அலைவரிசை 19
- Get link
- Other Apps
“மனசு எல்லா குழப்பத்துல
இருந்தும் வெளிய வந்ததுக்கு அப்புறம் தான் நம்மளை சுத்தியிருக்குற அழகான விசயங்களை
ரசிக்க முடியும். குழம்புன மனசால பிரச்சனைய மட்டும் தான் உணர முடியும். தெளிவான மனசுக்குத்
தான் அன்பையும் காதலையும் அனுபவிக்கத் தெரியும். தனக்குப் பிடிச்சவங்களை சொந்தமாக்கிக்கணும்ங்கிற
பொசசிவ்னெஸ்சும் தெளிஞ்ச மனசுக்குத் தான் இருக்கும். இப்ப என்னோட மனசு ரொம்ப ரொம்ப
தெளிவா இருக்குறதால தான் இது நாள் வரைக்கும் சாதாரணமா கடந்த எத்தனையோ விசயங்களை இப்ப
என்னால ரசிக்க முடியுது. அதுல முக்கியமானவ கிருதி”
-கே.கேவின்
மனதின் குரல்
ஆளை எடை போடும் பார்வை, கம்பீரமான
வதனம், மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த தோரணை – இவை அனைத்தையும்
ஒருங்கே கொண்டிருந்த சந்திரமௌலியைத் தொடுதிரையில் பார்த்ததும் பிரக்யாவுக்குப் பேச
வார்த்தைகள் வரவில்லை.
“என்னம்மா நீ தான் என் மருமகளாமே...
என் பையன் சொல்லுறான்... உண்மையா?”
சற்று அதட்டினாரோ என ஐயம் கொள்ள
வைத்தது அவரது குரல். பிரக்யாவுக்கு மிரட்சியில் குரல் வரவில்லை. ஆமென தலையை மட்டும்
ஆட்டிவைத்தாள்.
“இவ்ளோ அப்பாவியான பொண்ணு இவனுக்குப்
பொண்டாட்டியா வந்தா சரிப்படாதே... ஷ்ரவன் இந்தப் பொண்ணு வேண்டாம்டா... ஆனந்த் கிட்ட
சொல்லி அவங்க சொந்தத்துல கொஞ்சம் போல்டான பொண்ணா உனக்குப் பாக்க சொல்லுறேன்” என அடுத்த
இடியை இறக்கினார் சந்திரமௌலி.
பிரக்யா அதிர்ச்சியில் ஷ்ரவனையும்
தொடுதிரையும் மாறி மாறி பார்த்தாள்.
கே.கே ஷ்ரவனிடம் “உன் காதலுக்கு
அவர் பாலூத்துறதுக்குள்ள வாயை திறந்து பேசுடா... இல்லனா நீ ட்வென்ட்டி ட்வெண்ட்டி டூவோட
தேவதாஸா சுத்த வேண்டியது தான்” என எச்சரிக்கவே அவனும் “ஏன்பா அவளை மிரட்டுறிங்க?” என்று
பிரக்யாவின் சார்பாக பேச வந்தான்.
“நீ வாயை மூடுடா... உன்னை மாதிரி
அப்பன் பேசு கேக்காம இஷ்டத்துக்கு ஆடுறவனுக்கு இந்த அப்பாவிப்பொண்ணு சரியா வர மாட்டா...
இவளை மேரேஜ் பண்ணிட்டா இஷ்டத்துக்கு ஆட்டம் போடலாம்னு நீ கணக்கு போடுறது தெரியுது மகனே...
ஆனா நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்” என்று மீண்டும் மறுப்புரை வாசித்தார் அவர்.
அப்போது இடையில் புகுந்தான் கே.கே.
“ஹாய் அங்கிள்”
“வாடாப்பா... நீயாச்சும் பொறுப்பானவனா
இருப்பனு நினைச்சேன்... நீயும் அக்கடானு அமெரிக்கால வெகேஷனுக்குப் போன மாதிரி ஜாலியா
இருக்க... என்னமோ சொல்ல வந்தியே... சொல்லு”
“ஷ்ரவனும் பிரகியும் லவ் பண்ணுறாங்க...
