அலைவரிசை 16
- Get link
- Other Apps
“உங்களுக்கு யாரோடவாச்சும்
மனக்கசப்பு வந்து அவங்க உங்களை வார்த்தையால ஹர்ட் பண்ணிட்டாங்கனா உடனே அதுக்குப் பதிலா
நீங்க ரியாக்ட் பண்ணணும்னு அவசியமில்ல. ஏன்னா அப்ப நீங்களும் கோவத்துல இருப்பீங்க.
அப்ப உங்களுக்குக் கன்னாபின்னானு யோசனை வரும். உடனே ரியாக்ட் பண்ணாம என்ன செஞ்சா உங்களோட
மைண்ட் அந்தப் பிரச்சனையில இருந்து வெளிய வரும்னு நினைக்கிறிங்களோ அதை செய்யுங்க. உங்களுக்கு
மியூசிக் பிடிக்கும்னா அதை கேளுங்க. நல்லா சாப்பிட பிடிக்கும்னா வயிறு முட்ட சாப்பிடுங்க.
எதையாச்சும் செஞ்சு உங்க மனசுல இருக்குற கோவத்தை வடிய வைங்க. அப்புறம் பொறுமையா யோசிச்சு
பாத்தா இந்த சின்ன விசயத்துக்காகவா இவ்ளோ கோவப்பட்டோம்னு நீங்களே யோசிப்பிங்க”
-கிருதியின்
கிறுக்கல் மொழிகள்
“கண்டிப்பா ஏ.ஜி.எம்ல அவன் இருந்தே
ஆகணும்னு என்ன கட்டாயம் கமல்? நம்ம ஷேர்ஹோல்டர்சுக்கு நிலமைய புரிய வைப்போம்” என்றபடி
மடிக்கணினியை டீபாய் மீது வைத்தார் பத்மானந்த்.
“வாய்ப்பில்லண்ணா... உங்களுக்கே
தெரியும், அவன் தான் மேஜர் ஷேர்ஹோல்டர் அண்ட் அந்த கம்பெனியோட இண்டிபெண்டண்ட் டைரக்டரும்
கூட... அவன் இல்லாம ஏ.ஜி.எம் நடத்துறது இஸ் நாட் பாசிபிள்” என்றார் கமலானந்த்.
“நான் ஒரு ஐடியா சொன்னா தப்பா
நினைக்க மாட்டிங்களே பெரியப்பா?”
மெதுவாய் அவர்களின் பேச்சில்
மூக்கை நுழைத்தான் சரண்.
“நீ சொல்லு ராஜா... உன் ஐடியா
எல்லாமே பெர்ஃபெக்டா தான் இருக்கும்” என அவனை ஊக்கினார் பத்மானந்த்.
“நீரவோட ஷேர்ஸ் இன்னும் நம்ம
ஃபேமிலியில யாருக்கும் அலாட் பண்ணாம இருக்கு... அதை உங்க பேருக்கு மாத்திட்டா ஏ.ஜி.எம்ல
பிரச்சனை வராதுனு தோணுது”
பத்மானந்த் மறுப்பாக தலையசைத்தார்.
“கார்கி குரூப் ஆப் கம்பெனிசோட
சேர்மன் அண்ட் மேனேஜிங் டைரக்டர்ங்கிற பொறுப்பே எனக்கு மூச்சு முட்டுது சரண்... நீரவோட
பொறுப்பையும் என்னால ஏத்துக்க முடியாது... அவனோட மேனேஜ்மெண்டுக்கு கீழ இருந்த டெலிகாம்
கம்பெனிய இப்ப நீ தானே கவனிச்சிக்கிற... சோ அந்த ஷேர்ஸை உனக்கு அலாட் பண்ணுனா தான்
சரியா இருக்கும்”
பத்மானந்த் தனது முடிவை கூறியதும்
தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்
மறைந்திருந்தன.
தமையன் எழுந்து சென்றதும் சரணைத்
தனியே அழைத்துச் சென்றார் கமலானந்த்.
