அலைவரிசை 29
- Get link
- Other Apps
“ரொம்ப வேதனையான
விசயம் என்ன தெரியுமா? மனசுக்குப் பிடிச்சவங்களை அளவுக்கு அதிகமா லவ் பண்ணுறப்ப நாம
நம்மளை இழந்துடுறோம்... நாம லவ் பண்ணுற பெர்ஷன் மாதிரி நம்மளும் ஸ்பெஷலான ஆளுங்கிறத
சுத்தமா மறந்துடுறோம்... சில ரிலேசன்ஷிப்ஸ் கண்ணாடி க்ளாஸ் மாதிரி... அது உடைஞ்சுதுனா
அப்பிடியே விட்டுடுறது பெட்டர்... மறுபடியும் ஒட்ட வைக்குறேன்னு இறங்குனா கண்ணாடி கையை
கிழிச்சு ரத்தம் வர்ற அளவுக்கு நம்ம தான் காயப்பட்டுப் போவோம்”
-கே.கேவின்
மனதின் குரல்
சாக்சனி அப்பார்ட்மெண்ட்ஸ்...
வாரயிறுதியில் இந்தியாவுக்குச்
செல்ல விமான பயணச்சீட்டுகள் உறுதியான நிலையில் பெண்கள் மூவரும் தங்களது உடமைகளை எடுத்து
வைக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
பிரக்ருதியும் பிரக்யாவும் இனி
அமெரிக்கா திரும்ப போவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தனர். பிரணவி எந்தச் சலனமுமின்றி
தனது மருத்துவ அறிக்கைகள், ஸ்கேன் ரிப்போர்ட்கள் என அனைத்தையும் சரி பார்த்து எடுத்து
வைத்துக் கொண்டிருந்தாள்.
அவர்களின் அறைக்கதவு டொக் டொக்கென்று
தட்டப்பட மூவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கே வாடிய முகத்தோடு நின்று கொண்டிருந்தான்
பிருத்வி.
“உன் கிட்ட கொஞ்சம் பேசணும் நவி”
கணவன் மனைவி பேசட்டுமென இடம்
கொடுத்துவிட்டு பிரக்யாவும் பிரக்ருதியும் எழுந்து வெளியே சென்றனர்.
பிருத்வி அறைக்குள் பிரவேசித்ததை
கண்டுகொள்ளாமல் தனது துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள் பிரணவி.
“நீ நிஜமா இந்தியாக்குப் போறியா
நவி?”
“என்னோட டெஸ்ட் ரிப்போர்ட்ஸ்,
மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டேன்... ட்ரஸ் பேக் பண்ணிட்டிருக்குறேன்...
இதெல்லாம் பாத்தா உங்களுக்கு இந்தியாக்குப் போறேன்னு ட்ராமா பண்ணுற மாதிரியா தெரியுது?”
சுள்ளென்று கேட்டவள் மடித்த ஆடைகளை
சூட்கேசில் அடுக்க ஆரம்பித்தாள்.
“நான் அந்த அர்த்தத்துல கேக்கலனு
உனக்கு நல்லா தெரியும்... யூ ஆர் லீவிங் மீ அலோன்... டூ யூ அண்டர்ஸ்டாண்ட்?”
சூட்கேசை மூடியவள் நிமிர்ந்தாள்.
“தனியா இருந்து பாருங்க பிருத்வி...
அப்ப தான் கூட்டமா இருக்குற இடத்துல உனக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லனு ஒருத்திய
தனியா ஒதுக்கி வச்சா அவளுக்கு எவ்ளோ வலிக்கும்னு புரியும்”
பிருத்வி அவளருகே அமர்ந்தவன்
ஆதுரமாக பிரணவியின் கரங்களைப் பற்றினான்.
“அம்மா அந்த காலத்து மனுசி...
