ஜூன் மாத நாவல் - இது வானின் பூபாளம்

Image
  NM tamil novel world தளத்தில் நேற்று முதல் ஆரம்பம். குடும்ப அரசியலால் பிரியும் வான்மதியும் பூபாலனும் இணைவார்களா? தெரிந்துகொள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! இது வானின் பூபாளம் – Tamil Novels | Nithya Mariappan

மழை 5

 

“பெண்களுக்கு மத்தியில் போதைப் பழக்கத்தை கண்டறிவது இன்னும் கடினமாக உள்ளது. பெண்களின் போதைப் பழக்கம் பெரும் களங்கமாக கருதப்படுகிறது. எனவே மக்கள் அதை மறைக்க முற்படுவதுடன், அப்பழக்கத்துக்கு ஆளான பெண்களை மருத்துவர்களிடமும் அழைத்து செல்வதில்லை”

-முக்தா பன்டம்பேகர், முக்தாங்கன் போதை மறுவாழ்வு மையம்

சவி வில்லா...

அந்த மாளிகையின் மூன்றாம் தளத்தைத் தனதாக்கிக் கொண்டிருந்த சித்தார்த் அவனது அறையினுள் அனுமதியின்றி கண்ணாடி ஜன்னல்களின் உதவியுடன் அத்துமீறி நுழைந்த ஆதவனின் கதிர்கள் செய்த குறும்பினால் கண் விழித்தான்.

துயில் சிறிது கலைந்தாலும் படுக்கை அவனை விடுவேனா என அடம்பிடிக்க சிறிதுநேரம் அப்படியே படுத்திருந்தான். காலைநேரத்தில் உறக்கம் கலைந்தும் கலையாமலும் இருக்கும் இரண்டுங்கெட்டான் நிலையில் கண் மூடி கிடக்கும் சுகத்துக்கு ஈடு இணை எதுவும் இவ்வுலகில் இல்லை. அதை அனுபவித்தபடி படுத்திருந்தவனின் மனம் வழக்கம் போல அமைதியாக இருந்தது.

அன்றைய தினம் ஷூட்டிங் எதுவுமில்லை. எனவே தாமதமாக எழுந்தாலும் ஒரு பாதகமும் நேரப்போவதில்லை.

அவனது அந்த இனிய மனநிலையைப் பாதியில் துண்டித்தது மொபைல் போனின் செல்லச்சிணுங்கல். எழுந்து படுக்கையில் அமர்ந்து மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டவன் பொறுமையாக மொபைலின் தொடுதிரையை ஆராய்ந்த பின்னர் அதில் மின்னிய “ராக்கி காலிங்” என்ற எழுத்தைப் படித்ததும் முறுவலுடன் அழைப்பை ஏற்றான்.

“சலாம் ராக்கி பாய்! எதுக்கு இந்த ஏர்லி மானிங்ல எனக்குக் கால் பண்ணிருக்கிங்க?”

கேலியும் குறும்புமாக ஒலித்த சித்தார்த்தின் குரலைக் கேட்டதும் மறுமுனையில் சன்னமான சிரிப்பொலியுடன் பேச ஆரம்பித்தான் அவனால் ராக்கி என செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ்.

“டேய் சித்து அந்த ராக்கி பாய்னு சொல்லுறத விடேன்டா... இத சொல்லியே மேடி என்னை பங்கமா கலாய்க்கிறான்” என்று சொல்ல

“அதுல்லாம் முடியாது... நீ என்னைக்கும் எனக்கு ராக்கி பாய் தான்... சரி அத விடு... சிட்டியோட பிசியான ஹோட்டலியர் எனக்கு எதுக்குக் கால் பண்ணிருக்காருனு நான் தெரிஞ்சுக்கலாமா?” என பதிலுக்குக் கேட்டபடியே தனது அறையில் இருந்து பால்கனிக்குச் சென்றான் சித்தார்த்.

