ஜூன் மாத நாவல் - இது வானின் பூபாளம்

NM தமிழ் நாவல் தளம் - Online comunity for Tamil Novels
“போதைப் பழக்கம்! இதற்கு சிறியவர், பெரியவர் பாகுபாடில்லை.
யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வசியப்படுத்திவிடும் ஆற்றல் இதற்கு உண்டு.
அதிலும் இளையவர்களில் குடும்பத்தினராலோ, சமூகத்தாலோ புறக்கணிக்கப்படுபவர்கள் தற்காலிக
மகிழ்ச்சிக்காகப் போதைப் பழக்கத்தை நண்பர்களாக்கிக் கொள்கிறார்கள். தங்களுக்கான பிரச்னைகளை
எதிர்கொள்ள இயலாதவர்களும் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள். இது போன்ற உட்புற,
வெளிப்புறத் தூண்டல்களால் போதைப் பழக்கம் சிறார்களையும் பதின் பருவத்தினரையும் பற்றிக்கொள்கிறது”
-லட்சுமணன்.ஜி, விகடன், 28.06.2018
கே.ஆர் மல்டிஸ்பெஷாலிட்டி
மருத்துவமனை….
மருத்துவ உபகரணங்கள் சூழ்ந்த அந்த அறையின் படுக்கையில் விழி மூடி அசைவற்றுக் கிடந்தாள் ஒரு இளம்பெண்.
அவளையே பார்த்தபடி இருக்கையில் அமர்ந்திருந்தாள் மற்றொருத்தி.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்துக் கொண்டிருந்தவளுக்கு
கடந்த சில நாட்களாக அதன் உதவி தேவையில்லை எனுமளவுக்கு உடலில் முன்னேற்றம் வந்திருந்தது.
அதிலிருந்து தினந்தோறும் மருத்துவமனைக்கு வந்து படுக்கையில் வெளியுலக ஸ்ரமணையின்றி
விழி மூடிக் கிடப்பவளிடம் அமர்ந்து ஏதாவது பேசுவதை வழக்கமாக்கியிருந்தாள் அந்த மற்றொருத்தி.
ஆனால் அந்தப் படுக்கையில் கிடந்த பெண்ணுக்கு இன்னும் முழுவதுமாக உடல்நிலை தேறவில்லை
என்பதற்கு அடையாளமாய் அவளது படுக்கையுடன் இணைக்கப்பட்டிருந்த சிறுநீர்ப்பையும் அதில்
விரிக்கப்பட்ட இரப்பர் ஷீட்டும் இன்னும் அப்படியே தான் இருந்தது.
கடந்த இரு வருடங்களாக இயற்கை உபாதைகளோடு பெண்களுக்கே உரித்தான மாதாந்திர உபாதைகளும்
அதன் போக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்க அதைப் பற்றிய பிரக்ஞையின்றி கிட்டத்தட்ட உணர்வற்ற
ஜடமாக கிடந்தவளுக்கு அப்படி என்ன தான் பிரச்சனையாக இருக்க கூடுமென நீங்கள் கேட்கலாம்.
அவள் இவ்வாறு கிடக்க காரணம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த விபத்தில்
தலையில் பட்ட காயம் அவளைக் கோமாவில் ஆழ்த்தியிருந்தது.
மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிரச்சிகிச்சைக்குப் பிறகும் அவளுக்குச் சுயநினைவு
திரும்பாது போகவே சில பல பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு தான் அவளது தலைக்காயம் அவளைக்
கோமாவில் தள்ளிவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
அதிலும் கிளாஸ்கோ கோமா அளவுகோலின் படி அவள் மீண்டும் சுயநினைவுக்கு வருவதற்கான
வாய்ப்பு குறைவு என்பதை முப்பது நாட்களுக்குப் பிறகும் விழி திறவாது வெண்டிலேட்டர்
வழியே சுவாசித்துக் கொண்டிருந்தவளை வைத்து முடிவு செய்து அவளது குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டனர்.