நானோ ஷ்ரவனோ இந்தியால நடந்த எதையும் இவ கிட்ட சொல்லல... ஷ்ரவனோட குடும்பத்த பத்தி தெரிஞ்சிக்க
இவளுக்கு உரிமை இருக்கு... ப்ளீஸ், உங்க கண்டிப்பை ஓரந்தள்ளிட்டு ஷ்ரவனுக்காக யோசிங்க”
சந்திரமௌலி அமைதியானார். பின்னர்
எதையோ தீர்மானித்தவராக தொடுதிரையில் தெரிந்த பிரக்யாவிடம் பேச ஆரம்பித்தார்.
“இங்க பாரும்மா, உன்னை பாக்க
அப்பாவியா இருக்கு... அதனால முதல்ல டிஸ்க்ளெய்மர் போட்டுட்டு எங்க ஃபேமிலிய பத்தி சொல்லுறேன்...
உனக்கு எல்லாம் சரினு தோணுச்சுனா உங்க எதிர்காலத்த பத்தி யோசிங்க... இல்லனா ப்ரேக்கப்
பண்ணிட்டு வேற வேலை இருந்தா பாரு” என்றார்.
“சொல்லுங்க அங்கிள்... நான் எல்லாத்துக்கும்
தயாரா தான் இருக்குறேன்”
“எனக்கு ஷ்ரவன் ஒரே பையன்...
என் ஒய்ப் சியாமளாவும் நானும் இவனுக்கு அடுத்து இன்னொரு குழந்தை வேணும்னு யோசிக்கல...
ஏன்னா எங்க அன்பு முழுக்க இவனுக்கே கிடைக்கட்டும்ங்கிற எண்ணம்... ரெண்டு பேரோட அன்பு
செல்லம் எல்லாம் இவனுக்கு மட்டும் தான் கிடைச்சுது...
சியாமா எங்களை விட்டுட்டு போனதுக்கு
அப்புறம் அவளோட அன்பையும் சேர்த்து நானே இவனுக்குக் குடுத்தேன்... இவனும் நல்லபடியா
தான் வளர்ந்தான்... ஆனா இவனுக்குப் பொறுப்புங்கிற ஒன்னு இல்லாமலே போயிடுச்சு... வாழ்க்கையில
தனக்குனு ஒரு வேலை, குடும்பம், வீடு வாசல்னு இருக்கணும்ங்கிற எண்ணம் அவனுக்கு டீனேஜ்லயே
கிடையாது... என் ஃப்ரெண்ட் ஆனந்தோட பையன் நீரவும் இவனும் ரொம்ப குளோஸ் ஃப்ரெண்ட்ஸ்...
அப்புறம் அவனே இவனுக்கு பாஸா
வந்தான்... வீடு, ஆபிஸ்னு எங்க பாத்தாலும் இவனை கண்டிக்க ஆள் இல்லங்கிறதால எடுத்தேன்
கவிழ்த்தேன்னு வாழ ஆரம்பிச்சான்... நான் கண்டிக்கிற வயசை இவன் எப்பவோ தாண்டிட்டான்...
நீரவ் போயிட்டான்னு வேலைய முறைப்படி ரிசைன் கூட பண்ணாம கேசவை அழைச்சிட்டு அமெரிக்காவுக்குப்
போனான்... அங்க இவங்களுக்குனு யாரும் இல்ல... சோத்துக்கு என்ன பண்ணுவோம்னு கூட யோசிக்கல...
இப்பிடிப்பட்டவனை தான் நீ காதலிக்கிற...
உங்க கல்யாணத்துக்கு அப்புறமா
இவன் பொறுப்பில்லாம எடுத்தேன் கவிழ்த்தேன்னு இருந்தா இவனை கண்டிக்க நான் வரமாட்டேன்...
