ஜூன் மாத நாவல் - இது வானின் பூபாளம்

Image
  NM tamil novel world தளத்தில் நேற்று முதல் ஆரம்பம். குடும்ப அரசியலால் பிரியும் வான்மதியும் பூபாலனும் இணைவார்களா? தெரிந்துகொள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! இது வானின் பூபாளம் – Tamil Novels | Nithya Mariappan

அத்தியாயம் 10

 

அத்தியாயம் 10

எனக்குச் சினிமா பைத்தியம் உண்டு. சினிமா நட்சத்திரங்களைப் போல பெயரும் புகழும் பெற்று வாழவேண்டுமென ஒரு காலத்தின் நான் கனவு கண்டிருக்கிறேன். ஆனால் அக்கனவுக்கு அடிப்படையான நடிப்பு திறமை என்னிடம் இல்லை என்பதை அறிந்துகொண்ட நேரத்தில் நான் நன்றாக நடனம் ஆடுகிறேனே, இதை எப்படி மறந்தேன் என என்னை நானே கேட்டுக்கொண்டேன். நம்மில் பலருக்கு இந்தப் பிரச்சனை உண்டு. யாரோ ஒருவரைப் போல ஆகவேண்டுமென்ற ஆர்வத்தில் நமது திறமையை கண்டறிவதில் நாம் கோட்டை விடுகிறோம்.

                                                         இப்படிக்கு சந்திரிகை

சந்திரிகா சென்னையின் பழம்பெருமைமிக்க கல்லூரிகளில் ஒன்றான மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்துவிட்டாள்.

மதியம் வரை மட்டுமே வகுப்புகள் இருக்கும். மதியத்திலிருந்து மாலை வரை சர்டிபிகேட் கோர்ஸ் எனப்படும் டிப்ளமோ படிப்புக்கான வகுப்புகளில் கிராபிக்ஸ் டிசைனிங்கை அவள் தேர்ந்தெடுத்திருந்தாள்.

வீட்டிற்கு வர தாமதமாகிறதே என்ற சாந்தமதியின் அங்கலாய்ப்பைவெறும் டிகிரிய மட்டும் வச்சுக்கிட்டு ஒன்னும் பண்ணமுடியாது... இந்த மாதிரி சைட்ல நிறைய கோர்ஸ் பண்ணணும்... அப்ப தான் டிகிரிக்கு மரியாதைஎன்று சொல்லி வாயடைத்துவிட்டார் சட்டநாதன்.

அவரிடம் அறை வாங்கிய நாளிலில் இருந்து சர்வேஷ் சந்திரிகாவின் பக்கமே வருவதில்லை. அவனிடமிருந்து சந்திரிகாவின் சமூக வலைதளம் மற்றும் மின்னஞ்சல் விவரங்களை வாங்கி அவளிடமே கொடுத்துவிட்டார் சட்டநாதன். வங்கிக்கணக்கையும் சந்திரிகாவே பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டார்.

ஏன் என்றவளிடம் சர்வேஷ் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டார். சந்திரிகாவும் அதற்கு மறுபேச்சு பேசவில்லை.

சமூக வலைதளத்தில் பிரபலம் என்பதால் முதலில் அவளிடம் பேசத் தயங்கிய வகுப்பு மாணவர்கள் அவளது இனிமையான குணத்தால் சீக்கிரமே நட்பாகிவிட்டனர்.

அதில் முக்கியமானவன் சந்தோஷ். அவன் சந்திரிகாவிடம் அறிமுகமான விதமே அலாதியானது.

சந்தோஷ் பி.டி.எஸ் ஆர்மியில் தீவிரமாக இருப்பவன். ஆர்மி என்றதும் இராணுவம் என எண்ணிக்கொள்ளாதீர்கள்.

தென்கொரியாவைச் சேர்ந்த பி.டி.எஸ் என்ற ஏழு ஆண்களைக் கொண்ட இசைக்குழுவின் ரசிகர்கள் தங்களைபி.டி.எஸ் ஆர்மிஎன்று சொல்லிக்கொள்வார்கள்.

