ஜூன் மாத நாவல் - இது வானின் பூபாளம்

Image
  NM tamil novel world தளத்தில் நேற்று முதல் ஆரம்பம். குடும்ப அரசியலால் பிரியும் வான்மதியும் பூபாலனும் இணைவார்களா? தெரிந்துகொள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! இது வானின் பூபாளம் – Tamil Novels | Nithya Mariappan

மழை 6

 இந்தக் கதை இனி எனது தளத்தில் வரும். தொடர்ந்து படிக்க NM தமிழ் நாவல் தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்! இனி எனது ஆன்கோயிங் மற்றும் ரீரன் நாவல்கள் அனைத்தும் தளத்தில் மட்டுமே வரும். தளத்தின் இணைப்பு 👇



“2007ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது இந்த வருடம் போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதென மனநல நிறுவனத்தின் துணை கண்காணிப்பாளரான மருத்துவர் பூர்ணசந்திரிகா தெரிவித்துள்ளார். அதிலும் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் (NCB) கூற்றுப்படி சமீப காலத்தில் சென்னையில் பார்ட்டி டிரக்ஸ் எனப்படும் எல்.எஸ்.டி, கொகைன், எம்.டி.எம்.ஏவின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

-18.03.2019, சிட்டிசன் மேட்டர்ஸ் மீடியாவின் ரிப்போர்ட்டர் லாஸ்யா சேகர்

ஹோட்டல் கோல்டன் கிரவுன்...

வானளாவிய கட்டிடங்களுடன் பல ஏக்கர் நிலபரப்பை விழுங்கி பசுமையான சூழலுக்கு நடுவே கம்பீரமாக நின்று கொண்டிருந்த அந்த ஹோட்டலின் வாகனத் தரிப்பிடத்தில் வந்து நின்றது சித்தார்த்தும் மாதவனும் பயணித்த பி.எம்.டபிள்யூ. அதிலிருந்து இறங்கியவர்கள் ஹோட்டல் வாலேவிடம் அதற்குரிய இடத்தில் நிறுத்துமாறு கார்ச்சாவியைக் கொடுத்துவிட்டு ஹோட்டலின் உள்ளே நுழைந்தனர்.

விருந்தினர்கள் தங்கும் அறைகள், தற்காலிகமாக தங்கிச் செல்லும் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்கள், வழக்கமாக தங்கிச் செல்லும் அறைகள் என கிட்டத்தட்ட எழுநூறுக்கும் மேற்பட்ட அறைகளை உள்ளடக்கிய மூன்று பிரிவுகளின் நடுவே வான நீல நிறத்தில் மின்னும் தண்ணீருடன் அமைந்திருந்த நீச்சல் குளம், அதன் ஓரங்களின் அழகாக வைக்கப்பட்டிருந்த அலங்கார குத்துச்செடிகள் என அந்த ஆடம்பர ஹோட்டலின் பிரம்மாண்டம் புதிதாக நுழையும் யாரையும் பிரமிக்க வைக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை.

அங்கே இல்லாத வசதிகளே கிடையாது எனலாம். அங்கு வந்து தங்கும் வாடிக்கையாளர்களுக்காக உடற்பயிற்சிக்கூடம், ஸ்பா, நைட் கிளப், கார்பரேட் கூட்டங்கள் நடத்துவதற்கான அறைகள், பார்ட்டி ஹால்கள் என எல்லா வசதிகளும் உள்ளேயே செய்யப்பட்டிருந்தன.

முதலில் சிறியளவில் ஆரம்பிக்கப்பட்டாலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ராகேஷின் உழைப்பும் அவனது புத்திச்சாலித்தனமும் தான் இந்தப் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு வழி வகுத்தது எனலாம்.

அதையெல்லாம் நினைத்தபடியே அந்த பிரம்மாண்ட ஹோட்டலின் லாபிக்குள் நுழைந்தனர் சித்தார்த்தும் மாதவனும். அதிலிருந்து சற்று தொலைவில் தான் ராகேஷின் அலுவலக அறை இருந்தது.