நீயோ நானோ நினைச்சாலும் அவங்களோட குணத்த மாத்த முடியாது நவி... நீ கண்டுக்காம இருக்க
பழகிக்க... எனக்காக ப்ளீஸ்”
“கண்டுக்காம தான் இருக்கப்போறேன்...
உங்கம்மாவ மட்டுமில்ல, உங்களையும் தான்”
முதல் முறையாக பிரணவியின் பேச்சிலும்
செயலிலும் பிடிவாதத்தைப் பார்க்கிறான் பிருத்வி. அவனால் அவளைத் தடுக்க முடியவில்லை.
இருப்பினும் முயற்சியில் தளராத விக்கிரமாதித்தனாக செண்டிமெண்ட் குறிப்புகளை அள்ளிவிட
ஆரம்பித்தான்.
“பேபிய வச்சு நம்ம என்னல்லாம்
ப்ளான் பண்ணிருந்தோம்? நியூ பார்ன் போட்டோஷூட் எப்பிடி பண்ணணும், ரெண்டு பேரும் ஷிப்ட்
போட்டு குழந்தைய பாத்துக்கணும், உன்னால முடியலனா லீவ் போட்டுட்டு உன்னையும் குழந்தையையும்
கவனிச்சிக்கணும்னு எனக்கு நிறைய ஆசை இருக்கு நவி... நீ ஒரு அப்பாவோட உரிமைய பறிக்கிறனு தோணலயா?”
“இங்க இருந்தேன்னா கண்டிப்பா
ஸ்ட்ரஸ்ல என்னோட டெலிவரி காம்ப்ளிகேட் ஆகும்னு தோணுது... அப்பிடி காம்ப்ளிகேட் ஆகி
நான் கஷ்டப்பட்டாலும் அதை நீங்களோ உங்கம்மாவோ புரிஞ்சிக்க மாட்டிங்க.. ப்ரெக்னென்சில
நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணுனது பொறுக்காம ஆம்பளை வீட்டுவேலை செய்யக்கூடாதுனு தானே இண்டர்வியூக்கு
போகணும்னு இருந்த என் தங்கச்சியோட கெரியரை காலி பண்ணி இங்க அழைச்சிட்டு வந்து உங்களுக்கும்
எனக்கும் சமைச்சுப் போட்டு வீட்டை பாத்துக்குற வேலைக்காரியா ஆக்குனாங்க உங்கம்மா...
அவங்க போஸ்ட் டெலிவரில மட்டும் எனக்கு உதவியா உங்களை இருக்க விடுவாங்களா?
கண்டிப்பா மாட்டாங்க... ஆம்பளை
இதெல்லாம் செய்யக்கூடாதுனு உங்களை ஆபிஸுக்கு அனுப்பிட்டு, நீ மட்டும் தான் அதிசயமா
பிள்ளை பெத்தியானு வீட்டுவேலைய என் தலையில கட்டுவாங்க... உங்க கிட்ட சொன்னா, எங்கம்மா
அந்தகாலத்து மனுசி, கண்டுக்காதனு சொல்லுவிங்க... உங்க ரெண்டு பேருக்கு இடையில குழந்தையையும்
வச்சுக்கிட்டு போஸ்ட் பார்ட்டம் டிப்ரசனால
உடம்பையும் மனசையும் கஷ்டப்படுத்திக்கிட்டு நான் ஏன் வேதனைப்படணும் பிருத்வி? என்னை
பத்தி, என் கஷ்டத்த பத்தி கொஞ்சம் கூட யோசிக்காத உங்களுக்காக நான் ஏன் யோசிக்கணும்?
இதோட செண்டிமெண்ட் ட்ராமாவ நிறுத்துங்க... எப்பவும் எனக்கு புருசனா இருக்குறத விட ஆம்பளையா
இருக்குறது தானே உங்களுக்குப் பிடிக்கும்... அப்பிடியே இருங்க... டோண்ட் ட்ரை டு சேஞ்ச்
மை மைண்ட்”
பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து
சென்றுவிட்டாள் பிரணவி. பிருத்வியால் அவளைத் தடுக்கவும் முடியவில்லை. அவள் இந்தியாவுக்குச்
செல்வதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.
