
லவ் இருக்கும்... ஆனா வசதியானவன். அமெரிக்காவுக்குக் கூட்டிட்டுப் போவான்னு பேரண்ட்ஸ்
வற்புறுத்துனதுக்கு ராதாவ கல்யாணம் பண்ணிப்பா... அவ ஒரு கோல்ட் டிக்கர்னு அப்பாவோட
எண்ணம்... ஆனா நான் அப்பிடி நினைக்கல... ஏன்னா பூமில பிறந்த எல்லாருக்கும் தனக்கு என்ன
வேணும், தான் செய்யுறது சரியா தப்பானு புரிஞ்சுக்குற அறிவு அவ்ளோ சீக்கிரமா வர்றதில்ல..
அவங்களுக்கு அனுபவம் தான் அந்த புரிதலை குடுக்கும்... எப்பிடி ராதாவ கல்யாணம் பண்ணுனது
தப்புனு அமெரிக்கா வந்து அவனோட வாழ்ந்ததுக்கு அப்புறம் அனுபவப்பட்டு மதுமிதா புரிஞ்சிக்கிட்டாளோ
அதே மாதிரி!
-கிருதியின்
கிறுக்கல் மொழிகள்
வார்த்தைகள் உண்டாக்கும் காயம்
எளிதில் ஆறுவதில்லை. காயப்படுத்தியவரை அடிக்கடி சந்திக்கும் நிலை இருந்தால், கேட்கவே
வேண்டாம், அந்தக் காயம் புரையோடிப் போகும்.
அதே நிலை தான் பிரக்ருதிக்கும்
கேசவுக்கும். தன்னையும் தனது காதலையும் அவமதித்துவிட்டாள் என்பதை இமை பொழுதும் மறக்காமல்
அவள் கண் முன்னே உலாவினான் கேசவ்.
வழக்கம் போல சாக்சனியின் உடற்பயிற்சிக்கூடத்திலோ,
பம்பிள் பி ட்ரக்கிலோ அவனைக் காண நேர்ந்த போதும் அவன் முகத்தில் இருந்த வெறுப்புக்கும்
அலட்சியத்துக்கும் அளவின்றி போனது.
இதனால் பிரக்ருதி தான் உள்ளுக்குள்
வேதனைப்பட்டாள். ஆனால் அதை துளியும் வெளிக்காட்டாமல் சிரிப்புடன் கடந்து போனாள். அதே
நேரம் அவன் வெறுக்கிறானே என்று விலகியெல்லாம் போகவில்லை. அப்படி போனால் அவள் பிரக்ருதி
இல்லையே!
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்
அவனிடம் வாக்குவாதம் செய்வதை பொழுதுபோக்காகவே மாற்றிக்கொண்டாள். பெரும்பாலான நேரங்களில்
அவளுடன் பிரக்யாவும் இருப்பதால் கேசவ் முகத்திலடித்தாற்போல பேச முடியாமல் பற்களைக்
கடித்து சமாளிப்பான்.
சில சமயங்களிலோ அவளை கடிந்துகொள்ள
முடியாமல் தவிப்பான். எப்படி இவளால் அனைத்தையும் இலகுவாக எடுத்துக்கொள்ள முடிகிறது
என்ற குமுறலும் அவனுக்குள் நடந்தேறும்.
அதற்கிடையே ஷ்ரவனின் உதவியால்
தங்கள் குடும்பத்தினரைத் தவிர கார்கி குழுமத்தில் கணிசமான அளவில் பங்குகளை வைத்திருக்கும்
பங்குதாரர்களை அணுகும் வேலையிலும் இறங்கியிருந்தான். இதில் அபராஜித் அவர்களுக்கு உதவினான்.
இந்த வேலைகள் அனைத்தும் பத்மானந்த்,
கமலானந்த் மற்றும் சரணின் காதுகளுக்குப் போகாமல் இரகசியமாக அரங்கேறின. இரகசியங்கள்
அனைத்தும் என்றோ ஓர்நாள் உடையக்கூடியவை என்ற வாக்கியத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு
சம்பவம் நடந்தது.
