ஜூன் மாத நாவல் - இது வானின் பூபாளம்

“போதைக்கு அடிமையாவதில்
முக்கியக் காரணி தனிமனித குணாதிசயம். பிடிவாதம், தனிமனிதக்கட்டுப்பாடின்மை, தனிமை,
பெற்றோரின் வழிக்காட்டுதலின்மை போன்றவை பதின்பருவத்தினர் போதையில் விழுவதற்கு முக்கியக்
காரணிகளாக உள்ளன. அவர்கள் சார்ந்திருக்கும் சமூக அமைப்பும், நண்பர்கள் வட்டாரமும் அவர்களுடைய
பாதையை நிர்ணயிக்கின்றன”
-எழுத்தாளர் சேவியர்
கே.ஆர் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை….
“மிஸ் யசோதராவோட பிசிக்கல் ஹெல்த்தும் சரி, மெண்டல் ஹெல்த்தும் சரி... இன்னும்
ஃபுல்லா ரெகவர் ஆகல... கோமால இருந்து மட்டும் தான் அவங்க ரெகவர் ஆயிருக்காங்க... அவங்களோட
ஹெல்த் இன்னும் பழையபடி ஆகல... சோ ரொம்ப உடம்பை அலட்டிக்காம பாத்துக்கணும்... இன்னும்
ஒன் வீக் அவங்க எங்க அப்சர்வேசன்ல இருக்கணும் விஷ்ணு சார்”
மருத்துவர் சொன்னதைக் கேட்டுவிட்டு யோசனையுடன் நெற்றியில் கீறியபடி புருவம்
சுருக்கி அமர்ந்திருந்தான் அவன். அவனருகில் அமர்ந்திருந்தனர் ஒரு நடுத்தரவயது தம்பதியினர்.
அந்த ஆணுக்கு ஐம்பந்தைந்து வயது இருக்கலாம். ஆனால் ஆய்ந்து ஓய்ந்து போன தோற்றம். அவரருகில்
அமர்ந்திருந்த பெண்மணிக்கோ முகத்தில் கவலை தனது நிரந்தரமான தடத்தைப் பதித்திருந்தது.
இருவரின் கண்களும் சோகத்தைப் பூசியிருக்க அதன் கருமணிகள் இப்போது அந்த ஆடவனை
நோக்கியிருந்தது. அவன் விஷ்ணுபிரகாஷ். ஜஸ்டிஷ் டுடே என்ற டிவி சேனலின் நிறுவனர் மற்றும்
பத்திரிக்கையாளர். அவன் ஏன் இங்கிருக்கிறான் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்.
ஏனெனில் இப்போது மருத்துவர் எந்த நோயாளியைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறாரோ,
அந்த நடுத்தர தம்பதியினர் யாருக்காக கலங்குகின்றனரோ அந்த யசோதரா அவனது சேனலின் முக்கியமான
புலனாய்வு ஊடகவியலாளர் (Investigative Journalist) மற்றும்
நிருபரும் கூட. அவளின் இந்த இரண்டு வருட கோமா அவளுக்கு மட்டுமன்றி விஷ்ணுபிரகாஷின்
ஜஸ்டிஷ் டுடேவுக்கும் மிகப்பெரிய பாதிப்பு தான்.
சொல்லப் போனால் ஊடக தர்மம் மிகுந்த நேர்மையான ஒரு பத்திரிக்கையாளர் சமூகத்திலுள்ள
பெரிய மனிதர்களின் முகமூடியைக் கிழிக்க விரும்பினால் அவருக்கு என்ன நேரும் என்பதற்கு
உதாரணம் தான் யசோதராவின் இரண்டு வருட கோமா நிலை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபரின் ஆலைகளில் நடக்கும்
சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளையும், அதன் விளைவாக சுற்றுச்சூழலுக்கும் அந்த
ஆலை அமைந்துள்ள இடங்களில் வாழும் மக்களுக்கும் நேரும் பிரச்சனைகளையும் ஊடகவெளிச்சத்துக்குக்
கொண்டு வந்ததே அவளுக்கு நடந்த விபத்துக்குக் காரணம் என்பது காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்பட்ட
உண்மை. அந்த விபத்தில் உண்டான காயத்தினால் தான் அவள் கோமாவில் விழுந்தாள் என்பது அவளுக்குச்
சிகிச்சை அளித்த மருத்துவர் அளித்த வாக்குமூலம்.