அன்றிலிருந்து அந்தக் கோமா நோயாளி பெண்ணுக்கு உதவியாக இருப்பவள் தான் அவளது
தோழியான மற்றொரு இளம்பெண்.
சினிமாவில் நடப்பதை போல கோமா நோயாளிகள் வெறுமெனே விழி மூடிக் கிடப்பது இல்லை.
அவ்வபோது விரல்கள் அசைவதும், திறவாத இமைகளுக்கு மேலே கருவிழிகள் அங்குமிங்கும் உருளுவதுமாக
தான் அந்தப் பாதிக்கப் பட்ட பெண் இத்தனை நாட்கள் இருந்திருந்தாள்.
அத்தோடு அவளுக்கு நரம்பு வழியே கொடுக்கப்படும் திரவங்கள், அவ்வபோது படுக்கைப்புண்
வராமலிருப்பதற்காக அளிக்கப்படும் மருந்துகள் என அனைத்தையும் கூடவே இருந்து கவனித்த
அந்த தோழிப்பெண்ணும் படுக்கையில் கிடப்பவளை நினைத்து இரண்டு வருடங்களாக இரத்தக்கண்ணீர்
தான் வடித்துக் கொண்டிருக்கிறாள்.
ஆனால் இரு வாரங்களுக்கு முன்னர் கோமாவில் கிடந்தவள் விழி திறந்து பார்த்ததாக
மருத்துவமனையில் இருந்து தகவல் வரவும் ஓடோடி வந்திருந்தாள் அந்த தோழிப்பெண்.
“ஆப்டர் டூ லாங் இயர்ஸ் உங்க ஃப்ரெண்டுக்குக் கொஞ்சம் கொஞ்சமா சுயநினைவு வர்ற
மாதிரி இருக்கு மிஸ் மயூரி… இது ஒரு நல்ல முன்னேற்றம்… இப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா அவங்க
டிரீட்மெண்டுக்கு ரெஸ்பான்ஸ் பண்ணுனா சீக்கிரமே அவங்க முழுசா குணமாக சான்ஸ் இருக்கு”
மருத்துவரின் வார்த்தையை மெய்பிப்பது போல அந்த மயூரி இருக்கும் போதே ஒரு முறை
படுக்கையில் அசைவற்றுக் கிடந்தவள் சிரமத்துடன் அரைகுறையாய் விழி திறந்து அவளை ஏறிட்டுவிட்டு
மீண்டும் உறக்கத்தில் ஆழ்வது போல கண்களை மூடிக் கொண்டாள்.
அதன் பின்னர் கடந்த இரண்டு வாரங்களாக அவளது கால்களுக்கு பிசியோதெரபி கொடுக்கப்பட
அதன் பலனாக அவ்வபோது கால்களும் கரங்களும் அசைந்தன. முக்கியமாக அந்த மயூரி என்பவள் அந்த
அறையில் அமர்ந்து பழைய கதைகளைப் பேசத் தொடங்கினால், படுக்கையில் இருப்பவளின் மூடிய
விழிகளுக்குள்ளே கருவிழிகள் உருளும்.
இதையெல்லாம் பார்க்கும் போது அவள் சீக்கிரத்தில் கண் விழித்து பழையபடி மாறிவிடுவாள்
என்ற நம்பிக்கை மயூரிக்கு வந்துவிட்டது.
இன்றைய தினமும் அந்த நம்பிக்கையுடன் அமர்ந்திருந்த மயூரி படுக்கையில் கிடந்தவளிடம்
அசைவு தெரியவும் வழக்கம் போல கண் விழித்துவிட்டு மீண்டும் உறக்கத்தில் ஆழ்வது போல விழி
மூடி விடுவாளோ என்ற ஆதங்கத்துடன் நோக்கினாள்.