அபராஜித் செய்யும் வேலை சுசித்ராவின்
காதுக்குப் போனது. கார்கி குழுமத்தின் போர்ட் ஆப் டைரக்டர்களில் ஒருவரான அவருக்கும்
விசுவாசிகள் இருப்பார்கள் அல்லவா!
கணவருக்கும் மகனுக்கும் தெரியாமல்
அலுவல்ரீதியாக பேசுவது போல நடித்து அபராஜித்திடம் விசயத்தை வாங்கினார் அவர்.
“சோ கிரிஷுக்கு கார்கி குரூப்ஸ்
ஷேர் தேவைப்படுது”
“ஆமா மேம்... நியாயப்படி நீரவ்
சாருக்கு அப்புறம் கிரிஷ் சாருக்குத் தானே ஷேர்ஸ் போகணும்”
பயமின்றி நியாயத்தை எடுத்துரைத்த
அபராஜித்தை புன்னகை தவழும் வதனத்துடன் பார்த்தபடி அவனிடம் ஒரு தகவலை கூறினார் சுசித்ரா.
அதில் அபராஜித்துக்கே சற்று அதிர்ச்சி தான்!
“என்னோட ஷேர்ஸை கிரிஷுக்கு ட்ரான்ஸ்ஃபர்
பண்ண எனக்குப் பூரண சம்மதம்... அக்காவோட ஷேர்ஸ் என் பேருக்கு வந்துச்சுல்ல, அதை அவனுக்கே
மாத்தி குடுக்குறேன்... பட் இது ஏ.ஜி.எம்க்கு முன்னாடி பாசிபிள் இல்ல அபி... ஏன்னா
விசயம் வெளிய கசிஞ்சா என் ஹஸ்பெண்டும் மகனும் என்ன வேணும்னாலும் செய்ய தயங்க மாட்டாங்க...
உங்களுக்கே அவங்களோட குணம் ஓரளவுக்குத் தெரிஞ்சிருக்கும் தானே”
சுசித்ரா கூறிய அனைத்தும் தலையாட்டி
வைத்தான் அபராஜித்.
“எனக்கு கிரிஷ் கூட பேசணும்...
நீங்க கால் பண்ணி குடுங்க”
அவரது கட்டளையை மீறாது ஷ்ரவனின்
எண்ணுக்கு அழைத்தான் அபராஜித்.
“சொல்லு அபி”
“சுசித்ரா மேடம் கே.கே சார் கிட்ட
பேசணுமாம் சார்”
“என்னடா சொல்லுற? வாட் ஹேப்பண்ட்?”
ஷ்ரவனின் கேள்விகளுக்கு அவன்
பதிலளிக்க திணறும் போதே மொபைலை வாங்கினார் சுசித்ரா.
“உங்க ப்ளான் எனக்குத் தெரிஞ்சிடுச்சு
ஷ்ரவன்... அதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல... எங்கப்பா அரும்பாடுப்பட்டு வளர்த்த
தொழிலை மாமா அவரோட அறியாமையால சரண் கிட்ட குடுத்து அழிச்சிடுவாரோனு இத்தனை நாள் மனசுக்குள்ளவே
மருகிட்டிருந்தேன்... எப்ப கிரிஷ் மறுபடியும் பிசினஸை கவனிச்சிக்கிற முடிவுக்கு வந்துட்டான்னு
அபி மூலமா தெரிஞ்சுதோ அப்பவே என் மனசுல இருந்த பாரம் இறங்கிடுச்சு... தயவு பண்ணி நான்
சொல்லப்போறதை காது குடுத்து கேட்பியா?”
“சொல்லுங்க” என்று இறுக்கமான
தொனியில் கூறினான் அவன்.