மாதவனும் சித்தார்த்தும் வழக்கம் போல பேசிக்கொண்டே கதவைத் தட்டாமல் உள்ளே நுழைந்துவிட அங்கிருந்தவனோ அவர்கள் வந்ததை கவனியாது சுழல்நாற்காலியின் மீது கையை வைத்துக் கொண்டு திரும்பி நின்றபடி போனில் பேசிக் கொண்டிருந்தான்.

“நியூ இயர் பார்ட்டிக்கு லூசியும் ஆடமும் வருவாங்க தானே? எல்லாரும் அவங்களுக்காக தான் வெயிட்டிங் ஆல்வின்” என்றபடி திரும்பியவன் அங்கே கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு நின்றிருந்த மாதவனையும் சித்தார்த்தையும் அச்சமயத்தில் எதிர்பார்க்கவில்லை போலும்.

அவனே முயன்றாலும் அவனது முகத்தில் ஆச்சரியம் தனது இருப்பைக் காட்டிவிட “ஐ வில் கால் யூ லேட்டர் ஆல்வின்” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு நண்பர்களைப் புன்னகை ததும்பும் முகத்துடன் வரவேற்றான்.

“ஐ காண்ட் பிலீவ் திஸ் கய்ஸ்... ஷார்ப்பா சொன்ன நேரத்துக்கு வந்து நிக்கிறிங்களே” என சிலாகித்தவனை இருவரும் விஷமப்புன்னகை செய்யவும் புரியாது விழித்தான் ராகேஷ்.

“என்னாச்சுடா உங்க ரெண்டு பேருக்கும்? உங்க லுக்கே சரியில்லயே”

சித்தார்த்தும் மாதவனும் அதே விஷமப்புன்னகையுடன் இருக்கையில் அமர சித்தார்த் கண்களைச் சுருக்கியபடியே “பை த வே, ஹூ இஸ் தட் லூசி ராக்கி பாய்?” என வினவ ராகேஷ் முதலில் திடுக்கிட்டான்.

அவனது திடுக்கிடலை நண்பர்கள் கண்டறியும் முன்னர் முகத்தைச் சீர் செய்து கொண்டான்.

“ஹேய்! நீங்க ரெண்டு பேரும் நினைக்கிற அளவுக்கு யாருமில்லடா... லூசியும் ஆடமும் கூடிய சீக்கிரம் நம்மளோட பார்ட்னர்ஷிப் வச்சுக்கப் போறாங்க... அவங்க ரெண்டு பேரும் இப்போ கோவால இருக்காங்க... நியூ இயர் பார்ட்டில கலந்துக்க போறாங்க... அடிக்கடி இங்க விசிட் பண்ணுவாங்க... எவ்ரி நியூ பார்ட்டிலயும் அவங்களுக்கு ஸ்பெஷல் வரவேற்பு தான்... அதுல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் எப்பிடி தெரிய போகுது? ஹீரோ சாரும் டைரக்டர் சாரும் அவார்ட் ஃபங்சன் கூட அட்டெண்ட் பண்ண மாட்டிங்க... உங்க ரெண்டு பேருக்குமே பார்ட்டி, ஆல்கஹால், ஆரவாரம்லாம் சுத்தமா பிடிக்காதே” என்று சொல்லவும் இருவரும் தோள்களை ஆர்வமின்றி குலுக்கிக் கொண்டனர்.

பின்னர் பேச்சு தற்போதைய திரைப்படவேலைகள் குறித்து திரும்பியது. படப்பிடிப்பில் இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே பாக்கி என மாதவன் சொல்லவும் “நீ ஜெட் ஸ்பீட்ல மூவி எடுக்குற ஆளாச்சேடா... உன் கிட்ட இந்தக் கேள்வியைக் கேட்டதே தப்பு” என்று கேலியாக ராகேஷ் பேசிக்கொண்டிருக்கும் போதே கதவு தட்டப்பட மூவரும் திரும்பி பார்க்கையில் உள்ளே நுழைந்தார் நடுத்தரவயது மனிதர் ஒருவர்.

அவரது வயதுக்கேற்ற முதிர்ச்சியும் கம்பீரமுமாக உள்ளே வந்தவரின் கண்களில் மட்டும் ஒருவித அலைக்கழிப்பு நிறைந்திருந்தது. அவரைக் கண்டதும் சித்தார்த் மற்றும் மாதவனின் முகத்தில் மரியாதை தெரிய எழுந்து நின்றனர் இருவரும்.

அவர்களின் மரியாதையைக் கண்டதும் புன்னகைத்தபடி அவர்களருகில் வந்தவர் அவர்களின் தோளில் வாஞ்சையுடன் தட்டிக் கொடுத்தார்.

“உங்க ரெண்டு பேரையும் ஆடிட்டியூட் பிடிச்ச ஹீரோ டைரக்டர் காம்போனு சொல்லுற மீடியா பீபிள் இப்போ உங்க முகத்த பாக்கணும்... இவ்ளோ அருமையான பசங்கள இப்பிடி சொல்லிட்டோமேனு வருத்தப்படுவாங்க” என கேலி செய்தபடி இருக்கையில் அமர்ந்தார்.

அவர் தான் சாந்தகோபாலன். தமிழ் திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை இருந்த எஸ்.ஜி புரொடக்சனின் நிறுவனர். தயாரிப்பு நிறுவனம் நசிந்து போன போது மகனது சினிமா வாழ்வும் அஸ்தமித்துவிட அச்சமயத்தில் தான் சித்தார்த்தின் உதவியால் இந்த ஹோட்டல் ஆரம்பிக்கப்பட்டது. அதைச் சித்தார்த் உதவியென்று சொல்லிக்கொள்ள மாட்டான். அவருக்கும் அவரது மகனுக்கும் தான் செய்ய வேண்டிய கடமையென எண்ணியே ஹோட்டலில் மூலதனம் போட்டான். மூலதனம் போட்டதோடு சரி! அதன் பின்னர் ஹோட்டல் விவகாரத்தில் அவன் தலையிட்டதே இல்லை.

ஹோட்டலின் ஆரம்பக்கட்ட வளர்ச்சிக்கு மகனுடன் சேர்ந்து சாந்தகோபாலனும் கடுமையாக உழைத்தார். பின்பு மகன் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேற்பார்வை மட்டுமே பார்க்க ஆரம்பித்தார்.

சாந்தகோபாலன் சொல்வது போல சித்தார்த்தும் மாதவனும் பணிவுடன் பேசும் நபர் அவர் மட்டுமே!

அவரும் ராகேஷும் இரு நண்பர்களுடன் உரையாடும் போதே ராகேஷின் உதவியாளினி கையில் ஒரு கோப்புடன் வந்தாள். அதை வாங்கிய ராகேஷ் சித்தார்த்திடம் நீட்ட அவனோ படித்துக் கூடப் பார்க்காது கையெழுத்திட ஆரம்பித்தான்.

சாந்தகோபாலன் புருவமுடிச்சுடன் “படிச்சுப் பாத்துட்டு சைன் பண்ணுனு உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன் சித்து” என கடிந்துகொள்ள அவனோ கையெழுத்திட்டு முடித்துவிட்டான்.

“இந்த உலகத்துல நான் கண்ணை மூடிட்டு நம்புற மனுசங்க ரொம்ப கம்மி... அதுல நீங்க மூனு பேரும் அடக்கம்... ராக்கி என்ன செஞ்சாலும் சரியா தான் இருக்கும்ங்கிறது என்னோட நம்பிக்கை”

சாந்தகோபாலன் மகனது முகத்தை ஏறிட்டவர் சித்தார்த்திடம் “உன் ஃப்ரெண்ட் மேல நீ நம்பிக்கை வைக்கிறது சரி தான் சித்து... ஆனா பிசினஸ்னு வந்தா மனசை விட மூளை சொல்லுறத தான் கேக்கணும்பா” என்றார் அழுத்தமான குரலில்.