முதலில் கருவிழிகள் அசைய, பின்னர் கைவிரல்கள் நடுக்கத்துடன் அசைய ஆரம்பித்தது.
திடீரென அவள் கைவிரல்களை மடக்கி நீட்டி முகம் சுளிக்கவும் தான் அவளுக்கு நரம்பு வழியே
அளிக்கப்பட்ட திரவங்கள் மயூரியின் பார்வையில் பட்டது.
கையை நீட்டி மடக்கும் போது நரம்பில் செருகியிருந்த ஊசியால் அவளுக்கு வலி ஏற்பட்டிருக்க
வேண்டும்! அதனால் தான் முகம் சுளிக்கிறாளென கண்டுகொண்டவளுக்குச் சந்தோசத்தில் கண்ணீரே
வந்துவிட்டது.
ஆம்! கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சிலை போல உணர்வற்றுக் கிடந்தவள் இன்று வலியை
உணர்கிறாள் என்றால் இது அவளது உடல்நிலையில் அடுத்தக் கட்ட முன்னேற்றம் அல்லவா!
வலியில் சுளித்த முகத்துடன் தனது மூடிய இமைகளின் வழியே கண்ணீர்த்துளிகள் பக்கவாட்டில்
வழிய மிகுந்த சிரமத்துடன் விழிகளைத் திறந்தாள் இத்தனை நாட்கள் கோமாவில் ஆழ்ந்திருந்தவள்.
வழக்கம் போல சில நொடிகளில் இமையை மூடிக் கொள்ளாமல் தன் எதிரில் கண்ணீர் வழிய
நின்றவளைப் பார்த்தவள் உதடுகள் நடுங்க ஏதோ சொல்ல முயன்றாள். கைகளையும் உயர்த்த முயன்று
முடியாது தோற்றாள்.
அவளின் இத்துணை போராட்டங்களும் சில நிமிடங்களுக்கு நீடிக்க மயூரி கண்ணீருடன்
“நீ சிரமப்படாத… நான் இப்போவே டாக்டரை கூட்டிட்டு வர்றேன்” என வெளியேற எத்தனித்தாள்.
அப்போது மெல்லிய சத்தம் ஒன்று அவள் செவியில் விழுந்தது. அது படுக்கையில் கிடந்தவளிடம்
இருந்து தான் வந்தது. அதைக் கேட்டதும் தலையில் இடி விழுந்தாற் போல அதிர்ந்த மயூரி கால்கள்
அங்கேயே வேரோட சிலையாய் சமைந்து விட்டாள்.
மெதுவாய் திரும்பித் தோழியைப் பார்த்தவளிடம் மீண்டும் அதே கேள்வியைத் தான்
மெல்லியக்குரலில் கேட்டாள் அந்தக் கோமா நோயாளி பெண். அதைக் கேட்டு திக்பிரமை பிடித்ததைப்
போல அதிர்ந்தாள் மயூரி.
“க..க...கௌ...கௌதம் எங்க மய்யூ?”
இரண்டு வருடங்கள் உபயோகிக்காத குரல் நாண்களிலிருந்து மிகுந்த சிரமத்துடன் வெளியே
வந்த மெல்லிய குரலில் கேட்டாள் படுக்கையில் கிடந்த அந்தப் பெண்.
மயூரி கண்களை அவசரமாகத் துடைத்துக் கொண்டவள் “அவன் இப்போ டெல்லில இருக்கான்
யசோ” என்று சொல்லவும் கண்களை மூடித் திறந்து தனது மன எண்ணங்களை மயூரிக்குப் புரிய வைக்க
முயன்றாள் அந்த யசோ என்ற யசோதரா வாசுதேவன்!
மயூரிக்கு அவள் அடுத்து என்ன கேட்பாள் என்பது பற்றி தெரியுமென்பதால் அவசரமாக
“அத விடு யசோ! நான் டாக்டர் சாரை அழைச்சிட்டு வர்றேன்… நீ மறுபடியும் கண்ணை மூடிடாதடி…
நான் சீக்கிரமா வந்துடுறேன்” என அழுகை கலந்த குரலில் சொல்லிவிட்டு அந்த அறையிலிருந்து
வெளியேறினாள்.