அவர்களில் சந்தோஷும் ஒருவன். பேக்கிலிருந்து பி.டி.எஸ் ஜிமினின் போட்டோகார்ட் விழுவதைக் கண்டுகொள்ளாமல் சென்ற சந்தோஷிடம் அதை எடுத்துக்கொடுத்த சந்திரிகா அவனும்பர்பிள் ஆர்மியா?’ என்று கேட்க அப்படி ஆரம்பித்தது தான் அவர்களின் நட்பு.

அதன் பின்னர் இருவரும் கே-பாப் பற்றி அடிக்கடி பேசிக்கொள்வார்கள். இருவரும் சேர்ந்து அடிக்கடி ரீல்ஸ்களிலும் தென்பட அது சாந்தமதிக்கும் சர்வேஷுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது.

போதாக்குறைக்குச் சட்டநாதனிடமும் சந்தோஷ் இனிமையாகப் பழக இருவரும் அவனைப் பார்த்தாலே சாபமிடாதக் குறையாகத் திட்டித் தீர்ப்பார்கள்.

இப்படியே அவர்களின் நட்பு நீடித்தால் தங்களின் வளமான எதிர்காலம் கேள்விக்குறியாவது திண்ணம் என நினைத்தவர்கள் சட்டநாதனுக்கும் சந்திரிகாவுக்கும் தெரியாமல் நரேஷுக்குத் தகவல்களைக் கூறினார்கள்.

அவனும் தற்போது சந்திரிகாவுடன் ரீல்சிலும் யூடியூப் வீடியோக்களிலும் சந்தோஷை எரிச்சலுடன் கவனித்து தானே வருகிறான்.

காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தள்ளிட்டுப் போன கதையால்ல இருக்குஎன்று சொல்லி அவனது அன்னை பரமேஷ்வரி வேறு ஒருபக்கம் அவனை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்ப்பார்.

இவனால சொத்துபத்தை மீட்டுருவோம்னு நினைச்சேன்... ஹூம், எதுவும் நடக்காது போலயேஎன்று பெருமூச்சுவிட்டு நரேஷை எரிச்சலுக்குள்ளாக்குவார் அவனது தந்தை நடேசன்.

அனைத்தையும் பொறுத்துக் கொண்டவனால் பொறுக்க முடியாத சம்பவம் ஒன்று விரைவிலேயே நடந்தேறியது.

அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கே-பாப் மேளாவில் கலந்துகொள்ள சந்தோஷுடன் சென்றிருந்தாள் சந்திரிகா.

கொரிய தூதரகமும், ‘தி கே வேவ்’ என்ற அமைப்பும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்ச்சியில் இசை, நடனம், நாடகம் என அனைத்திலும் கலந்துகொள்ளலாம். சுமார் நானூறுக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் வந்திருந்தனர்.

அதில் கலந்துகொள்ள சந்தோஷோடு சேர்ந்து சந்திரிகாவும் விண்ணப்பித்திருந்தாள்.

அங்கே கிடைக்கும் அனுபவங்களை வ்ளாக் எடுக்கவும் அனுமதி வாங்கியிருந்தாள். இருவரும் கல்லூரியில் சென்று இறங்கிய போது சந்தோஷ் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துவிட்டான்.

காரணம் அங்கே வந்த பங்கேற்பாளர்களில் அவன் மட்டுமே ஆண். மற்ற அனைவரும் பெண்கள்.

இதுல என்னடா தயக்கம்? நம்ம ஊர்ப்பசங்கள்ல சிலர் கொரியன் சீரிஸ், கே-பாப்பை மோசமான கண்ணோட்டத்தோட பாக்குறாங்க... கொரியன் சீரிஸ்ல எது ஆம்பளை எது பொம்பளைனே தெரியாதுனு எங்கண்ணனே கிண்டல் பண்ணுவான்... இவ்ளோ ஏன், பி.டி.எஸ் ஜுங்கூக்கைகே (GAY)’னு சொல்லி கிண்டல் பண்ணுவாங்க... நம்ம ஊர்ப்பசங்களுக்கு எப்பவுமே கட்டுமஸ்தான உடம்பும், தாடி மீசையுமா இருக்கிறவன் தான் ஆம்பளைனு ஒரு எண்ணம் உண்டு... ஆனா கொரியன் ஐடல்ஸ் மொழுமொழு ஃபேஸ், மேக்கப்னு ஃப்ளவர் பாய்கல்சர்ல வாழுறவங்க... கரடுமுரடா இருக்குறது தான் ஆண்மைனு நினைக்குறவங்களுக்கு கியூட்டா மென்மையா நடந்துக்கிற ஆணைப் பிடிக்காதுடா... அந்த மென்மையான ஆணை பெண்கள் ரசிக்கிறதையும் அவங்களால ஜீரணிக்க முடியாது... இப்பிடிப்பட்ட ஆளுங்க கே-பாப் பிடிக்கும்னு ஒரு பையன் சொல்லிட்டான்னா அவனைப் பையனாவே மதிக்கமாட்டானுங்க... அவனோட செக்சுவாலிட்டிய சந்தேகப்படுவாங்க... இந்த மாதிரி ஆளுங்களால பசங்க கே-பாப், கே-ட்ராமாஸ் பிடிக்கும்னு பொதுவெளில சொல்ல யோசிக்கிறாங்க... அப்புறம் எப்பிடி கொரியன் மேளால பசங்க கலந்துப்பாங்க சொல்லு