“நத்திங் சீரியஸ்டா... கோல்டன் கிரவுனோட பார்ட்னர்ஷிப் டீட்ல நம்ம லாயர் சார் ஏதோ சேஞ்ச் பண்ணணும்னு சொல்லுறார்டா... இன்னைக்கு உனக்கு ஷூட் இல்லனு மேடி சொன்னான்... டென் ஓ கிளாக் கிளம்பி ஹோட்டலுக்கு வந்துடுடா... டாட் வேற உன்னை பாக்கணும்னு சொல்லிட்டிருக்காரு... அவரும் இன்னைக்கு என்னோட அங்க வருவாரு” என்றான் ராகேஷ்.

“உனக்காக இல்லனாலும் அங்கிளுக்காக கண்டிப்பா வருவேன்டா” என மறுபேச்சின்றி அவன் ஒப்புக்கொள்ளவும் ராகேஷ் மறுமுனையில் சிரிப்பது சித்தார்த் காதில் விழுந்தது.

“ஏன் ராக்கி பாய் சிரிக்கிறிங்க?”

“நீ ரொம்ப ஆட்டிட்டியூட் காட்டுற ஹீரோனு இண்டஸ்ட்ரில பேசிக்கிறாங்க... ஆனா நீ இன்னும் பழைய சித்துவா தான் இருக்க”

“நான் நெருங்கி பழகுறது உன் கூடவும் மேடி கூடவும் மட்டும் தான்... அங்கிள் மேல எனக்கு எப்போவுமே நல்ல மரியாதை உண்டு... உங்களுக்கு நான் எப்போவுமே சித்துவா தான் இருக்க விரும்புறேனே தவிர சித்தார்த்தா இருக்குறதுல எனக்கு இஷ்டமில்லடா ராக்கி”

“டுமாரோ மேடி உனக்கு எமோசனல் ஷாட் எதுவும் வச்சிருக்கானா? இவ்ளோ லெங்க்தா டயலாக் பேசுறியே மேன்” என கேலி செய்தாலும் ராகேஷிற்கு நண்பனை நினைத்து மனதுக்குள் பெருமிதம் தான்.

அவனிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்த சித்தார்த்தின் மனம் பழைய நினைவுகளில் ஆழ்ந்தது.

இன்று சித்தார்த் அனுபவிக்கும் நட்சத்திர அந்தஸ்தை ராகேஷ் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அனுபவித்தவன் தான். சினிமா உலகில் கதாநாயகிகள் ஒரு குறிப்பிட்ட வயதில் ‘ஃபீல்ட் அவுட்’ ஆவது வழக்கம் தான். ஆனால் சில சமயங்களில் அத்தகைய சூழ்நிலை கதாநாயகர்களுக்கும் வருவதுண்டு.

அப்படி ‘ஃபீல்ட் அவுட்’ ஆன பின்னர் திரைத்துறையை விட்டு வெளியேறியவன் தான் ராகேஷ். ஆனால் அவன் பிரபலமாக இருந்த சமயத்தில் தான் நடித்த திரைப்படத்தில் சித்தார்த்தைக் கதாநாயகனுக்கு நண்பனாக பரிந்துரைக்க அந்தக் கதாபாத்திரமும் திரைப்படமும் சித்தார்த்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அத்தோடு சித்தார்த் கதாநாயகனாகவும் மாதவன் இயக்குனராகவும் அறிமுகமான திரைப்படத்தைத் தயாரித்தது ராகேஷின் தந்தையான சாந்தகோபாலன் தான். தங்களை நம்பி துணிந்து படம் எடுத்தவர் மீது மாதவனுக்கும் சித்தார்த்துக்கும் என்றுமே மரியாதையுடன் கூடிய அன்பு இருந்தது.

மகன் மீது வைத்திருந்த நம்பிக்கையோடு அவனது நண்பர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையும் சேர்ந்து தான் சாந்தகோபாலனை துணிவாக அடியெடுத்து வைக்க உதவியது. படமும் ஹிட் அடித்துவிட அன்றிலிருந்து இன்று வரை சித்தார்த் திரையுலகில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்துக் கொண்டிருந்தான்.

