ஜூன் மாத நாவல் - இது வானின் பூபாளம்

“புள்ளி விவரங்களின் படி போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களில் பெரும்பான்மையானோர் பதின் வயதினரே. 13லிருந்து 25 வயது வரை உள்ளவர்கள் தான் போதைக்கு அடிமையாகும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. இப்போதைப்பழக்கம் அவர்களின் மரபணுவைக் கூட மாற்றிவிடும் அபாயம் உள்ளது”
-திரு.ப்ரூனோ, போதைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு மையத்தின் சென்னை மண்டல இயக்குநர்
மெட்ராஸ் மோட்டார் ரேஸ்
தடம், இருங்காட்டுக்கோட்டை...
உலகளாவிய தானியங்கி கூட்டமைப்பு
எனப்படும் FIAவின் (International Automobile Federation)
தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஃபார்முலா 4 கார் பந்தயம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டருக்கு மேலே நீளமுள்ள ரேஸ் தடத்தில் கார்கள் விர்விர்ரென்ற
சத்தத்துடன் இலக்கை நோக்கிச் செல்லும் காட்சியைக் கண்டுகொண்டிருந்தாள் அந்தப் பதின்வயதினள்.
பதின்வயதிற்கே உரித்தான துடுக்குத்தனமும், அதீத ஆர்வமும் வழியும் களையான முகம்;
அதில் இன்னும் குழந்தைத்தனத்தின் சாயல் ஒட்டியிருந்தது. அணிந்திருந்த ஜீன்சும் ஃப்ளாரல்
ப்ளோசன் நெக் டாப்பும் இன்னும் சிறுபெண்ணாகவே அவளைக் காட்ட முயன்றன. அவளது கண்கள் அந்தத்
தடத்தில் பறந்து கொண்டிருந்த ஓபன் வீல் கார்களில் சிவப்புவண்ணக் காரின் மீதே வட்டமிட்டன.
அவள் அருகில் அமர்ந்திருந்த மற்றொருத்தி “எப்பிடி இவ்ளோ ஸ்ட்ராங்கா ஜித்து
தான் ஜெயிப்பான்னு நம்புற சாரு? பாத்தேல்ல, எவ்ளோ கார்ஸ் போகுதுனு... அதுவும் அந்த
ப்ளூ கலர் கார்ல போறவன் லாஸ்ட் டைம் வேர்ல்ட் லெவல் சாம்பியனாக்கும்... அவனை ஜித்துவால
தோற்கடிக்க முடியும்னு எனக்குத் தோணல” என்று அசட்டை போல சொல்லிவிட்டுத் தனது தோளை ஸ்டைலாக
குலுக்கிக் கொள்ள அந்த ப்ளாரல் டாப் சாருவுக்கு கடுப்பில் காதுகளில் புகை வந்துவிட்டது.
“ஷட்டப் ரீனா! அவன் நம்மளோட ஃப்ரெண்ட்... நம்ம இங்க வந்தது அவனை சியர் அப்
பண்ணுறதுக்கு தான்... நீ அத மறந்துட்ட போல... எனக்கு ஜித்து மேல நம்பிக்கை இருக்கு...
ஃபைவ் இயர்சா இந்த ரேஸ் டிராக் அவனுக்குப் பழக்கம்... அவன் அந்தச் சாம்பியனைத் தோற்கடிக்க
வரல... இந்த ரேஸ்ல வின் பண்ண வந்திருக்கான்... சோ ப்ளீஸ்! அபசகுனமா பேசாத” என்று சொல்லிவிட்டு
வாயருகே கைகளைக் குவித்து “கம் ஆன் ஜித்து! டோண்ட் கிவ் அப்” என்று உரத்தக்குரலில்
கூவினாள்.
அவள் சாருலதா. பதினேழு வயது பள்ளி மாணவியான அவள் இன்னும் சில நாட்களில் அரையாண்டுத்தேர்வை
வைத்துக் கொண்டு தனது தோழனின் கார்பந்தயத்தைக் காண வந்திருந்தாள்.
இருவருக்குமிடையேயான நட்புக்கு வயது மூன்று. நல்ல நட்புக்கு அடையாளமே சந்தோசம்
துக்கம் இரண்டையும் பகிர்ந்து கொள்வது தானே! இன்றைய தினம் சாருலதாவின் தோழனான அந்தக்
கார்பந்தய வீரனுக்கு மிகவும் முக்கியமான தினம்!