“ஏ.ஜி.எம் வரைக்கும் உங்களால
எவ்ளோ ஷேர்ஸ் வாங்க முடியுமோ வாங்குங்க... கரெக்டா ஏ.ஜி.எம்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி
அதை கிரிஷுகு ட்ரான்ஸ்பர் பண்ணிட்டா அவன் போர்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிடுவான்... அதுக்கு
முன்னாடி இந்த தகவல் எதுவும் சரண் காதுக்குப் போக விடாம நான் பாத்துக்குறேன்... ஜூலைல
ஏ.ஜி.எம் முடிஞ்சதும் என்னால கம்பெனியோட மேனேஜ்மெண்ட்ல இருக்க முடியாதுனு நான் ரிசைன்
பண்ணிடுறேன்... என்னோட ஷேர்ஸையும் கிரிஷுக்கே ட்ரான்ஸ்பர் பண்ணிடுவேன்... நீயும் கிரிஷும்
இப்ப என்னை முழுசா நம்பலாம்”
“ஏன் இந்த திடீர் மாற்றம்?”
“வாழ்க்கையில முக்கியமானதை இழந்தவங்களுக்கு
அதிகாரமோ பணமோ ஒரு பொருட்டாவே தெரியாது ஷ்ரவன்... இருக்குற வரைக்கும் என் அக்காவ நான்
போட்டியா நினைச்சேன்... அவ இல்லாத வெறுமைய அனுபவிக்கிறப்ப தான் என் மேல உண்மையான அன்பை
கொட்டுன ஜீவனை இழந்தது என் புத்திக்கு உறைக்குது... அவளே இல்லனு ஆகிடுச்சு... இனி அவளோட
ஷேர்ஸ் மட்டும் எனக்கு எதுக்கு?”
சுசித்ராவின் குரல் அழுகைக்குத்
தாவப்போவதை உணர்ந்தான் ஷ்ரவன். எனவே அவரைச் சமாதானம் செய்ய துவங்கினான்.
“நீங்க கவலைப்படாதிங்க... இப்பவாச்சும்
உங்க மேல யாருக்கு உண்மையான அன்பு இருந்துச்சுனு நீங்க புரிஞ்சிக்கிட்டிங்களே, அது
போதும்... சரணும் கமலானந்தும் உங்களை மதிக்கலனாலும் பத்மானந்த் அங்கிள் உங்களை மதிப்பார்னு
நம்புறேன்... உங்களால முடிஞ்சா உங்க ஹஸ்பெண்ட், உங்க மகனோட சுயரூபத்தை அவருக்குக் காட்டுறதுக்கு
ட்ரை பண்ணுங்க... இது ஒரு ரெக்வஸ்ட் தான் ஆன்ட்டி... நாங்க இந்தியா வர்ற வரைக்கும்
பத்திரமா இருங்க... கிரிஷை நான் பாத்துக்குறேன்”
இது தான் ஷ்ரவன். யாரேனும் கண்ணீர்
சிந்தினாலோ அழுதாலோ அவனுக்கு மனம் தாங்காது. அதோடு மட்டுமன்றி எப்போதுமே கார்கி மற்றும்
சுசித்ராவை அன்னை ஸ்தானத்தில் வைத்து தான் அவன் மதித்திருக்கிறான். சுசித்ரா வேண்டுமானால்
அவர்களிடம் சம்பளத்துப் பணியாற்றும் ஊழியன் என ஷ்ரவனை அலட்சியம் செய்திருக்கலாம். ஆனால்
அவன் என்றுமே அவரை மதிப்பு குறைவாக எண்ணியது இல்லை.
கார்கிக்கு எதிராக அவர் பேசும்
வரை ஷ்ரவனின் மனதில் அவருக்கென தனியிடம் இருந்தது உண்மை. ஆனால் கணவர் மற்றும் மைந்தனின்
துர்போதனையைக் கேட்டு உடன்பிறந்த தமக்கை மீதும் அவரது புத்திர செல்வங்கள் மீதும் பொறாமை
கொண்டு அதிகார வெறியோடு இருந்த சுசித்ரா மீது அவனுக்கு வெறுப்பு வந்தது அதற்கு பின்னால்
நடந்த கதை.