சந்திரிகா கேட்ட கேள்வி நியாயமாகவே தோன்றியது சந்தோஷுக்கு. அவனுமே கொரியன் ஐடல்களை ரசித்தபோது இம்மாதிரி கேலிக்குள்ளானானே!

சந்திரிகாவின் விளக்கத்தில் தயக்கம் அகன்று அவளோடு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்குக்குள் நுழைந்தான்.

அங்கே வந்திருந்த தி கே வேவ் அமைப்பினர்களில் ராப்பர்களும் அடங்குவர். இந்தியாவுக்கான தென்கொரிய தூதுவர் உரையாற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.

முன்பே அனுமதி வாங்கியிருந்ததால் சந்திரிகா அங்கே நடப்பதை கேமராவில் படம்பிடிக்க ஆரம்பித்தாள்.

மேடையில் கே-பாப் பாடல்கள் ஒலிக்க பங்கேற்பாளர்களான மாணவிகள் வரிசையாக நடனம் ஆடினார்கள். சிலர் கே-பாப் பாடல்களைப் பாடி கைதட்டல்களை வாங்கினர்.

சந்தோஷின் முறை வந்த போது அவன் மேடையேற தயங்கினான்.

அவனது தயக்கத்தை உணர்ந்த சந்திரிகா தன்னருகே அமர்ந்திருந்த மாணவியிடம் வ்ளாகை படம்பிடித்துத் தரமுடியுமா என கேட்டாள்.

ஒய் நாட் சிஸ்? குடுங்க... நீங்க உங்க ஃப்ரெண்ட் கூட பெர்ஃபார்ம் பண்ணுங்க

அந்த மாணவிக்கு நன்றி கூறிவிட்டுச் சந்தோஷூடன் மேடைக்கு வந்தாள்.

மேடை முன்னே இருந்த தி கே வேவ் குழுவினரிடம்ப்ளாக் பிங்க்இசைக்குழுவின்ஃப்ளவர்ஆல்பத்திற்கு ஆட விரும்புவதாக கூற பாடலும் பின்னணியில் ஒலித்தது.

ப்ளாக்பிங் கே-பாப் குழுவின் ஐடல் ஜிஸோ அந்தப் பாடலுக்குப் பூ வடிவில் இரு கைகளையும் விரித்து மூடி ஆடும் அசைவு சமீபத்தில் தான் இணையத்தில் மிகவும் பிரபலமாகிவிட்டிருந்தது. அதை சந்தோஷுடன் சேர்ந்து ஆடினாள் சந்திரிகா.

கீழே அமர்ந்திருந்த மாணவிகள் கரகோசம் எழுப்பி அளித்த உற்சாகம் இருவருக்குள்ளும் புத்துயிரைப் பாய்ச்சியது.

அடுத்து பி.டி.எஸ்சின்பெர்மிசன் டு டான்ஸ்ஆல்பம் ஒலிக்க துள்ளலாக நடனமாடினர் இருவரும்.

நடனத்திற்கு பிறகு தி கே வேவ் குழுவினரின் கொரியன் இசை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ரேண்டமாக ஒலித்த கே-பாப் பாடல்களுக்கு வந்திருந்த பங்கேற்பாளர்கள் நடமாடினார்கள்.

விண்ணப்பத்தோடு கட்டணம் செலுத்தியிருந்ததால் மதியவுணவு அங்கேயே கொடுத்தார்கள்.