அந்த நன்றியுணர்ச்சி என்றுமே மாதவனுக்கும் சித்தார்த்துக்கும் உண்டு. அதனால் தான் ராகேஷ் திரைத்துறையிலிருந்து ஒதுங்கிய பிறகு சாந்தகோபாலனின் படங்கள் தொடர் தோல்வியைத் தழுவிய நேரத்தில் இக்கட்டான நிலையில் இருந்த தந்தைக்கும் மகனுக்கும் ஹோட்டல் பிசினசில் கால் பதிக்க சித்தார்த் உதவினான்.

கோல்டன் கிரவுன் என்ற ஹோட்டலில் அவனும் மறைமுக பார்ட்னராக முதலீடு செய்தான். சொல்லப் போனால் இன்று வரை வெளியுலகுக்கு அது சித்தார்த் நடத்தும் ஹோட்டல் என்று தான் அடையாளப்படுத்தப் பட்டிருந்தது.

அந்த ஒரு ஹோட்டல் ஆரம்பித்த ராசியால் அடுத்தடுத்த கிளைகளைத் தென்னிந்தியாவின் பெருநகரங்களில் ஆரம்பிக்கும் அளவுக்கு ராகேஷ் வளர்ந்துவிட இன்று அவன் ஹோட்டல் பிசினசில் பெரிய அளவில் வளர்ந்தும் விட்டான்.

அதையெல்லாம் யோசித்தபடியே பால்கனியிலிருந்து உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றவனின் நேரம் அதிலேயே கழிய சாவகாசமாக குளித்து முடித்து உடையை மாற்றிய தருணத்தில் தான் தனது வலதுகை சுண்டுவிரலை எதேச்சையாக நோக்கினான்.

அதில் இருந்த மோதிரம் இரண்டாண்டுகளுக்கு முந்தைய நினைவுகளைத் தூண்டிவிட இவ்வளவு நேரம் இருந்த இலகுவான நிலை மாறி மனம் கல்லாய் இறுகிவிட்டது.

இந்த இரண்டாண்டுகளில் அவனும் எவ்வளவோ முயன்று மறக்க எண்ணினாலும் அந்நினைவுகள் அவன் மனதை விட்டு அகல்வேனா என சத்தியாகிரகம் செய்வதால் உண்டாகும் வலியை சித்தார்த் மட்டுமே அறிவான்!

இந்த வலி இந்த ஜென்மம் முழுக்க அவன் உடன் வரும்! தான் செய்த தவறை அடிக்கடி நினைவுறுத்தட்டும் என்று தான் அவன் அந்த மோதிரத்தைப் போட்டிருப்பதே! தானும் ஒரு நம்பிக்கைத்துரோகி என்பதை அது நினைவுறுத்தினாலும் அவனால் அதைக் கழற்றியெறிய முடிவதில்லை! இனியும் கழற்ற முடியாது.

அந்த எண்ணங்களை எல்லாம் தலையை உலுக்கி அகற்ற முயன்று அதில் பாதிக்கிணறைத் தாண்டியும் விட்டான். பழைய உற்சாகம் திரும்பவில்லை என்றாலும் குற்றவுணர்ச்சியின் வீரியம் சற்று குறைந்தது போல உணர்ந்தான்.

பெருமூச்சை விட்டபடி தனது அறையை விட்டு வெளியேறியவன் இளையச்சகோதரன் எழுந்துவிட்டானா என பார்க்க அவனது அறை இருக்கும் தளத்துக்குச் சென்றான்.

அங்கே இந்திரஜித்தின் அறையில் அவன் இல்லை. சீக்கிரம் எழுந்துவிட்டான் போல என எண்ணியபடியே கீழ்த்தளத்துக்குச் சென்றான் சித்தார்த். என்றும் இல்லாத திருநாளாக அன்றைய தினம் கீழ்த்தளம் அல்லோகலப்பட்டிருந்தது.

கீழ்த்தளத்தில் தோட்டத்தைப் பார்த்து அமைந்திருக்கும் பெரிய அறை முழுவதும் பேட்டி கொடுக்க, நிருபர்களைச் சந்திப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஒன்றுக்கு மூன்று திரையுலக பிரபலங்களை கொண்ட வீட்டில் அப்படிப்பட்ட அறை ஒன்று வேண்டும் தானே!