அவளின் விபத்தை நேரில் கண்ட சாட்சியென யாருமில்லாது போனது, அத்தோடு அவளது காரை
விபத்துக்குள்ளாக்கியதாகச் சொல்லப்பட்ட லாரியும் விபத்துக்குள்ளாகி அதன் ஓட்டுனர் சம்பவ
இடத்திலேயே பலியானது என யசோதராவின் விபத்தானது தொழில் ரீதியான விரோதம் என்ற வகையிலேயே
முடிந்து போனது.
அன்றிலிருந்து இன்று வரை அவளுக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சைக்கு ஆகும் அனைத்துச்
செலவையும் ஜஸ்டிஷ் டுடேவின் நிர்வாகமே ஏற்றிருந்தது. அதனால் விஷ்ணுபிரகாஷ் அடிக்கடி
யசோதராவின் உடல்நலம் குறித்து விசாரிக்க அங்கே வருவதுண்டு. ஒவ்வொரு முறையும் அவள் நிலையில்
முன்னேற்றம் இல்லையென்ற தகவலும் அவளது பெற்றோர் மற்றும் தோழியின் சோகம் கப்பிய முகங்களும்
அவனது குற்றவுணர்ச்சியை அதிகரிப்பதை விஷ்ணுவால் தவிர்க்க முடிந்ததில்லை.
இத்தனைக்கும் யசோதராவுக்கு புலனாய்வு ஊடகவியலில் இருந்த ஆர்வம் தான் இத்தகைய
சமூகப்பிரச்சனைகளை அவள் கையிலெடுத்து அதை ஆழ்ந்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு
காரணம். இதை அவளது பெற்றோரும் அறிவர்.
அவளது அன்னை வைஷ்ணவியும், தந்தை வாசுதேவனும் அந்த விபத்து நடந்த போது கூட கலங்கவில்லை.
ஆனால் இருபத்து நான்கு வயது பெண் கோமாவில் விழுந்து சின்ன சின்ன விசயங்களுக்குக் கூட
அவளுக்கு மருத்துவ உபகரணங்களின் உதவி தேவைப்படுவதைப் பார்த்தவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக
நரகத்தில் அல்லவா உழன்று கொண்டிருந்தனர்.
அவர்கள் வைத்த எண்ணற்ற வேண்டுதல்களில் எதுவோ ஒன்று இறைவனின் செவியைச் சென்றடைந்ததன்
பலனாக இதோ அவள் கண் விழித்துப் பேசியும் விட்டாள். அதனால் இனியும் அவள் ஆபத்து நிறைந்த
இந்தப் பத்திரிக்கையாளர் பணியில் தொடர்வதில் அவர்களுக்குச் சிறிதும் விருப்பமில்லை.
விஷ்ணுபிரகாஷும் அதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை
ஆனால் அதை அவளிடம் சொல்வதற்கு இது சரியான சமயமில்லை என்பதை தான் மருத்துவர்
இப்போது விளக்கிக் கொண்டிருந்தார். அதைக் கேட்ட வைஷ்ணவியோ “அவ எழுந்து நார்மலா நடக்க
ஆரம்பிச்சிட்டா நாங்க சொல்லுறத கேக்க மாட்டாளே டாக்டர்” என்றார் கவலையுடன்.
“அவங்க இருக்குற நிலமைல நீங்க அவங்களோட வேலைக்கு முட்டுக்கட்டை போட்டா அது
அவங்க ஹெல்த் கண்டிசனுக்கு நல்லது இல்ல... முக்கியமா அவங்க ஓவரா எமோசனலாகாம இருக்கணும்...