இன்னைக்கு நிலமையில இவன் கையில எந்த வேலையும் இல்ல... இந்தியாக்கு வந்தாலும் பழைய வேலைய
முறைப்படி ரிசைன் பண்ணாம அடாவடியா போனதால ரிலீவிங் ஆர்டர் கிடைக்காது... சோ வேற வேலை
கிடைக்குறதும் கஷ்டம்... இதுக்கு அப்புறமும் நீ இவனை தான் லைஃப் பார்ட்னரா ஏத்துக்கப்
போறியானு யோசி... காதலுக்குக் கண்ணு தான் இல்லனுவாங்க, ஆனா அறிவு இருக்கும்னு நான்
நம்புறேன்.. நீ உன் அறிவை யூஸ் பண்ணு... இதுக்கு மேல சொல்லுறதுக்கு எதுவும் இல்லம்மா...
நான் காலை கட் பண்ணிடுறேன்”
தொடுதிரை இருளானது. பிரக்யாவின்
முகமும் தான். ஷ்ரவன் மொபைலை தனது ஜீன்சின் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.
“கேட்டல்ல, இது தான் என் ஃபேமிலி
வரலாறு... இதை கேட்டதுக்கு அப்புறம் எந்தப் பொண்ணா இருந்தாலும் யோசிப்பா... நீ அப்பிடி
யோசிப்பியோனு பயந்து தான் நான் உன் கிட்ட முழுசா எதையும் சொல்லல பிரகி... எங்கப்பா
சொன்னது ஹன்ட்ரெட் பர்சண்டேஜ் உண்மை... இந்த நிமிசம் எனக்கு என்ன தோணுதோ அதை தான் நான்
செய்வேன்... எனக்கு கேசவ் முக்கியம்னு தோணுச்சு... என்னோட புது பாஸ் என்னை ரிலீவ் பண்ண
மாட்டேன்னு அடம்பிடிச்சான்... அதான் நான் ப்ராப்பரா ரிசைன் பண்ணாம வந்தேன்... இதுக்கு
மேலயும் எனக்கு வாழ்க்கைய பத்தி எந்தக் கவலையும் இல்ல... இதுவரைக்கு கிரிஷ்காக மட்டும்
யோசிச்ச நான் இனிமே உனக்காகவும் யோசிப்பேன்... உன்னை அப்பிடியே விட்டுட மாட்டேன்” என்றவன்
அவள் கரங்களைப் பற்றினான்.
பிரக்யா திருதிருவென விழித்தாள்.
“நான் இந்தியாக்குப் போனதும்
ரிலீவிங் ஆர்டரை எப்பிடி வாங்கனும்னு எனக்குத் தெரியும்... சீக்கிரமே இன்னொரு ஜாபும்
கிடைச்சிடும்” என்றான் அவன்.
கே.கே இவ்வளவு நேரம் அமைதி காத்தவன்
“மௌலி அங்கிள் மிரட்டுற அளவுக்குலாம் ஷ்ரவன் நிலமை மோசமில்ல பிரகி... இந்தியால பேர்
போன ஐ.ஐ.எம்ல மேனேஜ்மெண்ட் படிச்சவனுக்கு பெரிய கன்சர்ன்ஸ்ல ஜாப் கிடைக்கிறது சுலபம்...
சோ உன் ஃபேமிலியில என்ன சொல்லுவாங்களோனு நீ பயப்பட வேண்டாம்” என்றான்.
பிரக்யா வெறுமெனே தலையசைத்தாள்.
“ஏன்டா இப்பிடி ஒருத்தனை லவ்
பண்ணுனோம்னு இருக்குதா பிரகி?”
ஷ்ரவன் கேட்டதும் இல்லை என அவசரமாக
மறுத்தாள்.
“நான் யோசிக்கிறது உனக்குப் புரியல...
நானும் கிருதியும் இப்ப வரைக்கும் எங்களுக்கான புரொஃபசனை அமைச்சுக்க போராடுறோம்...