இதோ தமக்கையின் மரணத்துக்குப்
பிறகு கணவரும் மைந்தனும் வெறும் பங்குகள் மற்றும் அதிகாரத்துக்காக மட்டுமே தன்னை பகடைக்காயாக
உருட்டியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து மனம் திருந்தியிருக்கிறார். பத்மானந்த அவர்களுக்குச்
செய்யவேண்டிய திதியை செய்ய மாட்டார் என்பது புரிந்து ஷ்ரவனிடம் வேண்டுகோள் விடுத்து
கேசவை செய்ய வைத்ததும் அவரே.
அவரை சுலபமாக மீண்டும் அன்னை
ஸ்தானத்துக்குக் கொண்டு செல்ல ஷ்ரவனால் முடிந்தது. ஆனால் கேசவ் அப்படி இலகுவாக அவரை
ஏற்றுக்கொள்ள மாட்டான். அவனிடம் ஒருமுறை கெட்டப்பெயர் வாங்கிவிட்டால் மறுபடியும் அவனது
நன்மதிப்பை பெறுவது கடினம்.
சுசித்ராவுக்கும் அது தெரியும்.
எனவே கேசவின் பாசத்தை பெறும் நாளுக்காக காத்திருக்கிறேன் என்று ஷ்ரவனிடம் சொல்லிவிட்டு
அழைப்பைத் துண்டித்தவர் அபராஜித்திடம் அலுவலைப் பார்க்கும்படி கூறிவிட்டார்.
ஷ்ரவன் அவர் கூறிய தகவலைத் தனக்குள்
மறைத்துக்கொண்டு கேசவிடம் தற்போது வரை அவன் கைக்கு வந்து சேர்ந்த ஏழு சதவிகித பங்குகளைப்
பற்றிய விபரங்களை தெரிவிக்க சென்றான்.
கேசவோ மாலை நேரம் என்பதால் ஜிம்முக்குக்
கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். அவனிடம் ஷ்ரவன் தகவலைக் கூறியதும் முகம் மலர்ந்தான்.
“ஜூலைல ஏ.ஜி.எம்னு அபராஜித் சொன்னான் கிரிஷ்” என்ற
கூடுதல் தகவலையும் கூறினான் அவன்.
“சரி மச்சி... நான் ஜிம்முக்குப்
போறேன்... ஜேக் உன் கிட்ட ரெஸ்ட்ராண்ட் சம்பந்தமா பேசணும்னு சொன்னான்... கால் பண்ணி
கேட்டுக்க” என்றபடி கிளம்பினான் அவன்.
ஜிம்மில் நுழைந்ததும் அவனது பார்வையில்
பிரக்ருதி விழ அவளை அலட்சியம் செய்துவிட்டு வேண்டுமென்றே டம்பிள்சை எடுத்துக்கொண்டு
லாட் புல்டவுன் பக்கம் சென்றுவிட்டான்.
பிரக்ருதி அவனைத் திரும்பிப்
பார்த்தவள் வழக்கம் போல லாட் புல்டவுனில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண் அவனை
ரசிக்கவும் கடுப்பாகிவிட்டாள்.
கேசவ் அதை கவனிக்கவில்லை என்றாலும்
எரிச்சல் மண்டிய பிரக்ருதியின் முகத்தைக் காணும் போது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
வேண்டுமென்றே அந்தப் பெண்ணிடம்
பேச்சு கொடுத்து சிரித்தவனை பார்வையால் எரிக்கும் சக்தி இல்லையே என்று வருத்தப்பட்டாள்
பிரக்ருதி.
அனைவரும் சென்றதும் அந்த பெண்
கிளம்ப ஜிம் வெறுமையாகிவிட்டது. அதை பயன்படுத்திக்கொண்டவள் வியர்வையைத் துடைத்துக்கொண்டிருந்த
கேசவிடம் வந்து நின்றாள்.
“நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டிருக்க
கிரிஷ்?”
“நான் என்ன நினைச்சா உனக்கென்ன?