பிரணவி கோபத்தோடு ஹாலுக்கு வரவும்
பிரக்யாவும் பிரக்ருதியும் என்னவென வினவ “நான் கொஞ்சம் வாக் போயிட்டு வர்றேன்... மூச்சு
முட்டுது” என்றபடி வெளியேறினாள்.
வெளியே போனவள் அப்பார்ட்மெண்ட்
பூங்காவில் நடக்க ஆரம்பித்தாள். நடக்கும் போதே வயிற்றுக்குள் குழந்தை நகர்வதும் மிதிப்பதுமாக
இருக்க அந்த அனுபவத்தை ரசித்தவள் சிரித்தபடியே பூங்காவின் செடிகளை பார்த்தவாறு நடந்தாள்.
திடீரென காலில் ஏதோ இடற தவறி
விழப்போனவளைத் தாங்கி பிடித்தான் கேசவ்.
“கவனமா வர மாட்டிங்களா சிஸ்டர்?”
என கடிந்தபடி அவளை அங்கிருந்த பெஞ்சில் அமரவைத்தான்.
முகத்தில் விழுந்த கூந்தல்கற்றையை ஒதுக்கியபடி நிம்மதி பெருமூச்சை விட்டுக்கொண்டாள் பிரணவி.
“கவனமா தான் வந்தேன்... வயித்துல
சோட்டி உதைச்சா.. அந்த சந்தோசத்துல எதையும் கவனிக்கல” என்றாள்.
“சோட்டி?”
“என் பொண்ணுக்கு நான் வச்சிருக்குற
செல்லப்பேர்”
“ம்ம்... நல்லா இருக்கு... பட்
மூத்த குழந்தைக்கு ஏன் சோட்டினு வச்சிங்க?”
“பிகாஸ் எனக்கு கிருதி தான் ஃபர்ஸ்ட்
பேபி... இவ சின்னவ”
கேசவ் நகைக்க மீண்டும் ஒரு முறை
குழந்தை உதைக்கவும் வயிற்றில் கை வைத்து பூரித்தாள் பிரணவி.
“இதுல என்ன சந்தோசம் சிஸ்டர்?”
என புரியாமல் கேட்டான் அவன்.
“சந்தோசம் தான் கிரிஷ்... நமக்குள்ள
இன்னொரு உயிர் வளர்ற சந்தோசம்... அது துடிச்சிக்கிட்டே அங்கயும் இங்கயும் மூவ் ஆகுறப்ப
ஒரு சிலிர்ப்பு வரும்... அதுக்கு முன்னாடி எதுவும் பெருசில்லனு தோணும்” என பூரிப்போடு
அவள் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவள் அணிந்திருந்த லாங் கவுனின் வயிற்றுப்பகுதி மேலும்
கீழுமாக நகர்ந்தது.
அதை கேசவ் கவனித்துவிட்டான்.
“ஹேய் இப்ப அசைஞ்சது சோட்டியா?”
விழிகளை அகல விரித்து கேட்டான்
அவன். இதுவரை இம்மாதிரியான காட்சியை அவன் பார்த்ததே இல்லை. பிரணவி கூறியது உண்மை தான்.
இவ்வளவு பெரிய உயிருக்குள் இன்னொரு உயிர் உருவாவதும், அது துடிப்பதும் எத்தகைய அற்புதம்!
இயற்கை இந்த வரத்தைப் பெண்களுக்கு மட்டும் தான் கொடுத்திருக்கிறது.
குழந்தை உதைத்ததும் பிரணவியின்
முகத்தில் உண்டான கர்வம் இருக்கிறதே, அது மகவை சுமக்கும் மங்கையின் முகத்தில் மட்டுமே
காணக்கிடைக்கும் ஒரு அற்புத உணர்வு.