கிம்பாப், சூஷி, ரேமன் என கொரிய உணவு வகைகளைச் சுவைத்து மகிழ்ந்தனர் நண்பர்கள் இருவரும்.

ஒரு நிகழ்வு விடாமல் அனைத்தையும் வ்ளாகாக படம்பிடித்த சந்திரிகா நிகழ்ச்சியின் முடிவில் கொடுத்த அறிவிப்பில் கவனமானாள்.

தி கே வேவ் அமைப்பு இந்தியளவில் கொரியன் இசைக்குழுவுக்கான போட்டி ஒன்றை நடத்தவிருக்கிறது. அதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் பத்து நாட்களில் தங்கள் குழுவின் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாமாம்.

சந்திரிகாவுக்கும் சந்தோஷுக்கும் அதில் கலந்துகொள்ள ஆசையாக இருந்தது.

இது உங்களுக்கு கிடைச்சிருக்குற பெஸ்ட் ஆப்பர்சூனிட்டி... தவறவிட்டுடாதிங்க... யாருக்குத் தெரியும், நாளைக்கே உங்கள்ல ஒருத்தர் ஷ்ரியா லெங்கா, ஆர்யா மாதிரி கே-பாப் ஐடலா மாறலாம்... ஆல் த பெஸ்ட்

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கொடுத்த உத்வேகத்தால் கண்டிப்பாக போட்டியில் கலந்துகொள்ளும் எண்ணத்தோடு சந்தோஷும் சந்திரிகாவும் அவளது காரில் வீட்டுக்குக் கிளம்பினார்கள்.

சந்தோஷை அவனது வீட்டில் இறக்கிவிட்டாள் சந்திரிகா.

நான் இங்கயே இறங்கிக்கிறேன் சந்து... எங்க அண்ணி பாத்தா திட்டுவாங்க

பம்மியபடியே இறங்கி நடந்து செல்பவன் மீது பரிதாபம் எழுந்தது சந்திரிகாவுக்கு. பாவம்! பெற்றோரை இழந்துவிட்டதால் அவனது அண்ணனின் குடையின் கீழ் வாழுகிறான். அண்ணியின் தீச்சொற்களில் அவ்வபோது தீக்குளிக்க வேண்டிய கட்டாயம் நேர்வதாகச் சொல்லி மனம் வருந்துவான்.

அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியாய் கே-பாப் இசையை விரும்பியவன் இப்போது அதற்கு பெரும் ரசிகனாகிவிட்டான்.

சந்திரிகா காரைக் கிளப்பினாள். வீட்டுக்கு வந்து சேர்ந்தவளிடம் சட்டநாதன் மேளா எப்படி இருந்தது என விசாரித்தார்.

சந்திரிகா அவரிடம் நடந்ததை சொன்னபடியே வீடியோவை எடிட் செய்துசாரங் இஸ் இன் த ஏர்என்ற தலைப்போடு அவளது யூடியூப் சேனலில் பதிவேற்றினாள்.

ஆம்பளை பையன் கூட இப்பிடி நாள் முழுக்க ஊர் சுத்துனா நம்ம சொந்தக்காரங்க நம்மளை பத்தி தப்பா பேசுவாங்கஎன்ற சாந்தமதியின் முணுமுணுப்பு சட்டநாதனின் முறைப்பில் அடங்கிவிட்டது.

ஆனால் சர்வேஷ் சும்மா இருக்கவில்லை. தங்கையும் சந்தோசும் பழகுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனோடு சேர்ந்த நாளில் இருந்து தங்கை முன்பு போல ரீல்ஸ் போடுவதில்லை என்ற குறை அவனுக்கு.

வங்கிக்கணக்கை வேறு தந்தை அவளின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்ட கடுப்பு. இப்படியே போனால் அவனும் சரிதாவும் கபிள் வ்ளாகர் சேனல் ஆரம்பிக்க வேண்டிய முன்பணத்தை எப்படி திரட்டுவான்?

.டி கம்பெனி ஊழியத்தைக் காதலிக்காகச் செலவளித்துவிட்டு தங்கையின் பணத்தில் மஞ்சள் குளித்த நினைவுகள் எல்லாம் இனி வெறும் நினைவுகள் மட்டும் தானா என்ற எரிச்சல் அவனுக்கு.

உடனே தங்கை பதிவேற்றிய வீடியோவின் இணைப்பை நரேஷுக்கு வாட்சப் செய்தான். அவனால் மட்டுமே தங்கையைக் கட்டுப்படுத்தி தங்கள் வழிக்குக் கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கை.

இதை பாரு... நீ கட்டிக்கப்போறவ வேற ஒருத்தன் கூட ஆட்டம் போடுறா... அதை கண்டிக்காம நீ கையை கட்டிக்கிட்டு உன் வீட்டுல உக்காந்திருக்க

வாட்சப்பில் வந்த செய்தியைக் கண்டதும் நரேஷ் கொதித்துப்போனான். கொதிப்போடு கொதிப்பாக அவன் ஒரு திட்டமும் தீட்டினான். அதற்கு சாந்தமதியும் சர்வேஷும் துணை போவார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?

*****

ஹூக்சோக் பகுதி, டொங்ஜக் மாவட்டம், சியோல்...

ஹூக்சோக் பகுதியில்மார்க் ஹில்ஸ்எனப்படும் இடத்தில் மூன்றடுக்கில் கண்ணாடியால் இழைக்கப்பட்ட ஆடம்பர பங்களா அது.

பங்களாவின் முன்னே இருந்த நீச்சல்குளத்தில் நீந்தி களைப்பைப் போக்கிக்கொண்டிருந்தான் லீ ஹோ சூக்.

தண்ணீரின் குளிர்ச்சியோ, வானில் வலம் வந்த நிலவொளி கொடுத்த குளிர்ச்சியோ அவனுக்குள் மையம் கொண்ட வெம்மையைத் தீர்க்கவில்லை. காரணம் அவனது பழைய காதலி ஹனாவுடன் நிகழ்ந்த வாக்குவாதம். இருவரும் பிரிந்து ஓராண்டு கழிந்துவிட்டது.

முக்கியமான வேலை காரணமாக உதவியாளனோடு ஹோட்டலுக்குச் சென்றவன் அவளைக் காண நேர்ந்தது.

புதிய காதலனுடன் வந்திருந்தவள் லீஹோவை எள்ளலாக ஏறிட்ட விதம் அவனுக்குள் எரிமலையைப் பொங்க வைத்தது.

உனக்கு வேற லவ் எதுவும் அமையல போல... காதல் சுயமரியாதை உள்ள வியாதி... தன்னை மதிக்காதவனை அது கண்டுக்காது

கிடைத்த இடைவெளியில் நக்கலாகச் சொல்லிவிட்டு நகர்ந்த ஹனாவின் கழுத்தை நாகரிகம் கருதாமல் நெறித்துவிடலாமா என கைகள் பரபரக்க ரசாபாசம் ஆகும் முன்னர் உதவியாளன் வந்து லீஹோவை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டான்.

அந்த ஆத்திரத்தைத் தீர்க்க தான் இந்த இரவுநேர நீச்சல்.

தீயாய் எரிந்த உடலை தண்ணீர் குளிர்விக்கலாம். ஆனால் எரிமலையாய் வெடிக்கும் மனதை யார் குளிர்விப்பது?

பாலொளியாய் வீசிய நிலவொளியில் வோல்க்வாங்கின் ஞாபகம் அனிச்சையாக வந்து போனது லீ ஹோ சூக்கிற்கு.

அவள் சுதாரித்துவிட்டாள். மீண்டும் அவளைத் தனது கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வர ஏதாவது செய்தாக வேண்டுமென மூளைக்குள் ஒரு எண்ணம் வண்டாய் குடைந்தது.

சட்டங்கள், கார்பரேட் விதிமுறைகளை எல்லாம் பேச ஆரம்பித்துவிட்டாள். இனி அவளைத் தர்க்கரீதியாக வளைப்பது என்பது இயலாத காரியம். கொஞ்சம் உணர்வுரீதியாக விளையாடவேண்டுமென முடிவு செய்தபடியே நீச்சல்குளத்திலிருந்து வெளியேறினான் லீ ஹோ.

பாத்ரோபைக் கட்டிகொண்டு வீட்டுக்குள் நுழைந்தவனுக்குச் சமையல் நிபுணரின் கைமணத்தில் இரவுணவு ருசியாக அமைந்துவிட நன்றாக சாப்பிட்டான்.