போல் பொசிசனில் அவனது சிவப்பு வண்ண ஸ்போர்ட்ஸ் கார் நிறுத்தப்பட்டு அதில் அவன்
ஏறிய கணத்திலிருந்து சாருலதாவின் கண்கள் அந்தக் காரை விட்டு விலகவில்லை.
அதில் தெரிந்த சிவப்புநிற ஹெல்மெட் அணிந்த தலைக்குச் சொந்தக்காரனான அவளது தோழனோ
அனைத்தையும் மறந்தவனாக தனது கண்களையும் கருத்தையும் ரேஸ் தடத்தில் மட்டுமே வைத்திருந்தான்.
அவனுக்கு முன்னே சென்று கொண்டிருந்த ஊதாவண்ண காரை முந்துவதிலேயே கவனத்தை வைத்திருந்தான்
அவன்.
அதை மட்டும் முந்தி விட்டால் இன்றைய பந்தயத்தில் அவனே வெற்றியாளன். அதனால்
அந்நிமிடத்தில் வேகம் என்ற ஒன்றை தவிர வேறு எதுவுமே அவன் எண்ணத்தில் பதியவில்லை.
அந்த வேகம் ஒன்றே பிரதானமாக இருக்க தொடர்ந்த நிமிடங்களில் அவனது சிவப்பு வண்ண
ஓபன் வீல் காரானது ஊதாவண்ணக் காரை முந்திவிட்டது. வெற்றி இலக்கை கார் அடைந்ததும் அந்த
ஃப்ளாரல் ப்ளோசன் டாப் இளம்பெண் சாரு மகிழ்ச்சியில் உற்சாகமாய் துள்ளிக் குதித்தாள்.
அடுத்தச் சில நிமிடங்களில் விளம்பரப்பதாகை தட்டிகள் அருகே இருந்த வெற்றி பெற்றவர்களுக்கான
படிக்கட்டுகளில் முதலிடத்தைப் பிடித்த அந்தச் சிவப்பு வண்ணக் காரிலிருந்து இறங்கியவன்
தனது தலைக்கவசத்தைக் கழற்றிவிட்டு ஏறினான்.
அங்கே நின்றபடியே இவ்வளவு நேரம் தான் சொன்ன பேச்சைக் கேட்டு அந்த தடத்தில்
சீறிப்பாய்ந்த அவனது நான்கு கால் இயந்திரக்குழந்தையைக் கர்வத்துடன் பார்த்தவன் தனது
ஆட்காட்டிவிரலையும் நடுவிரலையும் இணைத்து தனது உதட்டில் ஒற்றி அதற்கு ஒரு பறக்கும்
முத்தத்தைப் பரிசாக அளித்தான்.
வெற்றி மிதப்பு மின்னும் விழிகள், சந்தோசம் ஒட்டியிருந்த முகத்தில் பதின்பருவத்தின்
குறும்பும் துடிப்பும் சேர்ந்து இடம்பெற்றிருந்தது. வெற்றிக்கோப்பையைக் கையில் வாங்கியதும்
பெருமிதத்துடன் அதை உயர்த்திப் பிடித்தான், அவன் தான் இளம் கார்பந்தய வீரன் இந்திரஜித்.
தனது பதிமூன்றாவது வயதில் கோ-கார்ட்டிங் மூலம் ரேஸ் உலகில் காலடி எடுத்து வைத்தவனுக்கு
இப்போது வயது பதினெட்டு.
கோ-கார்ட்டிங் அனுபவமும் அதில் ஜெயித்த கோப்பைகளும் அவனை கார் பந்தயத்தை நோக்கி
தைரியமாக முன்னேற வைத்திருந்தது. அவனது தொடர் வெற்றிகள் அவனுக்கான ஸ்பான்ஷரையும் பெற்றுத்
தர இப்போது உலகளவிலான ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் ஜெயித்தும் விட்டான்.
இப்போது கோப்பையைக் கையில் வாங்கியதும் உடனே இந்திரஜித்தின் மனக்கண் முன் வந்தவன்
அவனது சகோதரன் தான். பரிசளிப்பு களேபரங்கள் முடிந்ததும் தனது உடையை மாற்றிவிட்டு டீசர்ட்
ஜீன்ஸ் அணிந்து தனக்காக காத்திருக்கும் நண்பர் குழாமை நோக்கி முன்னேறினான்.