“இப்பிடி தான் டெய்லியும் உதைப்பா”
“அவ உதைச்சா உங்களுக்கு வலிக்காதா
சிஸ்டர்?”
கேசவின் கேள்வி பிரணவிக்குச்
சிரிப்பை மூட்டியது.
“குஞ்சு மிதிச்சா கோழிக்கு வலிக்காதுப்பா”
பழமொழியைத் தனக்கு ஏற்றவாறு மாற்றிக் கூறினாள் அவள்.
“இந்த வொண்டர்ஃபுல் பீலிங்கை
என்ஜாய் பண்ணுறிங்கல்ல... எப்ப இந்தியா கிளம்புறிங்க?”
“இந்த வீக்கெண்ட்ல போறோம் கிரிஷ்”
“நாங்களும் கூடிய சீக்கிரம் இந்தியாக்கு
வந்துடுவோம்... அநேகமா நாங்க சோட்டிய இந்தியால வந்து மீட் பண்ணுவோம்னு நினைக்குறேன்”
“நீங்க சென்னையில எந்த ஏரியா?”
“ராஜா அண்ணாமலைபுரம் சிஸ்டர்”
“ஓ! போஷ் ஏரியால்ல”
“ஆமா”
“சென்னைக்கு ரிட்டன் ஆனதும் என்ன
செய்றதா ப்ளான்?”
இந்த கேள்வியை பிரணவியிடமிருந்து
எதிர்பார்க்கவில்லை அவன். இருப்பினும் எதையாவது கூறி சமாளிப்போமென “பிசினஸ் பண்ணுற
ஐடியா இருக்கு” என்றான்.
“குட்... அடுத்தவங்க கிட்ட வொர்க்
பண்ணி சேலரி வாங்குறத விட சொந்தமா பிசினஸ் பண்ணுனா நம்ம தான் ராஜா நம்ம தான் மந்திரி...
என்ன ஒன்னு, ஸ்டார்ட்டிங்ல கொஞ்சம் கஷ்டமா இருக்கும்... லாஸ் ஆர் ப்ரேக் ஈவன் வரும்...
அப்புறமா பிசினஸ் பிக்கப் ஆகிடுச்சுனா போட்ட இன்வெஸ்ட்மெண்டை எடுத்துடலாம்... நாமினல்
ப்ராஃபிட்டும் வந்துடும்”
“நீங்க ஒரு ஹோம்மேக்கர்னு நினைச்சேன்...
பட் பிசினஸோட நேச்சர் பத்தி தெரிஞ்சு வச்சிருக்கிங்களே”
“நான் எம்.பி.ஏ கிராஜுவேட்...
ஐ.டில அட்மினிஸ்ட்ரேஷன் செக்டார்ல ஒர்க் பண்ணுனேன்... ஆப்டர் மேரேஜ் ஜாபை க்விட் பண்ணிட்டேன்”
பிரணவியைப் பார்க்கும் போது பரிதாபமாக
இருந்தது கேசவிற்கு. ஏனெனில் வேலையை விட்டுவிட்டேன் என்று சொல்லும் போது அவளது கண்களில்
தெரிந்த வேதனை அத்தகையது.
“கிருதி என்னை மாதிரி இல்ல...
அவ தன்னோட கெரியரை யாருக்காகவும் விட்டுக்குடுக்க மாட்டா” என ஏக்கத்தோடு கூறினாள் அவள்.
கேசவ் அவனுக்குள் எழுந்த கடுப்பை
மறைத்துக்கொண்டான்.
“அவ தான் கல்யாணம் பண்ணுனா பணக்காரனை
தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒத்தக்கால்ல நிக்குறாளே... அவளுக்குக் கெரியர் எல்லாம் லாலிபாப்
மாதிரி... வேண்டாம்னு நினைச்சதும் தூக்கி போட்டுடுவா சிஸ்டர்”
“உனக்கும் அவளைப் பத்தி தெரிஞ்சிடுச்சா?
