பூங்காற்று 38

நீரஜாட்சி அனைவரிடமும் சொல்லிவிட்டு
வெளியேறியவள் தோட்டத்தில் நடந்து செல்லும் போது திடீரென்று உள்ளுணர்வு உறுத்த திரும்பி வீட்டை
பார்த்தாள். வீட்டின் மாடி வராண்டாவில் நின்று
ரகுநந்தன் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பது அவள் கண்ணில் பட அவனிடம் கரங்களை அசைத்து டாட்டா காட்டிவிட்டு
அவுட் ஹவுஸிற்குள் சென்றாள்.
அவள் அங்கே சென்ற போது கிருஷ்ணஜாட்சி
உறங்கியிருக்கவே சமையலறைக்குச் சென்று அவள் சமைத்து வைத்திருந்ததை காலி செய்துவிட்டு
பாத்திரங்களை கழுவி வைத்தவள் ஹாலுக்கு
வந்தாள்.
அந்த ஹாலின் சுவரில் அவளின் பெற்றோரின் புகைப்படம் மாட்டப்பட்டிருக்கும்.
அதன் அருகில் சென்று சிறிது
நேரம் கண் இமைக்காமல் பார்த்தவளின் விரல்கள் அந்த புகைப்படத்தை வருடிக் கொடுக்க அவர்களின் நினைவில் கண்
கலங்கியது அவளுக்கு.
"மா! இந்த உலகத்துல உனக்கு கிடைக்காத சந்தோசமே இல்லைங்கிற
அளவுக்கு அப்பாவும் நீயும் ஒரு அழகான
வாழ்க்கையை
வாழ்ந்திங்க. உங்க ரெண்டு பேருக்கும் இருந்த ஒரே ஒரு குறைனா அது இந்த குடும்பம் உங்களை ஒதுக்கி
வச்சது மட்டும் தான். ஆனா உங்களுக்கு
கிடைக்காத
அவங்களோட பாசம், அரவணைப்பு இந்த ஆறு
வருசமா எங்களுக்கு நிறையவே கிடைச்சிருக்கு.
கிருஷ்ணாவுக்கு அது மட்டும் போதும். ஆனா எனக்கு அது பத்தாதுமா. அந்த வீட்டுல என் உங்க
நியாபகங்கள் எதுவுமே இருக்க கூடாதுங்கிறதுல பத்து
மாமி ரொம்ப கவனமா இருக்காங்கல்ல. ஆனா உங்களோட பிரதிபிம்பமா இருக்கிற கிருஷ்ணா அங்க
வாழப் போறதை அவங்களால எப்பிடி தடுக்க
முடியும்? நான் அங்கே போறதே அந்த வீட்டுல
மதுரவாணியோட நினைவுகளை யாராலயும் அழிக்க முடியாதுனு
அந்த பத்து மாமிக்கு புரிய வைக்கிறதுக்கு தான். நீங்க ரெண்டு பேரும் என் கூடவே இருந்து என்னோட
இந்த பிளான் சக்சஸ் ஆக எனக்கு உதவி
பண்ணனும்"
என்றவாறு சொல்லி புகைப்படத்தின் அருகில் கண் மூடி நின்றாள்.
ஆனால் நீரஜாட்சி இந்த விஷயத்தில்
பத்மாவதியையும் கிருஷ்ணஜாட்சியையும் பற்றி யோசித்தவள் ரகுநந்தன் என்ற ஒருவனை பற்றி மறந்துவிட்டாள். தான்
இதற்காக தான் அவனை மணந்தோம் என்று பிற்காலத்தில்
அவனுக்கு தெரிந்துவிட்டால் அவனது மனநிலை எப்படி இருக்கும் என்பதை அவள் யோசிக்கவே இல்லை.