சோ இப்போதைக்கு அவங்க வேலை சம்பந்தப்பட்ட எந்தப் பேச்சும் வேண்டாம் மிசஸ் வாசுதேவன்”
என கண்டிப்பான குரலில் சொன்ன மருத்தவரின் அறிவுரைக்கு மூவரும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டிய
கட்டாயம்.
மருத்துவரின் அறையிலிருந்து வெளியேறிய பின்னர் விஷ்ணுபிரகாஷ் வாசுதேவனிடம்
“சார் ஒரேயடியா இந்த ஃபீல்ட்ல இருந்து விலகிடணும்னு நீங்க யசோவ கம்பெல் பண்ணுனிங்கனா
அது அவளை ரொம்பவே பாதிச்சிடும்... ஐ ஹேவ் அன் ஐடியா” என்று சொன்னவன் தனது யோசனையைச்
சொல்லவும் அது ஓரளவுக்கு வாசுதேவனுக்கும் வைஷ்ணவிக்கும் ஏற்புடையதாகவே தோன்றியது.
அவன் சொன்னதற்கு ஒப்புக்கொண்டவர்கள் அவனுடன் சேர்ந்து மகளது அறைக்குள் சென்றனர்.
அங்கே மயூரியின் உதவியால் எழுந்து அமர்ந்து அவளிடம் பேசிக் கொண்டிருந்த யசோதராவின்
சோர்வடைந்திருந்த வதனம் விஷ்ணுபிரகாஷைக் கண்டதும் சற்று ஒளி பெற்றது.
“சீஃப்” என்றவளின் குரலில் பழைய உற்சாகம் திரும்பும் அறிகுறி தென்படவே அந்த
அறையிலிருந்த அனைவருக்கும் கண்களில் ஒரு கணம் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அவளது கை
கால்களின் செயல்பாடுகளை முன்னரே மருத்துவர்கள் சோதித்து அவளால் நடக்க முடியும் என்பதை
உறுதிபடுத்திவிட்டதால் அவளது உடலோடு ஒன்றியிருந்த மற்ற மருத்துவ உபகரணங்களும் அகற்றப்பட்டு
இயல்புக்குத் திரும்பியிருந்தாள்.
அவள் முன்னே கண்ணீரைக் காட்டிக்கொள்ள விரும்பாதவர்களாக புன்னகையை வரவழைத்துக்
கொண்டனர்.
“ஹவ் டு யூ ஃபீல் நவ் மை டியர் ஸ்டார் ரிப்போர்ட்டர்?” என்று ஆதுரத்துடன் கேட்டவாறு
இருக்கையை அவளது படுக்கை அருகே இழுத்துப் போட்டு அமர்ந்தான் விஷ்ணுபிரகாஷ்.
மற்றவர்களும் அமர யசோதரா நம்பிக்கையுடன் புன்னகைத்தபடியே “ஃபீலிங் பெட்டர்
நவ்... பட் என்னமோ ஒன்னு மிஸ் ஆன மாதிரி ஃபீல் ஆகுது சீஃப்... அது என்னனு தான் புரியல”
என்றாள்.
அவள் அவ்வாறு சொல்லவும் அனைவரும் திகைத்து விழிக்க மயூரி சுதாரித்துக் கொண்டவளாக
“கண்டிப்பா மிஸ் ஆகும்டி... எப்போவும் ஐடி கார்டை மாட்டிட்டு ரிப்போர்ட்டர் அம்மாவா
சுத்தியே பழக்கப்பட்டவளை இப்பிடி ஹாஸ்பிட்டல் வார்ட்ல வச்சிருந்தா ஏதோ மிஸ் ஆன மாதிரி
தான் தோணும்... டாக்டர் இன்னும் ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்தா போதும்னு சொல்லிட்டார்ல...