இந்தப் பொண்ணுக்கு அப்பப்ப தினுசு தினுசா ஆசை வரும்... பாஸ்ட் டூ இயர்சா கட்டுனா பணக்காரனை
தான் கட்டுவேன்னு உளறிட்டிருக்குறா... மனசுல சிண்ட்ரெல்லானு நினைப்பு”
பிரணவி சலித்துக்கொண்டாள். அதில்
கேசவுக்குச் சிரிப்பு வந்தது.
“ஆனா ஒன்னு, அவளோட ஆசைய அவ்ளோ
ஈசியா அவ விட்டுக்குடுக்க மாட்டா... இப்பிடி தான் அவ எல்.கே.ஜி படிக்கிறப்ப ஒரு இன்சிடெண்ட் நடந்துச்சு... ஸ்கூல்ல
பலூன் உடைக்குற காம்படிசன் வச்சாங்க... குழந்தைங்க இடுப்புல பலூனைக் கட்டிவிடுவாங்க...
ஒரு சர்க்கிள் போட்டு அதுக்குள்ள நிக்க வச்சிடுவாங்க... ஒருத்தர் இன்னொருத்தரோட பலூனை
உடைக்கணும்.. அதே நேரம் அவங்களோட பலூனை சேஃபா வச்சுக்கணும்... கிருதியோட பலூனை சந்தோஷ்னு
ஒரு பையன் உடைச்சிட்டான்... அவளால அதை மறக்கவே முடியல... ஏதாவது ஒரு கேம்ல அந்த சந்தோஷை
தோக்கடிச்சே ஆகணும்னு தீர்மானமே பண்ணிட்டா.. நெக்ஸ் இயர் யூ.கே.ஜில அதே காம்படிசன்
வச்சாங்க... அதுல கிருதி ஜெயிக்கல... ஆனா அந்த சந்தோஷை தோக்கடிச்சிட்டா... அப்புறம்
தான் அவ நார்மலானா”
அவள் சொல்லி முடிக்கவும் கேசவின்
முகம் மாறிவிட்டது.
“குழந்தையா இருக்கப்பவே குட்டிசாத்தானுக்குப்
புத்திய பாரு... இதுக்கு மேலயும் கிருதி மாறுவானு தோணுதா உனக்கு?” என்று அவனது மனசாட்சி
கேள்வி கேட்க அவனால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை.
அவனது மனதின் ஏதோ ஒரு மூலையில்
பிரக்ருதி மாறுவாள் என ஒட்டிக்கொண்டிருந்த நம்பிக்கை சற்று ஆட்டம் கண்டது.
அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்
பிரணவியை எழுப்பியவன் அவளது கால் தடுமாறியதில் பிசகிவிட்டதா என கேட்டான். இல்லை என்றவளை
அவளது ஃப்ளாட்டுக்கு அழைத்து வந்து விட்டான்.
ஹால் சோபாவில் அமர்ந்து பிரக்யாவோடு
அரட்டை அடித்துக்கொண்டிருந்த பிரக்ருதியின் குரல் அவனது செவியில் விழுந்தது.
“அங்க பாரு சூர்யாவோட கண்ணை...
இந்தக் கண்ணுக்காகவே சூர்யாக்கு ஃபேன் ஆகலாம்” கண்களில் நட்சத்திரம் மின்ன கூறினாள்
பிரக்ருதி.
“ஹலோ! கண்ணைப் பத்திலாம் நீ பேசாத...
எத்தனை சூர்யா வந்தாலும் ஃபகத்தோட கண்ணுக்கு முன்னாடி ஒன்னுமில்ல கிருதி... அவர் நடிக்கணும்னா
டயலாக் பேச வேண்டாம்... கண்ணை காட்டுனாலே போதும்... மகேஷிண்டே பிரதிகாரம் பாத்திருக்கியா?