ஆனா நீ கையில இருந்த வேலைய தூக்கியெறிஞ்சிட்டு வந்து ஃபுட் ட்ரக்ல காசு வாங்கி போட்டுட்டிருக்குற...
ஐ காண்ட் அண்டர்ஸ்டாண்ட் யுவர்செல்ஃப்... மத்தபடி நீ இப்பிடி தான்னு உன்னை ஃபர்ஸ்ட்
டைம் பப்ல பாக்கிறப்பவே நான் புரிஞ்சிக்கிட்டேன்... இதுக்காக நான் யோசிக்கனும்னா நான்
உன்னை லவ் பண்ணிருக்கவே கூடாதுடா” என்றாள்.
“ஷீ இஸ் ரைட்... நாங்க உங்க ஃபேமிலிய
பத்தி தான் தெரிஞ்சிக்க ஆசைப்பட்டோம்... அதை இப்ப தெரிஞ்சிக்கிட்டோம்... காசில்லாதவனை
கட்டிக்க மாட்டேன்னு சொல்ல இவ ஒன்னும் நான் இல்லையே” என்றாள் பிரக்ருதி.
இப்போது ஷ்ரவன் – பிரக்யா இருவரது
முகங்களும் தெளிந்திருந்தது.
“சரி! கிளம்பலாமா?” என கே.கே
கேட்க நால்வரும் காரில் அமர்ந்தனர்.
கார் கிளம்பியதும் கே.கேவும்
பிரக்ருதியும் பேசிக்கொண்டனர்.
“நீ இன்னும் உன்னோட லட்சியத்துல
இருந்து மாறல போல?”
பணக்காரனைத் திருமணம் செய்யும்
அவளது இலட்சியத்தைப் பற்றி கே.கே கேட்டான். ஆனால் பிரக்ருதியோ தனது ஆர்.கே கனவைத் தான்
கூறுகிறான் என்றெண்ணியவளாக
“அது எப்பிடி மாறுவேன்? என் வாழ்நாள்
லட்சியமே அது தான்... எத்தனை தடை வந்தாலும் அதை மட்டும் நான் அடையாம விடமாட்டேன்” என்றாள்
உறுதியாக.
தனது வார்த்தைகளின் வீரியத்தை
உணராமல் அவள் கூறிவிட கே.கேவோ அதை சலிப்போடு கேட்டுக்கொண்டான். அதே வார்த்தைகள் தீவிரத்தோடு
அவன் உச்சரித்துக் குற்றம் சாட்டப்போகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.
நால்வரும் சாக்சனியை அடைந்த போது
அங்கே லியானாவும் ஜேக்கப்பும் அவர்களின் திருமண அழைப்பிதழோடு E15 ஃப்ளாட்டில் காத்திருந்தனர்.
இருவரும் உள்ளே நுழைந்ததும் அழைப்பிதழை
நீட்டினர்.
“ஃபீலிங் ஹேப்பி ஃபார் யூ கய்ஸ்”
என்றபடி இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர் ஷ்ரவனும் கே.கேவும்.
“போத் ஆப் யூ ஷூட் ஹேவ் டு கம்
டு அவர் மேரேஜ்” என லியானா கட்டளையிட
“கண்டிப்பா வருவோம்... நாங்க
இல்லாம எப்பிடி?” என நண்பர்கள் கூற
“நெக்ஸ்ட் கிருதி அண்ட் பிரகிய
இன்வைட் பண்ண போறோம்” என்றனர் லியானாவும் ஜேக்கப்பும்.
பிருத்வி திருமணத்திற்கு செல்ல
அனுமதியளிப்பானா என்ற மாபெரும் கேள்வி அவர்கள் முன்னே இருப்பதை அறியாமல் E13 ஃப்ளாட்டின்
அழைப்புமணியை அழுத்தினர்.
அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்து
அக்கடாவென சோபாவில் சரிந்திருந்தனர் பிரக்ருதியும் பிரக்யாவும்.