அதுக்கு அப்புறம் ரிப்போர்ட்டர் மேடம் பழையபடி பிசியா சுத்த ஆரம்பிச்சிடுவிங்க... சோ
இந்த ஒன் வீக் நல்லா என்ஜாய் பண்ணுங்க” என சமாளிக்க யசோதரா அவளை ஒரு கணம் ஏறிட்டவள்
மௌனமாய் தலையசைத்தாள்.
பின்னர் “ஐ நோ! எல்லாம் நடந்து ரெண்டு வருசம் ஆயிடுச்சுல்ல... நீங்க எல்லாரும்
போனதுக்கு அப்புறம் நர்ஸ் என் கிட்ட எல்லா விசயத்தையும் சொல்லிட்டாங்க... என்னோட ஆக்சிடெண்ட்,
கோமா, எனக்கு நடந்த டிரீட்மெண்ட்னு எல்லா விசயமும் இப்போ எனக்குத் தெரியும்... முழுசா
ரெண்டு வருசம் ரெஸ்ட்ல தானே இருந்திருக்கேன்... இந்த ரெண்டு வருசத்துல என்ன நடந்துச்சு,
என் வாழ்க்கைல எதுவும் சேஞ்சஸ் இருந்துச்சானு எதுவுமே புரியல... இதுல இன்னும் ஒரு வாரம்
ரெஸ்ட் எடுக்கணுமா?” என கேலி போல சொன்னாலும் தன் வாழ்வின் இரண்டு வருடங்களைப் படுக்கையில்
பிரக்ஞையற்று கழித்த வருத்தம் அவள் குரலில் ஒட்டியிருந்தது.
விஷ்ணு பிரகாஷோடு சேர்ந்து யசோதராவின் பெற்றோரும் இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்த
மாற்றங்களை எப்படி அவளிடம் சொல்வது என புரியாது சங்கடத்தில் ஆழ, மயூரி அவளது கரங்களைப்
பற்றி ஆதுரத்துடன் தடவிக் கொடுக்க ஆரம்பித்தாள். அப்போது தான் யசோதரா தனது வலதுகையின்
மோதிரவிரல் காலியாக இருப்பதை பார்த்தாள்.
கூடவே தனது கழுத்தைத் தடவிப் பார்த்தவள் அங்கேயும் வெறுமை மட்டுமே இருக்கவும்
அவளது பெற்றோரைக் கேள்வியாய் நோக்கினாள்.
“மா! கௌதம் எனக்குப் போட்டுவிட்ட ரிங் எங்க போச்சுமா? அவன் குடுத்த செயினையும்
காணுமே... அந்த ரிங்கும் செயினும் எனக்கு எவ்ளோ முக்கியமானதுனு தெரியும்ல” என படபடக்க
ஆரம்பித்தவளை வைஷ்ணவி கையமர்த்தினார்.
“நீ எந்த விசயத்துக்கும் டென்சன் ஆக கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காரு யசோ...
கொஞ்சம் அமைதியா இருடாம்மா” என்ற பெற்றவளின் கூற்றை புறந்தள்ளியவள் அந்தச் சோர்ந்து
போன நிலையிலும் கூட மோதிரத்தையும் செயினையும் பார்த்தால் தான் ஆயிற்று என பிடிவாதம்
பிடிக்க மயூரி தனது பர்சிலிருந்து ஒரு தங்க செயினை எடுத்து யசோதராவின் கையில் வைத்தாள்.
“டாக்டர் உனக்கு டிரீட்மெண்ட் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி என் கிட்ட குடுத்ததை
நான் தான் பத்திரமா வச்சிருந்தேன் யசோ....” என்று சொன்னவளை ஏறிட்ட யசோதரா ஆசையுடன்
அந்த செயினை கழுத்தில் போட்டுக்கொண்டாள்.