ஆனால் இன்று ஏன் நிருபர்கள் குழுமியிருக்கின்றனர் என்ற கேள்வியுடன் அவன் புருவம் சுருக்கும் போதே பரபரப்புடன் வந்து சேர்ந்தனர் அவனது பெற்றோரான நாராயணமூர்த்தியும் சவிதாவும்.

அவர்களைக் கண்டதும் எப்போதும் போல சாதாரண முகபாவத்துடன் எதிர்கொண்டான் அவன்.

“சித்து கண்ணா இன்னைக்கு நீ ஃப்ரீ தானே? இன்னைக்கு பிரஸ் மீட் இருக்குடா... உங்கம்மாவோட நேம் நந்தி அவார்டுக்கு நாமினேட் பண்ணிருக்காங்க.. அதுக்காக தான் இந்த பிரஸ் மீட் அரேஞ்ச் பண்ணிருக்கோம்... நம்ம ஃபேமிலியா இண்டர்வியூ குடுத்தா இட் வில் பி கிரேட்” என்றார் அவனது தந்தையும் தமிழ் திரையுலகின் பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் அதிபருமான நாராயணமூர்த்தி.

“அவன் கண்டிப்பா வருவான் மூர்த்தி... அவனோட அம்மாவுக்கு இவ்ளோ பெரிய கௌரவம் கிடைக்கிறது அவனுக்கும் சந்தோசமா தானே இருக்கும்... இல்லடா கண்ணா?” என சிரிப்புடன் கேட்ட அன்னையிடம் பெரிதாக தாய்ப்பாசத்தில் உருகவில்லை என்றாலும் சரியென ஒப்புக்கொண்டான் அவன்.

ஆனால் இந்திரஜித்தையும் அவர்கள் பேட்டியில் கலந்து கொள்ள அழைத்த போது தான் சித்தார்த் கடுகடுக்க ஆரம்பித்தான்.

“அவன் சின்னப்பையன்... இப்போவே மீடியா பீபிள் கண்ணு அவன் மேல படுறதுல எனக்கு இஷ்டமில்ல மாம்... தேவையில்லாம அவங்களோட கேமரா அவனை ஃபாலோ பண்ணுனா அவனால சுதந்திரமா நடமாடக் கூட முடியாது” என அவன் கண்டிப்பாகச் சொல்லிவிட

“விடு சவிம்மா! சித்து சொல்லுறதுலயும் அர்த்தம் இருக்கு... ஜித்துவயும் நம்மளோட உக்கார வச்சா சின்னப்பையன் கிட்ட தேவையில்லாம கேள்வி கேப்பாங்க” என்று நாராயணமூர்த்தியும் மகனது பேச்சுக்குச் செவிசாய்த்து விட அதன் பின்னர் சவிதா என்ற நடன இயக்குனரின் பிடிவாதம் நாராயணமூர்த்தியின் மனைவி என்ற நிலையின் முன்னே பணிந்து போக இவர்கள் மூவர் மட்டுமே பேட்டி கொடுக்கும் அறையை அடைந்தனர்.

அவர்கள் வரும் முன்னரே உதவியாளர்கள் மைக்குகளை முன்னே இருந்த மேஜையில் அடுக்கி வைத்துவிட நாராயணமூர்த்தியும் சவிதாவும் அமர அவர்களை அடுத்த இருக்கையில் அமர்ந்தான் சித்தார்த்.

சளசளப்பு அடங்கி நிருபர்கள் வந்த வேலையைக் கவனிக்க ஆரம்பித்தனர். முதலில் பேட்டிக்குக் காரணகர்த்தாவான சவிதா நாராயணமூர்த்தி நந்தி விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் பின்னர் பொதுப்படையாக நாராயணமூர்த்தியின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய கேள்விகளை முன்வைத்தனர்.

பின்னர் கேள்விகள் சவிதாவை நோக்கி கேட்கப்பட்டன. எந்தப் பாடலுக்கு நடனம் அமைத்ததற்கு அவரது பெயர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டதோ அந்தப் பாடல் படமாக்கப்பட்ட அனுபவத்தைக் கேட்க சவிதா வழக்கம் போல கம்பீரமான குரலில் பிசிறின்றி பதிலளித்தார்.

பின்னர் கேள்விகள் அவரது குடும்பம் பற்றி செல்லவும் தனது மக்கட்செல்வங்களை எண்ணி தான் பெருமிதம் கொள்வதாகச் சொன்னவர் மூத்தமகன் திரையுலகில் கோலோச்சுவது போல இளையமகன் கார்பந்தயத்தில் கலக்குவதையும் மேற்கோளிட்டுக் காட்ட நிருபர்களின் கவனமும் கேள்விகளும் இப்போது சித்தார்த்திடம் திரும்பியது.

“சார் நீங்க எப்போ உங்க அப்பாவோட புரொடக்சன்ல மூவி பண்ணப் போறிங்க?”

இந்தக் கேள்விக்குச் சித்தார்த்திடம் இருந்து கேலியான முறுவல் தான் முதலில் வெளிப்பட்டது. பின்னர் அவனுக்கே உரித்தான கர்வம் தொனிக்கும் குரலில் பதிலளிக்க ஆரம்பித்தான்.

“இது வரைக்கும் அப்பிடி ஒரு எண்ணமே எனக்கு இல்ல... நான் ஆரம்பிச்ச புரொடக்சன் ஹவுஸ்ல எனக்குக் கதை சொல்ல டைரக்டர்ஸ் வரிசை கட்டி நிக்கிறப்போ நான் எதுக்கு இன்னொரு புரொடியூசரோட பேனர்ல மூவி பண்ணணும்?”

“என்ன சார் இப்பிடி சொல்லிட்டிங்க? அவர் உங்க அப்பா”

“அப்பா பையன் உறவுலாம் வீட்டுல தான்... புரபசனை பொறுத்தவரைக்கும் என்னோட பார்வைல அவரும் ஒரு புரொடியூசர் தான்... அண்ட் ஒன் மோர் திங், டாடோட ஒர்க்கிங் ஸ்டைல் வேற... என் ஒர்க்கிங் ஸ்டைல் வேற... தட்ஸ் ஒய் நான் என்னோட டெபியூ மூவி கூட அவரோட பேனர்ல பண்ணாம எஸ்.ஜி சாரோட பேனர்ல பண்ணுனேன்... சப்போஸ் நான் எங்க டாட் புரொடக்சன்ல ஆக்ட் பண்ணிருந்தா அப்பாவோட உதவியால வளந்தேனு சொல்லிக் காட்ட சான்ஸ் அதிகம்... நான் சித்தார்த்தா வளரணும்னு ஆசைப்படுறேன்... எங்க டாட் கூட படம் பண்ணுனா சித்தார்த் நாராயணமூர்த்தியா தான் என்னை இந்த உலகம் பாக்கும்”

யாருடைய நிழலிலும் வளர தனக்கு விருப்பமில்லை; அது தனது தந்தையாக இருந்தாலும் சரி என்பதை பொட்டிலடித்தாற்போல அவன் சொன்ன விதத்தில் நாராயணமூர்த்திக்கே சற்று வருத்தம் தான். ஆனால் அது தான் அவரது மூத்தமகனின் குணாதிசயம் என்பதால் மனதின் உணர்ச்சியை முகம் பிரதிபலிக்காமல் சுதாரித்துக் கொண்டார்.

தன் முன்னே அடுக்கி வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மைக்குகளையும் தனது பதிலுக்காக காத்திருக்கும் நிருபர்களையும் ஒரு நொடி அலட்சியம் வழியும் கண்களால் பார்த்த சித்தார்த் “நெக்ஸ்ட் கொஸ்டீன் ப்ளீஸ்” என்று கேட்கவும் ஒரு நிருபர் மற்றவர்கள் கேட்க தயங்கிய கேள்வியைக் கேட்டார்.

“சார் ஆக்டர் ருத்ரேஷ் வர்மா இப்போ சினி ஃபீல்ட்ல நம்பர் ஒன் ப்ளேஸ்ல அவர் தான் இருக்கிறார்னு இண்டர்வியூ குடுத்திருக்கார்… அதுல நம்பர் ஒன் ப்ளேசுக்குப் போறதுக்கான ரேஸ்ல நீங்க இன்னும் ஓடவே ஆரம்பிக்கலனு சொல்லிருக்கார்… இதைப் பத்தி உங்க ஒபீனியன் என்ன?”

அந்த பெரிய ஹாலில் குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவுக்கு ஆழ்ந்த அமைதி. ஆனால் யாரை நோக்கி அந்தக் கேள்வி வைக்கப்பட்டதோ அவனிடம் இருந்து ஒரு ஏளனமான முறுவல் வெளிப்பட்டது.

நிமிர்ந்து அமர்ந்து கொண்ட சித்தார்த் தொண்டையைச் செறுமிக் கொண்டான்.

“வெல்! நான் ஒரு குட்டிக்கதை சொல்லவா?” என அவர்களிடம் கேட்டவன் அவர்களின் பதிலை எதிர்பாராதவனாய் சொல்ல ஆரம்பித்தான்.

“காட்டுக்குள்ள இருக்குற அனிமல்சுக்கு நடுவுல ஒரு ரேஸ் நடந்துச்சாம்… அதுல ஓடுறதுக்கு குதிரைங்க தயாரா நின்னுச்சாம்… அப்போ சிறுத்தை மட்டும் தனியா போய் உக்காந்திருந்துச்சாம்… எல்லா அனிமல்சும் நீயும் வேகமா தானே ஓடுற… நீ ரேஸ்ல கலந்துக்கலயானு சிறுத்தை கிட்ட கேட்டுச்சாம்… அதுக்கு சிறுத்தை என்ன சொல்லிச்சு தெரியுமா? ரேஸ்ல ஓடுறது குதிரைங்களோட வேலை… சிறுத்தைக்கு அதுங்களோட ஓடி தன்னோட வேகத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்ல… அதுவுமில்லாம குதிரைங்களோட ரேஸ்ல நான் கலந்துகிட்டா அது என் சிறுத்தை இனத்துக்கே அவமானம்.. சோ இது எனக்கான ரேஸ் இல்லனு சொல்லிச்சாம்” என்று சொல்லி நிறுத்திவிட்டு ஒரு கணம் தனது கூரிய விழியால் கேள்வி கேட்ட நிருபரை ஏறிட்டான் சித்தார்த்.

“நம்பர் ஒன் பிளேசுக்கான ரேஸ் எனக்கானது இல்ல… அதுல ஓடி மிஸ்டர் ஆர்.விய என்னோட போட்டியாளர்னு சொல்லி என்னோட நிலையில இருந்து கீழ இறங்க எனக்கு விருப்பமும் இல்ல… உங்க கேள்விக்குப் பதில் கிடைச்சிருக்கும்னு நினைக்கேன்” என்று சொல்லிவிட்டு அவனது அக்மார்க் கம்பீரமும் கர்வமும் கலந்த முறுவலை உதட்டில் பூசிக்கொண்டான் சித்தார்த்.

இவ்வளவு நேரம் மகனது வெளிப்படையான பதில்களில் சற்று சங்கடப்பட்ட சவிதாவும் நாராயணமூர்த்தியும் கூட இந்தக் கடைசி குட்டிக்கதையின் முடிவில் பெருமிதத்துடன் புன்னகைத்தனர்.

அதே நேரம் தமையனுக்கு முன்னரே எழுந்து கீழ்த்தளத்தில் அமர்ந்திருந்த இந்திரஜித் சித்தார்த்தைக் காண வந்த மாதவனுடன் வளவளத்தபடியே ஒரு கண்ணை பேட்டி நடக்கும் அறையின் மீது வைத்திருந்தான்.

நடப்பவற்றை ஹால் சோபாவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவன் தமையனின் கடைசி பதிலில் குதூகலித்தவனாக “அப்பிடி சொல்லுங்கண்ணா… தெறி ரிப்ளை” என்று சொல்லிவிட்டு தனது தமையனுக்கு பறக்கும் முத்தங்களைப் பரிசாக அளித்தவன் தன்னருகில் அமர்ந்திருந்த மாதவனுக்கு ஹைஃபை கொடுத்தான்.

“உன் அண்ணா மாதிரி சாவேஜ் ரிப்ளை பண்ணுறதுக்கு இன்னொருத்தன் பிறந்து தான் வரணும்டா ஜித்து.... தட்ஸ் மை ஃப்ரெண்ட்... யாருக்கு எப்பிடி நோஸ்கட் குடுக்கணும்ங்கிற கோர்ஸ்ல அவன் பி.ஹெஸ்டியாக்கும்” என்ற மாதவன் இந்தப் பேட்டியை தொலைக்காட்சியில் காணும் போது அந்த ருத்ரேஷ் வர்மாவின் முகம் எப்படி இருக்கும் என கற்பனை செய்யத் தொடங்கினான்.

அதை இந்திரஜித்திடம் சொல்லி கலாய்த்துக் கொண்டிருக்கும் போதே பேட்டி முடிந்து மூவரும் ஹாலுக்கு வர மாதவன் சித்தார்த்தின் பெற்றோரிடம் மரியாதை நிமித்தம் பேசியவன் சவிதாவின் பெயர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதற்கு வாழ்த்து கூறினான்.

“தேங்க்ஸ் மை டியர் யங் மேன்.... உன்னோட மூவி ஷூட் எந்த லெவல்ல இருக்கு?” என வினவினார் சவிதா.

“எய்ட்டி பர்சண்டேஜ் ஓவர் ஆன்ட்டி... இன்னும் ஒன் டே அவுட்டோர் ஷூட் மட்டும் இருக்கு... அது காலேஜ்ல நடக்குற சீன்... சோ அதுக்காக பெர்மிசன் வாங்கிருக்கோம்... இன்னும் ஒன் வீக்ல அந்த சீன் ஷூட் பண்ணிட்டோம்னா டப்பிங் ஒர்க் ஸ்டார்ட் பண்ணிடுவோம்” என்றான் அவன் பொறுப்பான இயக்குனராக.

அதன் பின்னரும் பேச்சு திரைத்துறை பற்றியே செல்ல சலிப்படைந்த சித்தார்த் “டேய் கோல்டன் க்ரவுனுக்குப் போகணும்டா... கிளம்புவோமா?” என நாசூக்காக கேட்க மாதவனும் நண்பனின் முகபாவனையை வைத்தே அவனது மனதைப் படித்தவனாக அவனுடன் கிளம்ப ஆயத்தமானான்.

நாராயணமூர்த்தியும் அதற்கு மேல் பேசி பொழுதைக் கழிக்க விரும்பாதவராக தயாரிப்பு அலுவலகத்துக்குச் செல்ல ஆயத்தமாக அன்றைய தினம் எந்த படப்பிடிப்பும் இல்லாத்தால் சவிதா தனது அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.

சித்தார்த்தும் மாதவனும் வீட்டை விட்டு வெளியேறும் போது தானும் உடன் வருவதாகச் சொன்ன இந்திரஜித்தைக் கல்லூரிக்குச் செல்லுமாறு அறிவுறுத்திவிட்டு இருவரும் கிளம்பினர்.

காரில் அமர்ந்ததும் மாதவன் சித்தார்த்தை நோக்க அவனோ காரை ஓட்டியபடியே கண்ணைச் சாலையில் பதித்திருந்தான். உடனே அவன் தோளில் தட்டியவன் “சும்மா சொல்ல கூடாதுடா... என்னம்மா இண்டர்வியூ குடுக்குற நீ... உண்மையச் சொல்லு, நீ பதில் சொன்னது அந்த ரிப்போர்ட்டருக்கா? இல்ல ஆர்.விக்கா?” என வினவ

“நான் ரிப்போர்ட்டர் கேட்ட கேள்விக்குத் தான் ஆன்சர் பண்ணுனேன் மேடி... மத்தபடி நீ சொல்லுற ஆர்.விங்கிற பெர்சன் யாருனே எனக்குத் தெரியாதுடா” என்றான் சித்தார்த் அமர்த்தலாக.

