ஜூன் மாத நாவல் - இது வானின் பூபாளம்

போதைக்காக சிறுவர்கள் ஒயிட்னர்,
இருமல் மருந்து, பெவிகால், பெட்ரோலை போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானோர்
சக நண்பர்களிடையே தனது ஹீரோயிசத்தைக் காட்டுவதற்கென முதலில் போதைப்பழக்கத்தைத் துவங்குகின்றனர்.
பிறகு படிப்படியாக அதற்கு அடிமையாகி விடுகின்றனர்.
-தினகரன் 04.04.2018
லோட்டஸ் ரெசிடென்சி..
பல ஏக்கர் பரப்பில் விரிந்திருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒவ்வொரு
பிரிவிலும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட சீட்டுக்கட்டுகளைப் போல வீடுகள்
அமைந்திருந்தன. அதன் ஒரு பக்கத்தில் பசும்புல்வெளியுடன் சிறுவர்கள் விளையாடுவதற்கான
பூங்காவும், இன்னொரு பக்கத்தில் நீச்சல்குளமும் அமைந்திருந்தன.
அந்த லோட்டஸ் ரெசிடென்சியின் நுழைவு வாயிலுக்குள் ஸ்கூட்டியுடன் நுழைந்தாள்
சாருலதா. வாகன தரிப்பிடத்தில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு தனது பேக் மற்றும் மொபைல்
சகிதம் மின்தூக்கிக்குள் நுழைந்தவளை இரு கதவுகளைத் திறந்து அரவணைத்துக் கொண்டது அந்த
மின்தூக்கி.
C பிரிவின் மூன்றாவது தளத்தில் மின் தூக்கி நிற்கவும் அதிலிருந்து இறங்கியவள்
தங்களின் வீடு அமைந்திருந்த வராண்டாவில் நடக்கத் துவங்கினாள். அவர்களின் ஃப்ளாட்டான
CII2வின் கதவு தாழிடப்பட்டிருக்க அந்நேரத்தில் தான் தமக்கை தனக்கு அளித்திருந்த இன்னொரு
சாவியை தான் வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டுச் சென்றது நினைவுக்கு வந்தது அவளுக்கு.
உடனே ஹேமலதாவுக்குப் போனில் அழைத்தாள். இரண்டு ரிங்கிற்கு பின்னர் இணைப்பு
துண்டிக்கப்பட சார்ஜ் தீர்ந்து போனதால் மொபைலும் தனது உயிரை விட்டது. ஹேமலதா எப்போது
வீட்டுக்குத் திரும்புவாள் என்பது புரியாத புதிர் அவளுக்கு. ஏனெனில் சினிமா உலகில்
வேலை கிடைத்தும் அதில் அவளுக்கு அப்படி ஒன்றும் சந்தோசம் இல்லை.
எனவே சொந்தமாக அழகுநிலையம் ஆரம்பிப்பதற்கான பணியில் இறங்கியிருந்தாள் ஹேமலதா.
அது தொடர்பான வேலைகளுக்காக அலைவதால் அவளால் குறித்த நேரத்துக்கு வீடு திரும்ப முடியாமல்
போகவும் தங்கையிடம் இன்னொரு சாவியைக் கொடுத்து வைத்திருந்தாள்.
ஆனால் சாருலதா நண்பனின் கார் பந்தயத்தைக் காணும் ஆர்வத்தில் கிளம்பிச் சென்றவள்
சாவியை மறதியாக வீட்டிலேயே விட்டுச் சென்றுவிட இப்போது வேறு வழியின்றி தமக்கைக்காக
காத்திருக்க முடிவு செய்தாள்.
சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தவளின் பார்வையில் பட்டனர் அவர்களின் அடுத்த
ஃப்ளாட்வாசிகளான நடுத்தரவயது தம்பதியினர். அவர்கள் இங்கே குடி வந்து இரண்டு வருடங்கள்
ஆகிறது. அவர்கள் இங்கே குடிபெயர்ந்ததில் இருந்து அங்கே நிலையாகத் தங்கி அவள் பார்த்ததில்லை.