அவள் வெளியேறியதும் முடிந்தளவுக்குக் கண்களைச் சுழற்றிப் பார்த்த போதே உடலோடு
இணைக்கப்பட்டிருந்த மருத்துவ உபகரணங்கள் அந்தந்த பாகங்களில் வலியை உண்டாக்க மெதுமெதுவாய்
உடலில் உணர்வுகள் திரும்பியதை அந்த யசோதராவும் உணர்ந்து கொண்டாள்.
உடலோடு சேர்ந்து மனமும் வலிக்க ஆரம்பித்தது அவளுக்கு. வலியில் கண்ணீர் சுரக்க
அவளது உதடுகளோ “நீ எங்க போன கௌதம்?” என முணுமுணுத்து அடங்கியது.
◆◆◆
“நான் எங்கயும் போகல… உன் கூட தான் இருக்கேன்… நீ ஏன் இவ்ளோ பயப்படுற? உனக்கு
என் மேல நம்பிக்கை இருக்கு தானே! ஒருத்தவங்கள நம்ம நம்புறதுக்கு அடையாளமே எது நடந்தாலும்
அவங்க பாத்துப்பாங்கங்கிற தைரியம் நமக்குள்ள வர்றது தான்… ஏன்னா நம்பிக்கை இருக்குற
இடத்துல பயத்துக்கு எந்த வேலையும் இல்ல”
தன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தபடி நின்றிருந்தவளிடம் ஆணித்தரமான குரலில் மொழிந்தான் ஒரு ஆடவன். அவன் பேசி முடிக்கவும் அந்தப் பெண் நம்பிக்கை ஊறும் விழிகளுடன் அவனை ஏறிட்டாள்.
“சூப்பர்! ஷாட் ஓகே! குட் ஜாப் சித்து” என்று சொன்னவண்ணம் கேமிராவில் பார்த்தபடி
தன் கையில் பிடித்திருந்த மைக்கில் உரக்கக் கூறினான் கூலர்ஸ் அணிந்திருந்த ஆடவன் ஒருவன்.
அவன் மாதவன். தமிழ் திரையுலகின் வெற்றிகரமான இளம் இயக்குனர்களில் ஒருவன்.
கடந்த சில ஆண்டுகால திரையுலக வாழ்க்கை அவனுக்கு நிறைய அனுபவங்களைப் பரிசாகவும்
தண்டனையாகவும் கொடுத்ததன் பலனாக அவன் இதழில் எப்போதும் விலகாமல் உறைந்திருக்கும் புன்னகை
அவன் முகத்துக்கு தனி வசீகரத்தைக் கொடுத்திருந்தது. இக்கால இளைஞர்களைப் போல குறுமீசையும்
அதைத் தொட்டு நீளும் இரண்டு நாள் தாடியுமாக இருப்பவன்.
காட்சி சரியாகப் படமான திருப்தியுடன் தனக்கே உரித்தான புன்னகை இதழில் விரிய
ஸ்டூடியோவில் போடப்பட்டிருந்த ரெஸ்ட்ராண்ட் அமைப்பிலான செட்டில் போடப்பட்டிருந்த நாற்காலியிருந்து
எழுந்தான் சித்து என்று அழைக்கப்பட்ட சித்தார்த். தமிழ் திரையுலகின் வளரும் இளம் நட்சத்திரம்.
பிரபலங்களுக்கே உரித்தான அலட்சியம் ததும்பும் விழிகள்; சற்றே திமிர் கலந்த
புன்னகை; இவை அனைத்துக்கும் மணிமகுடமாக ‘நான் உங்களினும் மேலானவன்’ என்று சொல்லாமல்
சொல்லும் உடல்மொழி என நட்சத்திர கதாநாயகனுக்கு உரித்தான அனைத்து குணநலன்களையும் ஒருங்கே
கொண்டிருப்பவன்.