“வந்துட்டிங்களா ரெண்டு பேரும்?
என் கிட்ட சொல்லாம எங்க போனிங்க?” என்ற கேள்வியோடு அவர்களைப் பார்த்தபடியே நடந்து சென்று
கதவைத் திறந்தாள் பிரணவி.
ஜேக்கப்பையும் லியானாவையும் மலர்ந்த
முகத்தோடு வரவேற்றாள் அவள்.
“ஜஸ்ட் அ மினிட்” என்றபடி சமையலறைக்குள்
அவள் புகுந்துகொண்டாள்.
பிரக்ருதியும் பிரக்யாவும் அவர்களைப்
பார்க்க லியானா தங்களது திருமண அழைப்பிதழை நீட்டினாள்.
“வாவ்! இட்ஸ் அ ஸ்வீட் சர்ப்ரைஸ்”
உற்சாகத்தோடு வாங்கிக்கொண்டனர்
தோழியர் இருவரும். பிரணவி இருவருக்கும் பழச்சாறு எடுத்து வந்தவள் செய்தியை அறிந்ததும்
இன்முகத்தோடு வாழ்த்தினாள்.
“நீங்க எல்லாரும் கண்டிப்பா மேரேஜுக்கு
வரணும்” என லியானா அன்பாக வேண்டுகோள் வைக்கவும் பிரணவி தயங்கினாள்.
“பிருத்வி என்னை அனுப்பி வைக்க
யோசிப்பாரே... இவங்களை எப்பிடி..” என அவள் இழுக்க
“டோண்ட் வொரி... நான் எதுக்கு
இருக்குறேன்? மாமா கிட்ட பேசி நம்ம மூனு பேரும் மேரேஜுக்குப் போறதுக்கு பெர்மிசன் வாங்குறேன்”
என பிரக்ருதி கூறவும் லியானாவும் ஜேக்கப்பும் மகிழ்ச்சியோடு விடைபெற்றனர்.
அவர்கள் சென்றதும் “என்ன சொல்லி
அண்ணா கிட்ட பெர்மிசன் வாங்க போற?” என்று பிரணவியும் பிரக்யாவும் கேட்க
“உண்மைய சொல்லி தான் கேக்கப்
போறேன்” என்றாள் அவள்.
“நீ உண்மைய சொன்னா அண்ணா கண்டிப்பா
போக விடமாட்டான்” என அறுதியிட்டுக் கூறினாள் பிரக்யா.
“எனக்கும் அப்பிடி தான் தோணுது”
என்று தோளைக் குலுக்கினாள் பிரணவி.
“உன்னை வச்சு தான் மாமா கிட்ட
பெர்மிசன் வாங்கப்போறேன்”
எப்படி என இருவரும் விழிக்க அன்று
இரவு பிருத்வி அலுவலகத்திலிருந்து திரும்பியதும் அவன் முன்னே போய் நின்றாள் பிரக்ருதி.
“மாமா நவிக்கு ஒரு வினோதமான ஆசை
வந்திருக்கு” என அவள் பீடிகை போட பிருத்வி என்ன என்று புருவத்தை உயர்த்தி சைகையால்
கேட்டான்.
“அவளுக்குத் திடீர்னு சர்ச்ல
மேரேஜ் பாக்கணும்னு ஆசை வந்துடுச்சு” என்றாள் அவள்.
“அதுக்குனு நானா இன்னொரு தடவை
கல்யாணம் பண்ணிக் காட்ட முடியும்?”
பிரக்ருதி அவனை ‘ஏன்டா இப்படி’
எனும் ரீதியில் அப்பாவியாகப் பார்த்தாள்.
பிரணவியோ “க்கும்! உங்கண்ணனுக்கு
ஒரு தடவை கல்யாணம் நடந்ததே உலக அதிசயம்... இதுல ரெண்டாவது கல்யாணம் ஒன்னு தான் குறைச்சல்”
என பிரக்யாவிடம் கடுப்புடன் முணுமுணுத்தாள்.