அனைவருக்கும் முன்னராய் மான் போல ஓடி வந்து அவனது கரத்தைப் பற்றிக் குலுக்கினாள்
சாருலதா.
“நீ ஜெயிச்சிடுவனு எனக்குத் தெரியும் ஜித்து... எங்க அப்பார்ட்மெண்ட் பிள்ளையாரோட
பவர் அப்பிடி” என்று பெருமிதமாக அவள் சொல்லவும்
“யூ ஆர் ரைட் சாரு... அவரோட விபூதிய நீ நெத்தில வச்சு விட்டதுக்கு அப்புறம்
எனக்கு புது ஸ்ட்ரென்த் வந்துடுச்சுனா பாத்துக்கோயேன்... பாப்பாய் கார்ட்டூன்ல ஸ்பினாச்
சாப்பிட்டதும் அவர் ஸ்ட்ராங்க் செய்லரா மாறுன மாதிரி நானும் விபூதி வச்சதும் வெரி ஸ்ட்ராங்க்
ரேஸரா மாறிட்டேன் போல” என்று சொல்லி விளையாட்டாய் கண்ணைச் சிமிட்டியவன் தனது கோப்பையை
அவள் வசம் ஒப்படைத்தான்.
அவள் பொம்மையை ஆவலுடன் வாங்கிக் கொள்ளும் குழந்தையைப் போல கோப்பையை வாங்கிக்
கொண்டாள். அப்போது அவனது மற்ற நண்பர்களும் வந்துவிட எந்த ரீனா இவ்வளவு நேரம் நம்பிக்கையின்றி
பேசினாளோ அவளே வந்து இந்திரஜித்தின் கையைக் குலுக்கினாள். பின்னர் ஒவ்வொருவராக வந்து
கரம் குலுக்கி கட்டியணைத்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
“இன்னைக்கு நைட் பார்ட்டி உண்டா ஜித்து?” பெரும்பாலானோரின் கேள்வி இது தான்.
அனைவரும் ராஜா வீட்டு கன்றுக்குட்டிகள் தான். சாருலதாவைத் தவிர அனைவருமே பள்ளிப்படிப்பை
முடித்துவிட்டு கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்திருந்தனர்.
எனவே தாங்கள் இன்னும் குழந்தைகள் இல்லை என்ற எண்ணம் அவர்களுக்கு. அதனாலேயே
தங்களைப் பெரியவர்கள் என நிரூபிக்கும் காரியமாக பப்புக்குச் செல்வது, பார்ட்டிகளில்
கலந்து கொள்வது, அவுட்டிங் செல்வது என அனைத்தையும் செய்து வைப்பது அவர்களின் வழக்கம்.
சாருலதாவுக்கு இதெல்லாம் பழக்கமில்லை. ஆனால் கடந்த மாதம் இந்திரஜித்தின் பிறந்தநாளுக்காக
நடந்த பார்ட்டியில் மட்டும் கலந்து கொண்டாள். அதுவும் அவளது நண்பனான இந்திரஜித்துக்காகவும்
அவள் வாழ்வில் அவளுக்கென இருக்கும் ஒரே உறவான தமக்கைக்காகவும் மட்டும் தான்.
பார்ட்டி பற்றிய கேள்விக்கு இந்திரஜித் பதிலளிக்கும் முன்னர் ரீனா முந்திக்கொண்டு
“ஏய் ஜித்து! ரேவ் பார்ட்டி அரேஞ்ச் பண்ணுடா... இப்போ அது தான் டிரெண்ட்” என்று சொல்ல
சாருலதா அதிர்ந்தவளாக மறுத்துப் பேச வரும் முன்னர் இந்திரஜித் மறுப்பாகத் தலையசைத்தான்.
“நோ வே! சித்து அண்ணாவுக்கு பார்ட்டி, ஆல்கஹால் இதுல்லாம் சுத்தமா பிடிக்காது...
என் பர்த்டே பார்ட்டில நடந்த விசயத்துக்கே என் கூட ஒன் வீக் பேசல... மேடி அண்ணா தான்
சமாதானம் பண்ணுனாரு... அகெய்ன் அவரோட கோவத்துக்கு நான் ஆளாக விரும்பலப்பா... நார்மல்
பார்ட்டி தான்... அதுவும் ஹோட்டல் கோல்டன் கிரவுன்ல இருக்குற நைட் கிளப்ல தான்... என்ன
சொல்லுறிங்க எல்லாரும்?” என அவன் வினவ அவனது நண்பர் குழாம் வேறு வழியின்றி தலையாட்டி
வைத்தனர்.