பின்னர் ஆவலுடன் “என்னோட ரிங் எங்க?” என கேட்க
“உன்னை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணுனப்போ உன் கைல ரிங் இல்ல யசோ... நீ அட்மிட்
ஆனதுக்கு ஒன் ஹவருக்கு அப்புறம் தான் எனக்கு தகவல் வந்துச்சு... நான் வந்தப்போ நர்ஸ்
என் கிட்ட இந்த செயினை மட்டும் தான் குடுத்தாங்கடி” என்றாள் மயூரி பொறுமையுடன்.
“எனக்கு நல்லா நியாபகம் இருக்கு மயூ... அன்னைக்கு நான் அந்த ரிங்கை கழட்டவே
இல்ல... அது எங்கடி போயிருக்கும்? என் கௌதம் எனக்குப் போட்டுவிட்ட ரிங்... அதை கழட்டவே
மாட்டேனு நான் அவனுக்குப் பிராமிஸ் பண்ணிருந்தேன்” என முகம் வாட அவள் சொன்ன போதே விஷ்ணுபிரகாஷுக்குக்
கண்களில் கண்ணீர் நிரம்பிவிட்டது.
“கண் முழிச்சதும் நான் அவனைப் பாக்கணும்னு எவ்ளோ ஆசையா இருக்கேன்... ஆனா அவனையும்
காணும்... அவன் போட்டுவிட்ட ரிங்கையும் காணும்... எனக்கு அந்த ரிங் இப்போவே வேணும்”
என்றவளின் கண்ணிலும் கண்ணீர் இப்போது வெளியேறவா என கேட்டுக் கொண்டிருக்க மற்ற நால்வருக்கும்
கடந்த இரண்டு வருடங்களில் நடந்த சம்பவங்களை எப்படி விளக்குவது என்ற கேள்வி அவர்களின்
மனதுக்குள் பூதாகரமாக உருவெடுத்து நின்றது.
◆◆◆
சென்னையின் மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் பரந்து விரிந்து கிடந்த புல்வெளியுடன்
கண்கவர் தோட்டமும் நெடிதுயர்ந்த மரங்களும் சூழ அவற்றின் நடுநாயகமாக நவீன மோஸ்தரும்
பழங்கால கட்டிடக்கலையும் கலந்த கலவையாக ‘சவி வில்லா’ என்ற
பெயருடன் நின்றிருந்தது அந்த மாளிகை.
கோட்டை போன்ற அந்த மாளிகைக்கு அரணாக நெடிதுயர்ந்த காம்பவுண்ட் சுவர்களும்,
கோட்டைக்கு அழகு சேர்க்கும் நுழைவு வாயிலைப் போல கருப்பும் பொன்வண்ணமும் கலந்த இரும்பு
கேட்டும் அதன் இருபக்கங்களிலும் இருந்த தூண்களும் அந்த மாளிகைக்கு இன்னும் கம்பீரத்தைக்
கொடுத்தன என்றால் அது மிகையாகாது.
காவலாளிக்கான தங்குமிடத்தை அடுத்து நீண்ட புல்வெளியும் அதன் நடுவே ஓடும் நடைபாதையும்
மாளிகைக்குள் செல்லும் வழியைக் காட்டின. பரந்த புல்வெளியின் ஒரு புறத்தில் வாகனத்தரிப்பிடமும்
மறுபுறத்தில் பழைய பொருட்களைப் போட்டு வைக்கும் ஷெட் ஒன்றும் இருக்க இரண்டுமே இரவு
என்பதால் தாழிடப்பட்டிருந்தன.
மூன்று மாடிகளுடன் நின்ற அந்த மாளிகையின் மற்றொரு புறத்தில் பெரிய நீச்சல்
குளம் அமைந்திருக்க அதன் கரையில் போடப்பட்டிருந்த மரத்தினாலான சாய்விருக்கைகளில் சாய்ந்திருந்தனர்
மூன்று ஆடவர்கள். வேறு யாராக இருக்க முடியும்! சித்தார்த், மாதவன் மற்றும் இந்திரஜித்
தான் அங்கே அமர்ந்திருந்தனர்.
“நோ வே! நீ கோடி ரூபா குடுத்தாலும் இந்த ரிங்க நான் தர மாட்டேன்”
சாய்விருக்கையில் சாய்ந்து காலை ஆட்டியபடி சொன்ன சித்தார்த்தைப் பரிதாபமாக
ஏறிட்டான் இந்திரஜித்.
“திஸ் டூ மச்ணா... நான் இந்த ரேஸ்ல வின் பண்ணுனதுக்கு அப்புறம் என்ன கேட்டாலும்
தர்றேனு சொல்லிட்டு இப்போ முடியாதுனு சொல்லுறிங்க... யூ ஆர் சோ மீன் அண்ணா..”
அவனது தோளைத் தட்டிக் கொடுத்த மாதவனோ “டேய் தம்பி பையா! இந்த டூ இயர்ஸ்ல நம்ம
எத்தனை தடவை கேட்டிருப்போம்? அவன் ஒரு தடவையாச்சும் கழட்டிக் குடுத்திருக்கானா? பேசாம
சித்தார்த்ங்கிற நேம்கு டிக்ஸ்னரில கல்நெஞ்சக்காரன்னு மீனிங் போட்டுருவோமா?” என்று
அவனைச் சமாதானம் செய்தபடியே நண்பனையும் கலாய்த்து வைத்தான்.
சித்தார்த் இளையசகோதரனும் நண்பனும் பேசுவதைப் புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தாலும்
அவன் மனமெங்கும் இனம்புரியாத குற்றவுணர்ச்சி மட்டுமே நிறைந்திருந்தது. தனது சுண்டுவிரலில்
கிடந்த மோதிரத்தை அவனது விரல்கள் தடவிக் கொண்டிருந்தது.
இந்திரஜித் சட்டென எழுந்து அண்ணனிடம் முழங்காலிட்டு அமர்ந்தவன் “அண்ணா! இது
லேடிஸ் போடுற ரிங் தானே! இதை ஏன் போட்டிருக்கிங்க?” என எப்போதும் போல வினவ மாதவனும்
அதே கேள்வியுடன் நண்பனை நோக்கினான்.
சித்தார்த் தனது இளையச்சகோதரனின் சிகையைக் கோதிவிட்டபடியே “சில கேள்விக்குப்
பதிலே கிடையாது ஜித்து... சரி இத விடு... இன்னைக்கு ரேஸ் எப்பிடி போச்சு... நீ வேர்ல்ட்
சாம்பியனை ரேங்கிங்ல முந்திட்டனு இண்டர்நெட்ல பாத்தேனே... அடுத்து என் தம்பியோட டார்கெட்
என்ன?” என்று கேட்டு பேச்சைத் திசை மாற்றினான்.
அவனை விட பத்து வயது இளையவன். சித்தார்த்தைப் போலவே புகழ் வெளிச்சத்தில் மிதந்து
கொண்டிருக்கும் பெற்றோருக்குப் பிறந்ததால் அவர்களின் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கி
ஏங்கியே அது கிட்டாது போன ஏமாற்றத்தை தமையனின் அன்பில் போக்கிக் கொண்டவன் இந்திரஜித்.
தந்தை ஒரு பிரபல தயாரிப்பாளர், இப்போது தயாரிப்பாளர் சங்க தலைவர் வேறு. தாயாரோ
இந்தியாவின் சிறந்த நடன இயக்குனர்களில் ஒருவர். இருவருக்குமே தாங்கள் பெற்ற பிள்ளைகளுடன்
நேரம் செலவளிக்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை.
ஒரு காலகட்டத்தில் அவர்களின் பிள்ளைகளும் அதை எதிர்பார்க்கவில்லை. இந்திரஜித்துக்கு
அதற்கு பிறகு எல்லாமே சித்தார்த் தான். சித்தார்த்துக்கு அவன் நண்பன் மாதவனின் நட்பு
ஒன்றே போதுமென தோன்றி விட இம்மூவரும் ஒருவருக்கொருவர் நல்ல துணையாக மாறிப் போயினர்.