“என்ன வாய்க்குள்ள பேசுற? சத்தமா
பேச மாட்டியா?” என பிருத்வியின் அதட்டல் வரவும் ராணுவ வீரர்கள் போல ‘அட்டென்சனில்’
நின்றனர் பிரணவியும் பிரக்யாவும்.
பிரக்ருதி அவர்களைப் பார்வையால்
எச்சரித்துவிட்டு அவனிடம் பேச ஆரம்பித்தாள்.
“உங்களுக்கு இவ்ளோ அழகா ஜோக்
பண்ண வரும்னு இப்ப தான் எனக்குத் தெரியும் மாமா... இந்த டேலண்டை இன்னொரு நாள் எங்களுக்குக்
காட்டுங்க... இப்ப அக்காவோட ஆசைய நிறைவேத்துங்க”
“திடீர்னு சர்ச் வெட்டிங் பாக்கணும்னா
நான் என்ன செய்யுறது?”
“என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு...
ஆனா அதை நீங்க கேப்பிங்களா?”
“நீ பேசுற விதத்தை பாத்தா ஆல்ரெடி
முடிவான ஏதோ ஒரு விசயத்த தான் சொல்லப் போறனு தோணுது”
அவன் அவ்வாறு கூறியதும் மூவரும்
திருதிருவென விழித்தனர். அவர்களில் பிரக்ருதி மட்டும் தனது பார்வையை மாற்றிக்கொண்டாள்.
“சேச்சே! நான் அப்பிடிலாம் செய்ய
மாட்டேன் மாமா... என் ஃப்ரெண்டுக்கு நெக்ஸ்ட் வீக் சர்ச்ல தான் மேரேஜ்... நீங்க பெர்மிசன்
குடுத்திங்கனா நானும் பிரகியும் நவிய அங்க அழைச்சிட்டுப் போறோம்”
“உனக்கு டல்லாஸ்ல ஃப்ரெண்ட்ஸ்
இருக்காங்களா?”
“என்ன மாமா இப்பிடி கேட்டுட்டிங்க?
எனக்கு இந்த சாக்சனிலயே ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க தெரியுமா?”
“அந்தப் பசங்களை தவிர வேற யார்
உனக்கு ஃப்ரெண்ட்ஸ்?”
“ஜேக் இருக்குறானே... அவனும்
எனக்கு ஃப்ரெண்ட் தான்”
பிருத்வி கால் மேல் கால் போட்டுக்கொண்டு
புன்னகைத்தான்.
“அவன் மேரேஜுக்குப் போகணும்னு
டேரக்டா கேக்காம நவிய காரணமா சொல்லுற பாத்தியா, உன் புத்திசாலித்தனத்துக்கு ஹாட்ஸ்
ஆஃப்”
“மாமா...” என அவள் சிணுங்க
“ஓ.கே... நீங்க மூனு பேரும் போயிட்டு
வாங்க... பட் பி கேர்ஃபுல்” என எச்சரிக்கையோடு அனுமதி கொடுத்தான் பிருத்வி.
மூன்று பெண்களும் குதூகலித்தனர்.
பிரக்ருதியும் பிரணவியும் என்ன
ஆடை அணியலாம் என்ற விவாதத்தில் ஈடுபட பிரக்யாவோ ஷ்ரவனிடம் திருமணத்திற்கு என்ன பரிசளிக்கலாம்
என்று கேட்க போய்விட்டாள்.
இத்திருமணத்தின் முடிவில் தங்களது
வாழ்வின் முக்கியமான தருணம் வரப்போவது பிரக்ருதிக்கும் பிரக்யாவுக்கும் தெரியாது. அவர்களில்
ஒருவருக்கு அத்தருணம் மகிழ்ச்சியையும் மற்றொருவருக்கு அதிர்ச்சியையும் கொடுக்கப் போகிறது.
- Get link
- Other Apps
Comments
Post a Comment