அவனது அண்ணன் தான் சித்தார்த். அவன் சொன்ன மேடி அண்ணா சாட்சாத் மாதவனே தான்.
இருவரும் சினிமாத்துறையில் இருந்தாலும் அவர்களுக்கு இந்தப் பார்ட்டிகள், ஆரவாரங்கள்,
மது அருந்துதல் முதலியவற்றில் விருப்பம் இல்லை.
“ஒரு ஆக்டருக்கு அப்பியரன்ஸ் ரொம்ப முக்கியம்... ஆல்கஹால் கொஞ்சம் கொஞ்சமா
நம்மள உருக்குலைச்சிடும்... எதுக்கு என் உடம்பை வியாதிக்கு வாடகைக்கு விடணும்? எனக்குக்
கடவுள் குடுத்த குட் அப்பியரன்சை வீணா நான் கெடுத்துக்கணும்?” என்பான் சித்தார்த்.
கூடவே “நீ ரேஸ்ல கலந்துக்குறதால உனக்கு ஃபிட்னெஸ் ரொம்ப முக்கியம்டா ஜித்து...
சோ நோ மோர் ஆல்கஹால்... புரியுதா?” என்று இந்திரஜித்துக்கு அடிக்கடி சொல்லிச் சொல்லியே
மனதில் பதிய வைத்திருந்தான்.
எனவே தான் பார்ட்டி, கொண்டாட்டங்கள் என சுற்றினாலும் இந்திரஜித் இது வரை மதுக்கிண்ணத்தைக்
கையால் தொட்டதில்லை. அதனாலேயே என்னவோ சாருலதாவும் தயக்கமின்றி அவனுடன் கடந்த முறை பார்ட்டிக்குச்
சென்றிருந்தாள்.
அவன் சொன்னதைக் கேட்டுவிட்டு அவனது நண்பர் குழாம் அவரவர் கார்களில் ஏறி அமர்ந்தவர்கள்
கிளம்பிவிட இந்திரஜித்தும், அவனது கோப்பையைச் சுமந்தபடி சாருலதாவும் அவனது காரில் ஏறினர்.
காரிலேறியதும் அண்ணனுக்கு அழைத்தான் அவன்.
“அண்ணா! இந்தத் தடவையும் நான் தான் வின்னர்” என்றவனின் குரலில் கொப்பளித்த
உற்சாகம் மறுமுனையில் பேசிய சித்தார்த்தையும் தொற்றிக் கொண்டது.
“யூ ஆர் பார்ன் டு வின் ஜித்து... ஐ அம் ரியலி ப்ரவுட் ஆஃப் யூ... அண்ட் ஒன்
மோர் திங், கண்டிப்பா நீ வின் பண்ணுனதுக்கு உன்னோட ஃப்ரெண்ட்ஸ் பார்ட்டி வைக்க சொல்லிருப்பாங்க...
கோல்டன் கிரவுன் தவிர வேற எங்கயும் போகாத... நம்ம ஹோட்டல் இருக்குறப்போ வேற இடம் எதுக்கு?
அண்ட் நோ மோர் ஆல்கஹால்” என்று கடைசி வார்த்தையைக் கட்டளையாக்கி தனது பேச்சை முடித்தான்.
சித்தார்த்திடம் பேசிவிட்டுப் போனை வைத்த இந்திரஜித் சாருலதாவிடம் “அண்ணா அஸ்
யூஸ்வல் சேம் அட்வைஸ் தான் பண்ணுனாரு... ஐ திங்க் ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்கலாம்... அதான்
சுருக்கமா பேசிட்டு வச்சிட்டாரு” என்று சொல்ல
“அப்போ ஹேமுக்காவும் அங்க தானே இருப்பா?” என விழிகளில் ஆர்வம் ததும்ப கேட்டாள்
அவள். அவள் ஆர்வமாக வினவியது அவளது தமக்கை ஹேமலதாவைப் பற்றி தான்.