மைண்ட் யுவர் ஓன் பிசினஸ்”
“அப்பிடிலாம் போகமுடியாது...
நீ ஏன் அவ கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுற?”
“வாய் இருக்குற எல்லாரும் சிரிப்பாங்க...
இது ஒரு விசயம்னு என் முன்னாடி வந்து நிக்குற பாத்தியா, உன்னை என்ன சொல்லி திட்டுறதுனு
தெரியல”
“நீ என்னை இரிட்டேட் பண்ணுறதா
நினைச்சு தானே இப்பிடி நடந்துக்குற?”
கேசவுக்குள் நீறுபூத்த நெருப்பாக
இருந்த ஏமாற்றமும் கோபமும் எப்போதடா வெளியே வருவோமென காத்திருக்க அதற்கு வெற்றிலை பாக்கு
வைத்து வரவேற்கும் வேலையைப் பிரக்ருதி சிறப்பாக செய்து முடித்துவிட்டாள். வியர்வையைத்
துடைத்துக்கொண்டிருந்த டவலை தரையில் வீசினான் அவன்.
“உன்னை நான் ஏன்டி இரிட்டேட்
பண்ணப்போறேன்? நீ என்னை ரிஜெக்ட் பண்ண சொன்னியே ஒரு காரணம், அதை கேட்டதுக்கு அப்புறமும்
நீயெல்லாம் ஒரு ஆள்னு நான் கன்சிடர் பண்ணுவேனா? நீ என்ன நினைக்குற? ஐயோ கிருதி என்னை
ரிஜெக்ட் பண்ணிட்டாளேனு குடிச்சு குடிச்சு அல்பாயுசுல தேவதாஸ் மாதிரி நான் போய் சேர்ந்துடுவேன்னு
நினைச்சியா?”
“நான் ஒன்னும் யாரும் சாகணும்னு
நினைக்க மாட்டேன்”
“அவ்ளோ நல்லவளா நீ? நம்பிட்டேன்
தாயே, நம்பிட்டேன்... சும்மா சும்மா என் கண்ணெதிர்ல வந்து என்னை இரிட்டேட் பண்ணாத...
எப்பவும் நான் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்”
அவனது எச்சரிக்கை பிரக்ருதியைக்
கோபம் கொள்ள வைத்தது.
“என்னடா பண்ணுவ? கத்திய எடுத்து
கழுத்தை சீவிடுவியா? இல்ல டம்பிள்சை எடுத்து என் மண்டைய உடைச்சிடுவியா?” என்றபடி அவனை
நெருங்கினாள் அவள்.
கேசவ் எதுவும் பேசாமல் நின்றவன்
அவள் நெருங்கவும் புருவத்தைச் சுழித்தபடி அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான். இதை எதிர்பாராத
பிரக்ருதி அர்த்தமின்றி மூண்ட அச்சத்தில் பின்னோக்கி நகர்ந்து அங்கிருந்த ட்ரெட்மில்லில்
முட்டிக்கொண்டாள்.
கேசவ் அவளுக்கு இருபுறமும் கைகளால்
அரணிட்டவன் “நல்லா கேட்டுக்க, என் மனசுல நீ இல்ல... நீ வேண்டாம்னு சொன்னதுக்காக நான்
ஏன் சிங்கிளாவே இருக்கணும்? எனக்கும் கமிட் ஆகணும், மேரேஜ் பண்ணிக்கணும்னு ஆசை வரும்ல...
எனக்கு என்னமோ அந்தப் பொண்ணை பிடிச்சிருந்துச்சு...
அவளை அப்ரோச் பண்ணுறதுக்காக தான் நான் ஜிம்முக்கு டெய்லியும் வர்றேன்... மத்தபடி உன்னை
பத்தி நான் யோசிக்கிறது கூட இல்ல பிரக்ருதி” என்று நிதானமாக கூற அவனது பேச்சிற்கு ஏற்றபடி
அவளது கருவிழிகள் அங்குமிங்கும் ஓடுவதை வழக்கம் போல ரசித்தது எல்லாம் இரகசியம்.