ஃபகத்தோட கண்ணே பேசும்டி”
“ஃபகத்னா யாரு? நம்ம நஸ்ரியா
ஹஸ்பெண்டா?”
“ஏய் ஃபகத்தை கிண்டல் பண்ணாத”
கடுப்பானாள் பிரக்யா.
“அப்பிடி தான் பண்ணுவேன்... விக்ரம்
மூவி முழுக்க உன் ஃபகத் வந்தாப்ல... ஆனா கடைசி சீன்ல ரோலக்சா வந்து தியேட்டரையே தெறிக்க
விட்டது எங்க சூர்யா தான்மா... அவர் வந்த சீன்ல உண்மையாவே திரை தீப்பிடிச்சுது... நம்பலனா
சோஷியல் மீடியால வந்த இந்த வீடியோவ பாருடி” என்றவாறு பிரக்ருதி தனது மொபைலில் இருந்த
வீடியோவை பிரக்யாவிடம் காட்டினாள்.
அதை பார்த்து முடித்ததும் “தியேட்டர்ல
படம் பாக்க வந்து ஸ்கிரீனை கொளுத்திவிட்டுட்டு ‘திரை தீப்பிடிக்கும்’னு பேக்ரவுண்ட்
சாங் வச்சு வீடியோ போடுறிங்க... இவ்ளோ தான்டி சூர்யா ஃபேன்ஸோட மெச்சூரிட்டி லெவல்”
என்று அவளை எரிச்சல் மூட்டினாள் பிரக்யா.
இருவரும் தங்களது ஆதர்ச நாயகர்களுக்காக
சண்டையிட்டுக்கொள்ள “ஹலோ! ஃபகத்தா சூர்யாவானு அப்புறமா முடிவு பண்ணிக்கோங்க... ஒரு
ஃப்ரெக்னெண்ட் லேடிய தனியா வாக்கிங் அனுப்பி வச்சிட்டு இங்க ஃபகத் பெருசா சூர்யா பெருசானு
சண்டை போடுறிங்க... உங்களை எல்லாம் என்ன பண்ணுறது?” என்று கேட்டபடியே பிரணவியை வீட்டுக்குள்
அழைத்துவந்தான் கேசவ்.
பிரக்யாவும் பிரக்ருதியும் தங்கள்
சண்டையை நிறுத்திவிட்டு “ஏன்? என்னாச்சு?” என்று ஒரே குரலில் கேட்க பிரணவியோ நடந்ததை
அவர்களிடம் கூறவேண்டாமென சைகைமொழியில் கேசவிடம் வேண்டிக்கொண்டாள்.
அவனும் அதை பற்றி பேசாமல் “ஒன்னும்
ஆகல... இருந்தாலும் தனியா விட்டா அவங்க லோன்லியா ஃபீல் பண்ணுவாங்கனு தெரிய வேண்டாமா?
என்ன பொண்ணுங்களோ நீங்க” என்று கிண்டல் செய்துவிட்டு பிரணவியிடம் விடை பெற்றான்.
“நான் வர்றேன் சிஸ்டர்”
அவன் சென்றதும் மூன்று பெண்களும்
அவர்களது அறைக்குள் சென்றுவிட்டனர். உள்ளே பிரவேசித்ததும் பிரணவி கேசவைப் புகழ ஆரம்பித்தாள்.
“எவ்ளோ அருமையான பையன்... நான்
பேசுனத அப்பாக்கு அடுத்து காது குடுத்து கேட்டவன் அவன் மட்டும் தான்... அவனை மேரேஜ்
பண்ணிக்கப்போற பொண்ணு குடுத்து வச்சவ”
“க்கும்! இதுல குடுத்து வைக்குறதுக்கு
என்ன இருக்குதாம்?” என உதட்டைச் சுழித்து நொடித்துக்கொண்டாள் பிரக்ருதி.