“நாட் பேட் மகனே... உன்னை ஏன் சாவேஜ் கிங்னு சொல்லுறாங்கனு இப்போ தானே புரியுது” – மாதவன்.

“ஐ டோண்ட் நோ அபவுட் தட் மேடி.... பட் நம்மள யாராச்சும் கிண்டல் பண்ணுனா பதிலுக்குக் கிண்டல் பண்ணியே ஆகணுமா என்ன? அவங்க வார்த்தைய அவங்களுக்கே திருப்பி விடுறது தான் சரியான பதிலடிங்கிறது என்னோட பணிவான கருத்து” – சித்தார்த்.

“அடேங்கப்பா! சாருக்குப் பணிவுலாம் இருக்குதா? டேய் போதும்டா... மானிங்கே பொய் சொல்லாத.... சரி பணிவுக்கு ஸ்பெல்லிங் சொல்லு பாப்போம்”

“ஸ்பெல்லிங் தானே... சொல்லிட்டா போச்சு... ஆனா நான் சொல்லுற லாங்வேஜ் உனக்குப் புரியுமானு தெரியலயே மேடி” என இழுத்துச் சொன்னபடியே சித்தார்த் கண்ணைச் சிமிட்ட மீண்டும் அவன் தோளில் அடித்துச் சிரித்தான் மாதவன்.

நீண்டநாட்களுக்குப் பின்னர் தொழில்பேச்சை மறந்து மனம் திறந்து வேடிக்கைப்பேச்சு பேசிக்கொண்டிருந்த அந்த நண்பர்களை சுமந்தபடியே கோல்டன் கிரவுன் ஹோட்டல் இருக்கும் பகுதியை நோக்கி விரைந்தது அந்தக் கருப்புநிற பி.எம்.டபிள்யூ.


Comments

  1. வந்தாயே மழையென நீயும்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 5)

    உண்மையிலயே சித்தார்த்தோட ஆட்டிட்யூட் ஆவ்சம். செம்மையா ரிப்ளை கொடுக்குறான். அதனாலத்தான் அவன் அந்த இடத்துல இருக்குறானோன்னு தோணுது. நட்புக்கும் மரியாதை கொடுக்கிறான்.

    ஆனா, அந்த மோதிரம், அதன் சம்பந்தப்பட்ட பெண்ங்கிற மட்டும், ஏன் இறுகிய முகமாகிடறான்னு தெரியலை.
    இதுக்குப் பின்னாடி ஒரு லவ் ட்ராஜிடி ஸ்டோரி இருக்குமோ..,?
    அந்த லவ் ஸ்டோரிக்கு சொந்தமானவ யசோதரவா இருக்குமோ..? ஏன்னா, அவ தானே கோமால இருந்து மீண்டதும் தன் கை விரல் மோதிரத்தை தேடினா. ஸோ..
    ரெண்டும் ரெண்டும் நாலுங்கிற
    ஈஸி கால்குலேஷன் இது.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete

Post a Comment

புத்தக வெளியீடு அறிவிப்பு

உன்னில் இதயம் அளாவுதே, மதுரமாய் நின் காதல், ஒரு காதலும் சில கவிதைகளும், அன்பனின் ஆரபி - இந்த நான்கு நாவல்களும் இப்போது அருணோதயம் பதிப்பகத்தில் கிடைக்கும். வாங்க விரும்புகிறவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்
உறவுகளால் இணைந்து உறவுகளால் பிணையும் சங்கவி - சரபேஸ்வரனின் காதல் கதை - குடும்ப நாவல்

Follow this blog for story Updates - என்னுடன் இணைந்திருங்கள் மக்களே!

Followers

Nithya Mariappan Audio Novels

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்
யாவும் நீயாக மாறினாய் - புத்தம் புது முழு நாவல் - நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள் சேனலில்

Copyright ©️ 2018 - 2025 Nithya Mariappan. All rights reserved .

This blog is managed by Nithya Mariappan. All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this blog will result in immediate legal action against the person concerned.