போதாக்குறைக்கு அவன் என்ன செய்தாலும் அது சமூக வளைதளங்களில் வைரலாகி வேறு தொலைக்க
நிறைய இளைஞர்களின் சமீபத்திய ‘யூத் ஐகான்’ அவன் தான்.
நெற்றியில் சரியும் சிகையை ஸ்டைலாக கோதியபடி அவன் முன்னே நடக்க அவனைத் தொடர்ந்து
சென்றாள் திரையுலகத் தாரகை சாண்ட்ரா.
இதே மாதவனின் இயக்கத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் பெரும்பாலும்
பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்க இப்போதைக்குத் தமிழ் சினிமாவின் வெற்றிகரமான திரைப்படக்
குழு இவர்கள் தான்.
சித்தார்த் மைக்கைப் பிடித்தபடி தனது அசிஸ்டெண்டிடம் அடுத்தக் காட்சியை விளக்கிக்
கொண்டிருந்த மாதவனிடம் வந்தவன் “மச்சி உண்மையாவே ஷாட் ஓகேயா? இல்லனா இன்னொரு டேக் போலாமா?”
என்று அக்கறையுடன் வினவினான்.
இருவரும் கல்லூரிப்பருவத்திலிருந்தே நெருங்கிய தோழர்கள். அத்தோடு ‘நீ இயக்கினால்
நான் நடிப்பேன்’ என அவனுடன் டீல் பேசிவிட்டுத் தான் சித்தார்த் போட்டிகள் சூழ்ந்த திரையுலகில்
காலடி எடுத்து வைத்தான்.
மிகப்பெரிய தயாரிப்பாளர் தந்தைக்கும், நடன இயக்குனரான அன்னைக்கும் பிறந்த சித்தார்த்
அவர்களது பெயரை உபயோகித்துத் திரையுலகில் கால் பதிக்க விரும்பவில்லை.
மாதவனும் அவனும் சேர்ந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் போராடிய பிறகு தான்
அவர்களின் முதல் படவாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. அதிலும் கடந்த இரண்டாண்டுகளாக
இந்த இருவரும் தமிழ் திரையுலகில் தங்களது அடையாளத்தை வெகு அழுத்தமாகப் பதித்திருந்தனர்.
வலியும் போராட்டங்களும் நிறைந்த நான்கு ஆண்டுகால திரையுலக வாழ்க்கைக்குப் பின்னர் இன்று
தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத கதாநாயகன் – இயக்குனர் காம்போவில் இவர்களும் அடக்கம்.
அவ்வளவு உயரத்துக்குச் சென்ற பின்னரும் இருவருக்குமிடையே உள்ள நட்பு அப்படியே
தான் இருந்தது. அந்த உரிமையில் இருவரும் ஒருமை அழைப்பைத் தான் எல்லா இடத்திலும் பின்பற்றுவர்.
“நோ மச்சி… இட்ஸ் பெர்ஃபெக்ட்… நீ நெக்ஸ்ட் ஷாட்டுக்கு ரெடியாகுடா… அதுக்குள்ள
அந்த சாண்ட்ரா புதுசா வந்த மேக்கப் ஆர்ட்டிஸ்டை டார்ச்சர் பண்ணாம நான் காப்பாத்துறேன்”
என்றான் மாதவன்.
அவன் சொன்னதில் எதையோ புரிந்து கொண்டவனைப் போல நண்பனைக் குறும்பு பார்வை பார்த்தான்
சித்தார்த்.
“டைரக்டர் சாருக்கு திடீர்னு ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மேல ஏன் இவ்ளோ அக்கறை?”