“உனக்குப் புரியாதுடி... நம்ம
லைஃப் பார்ட்னர்ஸ் நம்மளோட பேச்சை காது குடுத்து கேக்க மாட்டாங்களானு எத்தனை பொண்ணுங்க
ஏங்குறாங்க தெரியுமா? இவ்ளோ ஏன்? உன் மாமாக்கு எங்க ரிலேசன்ஷிப்ப தவிர பொதுவா என்ன
பேசுனாலும் பெருசா கேக்க பிடிக்காது... ஆனா கிரிஷ் அப்பிடி இல்ல, அவன் இந்தியாக்கு
வந்ததும் பிசினஸ் ஆரம்பிக்கப்போறதா சொன்னான்... நான் எனக்குத் தோணுனதை சொன்னப்ப நீ
ஒரு பொண்ணு, நீ சொல்லுறத நான் ஏன் கேக்கணும்ங்கிற அலட்சியம் அவன் பார்வையில இல்ல...
சோட்டி பத்தி நான் மொக்கை போட்டத கூட அவ்ளோ ஆர்வமா கேட்டான் தெரியுமா? கிரிஷோட லைஃப்
பார்ட்னர் குடுத்து வச்சவ தான்... எங்க இருக்குறாளோ அந்த மகராசி?”
கேசவிற்கு பரிந்து கொண்டு வந்து
நீளமான பிரசங்கம் ஆற்றினாள் பிரணவி. அவள் சொல்வது ஒன்றும் பொய்யில்லை.
பிரணவி ஆசையாக பூங்காவில் மலர்ந்த மலரை பற்றியோ பக்கத்துவீட்டு இந்தியன் ஆன்ட்டியின் நாய்க்குட்டியைப் பற்றியோ பேச்சை ஆரம்பித்தால் போதும்!
“இதெல்லாம் எதுக்கு என் கிட்ட
சொல்லுற நவி?” இது தான் பிருத்வியின் பதிலாக இருக்கும்.
இப்படிப்பட்ட வார்த்தைகளை வெவ்வேறு
சூழல்களில் பிருத்வி அடிக்கடி உதிர்த்து பிரக்ருதியே கேட்டிருக்கிறாள்.
ஆனால் கேசவ் அப்படி இல்லை போல.
“அது என்னமோ உண்மை அண்ணி... அவரோட
அருமை பக்கத்துல இருக்குறவங்களுக்குத் தான் புரியல” என பூடகமாக பிரக்ருதியைப் பார்த்தவாறு
கூறினாள் பிரக்யா.
அவள் முறைக்கவும் “முறைச்சா மட்டும்
எதுவும் மாறிடாதுடி... லவ்டுடேல மூவில ராதிகா மேம் சொல்லுற டயலாக் தான், கவனமா கேட்டுக்க...
சில விசயம்லாம் லைஃப்ல ஒரு தடவை போச்சுனா திரும்ப கிடைக்கவே கிடைக்காது” என்று மொட்டை
கட்டையாக கூறி பேச்சை வேறு திசை பக்கம் திருப்பிவிட்டாள்.
அவளும் பிரணவியும் வேறு ஏதோ அரட்டையில்
ஆழ்ந்துவிட பிரக்ருதியின் மனமோ கேசவ் தன்னை விட்டு போய்விடுவானோ என்ற பயத்தில் மூழ்க
துவங்கியது.
பிரணவி கூறியது போல தனது உளறல்களை கேட்கும் பொறுமை கேசவிற்கு மட்டுமே உள்ளது என்பது புரிந்தது. அன்பிற்குரியவர்களின் பேச்சையும் செயலையும் ரசிக்கும் மனப்பான்மை அனைவருக்கும் வாய்க்காது. அப்படி வாய்க்கப்பெற்றவர் உங்கள் வாழ்க்கைத்துணையாக கிடைத்தால் நீங்களும் கொடுத்து வைத்தவர்களே!
- Get link
- Other Apps
Comments
Super good going
ReplyDelete