அவர்களுடன் இருக்கும் இளம்பெண் ஒருத்தி மட்டும் அங்கேயே தங்கியிருந்தாள். அந்த தம்பதியினர்
மாதம் ஒரு முறை வந்து ஒரு வாரமோ பத்து நாட்களோ தங்கிவிட்டுச் செல்வர்.
இந்த இரண்டு வருடங்களில் அந்தப் பெண்ணோ அந்த தம்பதியினரோ இங்கிருக்கும் யாரிடமும்
பேசி சாருலதா கண்டதில்லை. அவர்கள் மூவரின் வதனங்களிலும் எப்போதும் சோகம் மட்டுமே கவிழ்ந்திருக்கும்.
வேறு யாரும் அவர்களிடம் பேச முயன்றதுமில்லை.
அவர்கள் வேறு யாருமல்ல. வைஷ்ணவியும் வாசுதேவனும் தான். மகளது உடல்நிலை மோசமாக
இருந்த காலகட்டத்தில் மருத்துவமனைக்கு அருகே இந்த அடுக்குமாடி குடியிருப்பு இருந்ததால்
அவர்கள் அங்கே குடிபெயர்ந்தனர். கூடவே வைஷ்ணவியின் தங்கை மகளான மயூரிக்கும் அங்கிருக்கும்
கல்லூரியிலேயே விரிவுரையாளர் பணி அமைந்துவிட அவள் யசோதராவைத் தானே கவனித்துக் கொள்வதாக
கூறிவிட்டாள்.
வாசுதேவனும் வைஷ்ணவியும் இங்கேயே இருந்தால் யசோதராவைக் காணும் போதெல்லாம் நொறுங்கி
போவர் என்பதால் அவர்களை சொந்த ஊரான மதுரைக்கே அனுப்பிவைத்து விட்டாள். ஆனால் மனம் பொறுக்காது
அவர்கள் மாதம் ஒரு முறை சென்னைக்கு வந்து தங்கிவிட்டுச் செல்வது வழக்கம்.
மற்றவர்களாக இருந்தால் பெற்ற மகளின் கதியை எண்ணி உடைந்து போயிருப்பர். ஆனால்
வைஷ்ணவியும் வாசுதேவனும் என்றாவது ஒரு நாள் மகள் கண் விழிப்பாள் என்ற நம்பிக்கையுடன்
தங்களின் பூர்வீக கிராமத்தில் இருந்த தோட்டம் துரவுகளைப் பராமரிப்பதிலும் மகளுக்காக
வேண்டுதல் வைத்து கோவில்களுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் தான தருமம் செய்வதிலும்
காலத்தை ஓட்டினர்.
அவர்கள் அவ்வபோது இங்கே வரும் நேரங்களில் சாருலதாவும் ஹேமலதாவும் கூட வெறும்
மௌனப்பார்வையுடன் அவர்களைக் கடந்து விடுவதே வழக்கம். இன்றும் அப்படியே இருக்க முடிவு
செய்தாள் அவள். ஆனால் வழக்கத்துக்கு மாறாக அந்தத் தம்பதியினரின் முகம் இன்று சற்று
தெளிந்திருப்பதைப் போல தோணியது.
வைஷ்ணவி வீட்டின் கதவைத் திறந்தவர் சாருலதா வராண்டாவில் நிற்பதைப் பார்த்துவிட்டு
அவரது கணவரிடம் ஏதோ சொல்ல அவரோ “நீ போய் கூப்பிட்டுப் பாரேன் வைஷூ... பெரிய பொண்ணு
இன்னும் வீட்டுக்கு வரலனு நினைக்கேன்” என்று சொல்ல வைஷ்ணவி சாருலதாவிடம் வந்தார்.
“ஏன்மா வெளியே நின்னுட்டிருக்க? சாவி இல்லயா? உன்னோட அக்காவுக்கு வெயிட் பண்ணுறியா?”