“சபாஷ்டா! நான் நினைச்சதை விட
நீ வேகமா இருக்குற சரண்... மொத்த கார்கி குரூப் கம்பெனிசோட ஷேர்ல இருபத்தைஞ்சு சதவிகிதம்
ஷேர் இப்ப நம்ம கையில” என தோளில் தட்டி மகனை பாராட்டினார் அவர்.
“ப்ச்! இப்பவும் பெரியப்பா கையில ட்வென்ட்டி பர்சென்ட் ஷேர் இருக்குப்பா... அதை மறந்துடாதிங்க” என எச்சரித்தான் சரண்.
“அவர் கிட்ட சாமர்த்தியமா பேசி
அவரைக் குழப்பி அதையும் நம்ம கைவசம் கொண்டு வர்றது என் பொறுப்பு சரண்... மொத்த கார்கி
குரூப்புக்கும் ஒரே ஒரு சேர்மன் அண்ட் மேனேஜிங் டைரக்டரா உன்னை உக்கார வைக்குறேன்டா...
இதை என் சபதம்னு எடுத்துக்க”
இருவரும் கொய் மீன்கள் குளத்தினருகே
நின்று பேசுவதை சற்று தொலைவிலிருந்து கேட்டுவிட்டார் சுசித்ரா.
அவர் மனம் வேதனையுற்றது. இந்த
கார்கி குழுமத்தை ஆரம்பித்த அவரது தந்தை முதன்மை தொழிலாக செய்தது துணி ஏற்றுமதி தான்.
பாலியஸ்டர் துணியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ஈட்டிய லாபத்தில் பல்வெறு துறைகளில்
கால் பதித்தவர் கார்கி குழுமத்தின் பங்குகளில் ஐம்பந்தைந்து சதவிகிதத்தை தனது குடும்பத்தினர்
வசமே வைத்திருந்தார்.
இன்று கார்கி குழுமம் வளர்ந்து
டெலிகாம் துறை வரை கால் பதித்த பிறகும் பத்மானந்த் தனது மாமனாரின் பாணியைப் பின்பற்றி
வருகிறார். குடும்பத்தினருக்கு இருக்கும் பங்குகளை வெளியே போகாமல் பார்த்துக் கொண்டார்.
கார்கியின் மறைவுக்குப் பிறகு
அவரிடமிருந்த ஐந்து சதவிகித பங்கு சுசித்ராவின் பெயருக்கு மாற்றப்பட்டு அவரும் நிறுமத்தின்
இயக்குனராக்கப் பட்டார்.
மிச்சமிருப்பது நீரவின் பங்குகள்
மட்டுமே. அதை சரணுக்கு மாற்றம் செய்வதாக பத்மானந்த் கூறும் போதே சுசித்ரா திடுக்கிட்டார்.
“இது சரியில்ல... கண்டிப்பா ஷ்ரவன்
கிட்ட இதை பத்தி சொல்லணும்”
தனது அறைக்கு வந்தவர் அங்கே கமலானந்த்
இருக்கவும் அவரை பார்க்க விருப்பமின்றி வெளியேற எத்தனித்தார்.
“சுசி”
எடுத்த காலை மீண்டும் அறைக்குள்
வைத்து திரும்பியவர் பேசாமல் கணவரை நோக்கினார்.
“நீ பேசமாட்டனு தெரியும்... நாங்க
பேசுனதை நீ கேட்டுட்டனும் தெரியும்... இதை பத்தி வெளிய தகவல் கசிஞ்சா யாருக்குத் தகவல்
சொல்லுறியோ அவனுக்கும் நீரவோட நிலமை தான் வரும்... வீணா உன்னால ஒரு உயிர் போயிடவேண்டாம்”
நயவஞ்சகம் நிரம்பி வழிந்தது கமலானந்தின்
குரலில். அந்த நயவஞ்சகத்தை இதற்கு முன்னரும் பார்த்திருக்கிறார் சுசித்ரா.
அதனால் நேர்ந்த அனர்த்தத்தையும்
அறிவார். இப்போது பங்குமாற்றம் பற்றி ஷ்ரவனிடம் கூறினால் அவனுக்கு ஏதும் ஆகிவிடுமோ
என்ற அச்சம் சுசித்ராவைப் பீடித்தது.
கண்ணை மூடி தமக்கையை மனக்கண்ணில்
கொண்டுவந்தார்.
“உன் அளவுக்கு எனக்குத் தைரியம்
இல்லக்கா... இப்ப என்ன செய்யணும்னு புரியாத நிலமையில நான் இருக்குறேன்... இங்க நடக்கப்
போற அநியாயத்த என்னால தடுத்து நிறுத்தவே முடியாது போலயே”
மனைவியை ஏளனமாகப் பார்த்துவிட்டு
அங்கிருந்து வெளியேறினார் கமலானந்த். அவரது இத்தனை வருடக்கனவு கார்கி குழுமத்தின் தலைமையாக
சரண் உருவெடுக்க வேண்டுமென்பது தான்.
அதற்கு தடையாக யார் வந்தாலும்
அவர்களை தூக்கி வீச தயங்கமாட்டார். சொந்த மனைவியாகவே இருந்தாலும் அவருக்குக் கவலையில்லை.
அவரது கார்பன் காப்பியாக பிறந்த
சரணும் அதிகாரத்தைக் கைப்பற்றும் வெறியில் அவரது சதிகள் அனைத்துக்கும் ஒத்து ஊதிக்
கொண்டிருந்தான். ஒரே நேரத்தில் கணவன் மைந்தன் என்ற இரு உறவுகளையும் அடியோடு வெறுத்தார்
சுசித்ரா.
அதே நேரம் ஷ்ரவனோ பம்பிள் பி
ட்ரக்கின் கல்லாப்பெட்டியில் இருந்த டாலர்களை எண்ணிக்கொண்டிருந்தான்.
அன்று பெரிதாக விற்பனை எதுவுமில்லை.
சோர்வாக இருந்தது. அன்று ஜேக்கப் இல்லாதது வேறு இரு நண்பர்களுக்கும் கூடுதல் சோர்வைக்
கொடுத்தது.
கே.கே ட்ரக்கைக் கிளப்புவதற்கு
தயாராகிக் கொண்டிருந்தான்.
ட்ரக் முன்னே வைத்திருந்த போர்ட்,
சில நாற்காலிகளை மடித்து ட்ரக்குக்குள் வைத்தவன் ஷ்ரவனிடம் கிளம்பலாமா என கேட்டுவிட்டு
ஜேக்கப்பின் வீடு இருக்கும் கட்டர்மில் ட்ரைவை நோக்கி ட்ரக்கை செலுத்தினான்.
அவனருகே அமர்ந்து கொண்ட ஷ்ரவன்
“டுமாரோ பார்ட்டிக்குப் போலாமா கே.கே?” என வினவ
“கண்டிப்பா போகணும் ஷ்ரவன்...
ஜேக்கப் நமக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்குறான்... நம்ம கண்டிப்பா போகணும்... அவனும்
லியானாவும் அவங்க மேரேஜ் பத்தி அனவுன்ஸ் பண்ண தான் இந்த பார்ட்டிய அரேஞ்ச் பண்ணுறாங்கனு
நினைக்குறேன்” என்றான் அவன்.
“ஐ திங் சோ” என்றான் ஷ்ரவன்.
ஜேக்கப்பின் கராஜில் ட்ரக்கை
நிறுத்திவிட்டு இருவரும் கிளம்பிய தருவாயில் ஷ்ரவனின் மொபைல் இசைத்தது.
அழைத்தவள் பிரக்யா.
“சொல்லு பிரகி டார்லிங்” என குறும்பாக
ஆரம்பித்தவன் பிரக்யாவின் விசும்பலில் குழம்பிப்போனான்.
“என்னாச்சு பிரகி? ஏன் அழுற?”