அத்தோடு தங்களது ஹோட்டலில் செயல்படும் பாருடன் சேர்ந்த நைட் கிளப் பற்றி இலட்சத்து ஐம்பதாவது முறை தனது அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டார்.

“குடி குடியைக் கெடுக்கும்னு தெரிஞ்சும் இந்த நைட் கிளப்பை நடத்துறது நல்லாவா இருக்கு? இவன் கிட்ட சொன்னா என் பேச்சைக் கேக்க மாட்றான்... அந்த நைட் கிளப் ரன் ஆக ஆரம்பிச்ச நாள்ல இருந்து என் மனசாட்சி என்னைக் குற்றவாளியா பாக்குது சித்து”

“அங்கிள் நீங்க தானே இப்போ சொன்னிங்க, பிசினஸ்ல மனசுக்கு இடமில்லனு... அதே போல மனசாட்சிக்கும் இடமில்ல அங்கிள்... நம்ம யாரையும் கைய பிடிச்சு இழுத்து கட்டாயப்படுத்தி டிரிங் பண்ண சொல்லலயே! அவங்களுக்கு இது ஒரு ரிலாக்சேசன்... அவங்க ஹெல்த் பத்தி அவங்களுக்கே அக்கறை இல்லாதப்போ நம்ம கவலைப்பட்டு என்ன ஆகப்போகுது? லிக்கர் டிரிங்கிங் இஸ் இஞ்சூரியஸ் டு ஹெல்த்னு மூவில போடச் சொல்லுற கட்டாயப்படுத்துற கவர்மெண்ட்டே லிக்கர் பிசினசை லீகலா நடத்துறாங்க... அப்போ நம்ம நடத்துறது ஒன்னும் தப்பில்லயே! நாய் வித்த காசு குரைக்காதுனு என்னோட பாட்டி சின்ன வயசுல அடிக்கடி சொல்லுவாங்க அங்கிள்... சோ ஹோட்டல் பத்தி எல்லா முடிவையும் ராகேஷே எடுக்கட்டும்... நம்ம அவனை கட்டாயப்படுத்த வேண்டாம்”

அவன் பேசி முடிக்கவும் சாந்தகோபாலன் அயர்ந்தார் என்றால் ராகேஷ் சந்தோசம் மின்னும் முகத்துடன் நண்பனை பார்த்து வைத்தான்.

யாராலும் அவனை விவாதத்தில் ஜெயிக்க முடியாது என்பது ராகேஷ் அறிந்த உண்மை. அதற்கு அவனது தந்தை மட்டும் விதிவிலக்கா என்ன!

சாந்தகோபாலனுடனும் ராகேஷுடனும் சிறிதுநேரம் பேசிவிட்டு மாதவனை அழைத்துக்கொண்டு சித்தார்த் கிளம்பினான்.

அவனது கார் ஹோட்டலில் இருந்து வெளியேறுவதை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் சாந்தகோபாலன்.

◆◆◆

கே.ஆர் மல்டிஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்...

“நான் இன்வெஸ்டிகேடிவ் ஜெர்னலிசம் படிச்சது சினிமா பத்தி கிசுகிசு எழுதுறதுக்கு இல்ல சீஃப்… எந்த புரொபசன்ல தான் ரிஸ்க் இல்ல? என்னோட பேரண்ட்ஸ் சொன்னதை பிடிச்சுக்கிட்டு நீங்களும் பேசாதிங்க” என்றாள் யசோதரா மூக்கின் நுனி சிவக்க.