அவர் கேட்டதும் ஆமென்றவள், தான் சாவியை வீட்டில் மறந்துவைத்து விட்டதை சொல்லவும்
வைஷ்ணவி தன்னுடன் வருமாறு அழைக்க சாருலதா அவர்களுக்கு ஏன் வீண் சிரமம் என முதலில் தயங்கினாள்.
“இதுல சிரமத்துக்கு என்னம்மா இருக்கு? சிட்டில தான் பக்கத்துவீட்டுக்காரங்க
எப்பிடி போனாலும் கவலை இல்லங்கிற மனநிலை இருக்கு... எங்க ஊர்ப்பக்கம் வயசுப்பொண்ணை
இவ்ளோ நேரத்துக்கு வெளிய நிக்க வைக்க மாட்டோம்... ஒரு பொண்ணுக்கு அம்மாவா இன்னொரு பொண்ணு
இப்பிடி நிக்குறத பாக்க எனக்கு கஷ்டமா இருக்கு... நீ எதுவும் பேசாம உள்ள வா” என்ற வைஷ்ணவி
அவளைத் தங்களின் CII3 ப்ளாட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார்.
சாருலதா அவருடன் சென்றவள் ஹால் சோபாவில் அமர்ந்திருந்த வாசுதேவனை நோக்கி முறுவலித்தவாறே
அமர்ந்தவள் அவர் சகஜமாகப் பேசவும் தயக்கமின்றி பேச ஆரம்பித்தாள். அப்போது தான் அந்த
ஹாலில் ஆங்காங்கே மாட்டப்பட்டிருந்த அவர்களின் குடும்ப புகைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தாள்.
அதில் வைஷ்ணவி வாசுதேவன் தம்பதியினருடன் மயூரியும் யசோதராவும் இடம்பெற்றிருக்க
இது வரை யசோதராவைப் பார்த்திடாத சாருலதாவுக்கு அவள் யாரென்ற கேள்வி மனதில் உதயமானது.
வாயைத் திறந்து வாசுதேவனிடம் அதைக் கேட்டும் விட்டாள்.
முதலில் மௌனம் காத்தவர் பின்னர் தனது மகளின் உடல்நிலையைப் பற்றி சொல்லிவிட்டு
“எங்களோட ரெண்டு வருச தவத்துக்கு இப்போ தான் கடவுள் கண்ணைத் திறந்திருக்கார்மா... என்
பொண்ணுக்கு சுயநினைவு வந்துடுச்சு... இனிமே இந்த சிட்டில அவ இருக்குறது அவளுக்கு நல்லது
இல்ல... கொஞ்சநாள் அவளோட போக்குக்கு விட்டுட்டு எங்க கூடவே கூட்டிட்டுப் போயிடலாம்னு
இருக்கோம்” என்றார் வாசுதேவன்.
சாருலதாவுக்கு இப்போதும் யசோதராவைப் பற்றி முழுமையாக எதுவும் தெரியவில்லை.
ஏதோ ஒரு விபத்தில் கோமாவுக்குச் சென்றுவிட்டாள் என்றளவில் மட்டும் புரிந்துகொண்டவளுக்கு
இதற்கும் சென்னையில் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்பது விளங்கவில்லை. ஆனால் அவர்களிடன்
தோண்டி துருவுவது நாகரிகமாகாது என வெறுமெனே தலையாட்டி வைத்தாள்.
வைஷ்ணவி மூவருக்கும் காபி போட்டு எடுத்து வந்தவர் சாருலதாவிடம் ஒரு கோப்பையை
நீட்ட அவள் வாங்கி அருந்த ஆரம்பித்தாள். அவர்கள் பொதுப்படையாகப் பேசிக்கொண்டிருக்கும்
போதே சாருலதா தனது தமக்கையைப் பற்றியும் தன்னைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்தாள்.
அவர்களும் இத்தனை நாட்கள் இருந்த இறுக்கமான மனநிலை மாறி அவளது சிறுபிள்ளைத்தனமான
பேச்சில் கலந்துகொண்டனர். அதிலும் அவளது பாட்டியைப் பற்றி சொன்னதும் வைஷ்ணவி பழைய திரைப்படங்களை
நினைவுறுத்திப் பேசியவர்
“லலிதாம்மா சின்ன ரோல்ல வந்தாலும் அவங்கள மாதிரி காமெடியா நடிக்க யாராலயும்
முடியாது... என் மாமியாருக்கு அவங்கனா ரொம்ப இஷ்டம்” என்று சிலாகிக்கவும் சாருலதாவுக்கு
மனதுக்கு இதமாக இருந்தது. நீண்டநாட்களுக்குப் பின்னர் காலஞ்சென்ற பாட்டியைப் பற்றிய
புகழ்ச்சி காதில் விழுந்ததில் உண்டான சந்தோசம் அவளுக்கு.
பேசிக் கொண்டிருக்கும் போதே சாருலதாவின் போனை சார்ஜில் போட்டவர் அதை அந்த அறையின்
மேஜை மீது வைக்கும் போது அந்த மேஜை மீதிருந்த நட்சத்திர வடிவிலான டிராபி ஒன்று இருக்கவும்
அவளது கவனம் அதன் மீது சென்றது.
“ஆன்ட்டி இந்த டிராபி யாரோடது?”
“என் பொண்ணு வாங்குனதுடா... அவ ஜர்னலிஸ்டா வேலை பாத்தப்போ பெஸ்ட் எம்ப்ளாயியா
செலக்ட் பண்ணி அவங்க சேனல்ல குடுத்தாங்க”
அவர் பெருமிதமாக உரைக்கவும் சாருலதாவுக்கு ஆச்சரியம். தன்னருகில் அமர்ந்து
காபி அருந்திக் கொண்டிருந்த வாசுதேவனின் முகத்திலும் கர்வம் மின்னியது.
“உங்க டாட்டர் ஜர்னலிஸ்டா? எந்தச் சேனல்ல ஒர்க் பண்ணுனாங்க அங்கிள்?”
“ஜஸ்டிஷ் டுடேலடா... ரொம்ப டெடிகேட்டடா ஒர்க் பண்ணுனா... அதுக்குக் கிடைச்ச
டிராபி தான் அது” என்று சொன்னவர் திடீரென அமைதியாகவும் சாருலதா இரு தம்பதியினரின் முகத்தையும்
மாறி மாறி பார்க்க வைஷ்ணவியும் அமைதியாகி விட்டார்.
“அந்த வேலையால தான் அவ இன்னைக்கு இந்த நிலமைல இருக்கா... இனிமே அதைப் பத்தி
பேசாம இருக்குறது தான் நல்லது... அந்த வேலையும் வேண்டாம், இந்தச் சென்னையும் வேண்டாம்...
எங்களுக்குனு இருக்குற ஒரே பொண்ணு இவ தான்... ரெண்டு வருசம் நரகத்த அனுபவிச்சது போதும்னு
தோணுது... அதான் எங்களோடவே கூட்டிட்டுப் போக போறோம்” என்று இருவரும் சொல்லவும் சாருலதாவுக்கு
அதைக் கேட்கவே மனம் வலித்தது.
கூடவே அவளது பதின்வயதுக்கு உண்டான ஆர்வமும் குறும்பும் யசோதராவின் வேலையில்
அவள் சந்தித்த சவால்களை அவள் எவ்வாறு எதிர்கொண்டிருப்பாள் என அறியவும் முற்பட்டது.
அவர்கள் சொன்ன வரை மிகவும் தைரியசாலியான இது வரை நேரில் கண்டிராத அந்த யசோதரா
அந்நேரம் சாருலதாவின் மனதில் கதாநாயகியாக பதிந்தாலும் இன்னும் வெளியுலகின் முகத்திலறையும்
உண்மைகளை அனுபவித்ததில்லை என்பதால் யசோதராவின் உடல்நிலை குறித்த தகவல் அவளுக்குச் சற்று
கலவரத்தையும் உண்டாக்கியது.