“ப்ச்! ஆப்வியஸ்லி அவங்களும் அங்க தான் இருப்பாங்க... நான் அவங்கள ஹீரோயின்
ரோலுக்குத் தான் ரெகமண்ட் பண்ணுனேன்... அவங்க தான் ஆக்டிங்ல இன்ட்ரெஸ்ட் இல்லனு சொல்லிட்டு
மேக்கப் ஆர்ட்டிஸ்டா ஒர்க் பண்ணுறேனு சொல்லிட்டாங்க... அஸ் யூஸ்வல் சாண்ட்ரா அந்த சான்ஸை
கேட்ச் பண்ணிட்டாங்க” என்று சலித்தபடியே இந்திரஜித் காரைக் கிளப்பினான்.
அந்தத் தினத்தின் நினைவலைகள் சாருலதாவின் மனமெனும் கரையத் தொட ஆரம்பித்தன.
அன்றைய தினம் இந்திரஜித்தின் பிறந்தநாள் பார்ட்டி முடிந்து வெகுநேரம் கழித்து
அவனது காரில் அப்பார்ட்மெண்ட் வாயிலில் வந்து இறங்கிய சாருலதாவை ஹேமலதா பார்த்துவிட்டாள்.
ஏன் தாமதம் என விசாரித்தவளிடம், தான் இந்திரஜித்துடன் பார்ட்டிக்குச் சென்றுவிட்டு
திரும்பியதால் தாமதமாகி விட்டது என சாதாரணமாகச் சொன்னவளை சாருலதா தவிப்புடன் ஏறிட்டாள்.
“அவன் உன்னோட குளோஸ் ஃப்ரெண்டா இருக்கலாம்... ஆனா இவ்ளோ நேரம் அவன் கூட பார்ட்டில
இருக்கணுமா சாரு? அப்பிடி நீ போயே ஆகணும்னு என்ன கட்டாயம்டி?”
அவள் கேட்டதும் விலுக்கென தலையை நிமிர்த்தினாள் சாருலதா. அவள் கண்களில் இருந்த
சவால் விடும் பார்வை ஒரு நிமிடம் ஹேமலதாவை திகைக்க வைத்தது.
“எல்லாரும் உன்னை மாதிரி லூசரா இருப்பாங்களா? நான் புத்திசாலி… அதான் ஜித்து
கூட பார்ட்டிக்குப் போனேன்” என்று சொல்லிவிட்டு நெற்றியில் சரிந்த கூந்தலை ஒற்றைவிரலால்
சரி செய்தபடி சினத்துடன் தனது தமக்கையை உறுத்து விழித்தாள் சாருலதா. அப்படி சொன்னாலாவது
அவளுக்கே உரித்தான கையில் கிடைத்ததை தானம் செய்யும் உபகார குணம் மாறுமா என்ற நப்பாசை
சாருவுக்கு.
அதே சமயம் தங்கையின் ‘லூசர்’ என்ற வார்த்தை சாருலதாவுக்குள் வலியை உண்டாக்கினாலும்
தன்னை விட ஏழு வயது சிறியவள், அதிலும் பள்ளி செல்லும் சிறுமி என்பதால் அவளிடம் கோபம்
கொள்ள இயலாது வேதனையுடன் முறுவலித்தாள் ஹேமலதா.
“அடுத்தவங்களுக்கு உதவி பண்ணுறவங்கள இந்த உலகம் லூசர்னு தானே சொல்லும் சாரு...
நீ சொன்னதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல” என்றாள் மென்மையான குரலில்.
“வாட்? ஒருத்தி உன் உதவியால வளந்துட்டு இப்போ நீ யாருனே தெரியாத மாதிரி நடிக்குறா…
சினி ஃபீல்ட்ல அவளுக்கு யாரையும் தெரியாம இருந்தப்போ உன் உதவி தேவைப்பட்டுச்சு… இப்போ
மேடம் பெரிய ஹீரோயின் ஆயிட்டாங்க… அதனால ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்டை அவங்களோட ஃப்ரெண்ட்னு
சொல்லிக்க அவங்களுக்கு அவமானமா தானே இருக்கும்… உனக்கு வந்த ஆடிசனுக்கு நீ அவளை அனுப்பி
வச்சி, அந்த டைரக்டர் கிட்ட நீ தானே ரெகமண்ட் பண்ணுன… ஆனா அவ சுயம்புவா வளந்தேன், செல்ப்
மேட்னு இண்டர்வியூ குடுக்கிறா… எனக்கு அப்பிடியே பத்திக்கிட்டு வருது… அதான் ஜித்துவோட
அண்ணா ஆரம்பிக்கப் போற புரொடக்சன் ஹவுஸ்ல நியூ மூவி ஸ்டார்ட் பண்ண போற நியூஸ் கிடச்சதும்
அவன் கூட பேசி உனக்கு அதுல ஹீரோயின் ரோல் வாங்கித் தரலாம்னு நினைச்சேன்” என்ற சாருலதாவின்
குரலில் தனது தமக்கையின் திறமைக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம்
கொட்டிக் கிடந்தது.