என்று கேலியாக அவன் வினவ
“டேய் போதும்டா சாமி! நீயா எதாச்சும் கற்பனை பண்ணிக்காத… அந்தப் பொண்ணோட பாட்டி
யார் தெரியுமா? அந்தக் காலத்துல பெஸ்ட் கேரக்டர் ஆர்ட்டிஸ்டான லலிதாம்மா தான்… அவங்க
பேத்தினு நான் அந்தப் பொண்ணுக்கு மரியாதை குடுக்கிறேன்… அவ்ளோ தான்… நீயா எதாச்சும்
யோசிக்காத… ப்ளீஸ்” என்றவனை நம்பாத பாவனையுடன் பார்த்தபடியே தனக்கான இருக்கையில் சென்று
அமர்ந்தான் சித்தார்த்.
உண்மையில் மாதவன் அந்த மேக்கப் ஆர்ட்டிஸ்டின் மீது அக்கறை எடுத்துக்கொள்வதற்கு
அவளது பாட்டி முன்னாள் குணசித்திர நடிகை என்பது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது.
ஆனால் சித்தார்த் சொல்வது போல வேறு மாதிரியான அர்த்தங்களும் இல்லை.
இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு அடுத்த காட்சிக்கான ஆங்கிளை கேமராமேன் விளக்கிக்
கொண்டிருந்த போது தான் சாண்ட்ரா கத்துவது மாதவன் மற்றும் சித்தார்த்தின் செவியில் விழுந்தது.
“ஆர் யூ இடியட்? அறிவில்ல உனக்கு? இந்த டிரஸ்சுக்கு இந்த ஷேட் தான் கரெக்டா
இருக்கும்னு சொல்லியும் உன் இஷ்டத்துக்கு எனக்கு லிப் லைனரை யூஸ் பண்ணுவியா? ஆஃப்டர்
ஆல் ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட், உனக்கு இவ்ளோ ஆட்டிட்டியூடா?”
அவளின் காச்மூச்சென்ற சத்தம் வரவும் சித்தார்த்தும் மாதவனும் அவள் நின்றிருந்த
இடத்தை அடைந்தனர். அங்கே முகமெங்கும் அரிதாரம் மின்ன கோபாக்கினி காது மூக்குகளில் வெளிவர
நின்றிருந்தாள் சாண்ட்ரா.
அவளருகில் கத்தரிப்பூ நிற முக்கால்கை வைத்த சுடிதாரில் அடிப்பட்ட முகபாவத்துடன் நின்றிருந்தாள் ஒரு இளம்பெண். திருத்தமான வட்ட முகத்தில் வேதனை நிறைந்திருக்க, அகன்ற விழிகளில் கண்ணீர் குளம் கட்டியிருக்க நின்றிருந்தவள் மன உறுதி கொண்டவள் என்பதை அவளின் கண்ணீர் குளம் இமையெனும் கரையைத் தாண்டாத வண்ணம் பார்த்துக் கொண்ட அவளது திடத்தில் தெரிந்தது.
மாதவன் அவசரமாக “வாட் இஸ் திஸ் சாண்ட்ரா? ஷீ இஸ் டூயிங் ஹெர் ஒர்க்... ஒய்
ஆர் யூ ஸ்கோல்டிங் ஹெர்?” என்று சற்று எரிச்சலான தொனியில் கேட்டுவிட சாண்ட்ராவின் முகம்
சுட்டக்கத்தரிக்காயைப் போல மாறிவிட்டது.
அதை கவனித்த சித்தார்த் “இது சாண்ட்ராக்கும் அவளோட மேக்கப் ஆர்ட்டிஸ்டுக்கும்
உள்ள பிராப்ளம்... இதுல நீ ஏன் தலையிடுற? கம் வித் மீ” என்று மாதவனைத் தன்னுடன் அழைத்துக்
கொண்டவன் ஒரு நொடி இரு பெண்களையும் கூரியவிழியால் எச்சரிக்கைப்பார்வை ஒன்று பார்த்தான்.