இந்திரஜித் தனது வருங்காலத் திட்டங்களை விளக்கிவிட்டு நண்பர்கள் பார்ட்டி கேட்ட
செய்தியையும் சொல்ல சித்தார்த் புருவம் சுருக்கியவனாக “பார்ட்டி கோல்டன் கிரவுன்ல தானே?
எப்போ குடுக்குறதா இருக்க?” என வினவ
“ரீனா ரேவ்ஸ் பார்ட்டி கேக்குறாண்ணா... நான் ராகேஷ் அண்ணா கிட்ட சொன்னேன்...
பட் இப்போ பப்ல எஸ்.ஓ.பி ஃபாலோ பண்ணுறதால ஃபிப்டி பர்சேண்டேஜ் பீபிளை தான் அலோ பண்ணுவாங்களாம்...
அதுவும் மியூசிக் ஈவெண்ட்ஸ் எதுக்கும் பெர்மிசன் கிடையாதுனு சொல்லிட்டாரு... சோ நார்மல்
பார்ட்டி தான்... அதுவும் நம்ம பீச் ஹவுஸ்ல தான் அண்ணா” என்று கூறினான் இளையவன்.
சித்தார்த் அதை கேட்டுவிட்டு சரியென தலையசைத்தவன் “பி கேர்ஃபுல்... பார்ட்டிக்குப்
போறது தப்பு இல்ல... ஆனா உன்னோட ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள் சரியில்லயோனு ரொம்ப நாளா எனக்கு
டவுட்... கொஞ்சம் கவனமா இரு” என்று அறிவுரை சொல்லிவிட்டு அவனை உறங்கச் செல்லுமாறு சொல்லிவிட்டான்.
“குட் நைட்ணா” என இருவருக்கும் பொதுவாகச் சொல்லிவிட்டு இந்திரஜித் வீட்டுக்குள்
சென்றுவிட மாதவன் தனது நண்பனிடம் எப்போதும் கேட்கும் அதே கேள்வியைத் தான் கேட்டான்.
“டேய் சித்து! உண்மைய சொல்லு... இந்த ரிங் எந்தப் பொண்ணோடது? எனக்குத் தெரியாம
கேர்ள் ஃப்ரெண்ட் யாரும் இருக்காங்களா?”
சித்தார்த் யோசிப்பது போல புருவம் சுருக்கி “ம்ம்.... இருக்காங்கடா... அவங்கள
உனக்குத் தெரியும்... நீ அவங்க எல்லாரையும் பாத்திருக்க... மறந்துட்டியா?” என தீவிரக்குரலில்
கேட்கவும் மாதவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
“என்னது? அவங்க எல்லாரையுமா? டேய் எத்தனை கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்டா உனக்கு?”
“சுமார் ஒரு பத்து கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்டா” என்று சித்தார்த் சொல்லவும் நெஞ்சில்
கை வைத்தபடி எழுந்தான் அவன்.
“பத்து கேர்ள் ஃப்ரெண்ட்ஸா? டேய் மாதவன்னு நேம் வச்சுக்கிட்டு இன்னைக்கு வரைக்கும்
எனக்கு ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் கூட இல்ல... ஆனா சித்தார்த்னு நேம் வச்ச உனக்கு பத்து
கேர்ள் ஃப்ரெண்ட்ஸா? இது உலகமகா அநியாயம்டா... போடா துரோகி”
அவன் தீவிரக்குரலில் குறைபடவும் சித்தார்த் பீறிட்டு வந்த சிரிப்பை அடக்கிக்
கொள்ள அரும்பாடு பட்டான். அதைக் கண்டுகொண்ட மாதவன் “என்னடா சிரிப்பு? பத்து பேர்ல ஒருத்தி
நேமாவது நியாபகம் இருக்குதா?” என்று கடுப்புடன் வினவ
“சாண்ட்ரா” என்றான் சித்தார்த் புன்னகை வழியும் முகத்துடன்.