“சொல்லிட்டல்ல, கைய எடு... நான்
போகணும்” என்று அவனது கைகளை விலக்க முற்பட்டவளை அவன் தடுத்தான்.
“என்ன?” என்றவளின் கையைப் பிடித்தவன்
அதில் மோதிரம் இல்லை என்றதும் மனதிற்குள் இதம் பரவுவதை உணர்ந்தான்.
“ரிங் எங்க?”
“அதை பத்தி உனக்கென்னவாம்? ஒழுங்கா
வழிய விடு”
“நீ சொல்லாம இங்க இருந்து போக
முடியாது”
“பிடிக்கல... கழட்டிட்டேன்”
இரண்டே வார்த்தைகளில் நடந்ததை
கூறிவிட்டாள் அவள்.
“உனக்கு ஸ்டெடி மைண்ட்னு ஒன்னு
இல்லவே இல்ல”
மீண்டும் குற்றம் சாட்டியவனை
கையெடுத்துக் கும்பிட்டாள் பிரக்ருதி.
“நீ என்னை நாயே பேயேனு கூட சொல்லிக்க...
ஐ டோண்ட் கேர்... உன் கிட்ட வாயை குடுத்து புண்ணாக்கிட்டேன்... இனிமே பேசுனா அந்த டம்பிள்சால
என்னை அட்டாக் பண்ணு”
“டிண்டர்ல வேற ஒரு பணக்காரன்
மாட்டிட்டானா?”
இம்முறை அவன் கேட்ட கேள்வியில்
பிரக்ருதி அமைதியாகி விட்டாள்.
“என்னாச்சு? கவுண்டர் குடுக்க
தோணலையா? உண்மைய ஒத்துக்க பயமா இருக்குதா?”
அவள் சிலையாய் நிற்கவும் மனதில்
தோன்றிய இதம் ஆவியாகிப் போய்விட்டது கேசவிற்கு. அவன் கூறியதற்கு மறுப்பு தெரிவிக்காவில்லை
என்றால் அது தானே உண்மையாக இருக்கவேண்டும்.
இவள் எல்லாம் திருந்தவே மாட்டாள்
என்ற கசப்புடன் பற்களைக் கடித்தவன் தலை குனிந்து நின்றவளின் கண்கள் கலங்கியதை அறியமாட்டான்
அல்லவா!
வெறுப்புடன் அவன் கையை எடுக்க
“என் மொபைல்ல டிண்டர் ஆப் கிடையாது... நான் சூடு கண்ட பூனை கிரிஷ்... ஒரே தப்பை மறுபடியும்
பண்ணுற தைரியம் எனக்கு இல்ல” என்றவள் அவனது பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து ஓடிவிட்டாள்.
அவள் செல்வதையே பார்த்தபடி நின்றான்
கேசவ். அவளிடம் இத்தனை நாட்கள் பாராமுகமாக இருக்க எவ்வளவு சிரமப்பட்டான் என்பதை அவன்
மட்டுமே அறிவான். வழக்கமாக பேசாமல் முறைப்புடன் நகர்பவள் இன்று பேசியதை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு
அவளை நெருக்கத்தில் ஒருமுறை பார்த்துவிட்ட அவனது திருட்டுத்தனத்தை பார்த்து மனசாட்சி
தலையிலடித்துக்கொண்டது.
இன்னும் பிரக்ருதி மீதிருந்த
காதல் கொடுத்திருந்த தடுமாற்றம் கேசவிற்கு முழுவதும் அகலவில்லை என்பதற்கு இதைவிட வேறு
சான்றில்லை. ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ள அவனது ஈகோ இடமளிக்கவில்லை என்பது அவன் மனமறிந்த
உண்மை.
பின்வரும் நாட்களில் அவனது தடுமாற்றத்தை
யாரும் கண்டுகொள்ளாமல் கவனமாக மறைத்துக்கொண்டு நடமாடினான் கேசவ்.