அவர்களுக்கு ஆறுதலாக அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஹேமலதாவிடம் இருந்து
போனில் அழைப்பு வர, தான் அடுத்த ஃப்ளாட் ஆன்ட்டி அங்கிளுடன் பேசிக் கொண்டிருப்பதாகச்
சொன்னவள் இருவரிடமும் விடை பெற்றாள்.
போகும் முன்னர் இருவரிடமும் அவள் சொன்னது “உயிரைப் பயணம் வச்சு வேலை பாக்குற
தைரியம் எல்லாருக்கும் வராது... ஆனா உங்க டாட்டருக்கு அது இருக்கு... நிஜவாழ்க்கைல
அந்தளவுக்குப் போல்ட் அண்ட் ப்ரேவ் கேரக்டரை நான் மீட் பண்ணுனதே இல்ல... அவங்க டிஸ்சார்ஜ்
ஆனதும் கண்டிப்பா நான் அவங்கள மீட் பண்ணுவேன்” என்பது தான்.
அவள் சொன்ன வார்த்தை வாசுதேவனுக்கும் வைஷ்ணவிக்கும் சந்தோசத்தைக் கொடுத்தாலும்
இன்னொரு முறை தங்கள் மகளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதென்ற எண்ணமும் அவர்களுக்குள் உறுதி
பெற்றது.
அதே நேரம் அவர்களிடம் இருந்து விடைபெற்ற சாருலதா தங்களது ஃப்ளாட்டுக்குள் நுழைந்த
போது ஹேமலதாவின் சோர்ந்திருந்த முகம் தான் அவளை வரவேற்றது.
தமக்கையிடம் ஓடிச் சென்றவள் “என்னாச்சு ஹேமுக்கா? ரொம்ப டயர்டா இருக்கியா?
நான் வேணும்னா இன்னைக்கு டின்னர் சமைக்கவா?” என அக்கறையாய் வினவ
“இல்ல சாரு... நானே சமைக்கிறேன்... நீ ஹாஃப் இயர்லி எக்சாமுக்குப் படிக்க ஆரம்பி....
உன் ஃப்ரெண்டோட ரேஸ் தான் முடிஞ்சு போச்சுல்ல” என சொல்லிவிட்டு எழுந்த ஹேமலதா முகம்
கழுவச் சென்றுவிட சாருலதாவும் தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.
ஆனால் தமக்கையின் சோர்ந்த முகம் மனதை உறுத்தவும் சமையலறைக்குள் நுழைந்தாள்
அவள். ஹேமலதாவுக்கு எதுவும் பிரச்சனையோ என வினவ ஆரம்பித்தாள்.
“பேங்க் லோன் சாங்சன் ஆகுறது ரொம்ப டிலே ஆகுது சாரு... எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல
ஒர்க் பண்ணுறது ரொம்ப சிரமமா இருக்கு... இன்னைக்கும் சாண்ட்ரா கூட பிரச்சனையா ஆயிடுச்சு...
கடைசில டைரக்டர் சாரும், சித்தார்த் சாரும் வந்து பேசுனதுக்கு அப்புறம் தான் அவ சைலண்ட்
ஆனா... அவ ரொம்ப மாறிட்டாடி”
“க்கும்! அவ மாறலனா தான் ஆச்சரியம்... அவளுக்குப் போய் உன்னை மேக்கப் ஆர்ட்டிஸ்டா
போட்டது தான் தப்பு... பேசாம நான் ஜித்து கிட்ட அகெய்ன் பேசி உன்னை அவனோட அண்ணாவுக்கு
மேக்கப் ஆர்ட்டிஸ்டாவோ ஹேர் ஸ்டைலிஸ்டாவோ போடச் சொல்லவா?”
சாருலதா இவ்வாறு வினவவும் ஹேமலதாவுக்கு இன்று ஷூட்டிங் நடைபெற்ற இடத்தில் சித்தார்த்
அலட்சியத்துடன் பேசியது தான் நினைவுக்கு வந்தது.