“இது ஷூட்டிங் ஸ்பாட்... ஆக்சன்னு சொன்னதுக்கு அப்புறம் ஆக்ட் பண்ணுனா போதும்...
சோ நீ இந்த இடத்தை மீன் மார்க்கெட்டா மாத்த டிரை பண்ணி லோக்கல் லேடி மாதிரி ஆக்ட் பண்ணுறது
வேஸ்ட்...” என்று சாண்ட்ராவிடம் சொல்லிவிட்டு நிறுத்தியவன் அந்த இளம்பெண்ணை நோக்கி
திரும்பினான்.
“வாட்ஸ் யுவர் நேம்?” என்றவனின் கேள்விக்கு ஒரு கணம் விழித்தவள் மெதுவாய்
“ஹேமலதா” என்றாள்.
“வெல்! லுக் மிஸ் ஹேமலதா! உனக்கு ஆக்டிங்ல இஷ்டமிருந்தா கேமராக்கு முன்னாடி
போய் நின்னு ஆக்ட் பண்ண டிரை பண்ணு... கிளிசரின் இல்லாமலே கண்ணீர் வருதே... இந்த ஒரு
டேலண்ட் போதும்” என்று கேலியும் அலட்சியமுமாக உரைத்துவிட்டு அங்கிருந்து நண்பனுடன்
நகர்ந்தான் அவன்.
அவனது அலட்சியமும் கிண்டலான பேச்சும் அந்த ஹேமலதாவுக்கு இன்னும் வருத்தத்தையும்
தலைகுனிவையும் தான் கொடுத்தது. அதே நேரம் சித்தார்த்தும் மாதவனும் அவ்விடம் விட்டு
நீங்கியதும் சாண்ட்ரா மீண்டும் ஹேமலதாவிடம் தன் விஷத்தைக் கக்கத் தொடங்கினாள்.
“நீ உன்னோட லிமிட்ல இருக்குறது தான் உனக்கு நல்லது... பழைய விசயத்தைப் பேசி
தேவையில்லாம என்னை டீகிரேட் பண்ணி காட்டாத” என்று கட்டளையிட்டு விட்டு அடுத்தக் காட்சிக்காக
தயாரானாள்.
ஹேமலதா தனது கையிலிருந்த உதட்டுச்சாயத்தை முகப்பூச்சு சாமான்கள் அடங்கிய பெட்டியில்
வைத்துப் பூட்டினாள். அவளது செவிகளில் “இந்தச் சினிமா உலகம் உனக்கு வேண்டாம்டி ராஜாத்தி...
நான் இங்க இருந்து என்ன சம்பாதிச்சேன் சொல்லு! நீ நல்லா படிச்சு பெரிய வேலைக்குப் போகணும்”
என்ற பாட்டியின் குரல் தான் விழுந்தது.
இதே கேமரா, அரிதாரம், வசனங்கள், கிளாப்ஸ் என இதிலேயே வாழ்க்கையைக் கழித்த அந்த
முதியப்பெண்மணிக்கு திரையுலகம் பரிசாக கொடுத்தது அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு ஃப்ளாட்
மட்டுமே. மாதாந்திர பென்சன் போல பெயரளவுக்கு ஒரு தொகை கிடைக்க அதில் பேத்தியை அழகுக்கலை
நிபுணர் படிப்பைத் தான் அவரால் படிக்க வைக்க முடிந்தது.
இருபத்தோராவது வயதில் அம்முதியப்பெண்மணியின் மறைவு நேர்ந்து விட அன்றிலிருந்து
உழைப்பு ஒன்றினை மட்டும் குறிக்கோளாக கொண்டு இயங்கிய ஹேமலதாவுக்கு வாழ்வில் பிடிப்பு
என்று ஒன்று உண்டென்றால் அது அவளின் தங்கை மட்டுமே!