அன்று உண்டான வேதனை இன்றும் முணுக்முணுக்கென வலியை உண்டாக்க சாருலதா சீட் பெல்டினை
போட்டுக் கொண்டாள். மனதுக்குள்ளே “அந்த சாண்ட்ரா இப்போ மட்டுமா கேட்ச் பண்ணுனா? என்
அக்காவோட வாய்ப்பைத் தட்டிப் பறிக்கிறது அவளுக்குப் பழக்கம் தானே” என பொறுமித் தீர்த்தாள்.
கூடவே உடன் பிறந்தவளுக்கும் அர்ச்சனை செய்ய தவறவில்லை.
எவ்வளவு சிரமப்பட்டு மாதவனிடம் சாருலதாவுக்காக கதாநாயகி வாய்ப்பை வாங்கித்
தந்தான் இந்திரஜித்! ஆனால் அவளோ தனக்கு திரையுலகில் நடிக்கும் எண்ணமில்லையென மறுத்துவிட்டு
மேக்கப் ஆர்ட்டிஸ்டாக வேலை செய்வதாக கூறிவிட்டாள். அத்தோடு அந்த வாய்ப்பு சாண்ட்ராவுக்குப்
போய்விட்டது.
அது தான் சாருலதாவின் கவலைக்கு முக்கியக்காரணம். அதை இந்திரஜித்திடம் வெளிப்படுத்திவிட
அவனும் அவனது ‘மேடி அண்ணாவிடம்’ சொல்லிவிட அன்றிலிருந்து இந்திரஜித்துக்காக மாதவன்
படப்பிடிப்புத்தளத்தில் சாண்ட்ரா ஹேமலதாவைக் காயப்படுத்தாவண்ணம் பார்த்துக் கொண்டான்.
இருந்தாலும் சாண்ட்ராவை நினைத்தால் சாருலதாவின் மனதில் தோன்றும் கசப்புணர்வை
அவளால் மறைக்க இயலாது. ஆனால் அவளது மடியிலிருந்த கோப்பையின் கனம் மனபாரத்தை நீக்கிவிட
இப்போது நண்பனுக்காக சந்தோசப்பட்டாள் அவள்.
“நீ எனக்காக பெரிய ஹெல்ப் பண்ணிருக்க ஜித்து... அதுவே போதும்... அக்காவுக்கு
ஆக்டிங்ல இன்ட்ரெஸ்ட் இல்லனு சொல்லிட்டாளே தவிர நீ வாங்கிக் குடுத்த சான்ஸ்ல தான் அவ
இப்போ மேக்கப் ஆர்ட்டிஸ்டா ஒர்க் பண்ணுறா... அதுக்கு நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்டா”
“ஓ! நீ தேங்க்ஸ் சொல்லுற அளவுக்குப் பெரிய பொண்ணா ஆயிட்டியா சாரு? அதுவும்
என் கிட்ட தேங்க்ஸ் சொல்லுற அளவுக்கு வந்துட்டல்ல... நான் உன் கூட டூ... இனிமே உன்
கூட பேச மாட்டேன் போடி”
பிடிவாதக்குரலில் சொல்லிவிட்டுச் சாலையில் கண் பதித்தான் இந்திரஜித். பின்னே
என்னவாம்! அவனுக்கென இருக்கும் உயிர்த்தோழி அவள் மட்டும் தான். ரீனா, ஆர்யா, ஜெகத்,
சந்தோஷ் என எத்தனை பேர் இருந்தாலும் சாருலதா தான் அவனுக்கு நெருங்கிய தோழி.