பிரக்ருதியோ அவன் மீதான காதலை
அவனிடமே சொல்லாமல் வழக்கமான சேட்டைகளிலும் அரட்டைகளிலும் மூழ்கிவிட்டாள்.
இவ்வாறு நாட்கள் கடக்க மகிழினி
டெக்சாஸிற்கு வந்து சேர்ந்தார்.
வந்தவரின் கண்கள் முதலில் அளவிட்டது
பிருத்வியைத் தான்.
நல்ல சாப்பாடின்றி மகன் மெலிந்துவிட்டான்
என்று ஆரம்பித்தவரின் பார்வை பிரணவியைக் குற்றம் சாட்டியது. அவள் கைகளைப் பிசைய ஆரம்பிக்க
அடுத்தது அவரது பார்வை குற்றம் சாட்டியது பிரக்யாவையும் பிரக்ருதியையும் தான்.
வந்த தினத்தின் இரவில் அவரது
கலகம் சிறப்பாக ஆரம்பித்தது. அதற்கு காரணகர்த்தா பிரக்ருதியும் பிரக்யாவும் சமைத்திருந்த
இரவுணவு.
ருமாலி ரொட்டியும் தால் மக்கானியும்
பிரணவிக்கு விருப்பமான உணவு. அது மட்டுமன்றி புரதம் நிறைந்த உணவும் கூட.
கர்ப்பவதிக்கு புரதமும் கால்சியமும்
இரும்புச்சத்து அளவுக்கு முக்கியமென மகப்பேறு மருத்துவர் அறிவுறுத்தியிருந்ததால் மூன்று
வேளை உணவிலும் புரதச்சத்து இருக்கும்படி பிரக்யாவும் பிரக்ருதியும் பார்த்துக் கொள்வார்கள்.
ஆனால் அவர்களின் இந்த மெனு மகிழினிக்குப்
பிடிக்காதது போல பிருத்விக்கும் பிடிக்காது. எனவே இரவில் ஒன் பாட் சூப் மற்றும் காய்கறி
சாலட்டுடன் முடித்துக்கொண்டான்.
“வீட்டுல ஒன்னுக்கு மூனு பொண்ணுங்க
இருந்தும் வீட்டு ஆம்பளை சூப்பையும் பச்சை காய்கறியையும் தின்னு தின்னு மெலிஞ்சு போயிருக்கான்...
சம்பாதிக்கிறவனுக்கு வாய்க்கு ருசியா செஞ்சு போடாம மூனு பேரும் என்ன தான் செய்யுறிங்க?”
அவர் கடுகடுக்க ஆரம்பிக்கவும்
பிரக்ருதி மகப்பேறு மருத்துவர் கூறிய அறிவுரையைச் சொல்ல அதை மகிழினி காதில் போட்டுக்கொண்டால்
தானே!
“சமைக்காம சோம்பேறித்தனமா இருக்குறதுக்கு
இது ஒரு சாக்கு... உன் அக்காவுக்கு பிள்ளை உண்டான சாக்கு... நீங்க ரெண்டு பேரும் சும்மா
தான இருக்கீங்க?” என கடுகடுத்தவரிடம் பிரக்யாவுக்கே பேசப்பிடிக்கவில்லை.
“ப்ரெக்னெண்டா இருக்குறது உங்க
அண்ணனா இல்ல என் அக்கவா? உனக்குத் தெரிஞ்சா உங்கம்மாக்குப் புரிய வை பிரகி” என்று பிரக்ருதி
அவளது காதில் முணுமுணுத்துவிட்டு ருமாலி ரொட்டியைச் சாப்பிட ஆரம்பித்துவிட்டாள்.
இவ்வாறு வந்த தினத்தின் இரவிலேயே
கலகத்தை ஆரம்பித்துவிட்டார் மகிழினி. அவருக்கு மட்டும் பிரக்யா – ஷ்ரவனின் காதல் விவகாரம்
தெரிய வந்தால் அவரது எதிர்வினை எப்படி இருக்கும்?
- Get link
- Other Apps
Comments
Super daily ud podunga
ReplyDeletenice
ReplyDelete