*******
மறுநாள் காலை கிருஷ்ணஜாட்சி
தங்கைக்கு மதியத்துக்கு கொண்டு செல்ல டிபன் பாக்ஸில் சாப்பாட்டை அடைத்துக் கொண்டிருந்தவள்
"நீரு ஏன்டி நேத்து நைட் நீ வர்றதுக்கு லேட்
ஆச்சு? நான் வெயிட் பண்ணி
பார்த்துட்டு தூங்கிட்டேன்" என்று சொன்னவாறு
அவளிடம் அதை நீட்ட
நீரஜாட்சி அதை ஹேண்ட்பேக்கில்
வைத்தவாறே "கிருஷ்ணா நான் நந்து கிட்ட அவனை லவ் பண்ணுறேனு சொல்லிட்டு வந்தேன். சீக்கிரமா கல்யாணம்
பண்ணிப்போம்னு ரெண்டு பேரும் முடிவு
பண்ணிருக்கோம்" என்று சாதாரணமாக கூற கிருஷ்ணஜாட்சிக்கு அவள் விளையாடுகிறாளோ என்று தோணாமல் இல்லை.
அவள் தோளின் அடித்தவள்
"நீரு
விளையாடாதடி! ஒரு நிமிசம் எனக்கு தலை சுத்திருச்சு" என்று சொல்ல நீரஜாட்சி அதைக் கேட்டு குபீரென்று
சிரிக்க
கிருஷ்ணஜாட்சி "பார்த்து சிரிடி! பல்லு சுளுக்கிக்க போகுது.
உனக்கு வர வர நக்கல் கூடி போச்சு" என்று கடுப்புடன் கூறிவிட்டு தனது கூந்தலை
வாரிக் கொண்டவளிடம் சென்றவள் டிரஸ்ஸிங் டேபிளின்
மீது சாய்ந்தபடி "கிருஷ்ணா நான் ஒன்னும் விளையாடல! நான் நிஜமாவே நந்துவை லவ் பண்ணுறேன்"
என்று கூறிவிட்டு சகோதரியை பார்த்தாள்.
அவளோ "நீ பேசுறது கேக்க சிரிப்பா இருக்குடி. ஏதோ எனக்கு ஐஸ்
கிரீம் பிடிக்கும், சாக்லேட் பிடிக்கும்கிற மாதிரி சாதாரணமா சொல்லுற? காதல்ங்கிறது உனக்கு அவ்ளோ ஈஸியா போயிடுச்சா? மத்தவங்களை விடு, அந்த பத்மாவதியம்மாவை பத்தி யோசி. அவங்க எப்போவுமே நமக்கு எதிரா தான்
இருப்பாங்க" என்று சொல்லிவிட்டு நெற்றியில் விழும் கூந்தல் கற்றைகளை காதுப்பக்கம்
ஒதுக்கிவிட்டுக் கொண்டாள்.
நீரஜாட்சி முகத்தை
சுழித்தபடி
எழுந்தவள் "சந்தோசமா பேசிட்டிருக்கப்போ நீ ஏன் பத்து மாமியை நியாபகப்படுத்துற கிருஷ்ணா? அதை பத்தி எனக்கு துளி கூட கவலை இல்ல.
எனக்கு நந்துவை
பிடிச்சிருக்கு. நான் அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்" என்றாள் பிடிவாதக் குரலில்.
கிருஷ்ணஜாட்சி அவளுக்கு புரியவைக்க
முயல அவளோ தமக்கை சொல்லுகிற வார்த்தைகள் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கிருஷ்ணஜாட்சி
அவளை சமாளிக்க இயலாதவளாய் "சரிடி! நீ என்
பேச்சை கேக்க வேண்டாம். நான் டேரக்டா அம்மாஞ்சி கிட்டவே பேசிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பிக்க
நீரஜாட்சி "நான் கூட மேரேஜ் வேண்டானு சொல்ல
வாய்ப்பு இருக்கு. ஆனா அவன் சொல்லவே மாட்டான். புவர் கிருஷ்ணா" என்று அக்காவை கேலி செய்துவிட்டு தானும்
காலையுணவை முடித்துவிட்டு அலுவலகத்தை நோக்கி
ஸ்கூட்டியை விரட்டினாள்.