“அண்ணிக்கு திடீர்னு வயிறு வலி
வந்துடுச்சு ஷ்ரவன்... எனக்கு இப்ப என்ன செய்யணும்னு தெரியல”
“டோண்ட் கெட் பேனிக்... நானும்
கே.கேவும் சாக்சனிக்கு வந்துட்டிருக்குறோம்... நீ அவங்களை பயப்படாம பாத்துக்க” என்றவன்
கே.கேவிடம் விவரத்தைக் கூற அடுத்த சில மணித்துளிகளில் சாக்சனி அப்பார்ட்மெண்டை கே.கேவோடு
அடைந்தான்.
பிரக்யா அங்கே பதறிப் போய் இருக்க
பிரக்ருதியோ பிருத்வியின் அன்னை மகிழினியிடம் கர்ப்பஸ்திரிகளுக்கு திடீரென ஏற்படும்
வயிற்றுவலிக்கு கைமருத்துவம் ஏதாவது உண்டா என விசாரித்து அதை தயாரித்துக் கொண்டிருந்தாள்.
கே.கே வீட்டுக்குள் வந்தவன் பிரணவி
வலியில் அழுது கொண்டிருப்பதைக் கண்டதும் இரு பெண்களையும் விளாசியபடியே அவளைக் கையில்
தூக்கிக்கொண்டான்.
“இந்த இடியட்ஸ் ரெண்டும் படிச்சு
என்ன பிரயோஜனம்? கைனகாலஜிஸ்ட் கிட்ட கூட்டிட்டுப் போகாம கிச்சன்ல எதையோ செஞ்சிட்டுருக்காங்க...
டோண்ட் வொரி சிஸ்டர்... மெடிக்கல் சிட்டி டல்லாஸ் ஹாஸ்பிட்டல் தானே... நம்ம போயிடலாம்”
என சொன்னபடியே தரிப்பிடத்தை நோக்கி சென்றுவிட்டான். அவனைத் தொடர்ந்து ஷ்ரவனும் பிரக்யாவும்
ஓடினர்.
அவன் போட்ட கூச்சலில் எரிச்சலுற்ற
பிரக்ருதி அவனுக்குப் பதிலடி கொடுக்க கரண்டியோடு வெளியே வந்த போது அங்கே யாருமில்லை.
“அடப்பாவிகளா! என்னை விட்டுட்டு
மூனும் ஓடிடுச்சுங்க” என காதில் ப்ளூடூத்தை மாட்டியிருப்பதை மறந்து உளறிவிட
“யார் ஓடுனாங்க கிருதி?” என மகிழினி
கேட்கவும்
“யாருமில்ல ஆன்ட்டி... நீங்க
சொன்ன கஷாயத்த போட்டுட்டேன்... அக்கா குடிச்சிட்டிருக்கா... அவளுக்குச் சரியானதும்
கால் பண்ணுறேன்” என அழைப்பைத் துண்டிக்கப் போனாள் பிரக்ருதி.
“ம்ம்... பாத்து கவனமா இருங்க...
என் பிள்ளை இல்லாத நேரம், ஒன்னு கிடக்க ஒன்னை அவ சாப்பிடாம பாத்துக்க... அக்கா கேக்குறாளேனு
கண்டதையும் வாங்கி குடுக்காத... இந்த மாதிரி நேரத்துல அவ சாப்பிடுறது குழந்தையையும்
பாதிக்கும்” என மகிழினி மாமியார் தோரணையில் ஆற்றிய மாபெரும் உரையை வேறு வழியின்றி கேட்டு
அனைத்துக்கும் சரி சரி என்று சொல்லி அவர் அழைப்பைத் துண்டித்ததும் பெருமூச்சுவிட்டாள்
பிரக்ருதி.
“முதல்ல இந்தம்மாவ டிவோர்ஸ் பண்ணுங்கனு
மனோ அங்கிள் கிட்ட சொல்லணும்... இங்க இன்னொருத்தன் வேற கொதிச்சுப் போயிருக்குறான்...
அவன் தண்ணில போட்டாலே பொரியுற அப்பளம்... இன்னைக்கு எண்ணெய்யே கிடைச்சிருக்கு... என்னென்ன
சொல்லி கழுவி ஊத்தப்போறானோ? மவனே! என்னை மட்டும் எதுவும் சொல்லிப் பாரு, இந்த பூமர்
ஆன்ட்டிக்குக் கால் பண்ணி இவன் கிட்ட குடுத்துடுவேன்” என்று கடுகடுத்தபடி வீட்டைப்
பூட்டிவிட்டு ஒரு கேப் பிடித்து மெடிக்கல் சிட்டி டல்லாஸ் மருத்துவமனையை அடைந்தாள்.
அங்கே மகப்பேறு மருத்துவர் பிரணவிக்குப்
பரிசோதனையை முடித்திருந்தார்.
“ஒன்னும் பிரச்சனையில்ல... இது
நார்மலா எல்லா ப்ரெக்னெண்ட் லேடீசுக்கும் வர்ற பெய்ன் தான்... பயப்படுற மாதிரி எதுவுமில்ல”
என அவர் உறுதியளித்தப் பிறகு தான் பிரணவியின் அழுகையும் பிரக்யாவின் நடுக்கமும் குறைந்தது.
அவர்கள் பரிசோதனை முடிந்து வெளியேறிய
போது பிரக்ருதி உள்ளே நுழைந்தாள். அவளைக் கண்டதும் கே.கே முறைத்தான்.
“வெறுங்கையோட வந்திருக்க... எங்க
உலக பிரசித்தி பெற்ற உன்னோட கைமணத்துல தயாரான கஷாயம்? சீக்கிரம் குடு... சிஸ்டருக்கு
எல்லா வலியும் சொடக்கு போடுற நேரத்துல காணாம போயிடும்” என்று அவன் கிண்டல் செய்ய
“போதும் போதும்... வஞ்சப்புகழ்ச்சி
அணியா? இவளோட மாமியார் சொன்னத நான் மட்டும் கேக்கலனு வை, அடுத்த நிமிசம் வேலை விசயமா
அவுட்ஸ்டேசன் போயிருக்குற பிருத்வி மாமாக்குக் கால் போகும்... அதான் நான் அவங்க சொன்ன
கஷாயத்த போட்டேன்” என்றாள் பிரக்ருதி.
“இப்ப அவங்க கேட்டா நீ என்ன பண்ணுவ?”
“அக்கா குடிச்சிட்டானு சொல்லுவேன்”
என்றவளை அழைத்துக்கொண்டு மீண்டும் சாக்சனிக்குத் திரும்பியது கார்.
தரிப்பிடத்தை அடைந்ததும் மீண்டும்
ஒரு முறை நன்றி கூறினாள் பிரக்யா.
ஷ்ரவன் பிரணவியின் கரத்தைப் பற்றி
இறக்கிவிட்டவன் அவளது கரத்தை பிரக்ருதியிடம் கொடுத்தான்.
பிரணவியின் முகம் அழுதழுது சிவந்திருந்தது.
இப்போது தான் நிம்மதியின் அறிகுறி அவளிடம் தென்பட்டது.
மூவரும் அவர்களின் ஃப்ளாட்டுக்கு
சென்றதும் ஷ்ரவனும் கே.கேவும் தங்களது ஃப்ளாட்டுக்குள் நுழைந்தனர். ஷ்ரவனின் மொபைல்
மீண்டும் இசைக்க இம்முறை யார் அழைப்பது என்ற கேள்வியோடு தொடுதிரையைப் பார்த்தவன் அதில்
சுசித்ராவின் பெயரைக் கண்டதும் புருவம் சுருக்கினான்.
கே.கே என்ன செய்கிறான் என எட்டிப்
பார்த்தவன் அவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டதும் அழைப்பை ஏற்றான்.
“சொல்லுங்க, என்ன விசயம்?”
“சரணும் அவரும் ஷேர் ட்ரான்ஸ்ஃபர்
பத்தி மாமா கிட்ட பேசுறாங்க ஷ்ரவன்... டெய்லி அவரை ப்ரெய்ன் வாஷ் பண்ணுறாங்க”
“சோ வாட்? அந்த தொழில் சாம்ராஜ்ஜியத்த
அவங்களே ஆண்டு அனுபவிக்கட்டும்... எனக்கு என்ன வந்துச்சு?”
“என்னப்பா இப்பிடி பேசுற? இங்க
நடக்குற அநியாயத்த உன்னால மட்டும் தான் தடுக்க முடியும்... நீயே அக்கறை இல்லாம பேசுனா
என்ன அர்த்தம்?”
“அக்கறை இல்லைனு தான் அர்த்தம்...
இப்ப ஷேர் ட்ரான்ஸ்ஃபரை தடுத்தா நீரவும் கார்கி ஆன்ட்டியும் திரும்ப வந்துடுவாங்கனு
எனக்கு கேரண்டி குடுங்க... என் உயிரைக் குடுத்தாச்சும் நான் அதை தடுப்பேன்... என் ஃப்ரெண்டே
போய் சேர்ந்துட்டான்... இனிமே அங்க என்ன நடந்தா எனக்கென்ன?”
“ஷ்ரவன்...”
“பேசாதிங்க... என்னமோ நல்லவங்க
மாதிரி பேசுறிங்க... நடந்த எல்லாத்துக்கும் நீங்களும் ஒரு காரணம்... இப்ப நீங்க மனசு
மாறுனதால நான் உங்களை மன்னிச்சிடுவேன்னு நினைக்குறிங்களா? சொந்த அக்கா, அக்கா மகன்
மேல பொறாமைப்பட்டு அவங்களை வீழ்த்தனும்னு வெறியா அலைஞ்சவங்க தானே நீங்க... அவங்க செத்துப்போவாங்கனு
நீங்க எதிர்பாக்கல... செத்ததும் நீங்க திருந்திட்டிங்க... உங்களை திருத்துறதுக்காக
ஒவ்வொரு தடவையும் யாராச்சும் தன்னோட உயிரை குடுக்கணுமா? நீங்க சொன்னபடி கார்கி ஆன்ட்டிக்கும்
நீரவுக்கும் திதி குடுத்ததும் உங்களுக்கு குளிர் விட்டுப்போச்சுல்ல”
“ஏன் ஷ்ரவன் இப்பிடி பேசுற? நீ
என் மகன் மாதிரிப்பா”
அதை கேட்டதும் ஷ்ரவன் சிரித்தான்.
“யூஸ்வலா நீங்க என்னை உங்க கிட்ட
சேலரி வாங்குற எம்ப்ளாயினு சொல்லி மட்டம் தட்டுவிங்க தானே... விடுங்க, யாரும் வேண்டாம்னு
இவ்ளோ தூரம் வந்து தனியா இருக்குறேன்.. என்னை கோவக்காரனா ஆக்காதிங்க... உங்க ஹஸ்பெண்டும்
சரணும் கார்கி குரூப்பை இடிச்சு தரைமட்டமா ஆக்குனா கூட எனக்குக் கவலை இல்ல... அதை விட
பெரிய பொறுப்பு ஒன்னு எனக்கு இருக்கு”
“நீ கேசவ் பத்தி பேசுறியா?”
“ஆமா! ஒரு ஃப்ரெண்டை இழந்துட்டேன்...
இன்னொருத்தனை மீட்குற போராட்டத்துல பாதிகிணறு தாண்டிட்டேன்... உங்க ஃபேமிலி பிரச்சனையால
அவனை என்னால கவனிக்காம இருக்க முடியாது... இப்ப உங்களை விட அவனுக்குத் தான் என்னோட
ப்ரசென்ஸ் தேவை... சோ டோண்ட் கால் மீ அகெய்ன் மிசஸ் கமலானந்த்”
எச்சரித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான்
ஷ்ரவன். சுசித்ராவை படுசிரமப்பட்டு மறந்தவன் மறுநாள் ஜேக்கப் அளிக்கப்போகும் பார்ட்டிக்குத்
தன்னுடன் வருவாயா என கேட்டு பிரக்யாவுக்கு வாட்சப் செய்தான்.