அவர்களின் நட்பு இந்திரஜித்தின் தந்தை நடத்தும் பள்ளியில் சாருலதா சேர்ந்ததிலிருந்து
ஆரம்பித்தது. தங்களைப் போல காரில் வராமல் சைக்கிளில் வந்து செல்பவள் மீது இயல்பாகவே
அவனுக்குப் பரிதாப உணர்ச்சி தோன்ற அதன் பின் பேச ஆரம்பித்து ‘சாரு’, ‘ஜித்து’ என அழைக்கும்
அளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆயினர்.
அதன் பின்னர் சாருலதாவின் சுட்டித்தனமான பேச்சும், அவள் பள்ளிக்குக் கொண்டு
வரும் ஹேமலதாவின் நளபாகத்தில் உண்டான உணவுவகைகளும் இந்திரஜித்துக்கு மிகவும் பிடித்துப்
போனது.
எப்போதும் பைனான்ஸ், தயாரிப்பாளர் சங்கம் என அலையும் தந்தையும், நடனக்காட்சி
ஷூட்டிங் என சென்னைக்கும் மும்பைக்கும் விமானத்தில் பறக்கும் தாயாரும் தராத அன்பும்
அக்கறையும் புதிதாய் கிடைத்த தோழியின் வாயிலாக அவன் வாழ்வில் நுழைய இந்திரஜித்தின்
மனதில் மற்ற அனைவரையும் விட சாருலதாவுக்குத் தனியிடம் உண்டானது என்றால் அது மிகையில்லை.
அவர்களின் கலப்படமற்ற விகம்பமில்லாத இந்த நட்பு ஹேமலதாவுக்கும் தெரியும். மறுபுறம்
இந்திரஜித்தின் சித்து அண்ணா, மேடி அண்ணா இருவருக்கும் சாரு என்பவளின் பெயரும், அவள்
தம்பிக்கு நெருங்கிய தோழி என்பதும் நன்றாகவே தெரியும். ஆனால் மூத்தவர்கள் யாருமே இளையவர்களின்
நண்பர்களை நேரில் சந்தித்தது இல்லை.
எனவே சாருலதாவும் சரி, இந்திரஜித்தும் சரி, ஒருவர் மற்றொருவரின் வாழ்வில் முக்கியத்தருணங்கள்
அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர். இப்போது அரையாண்டுத்தேர்வை வைத்துக் கொண்டு அவனது
ரேஸின் பார்வையாளராக அவள் வந்ததிலிருந்தே அதைப் புரிந்து கொள்ளலாம்.
அவர்களைப் பொறுத்தவரை அன்புக்கு மட்டுமல்ல, நட்புக்கும் அடைக்கும் தாழ் இல்லை. அத்துடன் அதற்கு ஆண் பெண் பேதமும் இல்லை.
*****
மக்களே!
சாருவையும் ஜித்துவையும் இந்தக் கதை முடிஞ்சாலும் ஞாபகம் வச்சுக்கோங்க. இவங்க தான் இந்தக் கதையோட 3வது பாகத்துக்கு ஹீரோ ஹீரோயின். இந்த வருசம் முடியுறதுக்குள்ள 3வது பாகத்தை எழுதிடுவேன். அப்ப உங்களுக்கு ஞாபகம் வச்சுக்க ஈசியா இருக்கணும்னு தான் இப்ப ரீரன் பண்ணுறேன்.
👍👍
ReplyDeleteவந்தாயே மழையென நீயும்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 2)
உண்மை தான்...! நட்புக்கு அடைக்கும் தாழே கிடையாது.
ஆனா, அந்த நட்பே காதலங்கிற வட்டத்துக்குள்ள போய் சில நேரத்துல சின்னாபின்னமாகி சிதைஞ்சு போயிடுதே... அப்ப நட்பு மட்டும் இல்லாம காதலும் காணாமல் போயிடுதே...
அப்ப அது எதுல சேர்த்தின்னே தெரியலையே...?
அட்லீஸ்ட், ஒண்ணு நட்புங்கிற வட்டத்துக்குள்ளவாவது இருந்திருக்கலாம், இல்லையா காதல்ங்கிற எல்லையையாவது தொடாமல் இருந்திருக்கலாம்ன்னு தோண வைச்சிடுதே.... ? இப்படி ரெண்டையும் சேர்த்து குழப்பி நட்பையும் காதலையும் தொலைத்து விட்ட பிறகு... என்ன செய்ய முடியும்...?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Nice
ReplyDeleteNice epi
ReplyDelete