அலுவலகத்திற்கு அன்று அதிசயத்திலும்
அதிசயமாக ரகுநந்தனுக்கு முன்னரே அவள் வந்துவிட அவனது அறையை ஒழுங்குப்படுத்திவிட்டு மற்ற வேலைகளை
கவனிக்க ஆரம்பித்தவளுக்கு சரியாக பத்தரை மணி வாக்கில்
அவனிடம் இருந்து அழைப்பு வர அவனது அறைக்குச் சென்றாள்.
"மே ஐ கம் இன் சார்?" என்று கதவை தட்டிவிட்டு உள்ளே
சென்றவளிடம் "ம்ம்..இன்னைக்கு ஹோட்டல் வேலை போயிட்டிருக்கிற சைட்டுக்கு போயே ஆகணும்
போல. அங்கே ஒர்க்கர்ஸ்குள்ள ஏதோ பிராப்ளம்"
என்றபடி அவன் அவளை கிளம்ப சொல்லிவிட்டு தானும் தயாரானான்.
இருவரும் காரில் சென்று இறங்க
அங்கே இன்னும் வேலை தொடங்கப்படாமல் இருக்கவே பொறியாளரை அழைத்து "என்ன தான் பிரச்சனை?" என்று கேட்க அவர் விஷயத்தை விளக்கினார்.
"இங்கே ஒர்க்கர்ஸ்
ரெண்டு க்ரூப்பா பிரிஞ்சு
அடிச்சிக்கிறாங்க சார். கேட்டா யாருமே விட்டுக் குடுக்க மாட்றாங்க. நீங்களாச்சு
புரியவைங்க" என்று சொல்ல அவன் அவர்களிடம் சென்று பேச ஆரம்பித்தான். நீரஜாட்சி அவனை
வேடிக்கை பார்த்தபடி ஒரு நாற்காலியில்
அமர்ந்து
கொண்டாள்.
கன்னத்தில் கை வைத்து அவன்
பேசியதைப் பார்த்துக் கொண்டிருக்க அவன் இது அறியாதவனாய் பிரச்சனையை பைசல் செய்து கொண்டிருந்தான்.
நீரஜாட்சியின் மூளையில் பல சிந்தனைகள் ஓட அவனைப்
பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் அவர்களை சமரசம் செய்துவிட்டு திரும்பி வரவும் சுதாரித்து முகத்தை
திருப்பிக் கொண்டாள்.
ரகுநந்தன் வந்ததும் எழும்பியவள்
"கிளம்பலாமா சார்?" என்று கேட்க அவனும்
தலையாட்டிவிட்டு அவளுடன் நடந்தான்.
ரகுநந்தன் நடக்கும் போதே அவளது கரங்களுடன் தன் கைகளை கோர்த்துக் கொள்ள நீரஜாட்சி
திகைத்தவளாய் திரும்பிப் பார்க்கவும் "என்னடி லுக்? இவ்ளோ
நேரம் நான் பேசுறதை நீ சைட் அடிச்சல்ல, நான் ஏதாச்சும் சொன்னேனா?" என்று
அவன் தலையை சரித்து கேட்ட தொனியில் ஐயோ மாட்டிக்கிட்டேனே என்று விழித்தபடி அவனுடன் நடந்தாள்
அவள்.
காரில் அமர்ந்தவன்
நீரஜாட்சியிடம்
"நான் இன்னைக்கு தாத்தா கிட்ட பேசப் போறேன். நீயும் கரெக்ட் டைமுக்கு வந்துடு"என்று கூற
நீரஜாட்சி திகைத்தாள்.
"நான் ஏன்டா வரணும்? நீ மட்டும் பட்டு கிட்ட கேக்க மாட்டியோ? துணைக்கு நான் எதுக்குடா?"
"ஏன்டி சொல்ல மாட்ட? நான் மட்டும் அவர் கிட்ட போய் தாத்தா உங்க
பேத்தியை நான் காதலிக்கிறேன், எங்களுக்கு விவாகம்
பண்ணி வைங்கோனு சொன்னா அவர் என்ன சொல்லுவார் தெரியுமா? என் பேத்தியை நீ மட்டும் காதலிச்சா
போதுமாடா? அவ மனசுல என்ன
இருக்குனு தெரிஞ்சிக்க
வேண்டாமானு என்னண்ட சண்டைக்கு வருவார். அதான் முன்னெச்சரிக்கையாவே உன்னையும்
கூப்பிடுறேன்" என்று சொல்ல நீரஜாட்சி சரியென்று
தலையை உருட்டி வைத்தாள்.
அதே நேரம் கிருஷ்ணஜாட்சியின் பேக்கரியில் கரோலினிடம் புலம்பிக்
கொண்டிருந்தாள்.
"என்னால இதை நம்பவே முடியல லின். இவ்ளோ சீக்கிரமா
முடிவெடுக்கிறவ இல்ல நீரு. அவ மனசுல என்ன தான்
ஓடுதுனு புரியலைடி" என்றவளை கேலியாக பார்த்தபடி கரோலின் பேக்கரியின் இன்னொரு புறம் நடைபெறும் உள் அலங்கார
வேலைகளையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.
"லீவ் இட் கிருஷ்! லவ் ஒன்னும் பிளான் பண்ணி வர்றது இல்ல. அது
ஒரு மேஜிக் மாதிரி. எப்போ வரும்னு யாருக்குமே தெரியாது.
நீருவுக்கும் அப்பிடி தான் வந்துருச்சு. எல்லாரும் கிருஷ் மாதிரி இருப்பாங்களா என்ன? ஹர்சா உன் பின்னாடி சுத்தி வந்தும் அவருக்கு ரிப்ளை எதுவும் சொல்லாம
இருக்கிற உன்னை விட நீரு எவ்வளவோ பெட்டர்" என்று கூற கிருஷ்ணஜாட்சி "யூ டூ
புருட்டஸ்" என்றபடி அங்கிருந்து
நகர்ந்தாள்.
அதன் பின் இருவரும் வாடிக்கயாளர்களை
கவனிக்க சென்றுவிட நேரம் போனதே தெரியவில்லை. இரவில் கரோலினிடம் சொல்லிவிட்டுக் கிளம்பிய
கிருஷ்ணஜாட்சி வெளியே வருகையில் அங்கே
அவளுக்காக
ஹர்சவர்தன் காத்திருக்கவும் அவனை நோக்கிச் சென்றாள்.
"உங்களுக்கு வேற
வேலையே இல்லையா? கொஞ்சநாளா உங்க தொல்லை இல்லாம
இருந்துச்சு. இன்னைக்கு மறுபடியும்
ஆரம்பிச்சிட்டிங்களா?" என்று வந்ததும் வராததுமாய் கத்த தொடங்க
ஹர்சவர்தன் அவளை வேடிக்கை
பார்த்தபடி கைகட்டி காரில் சாய்ந்து நின்றான்.
அவள் மூச்சுவிடாமல் அவனை திட்டிவிட்டு ஓயவும் காரிலிருந்து
தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்ட கிருஷ்ணஜாட்சியின்
கண்ணில் எரிமலை குழம்பு பெருக்கெடுக்க அது வெளிவருதற்குள்
தானே தண்ணீரை குடித்துவிட்டு பாட்டிலை காருக்குள் எறிந்தான்.
"கத்தி முடிச்சிட்டியா? இப்போ கிளம்பலாமா?" என்றவனின் செய்கையில் அவள் தான்
அயர்ந்து போனாள். இனி சொல்வதற்கு
எதுவுமில்லை என்ற எண்ணத்தில் அவளும் காரில் சென்று அமர கார் வீட்டை நோக்கி செல்லாமல் வேறுபக்கம்
செல்வதைக் கூட அறியாமல் அவள் முகத்தை
மூடி
அமர்ந்துவிட்டாள். கார் நின்றதும் விழித்தவள் அது அவர்களின் வீடல்ல என்று உணர்ந்ததும் "இது எந்த இடம்? இங்க எதுக்கு என்னை கூட்டிட்டு வந்திருக்கிங்க?" என்று கேட்டபடி இறங்க ஹர்சவர்தன் பதில்
பேசாமல் புன்னகைத்தான்.