அவனது பதிலில் மாதவன் அதிர்ந்து போய் நிற்க அதைக் கண்டு நமட்டுச்சிரிப்புடன்
“ஏன் இவ்ளோ ஷாக் ஆகுறடா? இப்போ போய்ட்டிருக்குற மூவில அவ தானே என்னோட கேர்ள் ஃப்ரெண்ட்”
என கேட்டுவிட்டு கண் சிமிட்ட மாதவன் மீண்டும் அதிர்ந்தான்.
“அடேய் அப்போ நீ சொன்ன பத்து கேர்ள் ஃப்ரெண்ட்ஸும் உன்னோட கோ-ஆக்ட்ரஸா?” என்று
கேட்க சித்தார்த் ஆமென அமர்த்தலாக தோளைக் குலுக்கவும் திகைத்தான் அவன்.
“கேர்ள் ஃப்ரெண்ட் நேமை சொல்லுடானா நீ ஆக்ட்ரஸையா கை காட்டுற? உன்னை...” என்று
பல்லைக் கடித்தவன் அவனது கழுத்தை நெறிப்பது போல பாவனை செய்ய சித்தார்த் வலிப்பது போல
நடிக்க ஆரம்பித்தான்.
“டேய் உனக்குத் தெரியாம என் லைப்ல எதாவது நடந்திருக்குதாடா? அப்புறம் ஏன் இப்பிடி
ஒரு கேள்விய கேக்குற? எனக்கு கேர்ள் ஃப்ரெண்ட்னு இப்போ வரைக்கும் யாரும் கிடையாதுடா
தெய்வமே... என் கழுத்தை விடு.. இன்னும் உன்னோட மூவில நான் நடிக்க வேண்டிய சீன்ஸ் பாக்கி
இருக்கு... என்னை கொன்னுட்டேனா எனக்குப் பதிலா யாருடா நடிக்கிறது?” என்று சொல்லவும்
அவன் கழுத்தை விடுவித்தான் மாதவன்.
“பொழைச்சு போ... ஆனா ஒன்னு... இந்த ரிங்குக்குப் பின்னாடி இருக்குற சீக்ரேட்டை
நான் சீக்கிரமே கண்டுபிடிப்பேன்டா... அப்போ மட்டும் நீ இதே மாதிரி ஸ்மார்ட்டா ஆன்சர்
பண்ணி தப்பிச்சிடலாம்னு நினைக்காத” என்று எச்சரிக்கை செய்யவும் சித்தார்த் சத்தம் போட்டு
நகைத்தவன் நண்பனின் தோளில் விளையாட்டாக அடித்துவிட்டு வேறு கதைகளைப் பேச ஆரம்பித்தான்.
அந்த மோதிரமும் அது கொடுத்த நினைவுகளும் சித்தார்த்தின் மனதில் மட்டுமே பொதிந்திருக்கும்
மாபெரும் இரகசியம். அதை அவன் இது வரை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. இனியும் பகிர்ந்து
கொள்ளும் எண்ணமும் அவனுக்கு இல்லை. ஆனால் அந்த இரகசியம் வெளிவரும் தருணம் வெகு தொலைவில்
இல்லை என்பதை எப்போதோ விதி தீர்மானித்து விட்டதை சித்தார்த் அறிந்திருக்க வாய்ப்பில்லை
அல்லவா!
விதியின் விளையாட்டை யாராலும் தடுக்க முடியாது
ReplyDeleteரிங் இரண்டு புள்ளிகளையும் ஒன்றாக இணைக்கிறதே
வந்தாயே மழையென நீயும்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 3)
சித்துவோட அந்த ரகசியம் என்னன்னு எங்க எல்லாருக்கும் தெரியும் தானே...? ஆனா, நாங்களும் இப்ப அதை சொல்ல முடியாதே...? ஏன்னா, தட் ஈஸ் சீக்ரெட் ஆஃப் ரைட்டர்ஸ் எனர்ஜி.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super
ReplyDelete