அவள் யோசிக்கும் எமோஜி அனுப்பவும்
“இனிமே ரொமான்ஸ் அது இதுனு என் கிட்ட லெங்தா டயலாக் பேசுவல்ல, அப்ப நானும் இதே மாதிரி
கன்னத்துல கை வச்சு யோசிக்கிற மாதிரி நடிக்குறேன்” என அவன் செய்தி அனுப்ப
“சும்மா உன் கிட்ட விளையாடுனேன்...
அண்ணா கிட்ட பொய் சொல்லணுமேனு பாத்தேன்... ஐ வில் ட்ரை” என பதில் செய்தி பிரக்யாவிடமிருந்து
வந்தது.
“கிருதி கிட்ட ஹெல்ப் கேளு..
அவ உன்னை விட ஸ்மார்ட்... அவளையும் பார்ட்டிக்கு அழைச்சுட்டு வா... ஜேக் அவளை ஸ்பெஷலா
இன்வைட் பண்ண வீட்டுக்கே வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல” என்றான் ஷ்ரவன்.
“அசிஸ்டெண்ட் மேல பாசமாக்கும்...
அவனே வந்து இன்வைட் பண்ணுனா பொய் சொல்லுற வேலை மிச்சம்... பட் கிருதி பார்ட்டிக்கு
வர ஒத்துக்கணுமே” தனது கவலையைக் கூறினாள் பிரக்யா.
“கே.கே வர்றான்னு சொல்லு... ஓடி
வந்துடுவா செல்லக்குட்டி”
ஷ்ரவன் கிண்டல் செய்யவும் முறைக்கும்
எமோஜியை அனுப்பினாள் பிரக்யா.
உடனே சோகமான எமோஜியை அனுப்பியவன்
“இது தான் உண்மை... நீ வேணும்னா அவளை டெஸ்ட் பண்ணி பாரேன்” என்றான்.
அவனிடம் உரையாடி முடித்துவிட்டு
திரும்பியவள் பிரக்ருதி ஒர்க் அவுட் செய்வதற்கான உடையுடன் தயாராகவும் ஷ்ரவன் கூறியது
நினைவில் வர சீண்டிப் பார்க்கத் துவங்கினாள்.
“இப்பலாம் ஒர்க் அவுட் டைமை ஈவ்னிங்குக்கு
ஷிஃப்ட் பண்ணிட்ட போல”
“ஆமா பிரகி... கிரிஷ் ஈவ்னிங்
தான் ஜிம்முக்கு வருவான்” என சாதாரணமாகப் பதிலளித்தபடி தனது போனிடெயிலை இறுக்கினாள்
அவள்.
“அவனுக்காக தான் நீ ஜிம்முக்குப்
போறியா?” கேட்டபடியே அவள் முன்னே வந்தவள் ஆராய்ச்சிப்பார்வை பார்த்தாள்.
பிரக்ருதியோ “பின்ன அங்க இருக்குற
அங்கிள்சை பாக்கவா போறேன்? அவன் என்னோட ஃப்ரெண்ட்... கொஞ்சம் ஹாண்ட்சம்மான ஃப்ரெண்டும்
கூட... ஜிம்முல எந்த மோகினியும் அவனை அடிச்சிடக்கூடாதுனு நான் ஃப்ளாக் கேட் மாதிரி
அவனுக்குப் பாதுகாப்பு குடுக்குறேன்” என்றாள் குறும்பாக.
கண்ணைச் சிமிட்டு விட்டு போனி
டெயில் துள்ள அவள் கிளம்பிச் சென்றுவிட்டாள். பிரக்யாவோ மறுநாள் ஜேக்கப் – லியானாவின்
பார்ட்டிக்குச் செல்ல அவளது உதவி கிட்டுமென்ற மகிழ்ச்சியில் பார்ட்டிக்கு என்ன உடை
அணியலாம் என வார்ட்ரோபில் தனது அகழ்வாராய்ச்சியை ஆரம்பித்தாள்.
- Get link
- Other Apps
Comments
Post a Comment