உடனே மறுப்பாகத் தலையசைத்தவள் “இல்ல சாரு! அதுல்லாம் வேண்டாம்... நான் சாண்ட்ரா
கூடவே ஒர்க் பண்ணிக்கிறேன்” என அவசரமாகத் தடுத்தாள்.
தெரியாத தேவதைக்கு தெரிந்த பிசாசே மேல் என்ற எண்ணம் ஹேமலதாவுக்கு. அதன் பின்னர்
அவளது தங்கையும் அவளை வற்புறுத்தவில்லை.
இருவருமாகச் சேர்ந்து சமைத்து முடித்து சாப்பிடும் போது சாருலதா திடீரென நினைவு
வந்தவளாக பக்கத்து ஃப்ளாட்வாசிகளைப் பற்றி பேச ஆரம்பித்தாள்.
“அந்த ஆன்ட்டியும் அங்கிளும் இப்போ மதுரை பக்கத்துல அவங்க நேட்டிவ் வில்லேஜ்ல
செட்டில் ஆயிட்டாங்களாம்... அவங்க பொண்ணு, அதான் அந்த ரிப்போட்டர் அக்காவோட கடைசி ரிப்போர்ட்
ஒரு இண்டஸ்ட்ரியலிஸ்ட் பத்தி தானாம்... அதுல பழி வாங்குறதுக்காக தான் ஆக்சிடெண்ட் மாதிரி
செட் பண்ணிட்டாங்கனு வாசு அங்கிள் சொன்னாரு... அந்த அக்காக்கு இப்பிடி ஆனதும் அவரால
வேலைல கவனம் செலுத்த முடியாம வி.ஆர்.எஸ் வாங்கிட்டு சொந்த கிராமத்துக்குப் போயிட்டாராம்...
அந்த ரிப்போர்ட்டர் அக்காவ பாத்துக்கிட்டது வைஷூ ஆன்ட்டியோட தங்கச்சி பொண்ணு தானாம்…
அவங்கள நம்ம கூட அடிக்கடி பாத்திருக்கோம்... அந்த பிளாக் கலர் ரெனால்ட் க்விட் கேர்ள்
தான் அந்த பொண்ணு... அவங்க நேம் மயூரினு சொன்னாங்க... ஜித்து படிக்குற காலேஜ்ல தான்
லெக்சரரா ஒர்க் பண்ணுறாங்களாம்”
தங்கை சொல்லும் அனைத்தையும் கதை கேட்பது போல கவனித்தவளுக்கு, தான் வரும் வரை
தங்கை தனக்காக காத்திருப்பது பொறுக்காது வீட்டுக்கு அழைத்துச் சென்ற வாசுதேவன் வைஷ்ணவி
தம்பதியினர் மீது மரியாதை பிறந்தது.
இதற்கு கட்டாயம் நன்றி சொல்லியே ஆகவேண்டும். வழக்கம் போல அவர் காலை நேரம் பூங்காவில்
நடைபயிற்சி செய்யும் போது சொல்லிக் கொள்ளலாம் என எண்ணியவளாய் சாப்பிட ஆரம்பித்தாள்
அவள்.
ஆனால் சாருலதாவோ புகைப்படத்தில் கண்ட யசோதராவை நேரில் சந்திக்கும் நாள் எப்போது
வருமென அந்நாளை ஆவலுடன் எதிர்நோக்க ஆரம்பித்தாள்.
வந்தாயே மழையென நீயும்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 4)
ஒருவேளை,அந்த யசோதராவை மீட் பண்ணப்பிறகு இந்த சாருலதாவுக்கும் அந்த ப்ரொபஸன் மேலேயே இன்ஸ்ட்ரெஸ்ட் வந்து, அதே கோர்ஸையே எடுத்து படிக்கணும்ன்னு தோணுமோ என்னவோ...?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Very interesting
ReplyDelete