இப்போது கூட அவளின் மேற்படிப்புக்கு அழகு நிலையங்களில் கிடைக்கும் ஊதியம் பற்றாக்குறையாக
இருக்கவே அதன் காரணமாகத் தான் பாட்டி வேண்டாமென சொன்ன அந்த திரையுலகில் மேக்கப் ஆர்ட்டிஸ்டாக
நுழைந்திருந்தாள் ஹேமலதா.
இதில் கிடைக்கும் வருமானத்துடன் அவள் நடத்தும் யூடியூப் சேனலில் அவளுக்குக்
கிடைக்கும் தொகையும் சேர்ந்து ஓரளவுக்கு இப்போது அன்றாடச்செலவு, தங்கையின் படிப்பு
போக இருவரின் எதிர்காலத்துக்கும் சேமிக்கத் தொடங்கியிருந்தாள்.
இந்த வேலையில் அவளுக்கு இருந்த ஒரே தடை சாண்ட்ரா மட்டுமே. எப்படி இருந்தவள்
அவள் என்ற ஒரு எண்ணம் பழைய நினைவுகளைக் கிளறி விட பெருமூச்சை விட்டுக் கொண்டு அடுத்தக்
காட்சிக்கு அவளது அலங்காரத்தைச் சரிபார்க்கச் சென்றாள் ஹேமலதா.
அதே நேரம் மாதவனைக் கடிந்து கொண்டிருந்தான் சித்தார்த்.
“இந்த மாதிரி சில்லி ஃபைட்ல நீ இறங்கி சமாதானம் பண்ணணும்னு எந்த அவசியமும்
இல்ல மேடி... இன்னைக்கு தமிழ் சினிமால நீ ரெபியூட்டட் டைரக்டர்டா... அந்த கெத்தை விட்டு
எப்போவும் இறங்க கூடாது” என்று சொல்ல வழக்கம் போல நண்பனின் கட்டளையிடும் குரலுக்கு
அடிபணிந்தான் மாதவன்.
சித்தார்த் எவ்வளவு தான் மற்றவர்களிடம் தனக்கான கௌரவத்தைக் கடைபிடித்தாலும்
அவன் இறங்கி பேசும் ஒரே ஆள் அவனது நண்பன் மாதவன் மட்டும் தான். அந்த நட்பு தான் இரு
வேறு குணநலன்கள் கொண்ட அந்த இரு ஆடவர்களையும் ஒன்றிணைத்து வைத்திருந்தது.
அந்த நட்பு ஒன்று தான் சித்தார்த்தின் மனதில் இளக்கத்தை உண்டாக்கும் ஒரே காரணி.
அது போக அவன் மனதை இளகச் செய்பவன் ஒரே ஒருவன் தான்! அந்த ஒருவன் தான் ஏற்கெனவே நடந்த
சம்பவங்கள் அனைத்துக்கும் சூத்திரதாரி! இனி நடக்கப் போகும் நிகழ்வுகளுக்கும் அவனே முழுமுதற்காரணி
கூட!
பரந்த
சென்னை மாநகரில் ஒவ்வொரு மூலையிலும் தத்தம் வேலைகளைச் செய்தபடி தனித்து இயங்கிக் கொண்டிருக்கும்
இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியும் அவனே!
வந்தாயே மழையென நீயும்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 1)
நடிகன் சித்தார்த் & இயக்குனர் மாதவன் இடையே அருமையான நட்பு இபடபடியே தொடரட்டும்.
ஹேமலதா மேக்கப் ஆர்ட்டிஸ்ட்
இவளுக்குள்ள என்ன சோகமோ...?
அது சரி, இவங்க எல்லாரையும் ஆட்டி வைக்கப்போற அந்த ரிங் மாஸ்டர் யாரு...? பில்டப்பே ரொம்ப பயங்கரமா இருக்கே..!
யாரு, யாரு..? அந்த ஆளு யாரு ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Semma interesting
ReplyDeleteHappy to read vmn
ReplyDelete❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete