அலைவரிசை 27
- Get link
- Other Apps
“உங்களுக்குக்
கடவுள் நம்பிக்கை இருக்குதா? அப்பிடி இருந்துச்சுனா காலம் முழுக்க உங்களை மனுசனா படைச்சதுக்காக
அவருக்கு நன்றியோட இருங்க... அவர் நினைச்சிருந்தா உங்களையோ என்னையோ வெளிச்சம் பட்டா
இறந்து போற அமீபாவா படைச்சிருக்கலாம்... இல்ல எதுக்கு பிறந்தோம் எதுக்கு வாழுறோம்னே
தெரியாம இருக்குற காட்டு மிருகங்களா படைச்சிருக்கலாம்... அப்படி எல்லாம் செய்யாம அவர்
நம்மளை மனுசங்களா படைச்சிருக்கிறார்... உலகத்தை புரிஞ்சிக்கிற ஆறாவது அறிவோட சிவிலைஸ்ட்
சொசைட்டியா வாழுற ஒரு சோஷியல் அனிமல்னு மனுசங்களை சொன்னாலும் We are more special
than other species... இப்ப சொல்லுங்க, நம்ம கடவுளுக்குக் கடமைப்பட்டிருக்குறோமா இல்லயா?”
-கே.கேவின்
மனதின் குரல்
கார்கி டெலிகாம் லிமிட்டட் தலைமை அலுவலகம்,
சென்னை...
கார்கி குழுமத்தின் கீழிருக்கும்
துணை நிறுவனங்களில் ஒன்றான கார்கி டெலிகாம் லிமிட்டட்டிற்கு அன்று வருகை தந்திருந்தார்
பத்மானந்த். நீண்டநாட்களுக்குப் பிறகு அங்கே வந்தவரின் கண்கள் வழக்கமாக அங்கே மும்முரமாக
வேலையில் ஈடுபட்டிருக்கும் நீரவ் இல்லாத வெறுமையை உணர்ந்தது.
என்ன தான் அவனது செயல்பாடுகளில்
பிடித்தமின்மை இருந்த போதும் பெற்ற மகனின் மறைவு அவருக்கு வருத்தமாக தானே இருக்கும்.
மேலாண்மை இயக்குனர் அறையில் அவனது
புகைப்படத்தைக் கண்டதும் அவர் கண் கலங்கியதை நிஷ்டூரமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்
கமலானந்தும் சரணும்.
“போய் தொலைஞ்சுட்டான்னு சந்தோசப்பட்டா
போட்டோ ரூபத்துல இருக்குறானே” என மைந்தனின் காதில் முணுமுணுத்தார் கமலானந்த்.
“டோண்ட் வொரிப்பா.. சீக்கிரம்
இந்த போட்டோவும் இல்லாம போகும்.. வெய்ட் அண்ட் சீ” என்றான் சரண்.
இவை அனைத்தும் மெல்லிய குரலில்
நடந்தேறிய உரையாடல்கள் என்பதால் ஒரு வார்த்தை கூட பத்மானந்தின் செவியை எட்டவில்லை.
“ஏ.ஜி.எம்ல உன்னை கார்கி டெலிகாம்
லிமிட்டடோட சேர்மனாக்கலாம்னு டிசைட் பண்ணிருக்குறேன் சரண்... வாட்ஸ் யுவர் ஒபீனியன்?”
இதை எதிர்பார்த்து தானே தகப்பனும்
மகனும் இத்தனை ஆண்டுகள் இலவு காத்த கிளியாக காத்திருந்தார்கள். மாட்டேன் என்று சொல்லுவனா
சரண்!
ஒப்புதலாக தலையாட்டியவன் பின்னர்
வேண்டுமென்றே “இருந்தாலும் கிரிஷ் கிட்ட ஒரு வார்த்தை...” என்று தயங்குவது போல சிறப்பாக
நடித்தான்.
பத்மானந்தும் சற்று யோசிக்க கமலானந்தோ
சரணை முறைத்தார்.
“சரண் வாயை வச்சிக்கிட்டு சும்மா
இருந்தாலே அண்ணன் அவனை மறந்துடுவார்... இப்ப ஏன் தேவையில்லாம அவன் பேரை இழுக்கிறான்?”
பத்மானந்த் சரணிடம் “நீ இந்த
கம்பெனிக்காக உழைக்க ரெடியா இருக்க... ஆனா அவன் அமெரிக்கால வெகேஷனுக்குப் போயிருக்குறான்...
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாதவன் கிட்ட கம்பெனிய ஒப்படைச்சா இதை மூழ்குற கப்பலா மாத்திடுவான்
சரண்” என்றார்.
“உங்களுக்கு அடுத்தபடி அவன் தான்
மேஜர் ஷேர்ஹோல்டர் பெரியப்பா... அவன் அப்பிடி ஈஸியா ஒதுங்கிட மாட்டான்” என்றான் அவன்.
“அவனைச் சம்மதிக்க வைக்க வேண்டியது
என் பொறுப்பு சரண்” என்றார் பத்மானந்த்.
கமலானந்தையும் சரணையும் வெளியே
அனுப்பியவர் அதே அறையில் தனக்கும் நீரவுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை நினைவுகூர்ந்தார்.
“டெலிகாம் கம்பெனி என்னோட ட்ரீம்
டாட்... அதுக்காக கவர்மெண்ட் ரூல்ஸை வயலேட் பண்ணுறதுல எனக்கு இஷ்டமில்ல”
“லுக் நீரவ்! பிசினஸ்ல இருக்குற
ஒரே ஒரு ரூல் ‘டூ ஏர்ன் ப்ராஃபிட்’... அதுக்காக எதை வேணும்னாலும் செய்யலாம்... கவர்மெண்ட்
போடுற ரூல் எல்லாம் நம்மளை மாதிரி பிசினஸ் கங்க்ளமெரைட்டுக்காக (conglomerate) தான்”
“பட் நம்ம கம்பெனி ஆக்சன்ல
(auction) கலந்துக்கல... இந்த மாதிரி பண்ணுறது தப்பு டாட்”
“இனாஃப் நீரவ்... எனக்கே நீ பிசினஸ்ல
எது சரி எது தப்புனு பாடம் எடுக்கிறியா? உன்னை நம்பி இந்த கம்பெனிக்கு இன்வெஸ்ட் பண்ணுனவனுக்கு
நியாய தர்மத்த விட இதுல இருந்து வர்ற லாபம் தான் முக்கியம்... 4G லைசன்ஸ் நமக்குக்
கிடைக்குறதுல எந்த தடங்கலும் வராது... அதை எனக்கு இருக்குற பொலிட்டிக்கல் சப்போர்ட்
வச்சு நான் பாத்துக்குறேன்... நீ பிசினஸை மட்டும் கவனி”
நீரவ் என்ன தான் அவரது மகனாக
இருந்தாலும் அவன் யோசிக்கும் விதமும் நடவடிக்கையும் கார்கியை பிரதிபலிக்கும். நீதி
நேர்மை நியாயம் என இன்றைய நவீன வணிகவுலகத்தில் புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளை அவன்
உபயோகிப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதனாலே இருவருக்கும் அடிக்கடி
கருத்து வேறுபாடுகள் எழுவதுண்டு. ஆனால் அவனது அகால மரணத்துக்குக் காரணம் அந்தக் கருத்து
வேறுபாடுகள் இல்லை.
பழைய சம்பவங்களை பற்றி யோசித்து
எந்த பயனும் இல்லை என பெருமூச்சுவிட்ட பத்மானந்த் எவ்வாறு கேசவின் மனதை மாற்றுவது என்ற
ஆராய்ச்சியில் இறங்கினார்.
திடீரென அவரது பெர்ஷனல் மொபைல்
அடிக்கவும் யாரழைப்பது என்ற யோசனையுடன் எடுத்துப் பார்த்தவர் அழைத்தது சந்திரமௌலி என்றதும்
மலர்ச்சியுடன் அழைப்பை ஏற்றார்.
“சொல்லுடா மௌலி... தி கிரேட்
ஃபினான்ஷியல் அனலிஸ்ட் சந்திரமௌலிக்கு இப்ப தான் என் கிட்ட பேச டைம் கிடைச்சுதா?” என
உரிமையோடு கேட்க
“ஆபத்தில் உதவுறது மட்டுமில்ல
எச்சரிக்கிறதும் நண்பனோட கடமை தான ஆனந்த்... நீ என் பேச்சை கேப்பியா இல்லையானு ஏகப்பட்ட
தடவை எனக்கு நானே க்விஸ் நடத்திட்டு தான் உனக்குக் கால் பண்ணுனேன்” என்றார் அவர்.
“ப்ச்! இன்னும் நீ அதை மறக்கலையா?”
“என்னால எப்பவுமே அதை மறக்க முடியாது
ஆனந்த்... விடு... இப்ப நம்ம பழசை கிளறாம கரெண்ட் ப்ராப்ளம்ஸ் பத்தி பேசலாமா?”
“இப்ப என்ன பிரச்சனை?”
“லாஸ்ட் ஃபியூ வீக்ஸா ஷேர் மார்க்கெட்
நிலவரத்த கவனிச்சதுல உங்க கம்பெனி ஷேரோட வேல்யூ திடீர்னு குறைஞ்சதை கவனிச்சேன்”
“நானும் அதை கவனிச்சேன் மௌலி...
இப்ப 4G கேஸ் சுப்ரீம் கோர்ட்ல போயிட்டிருக்கு... அது ஒரு காரணம்... அப்புறம் கல்ஃப்ல
சில இன்வெஸ்டார்ஸோட சேர்ந்து கார்கி ரீடெய்ல் ஆரம்பிச்சோம்ல, க்ளோபல் ரெசஷனால அதுவும்
கொஞ்சம் இழுபறியா போகுது... நீரவோட டெத், கார்கியோட சூசைட் எல்லாமும் சேர்ந்து கார்கி
குரூப்போட ஷேர் வேல்யூவை கொஞ்சம் கொஞ்சமா குறைக்கிறத நானும் கவனிச்சிட்டு இருக்குறேன்”
“இது கடந்த ஆறு மாசமா நடக்கிறது
தான் ஆனந்த்... நான் சொல்ல வர்றது கடந்த சில வாரங்களா நடக்குற மாற்றங்களை பத்தி...
கார்கி இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டட்டோட ஷேர்சை ஒரு கம்பெனி கொஞ்சம் கொஞ்சமா வாங்குறாங்க...
கிட்டத்தட்ட செவன் பர்செண்டேஜ் ஷேர்ஸ் இப்ப அவங்க கைவசம் இருக்கு”
“வாட்?” என அதிர்ந்தார் பத்மானந்த்.
“எந்த கம்பெனி? புரமோட்டர்ஸ்
பத்தி எதுவும் டீடெய்ல்ஸ் கிடைச்சிதா?” என படபடத்தவரிடம் சந்திரமௌலி அமைதி காக்கும்படி
வேண்டிக்கொண்டார்.
“நீ இதுக்காக டென்சன் ஆக வேண்டாம்
ஆனந்த்... ஃபிப்டி ஃபைவ் பர்செண்டேஜ் ஷேர்ஸ் உன் ஃபேமிலி மெம்பர்ஸ் கிட்ட இருக்குற
வரைக்கும் நீ டென்சன் ஆகவேண்டாம்... அதே நேரம் இப்போதைக்கு உன் கம்பெனி மேனேஜ்மெண்ட்ல
எந்த சேஞ்சும் கொண்டு வராத”
“என்னடா சொல்லுற? கார்கி டெலிகாம்கு
நான் சரணை சேர்மன் ஆக்கலாம்னு டிசைட் பண்ணிருக்குறேனே... அதோட நீரவ், கேசவ் ஷேர்ஸை
அவனுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணனும்னு கூட ஐடியா இருக்கு” என்றார் பத்மானந்த்.
மறுமுனையிலிருந்த சந்திரமௌலிக்கு
நண்பனின் தலையில் நங்கென்று குட்டு வைக்கலாமா எனுமளவுக்கு எரிச்சல் மிகுந்தது. அதே
நேரம் கார்கி குழுமத்தின் தொழில்கள் தான் பத்மானந்தின் பலவீனம். தனது தொழிலில் சரிவைத்
தடுப்பதற்காக பத்மானந்த் எந்த எல்லைக்கும் போவார். அதை நன்கு அறிந்திருந்த சந்திரமௌலி
தந்திரமாக யோசித்தார்.
அந்த தந்திரத்தைப் பேச்சில் மறைக்காது
காட்டினார்.
“நல்லா கேட்டுக்க ஆனந்த்...
2023ல வரப்போற ரெசஷன்ல ரீடெய்ல் இண்டஸ்ட்ரி செமத்தியா அடி வாங்கும்னு பேசிக்கிறாங்க...
அதுல உன்னை இன்வெஸ்ட் பண்ண வச்சது கமல் தானே... இப்ப கார்கி டெலிகாம் ஸ்பெக்ட்ரம் ஆக்சன்ல
கலந்துக்காம பணத்தை அள்ளி வீசி 4G லைசன்ஸ்
வாங்குனதா சுப்ரீம் கோர்ட்ல கேஸ் போகுது... அந்த முட்டாள்தனத்த செஞ்சது உன் தம்பி மகன்
சரண் தானே... இந்த ரெண்டு பேரையும் நம்பி நீ தயவு பண்ணி பிசினஸ்ல அடுத்த அடிய எடுத்து
வைக்காத... ஒரு ஃப்ரெண்டா உனக்கு நான் எப்பவும் கெட்டது நினைக்க மாட்டேன்னு நம்புனேன்னா
இந்த ஷேர் ட்ரான்ஸ்ஃபர் ஐடியாவ மறந்துடு”
பத்மானந்த் அமைதியாக இருந்தார்.
இதற்கு முன்னர் வளைகுடா நாடுகளில் சில்லறை வணிகத்திற்கான பல்பொருள் அங்காடிகளை திறக்கும்
யோசனையை உலகப்பொருளாதாரத்தில் இருக்கும் சிக்கல்களை மனதில் கொண்டு சந்திரமௌலி வேண்டாமென்றார்.
ஆனால் கமலானந்த் தூபம் போட்டதால்
பத்மானந்த் சந்திரமௌலியின் பேச்சை செவிமடுக்காது தனது முதலீட்டை அந்த வணிகத்தில் கொட்டினார்.
இதோ 2023ஆம் ஆண்டில் வரப்போகிற
உலகளாவிய பொருளாதார மந்தநிலை அமெரிக்கா போன்ற வல்லரசுகளையே கதிகலங்க வைத்துக் கொண்டிருந்தது.
வளரும் நாடான இந்தியாவின் வணிகம் மட்டும் அதில் செழித்துவிடுமா என்ன?
அந்தப் பயத்தோடு சேர்ந்து அலைக்கற்றை
ஊழல் வழக்கில் வேறு கார்கி குழுமம் சிக்கிக்கொள்ள பெரும் தலைவலியை அனுபவித்தவர் இப்போது
சந்திரமௌலியின் எச்சரிக்கையைக் கேட்டே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
“சரி மௌலி... நான் அவசரப்படல...
ஆனா டெலிகாம் கம்பெனி விவகாரத்துல எனக்கு ஒரு தீர்வு சொல்லுடா”
“உன்னோட டெலிகாம் கம்பெனி விவகாரத்துல
நீ நம்ப வேண்டியவனை நம்பல... இப்ப மாட்டிக்கிட்டு முழிக்கிற... இப்ப உனக்குனு இருக்குற
ஒரே ஒரு நம்பிக்கை கிரிஷ் மட்டும் தான்... என்ன தான் சரண், கமல் உன் கூட இருந்தாலும்
கிரிஷ் தான் உன் சொந்த ரத்தம்... உன் மேல அவனுக்குக் கோவம் இருக்கு... அது தணியுறதுக்காக
அவன் உன்னை விட்டு விலகியிருக்குறான்... அவனால கார்கி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் அழியுறத
வேடிக்கை பாக்க முடியாது... நீ அவனை கான்டாக்ட் பண்ணி பேசு ஆனந்த்”
“நான் பேசுனாலே அவன் கோவப்படுறான்
மௌலி”
“உன் செல்லப்பையன்ல.. அப்பிடி
தான் இருப்பான்... இப்பவும் சொல்லுறேன், உனக்குனு இருக்குற ஒரே ஒரு நம்பிக்கை அவன்
மட்டும் தான்... அவனை விட்டுட்டா இந்த ரெசஷன்ல உன் கம்பெனி அழியுறதை நீ பாக்குறதுக்கு
தயாராகுறத தவிர வேற வழியில்ல... அவன் கிட்ட பேசு... முடிஞ்சா ஒரு தடவை டெக்சாஸுக்குப்
போ”
“நீ ஈஸியா சொல்லிட்ட மௌலி...
சாமி வரம் குடுத்தாலும் பூசாரி வழிவிட மாட்றாருப்பா... அதான் உன் மகன் ஷ்ரவன் இருக்கானே,
அவனுக்கு நான் வில்லனா தெரியுறேன்... கிரிஷ் கிட்ட பேசணும்னு நான் ஆர்லிங்டன் போனப்ப
கூட சார் என்னை மீட் பண்ண விடல”
“அவன் கிட்ட நான் பேசுறேன்...
நீ டெக்சாஸ் போகுற வழிய பாரு... உன்னோட இந்த ஜர்னி சீக்ரேட்டா இருந்துச்சுனா பெஸ்ட்”
நண்பனுக்குத் தன்னால் இயன்ற அறிவுரையைக்
கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் சந்திரமௌலி. அவர் ஷ்ரவனின் தந்தை மட்டுமன்றி பொருளாதாரத்தையும்
பங்குசந்தையையும் கணிப்பதில் வல்லுனர். பத்மானந்தின் பால்ய சினேகிதனும் கூட.
வணிகத்தில் சந்திரமௌலி கூறும்
யோசனைகளைத் தட்டாமல் கேட்கும் பத்மானந்த் ஒரே ஒரு முறை கமலானந்தின் சூழ்ச்சியால் அவரது
பேச்சை அலட்சியம் செய்ததன் பலனை தான் இப்போது அனுபவிக்கிறார்.
சந்திரமௌலி நண்பரிடம் பேசிவிட்டு
அடுத்து அழைத்தது அவரது புத்திரன் ஷ்ரவனை.
“சொல்லுங்கப்பா... ப்ளான் சக்சஸா?”
என ஆர்வமாக கேட்டான் அவன்.
“சக்சஸ் தான்டா மகனே... ஆனந்தை
பயம் காட்டுறதுக்காகவே கடவுள் குளோபல் ரெசஷனை ஏற்படுத்திருக்கார் போல... ஷேர் மார்கெட்
நிலவரத்தை பத்தி சொன்னதும் அரண்டு போயிட்டான்... அதோட 4G கேஸ் வேற மண்டைகுடைச்சலா இருக்கு...
இப்ப நான் சொன்னதை கமல் காதுக்குப் போகாம பாத்துக்கனு சொல்லிருக்கேன்... கண்டிப்பா இந்த தடவை தப்பு நடக்காது... அனேகமா இந்த
வீக்கெண்டுக்குள்ள அவனை அமெரிக்கால எதிர்பாக்கலாம்”
“தேங்க்யூப்பா... சொன்ன வேலைய
கச்சிதமா முடிச்சிட்டிங்க... ஆனந்த் அங்கிள் மனசுல விஷத்தை கலக்குற அந்த ரெண்டு குள்ளநரிங்களுக்கும்
கிரிஷுக்கும் அங்கிளுக்கும் இடையில இருக்குற இடைவெளி தான் அட்வாண்டேஜ்... அதை உடைக்கணும்னா
அவங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசி பிரச்சனைய தீர்த்துக்கணும்... அது நடக்கும்னு
இப்ப நம்பிக்கை வந்துடுச்சு”
“சரி அதை விடுடா... மருமகப்பொண்ணு
அவ அண்ணியோட இந்தியாக்கு வர்றதா சொன்ன... எப்ப வருவா?”
“அவளுக்கு நெக்ஸ்ட் வீக் ஃப்ளைட்
டிக்கெட் புக் பண்ணியாச்சுப்பா... உங்க கிட்ட நிறைய பேசணும்னு சொன்னா... அவங்கப்பாவோட
உங்களை மீட் பண்ண வருவானு தோணுது”
“பார்றா... புயல் வேகத்துல காய்
நகர்த்திருக்குற... மௌலியோட மகன்னா சும்மாவா?”
தந்தை மார்தட்டிக்கொண்டதில் ஷ்ரவன் சிரிக்க சந்திரமௌலியும் மகனின் வாழ்க்கை இனி தடுமாறாமல் அமைதியாக செல்லும் என்ற நம்பிக்கையில் மனம் நிறைந்து போனார்.
- Get link
- Other Apps
Comments
Post a Comment