பின்னர் "வேற என்னவா இருக்க முடியும்? இது ரெஸ்ட்ராண்ட். இங்கே கேண்டில் லைட்
டின்னர் ரொம்ப ஃபேமஸ்னு
கேள்விப்பட்டிருந்தேன். அதான் சாப்பிடலாம்னு தோணுச்சு. உன்னையும் கூட்டிட்டு வந்துட்டேன்" என்று
சொல்ல
கிருஷ்ணஜாட்சி "எனக்கு வெளியே சாப்பிடுற பழக்கம்
கிடையாது" என்றாள் பட்டென்று.
அவனோ "இன்னைக்கு ஒரு நாள் சாப்பிடு பிளீஸ் கிருஷ்ணா!
எனக்காக" என்று கூற
அவள் அதே கடுப்புடன்
"உங்களுக்காக
நான் ஏன் சாப்பிடணும்? என்னை இரிட்டேட்
பண்ணாம வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க.
இல்லை சாப்பிட்டே தான் ஆகணும்னா நீங்க மட்டும் உள்ளே போய் தனியா கேண்டில் லைட் டின்னரை
என்ஜாய் பண்ணுங்க. என்னால உங்க கூட வர
முடியாது"
என்றாள் தீர்மானமாக.
அவளது பிடிவாதத்தில் வெறுத்துப்
போனவனாய் காரில் சென்று அமர்ந்தவன் கார் கதவை அறைந்து சாத்திய விதத்திலேயே அவனது கோபம் வெளிப்பட
கிருஷ்ணஜாட்சி அதை உதட்டுச்சுழிப்புடன் அலட்சியம்
செய்துவிட்டு மீண்டும் முகத்தை கரங்களில் புதைத்தபடி அமர்ந்து கொண்டாள்.
மீண்டும் அவள் கண்
விழிக்கையில்
வீடு வந்திருக்க ஹர்சவர்தன் பார்க்கிங்கில் காரை விட்டுவிட்டு இறங்கியவன் கிருஷ்ணஜாட்சி அவுட்
ஹவுஸிற்குள் நுழையும் முன்னர் "கிருஷ்ணா! எப்போ தான் நீ மனசு மாறுவ?" என்று கேட்டு வைக்க அவள் பாதி தூரம் சென்றிருந்தவள் மீண்டும் அவன் அருகில்
வந்தாள்.
"இந்த ஜென்மத்துல
இல்லை! நீங்க என்ன
நினைச்சிட்டிருக்கிங்க? இவ்ளோ நாள்
பேசக்கூடாத பேச்செல்லாம் பேசிட்டு ஒரு நாள்
திடீர்னு வந்து நான் உன்னை வருசக்கணக்கா லவ் பண்ணுறேனு வசனம் பேசுனா நான் எல்லாத்தையும்
மறந்துட்டு உங்க பின்னாடி ஓடி வரணுமோ? மத்ததை கூட
மன்னிச்சிடுவேன், ஆனா வார்த்தைக்கு
வார்த்தை என் அம்மாவை ஓடுகாலினு சொன்ன
உங்கம்மா பத்மாவதி இருக்கிற வீட்டுல என் கால் படவே படாது. நீங்க வீட்டுக்குள்ள போங்க. இல்லைனா
உங்கம்மா இதுக்கும் என்னை அசிங்கப்படுத்த
போறாங்க" என்று வெறுப்புடன் கூறிவிட்டு சென்றாள்.
ஹர்சவர்தன் கோபத்துடன் புல்தரையை
உதைத்து விட்டு வீட்டை நோக்கிச் சென்றவன் சில நிமிடங்களில் கையில் சூட்கேசுடன் அவுட் ஹவுஸை
நோக்கிச் சென்றான். கிருஷ்ணஜாட்சி கதவை நீரஜாட்சி
வரும் வரை எப்போதும் திறந்து வைத்திருப்பதில்லை. அன்றும் அவ்வாறு உள்பக்கம் தாழிட்டிருந்தவள் கதவு
தட்டப்படும் சத்தம் கேட்டதும் நீரஜாட்சி தான்
வந்துவிட்டாள் என்று திறக்க அங்கே கையில் சூட்கேசுடன் நின்று கொண்டிருந்த ஹர்சவர்தனை கண்டதும்
திகைத்தாள்.
பின்னர் சுதாரித்தவள்
"இந்த
நேரத்துல கையில சூட்கேசோட இங்கே என்ன பண்ணுறிங்க? ஊரை
விட்டுப் போக போறிங்களா? என் கிட்ட சொல்லிட்டு போக தானே வந்திங்க? பை டேக் கேர்" என்று பொறிந்துவிட்டு மீண்டும் கதவை தாழிடப்
போக அவன் அதற்குள் கதவைப் பிடித்து
நிறுத்த
கேள்வியாய் அவனை நோக்கினாள்.
"நான் ஊரை விட்டுலாம் போகலை. அப்பிடியே போனாலும் ஹனிமூனுக்கு
தான் போவேன். சோ நீ சொன்ன பை அண்ட்
டேக்
கேரை நீயே வச்சிக்கோ. இப்போ வழி விடு" என்றபடி அவளை விலக்கிவிட்டு வராண்டாவில் நுழைந்தவனை அவளால் தடுக்க
இயலவில்லை.
கடுப்புடன் ஹாலுக்குள் செல்லும்
வாயிலை மறித்தவள் "உங்களுக்கு தலையில
எதுவும் அடி பட்டுடிச்சா? ஏன் இப்பிடிலாம்
பிஹேவ் பண்ணுறிங்க? இன்னும் கொஞ்ச
நேரத்துல நீரு வந்துடுவா. அவ வந்து
ரசாபாசம் ஆகறதுக்குள்ள கிளம்புங்க" என்று எச்சரிக்க
அவனோ "நான் ஏன் போகணும்? உனக்கு
தான் ஆத்துக்கு வர இஷ்டமில்லனு சொல்லிட்ட. அதுக்குனு அப்பிடியே விட்டுட முடியுமா? அதான் நான் என்னோட ஜாகையை அவுட்
ஹவுஸுக்கு மாத்திட்டேன். இனிமே நான் இங்கே
தான் இருக்கப் போறேன், என்
ஆத்துக்காரியோட" என்று உறுதியான குரலில்
கூறிவிட்டு அவள் கைகளை விலக்கிவிட்டு ஹாலுக்குள் சென்றுவிட கிருஷ்ணஜாட்சி அவனை எப்படி
வெளியேற்றுவது என்பது புரியாமல் திகைத்தபடி கையை
பிசைந்து கொண்டு நின்றாள்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDeleteWow super mudivu
ReplyDeleteபூங்காற்றிலே உன் சுவாசம்..! எழுத்தாளர்: நித்யா மாரியப்பன் (அத்தியாயம் - 33)
ReplyDeleteஉண்மை தானே..! நீரு கிருஷ்ணாவை பத்தி மட்டும் யோசிக்கிறாளே தவிர
ரகுநந்தனைப் பத்தி யோசிக்கவேயில்லையே...?
போகட்டும், அவ கண்ணுல அப்பப்ப மின்னுற அந்த காதல் பொய்யா என்ன...?
அது சரி, ஆம்பிடையாள் நம்ம வழிக்கு வரலைன்னா, ஆத்துக்காரன் அவ வழிக்கு போயிட வேண்டியது தான்.
போர்த்திக்கிட்டு படுத்தா என்ன, படுத்துக்கிட்டு போர்த்திக்கிட்டா என்ன ரெண்டும் ஒண்ணு தானே...?
😀😀😀
CRVS (or) CRVS 2797