சாப்பாட்டின் நடுவே ஒரே நேரத்தில் பழைய காதலி ஹனாவின் ஞாபகமும் வோல்க்வாங்கின் ஞாபகமும் வந்தது.

நீ நினைக்கிற மாதிரி என்னால ஒரு வட்டத்துக்குள்ள வாழமுடியாது லீஹோ... எண்டர்டெயின்மெண்ட் இண்டஸ்ட்ரிய விட எனக்கு ஹோட்டல் இண்டஸ்ட்ரில தான் ஆர்வம் அதிகம்... நான் அதுல தான் இன்வெஸ்ட் பண்ண விரும்புறேன்

இந்தக் காரணம் தான் அவர்களின் பிரிவுக்குப் பிள்ளையார்சுழி போட்டது. வாக்குவாதங்கள் வளர வளர காதல் தேய்ந்தது.

கடைசியில் இல்லாமலே போய்விட இருவரும் பிரிந்தார்கள். அதில் லீஹோவின் தந்தைக்கு ஏகவருத்தம்.

தென்கொரியாவின் பெரும்பணக்காரர்களில் ஒருவரின் மகளை மகன் மணந்தால்தான் கௌரவம் என எண்ணியிருந்தவருக்கு அவர்களின் காதல் முறிவு பேரதிர்ச்சி.

ஆனால் லீஹோ அதற்காக வருந்தவில்லை. காதலி இல்லாவிட்டால் உலகில் வேறு பெண்களா இல்லை?

அப்படியே இலகுவாழ்க்கையில் இணைந்தவனுக்கு கையைச் சொடுக்கியதும் பெண்கள் கிடைத்தார்கள்.

 அப்படியே பழகிப்போனவனுக்கு வோல்க்வாங்கை தனது விருப்பத்திற்கு வளைத்துவிடும் எண்ணம் எப்படி மாறும்?

அதை பற்றி யோசித்தவாறு தொலைக்காட்சியை ஆன் செய்தவன் அதில் வந்த செய்தியைப் பார்த்ததும் மூளையில் திட்டமொன்று உதயமாக உடனடியாக உதவியாளனின் எண்ணுக்கு அழைத்தான்.

ப்ளாக் ஆலீவ் ட்ரெயினிசோட மெடிக்கல் கண்டிசன் அடங்குன ரிப்போர்ட்ஸ் எல்லாம் நாளைக்கு என் டேபிளுக்கு வரணும்

அவனுக்குக் கட்டளையிட்டுவிட்டு அழைப்பைத் துண்டித்தவனின் இதழ்கள் வில்லத்தனமான சிரிப்பில் வளைந்தன.

இனிமே நீ என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது க்வாங்... எந்தச் சட்டத்தைக் காரணமா சொல்லி என்னை வார்ன் பண்ணுனியோ அதே சட்டத்தை வச்சு உனக்குச் செக் வைக்கிறேன்.... இந்த தடவை நீ என் முன்னாடி பணிஞ்சு தான் ஆகணும்

குயுக்தியுடன் சொன்னவன் கண்ணாடி ஸ்லைடிங் டோர்கள் அதிரும் வண்ணம் நகைத்தான்.

Comments

புத்தக வெளியீடு அறிவிப்பு

உன்னில் இதயம் அளாவுதே, மதுரமாய் நின் காதல், ஒரு காதலும் சில கவிதைகளும், அன்பனின் ஆரபி - இந்த நான்கு நாவல்களும் இப்போது அருணோதயம் பதிப்பகத்தில் கிடைக்கும். வாங்க விரும்புகிறவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்
உறவுகளால் இணைந்து உறவுகளால் பிணையும் சங்கவி - சரபேஸ்வரனின் காதல் கதை - குடும்ப நாவல்

Follow this blog for story Updates - என்னுடன் இணைந்திருங்கள் மக்களே!

Followers

Nithya Mariappan Audio Novels

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்
யாவும் நீயாக மாறினாய் - புத்தம் புது முழு நாவல் - நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள் சேனலில்

Copyright ©️ 2018 - 2025 Nithya Mariappan. All rights reserved .

This blog is managed by Nithya Mariappan. All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this blog will result in immediate legal action against the person concerned.