அவளது உடல்நலம் முன்பு போல இல்லையென்றாலும் தானே எழுந்து உட்காருவது, சிறிது நடமாடுவது என நல்ல முன்னேற்றம் தான். அவளுக்குப் பிடிக்காத எதையும் சொன்னால் உணர்ச்சிவசப்படுவாள் என்பதாலேயே மருத்துவர் அறிவுரைப்படி அவளது வேலை குறித்த எந்த எதிர்மறை கருத்தையும் அவளது பெற்றோர் அவளிடம் திணிக்கவில்லை.

ஏற்கெனவே கௌதம் கௌதம் என பிதற்றியவளை சரிசெய்வதற்குள் அவர்கள் ஓய்ந்து போனார்கள். அதோடு சேர்த்து இன்னும் எத்தனை அதிர்ச்சியையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுப்பது! எனவே வேலை விசயத்தில் அவளை நேரடியாக மறுத்துப் பேசத் தயங்கினர்.

ஆனால் மறைமுகமாக விஷ்ணுபிரகாஷ் மூலம் அவளை மீண்டும் கிராமத்துக்கே அழைத்துச் செல்லும் எண்ணத்தை வெளிப்படுத்தவே யசோதரா பொறுக்க முடியாது சீறிவிட்டாள்.

அவளை ஆதுரத்துடன் பார்த்தபடியே யோசித்தான் விஷ்ணு பிரகாஷ். இப்போது சொன்னால் யசோதரா கட்டாயம் தனது பேச்சை கேட்கப் போவதில்லை. எனவே அவளது பணியின் தன்மையை மட்டும் மாற்றி விடலாம் என்று ஏற்கெனவே யோசித்திருந்தான் அவன்.

“வெல்! உன் ஆசைப்படியே நீ மறுபடியும் சேனல்ல ஜாயின் பண்ணிக்கலாம்… ஆனா ஒரு கண்டிசன்” என்று அவன் நிறுத்தவும் என்னவென ஏறிட்டாள் யசோதரா.

அவளின் முகபாவத்தைப் புரிந்து கொண்டவனாக அவனே தொடர்ந்தான்.

“இனிமே இன்வெஸ்டிகேடிவ் ஜெர்னலிசம் சம்பந்தமா உனக்கு எந்த புராஜெக்டும் நம்ம சேனல் தரப்புல இருந்து குடுக்க மாட்டோம்… பிகாஸ் வீ டோண்ட் வாண்ட் டூ லூஸ் அ டேலண்ட்டட் ரிப்போர்ட்டர் லைக் யூ.. புரிஞ்சுதா யசோதரா வாசுதேவன்?” என்று ஆணித்தரமான குரலில் சொல்லவும் அயர்ந்து போனாள் யசோதரா.

அவளுடன் அமர்ந்திருந்த வாசுதேவனும் வைஷ்ணவியும் நிம்மதியுற்றாலும் யசோதரா இதனால் விரக்தியுற்றுவிடுவாளோ என்ற பயமும் அவர்களின் மனதிற்குள் உதயமானது.

எனவே தளர்ந்து போனவர்களாய் விஷ்ணுபிரகாஷைப் பார்க்க அவன் கண்களால் அவர்களை அமைதியாக்கிவிட்டு யசோதராவிடம் பேச ஆரம்பித்தான்.

“நம்ம சேனல்ல வீக்லி ஒன்ஸ் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்காக மோட்டிவேசனல் ஸ்பீச் குடுக்குறதுக்கு ஒரு செலிபிரிட்டிய லைவ்வா இண்டர்வியூ எடுப்போம்… அந்த செலிபிரிட்டி அண்ட் ஸ்டூடண்ட்சோட இண்ட்ராக்ட் பண்ணுற டெலிவிசன் பிரசண்டரா உன்னால ஒர்க் பண்ண முடியுமா?”

யசோதராவும் அந்நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறாள் தான்! ஜஸ்டிஷ் டுடேவின் ஸ்டார் ரிப்போர்ட்டர் கூட சில காலங்கள் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். எனவே தான் அதைச் செய்வதால் ஒன்றும் குறைந்து போய் விட மாட்டோம் என புரிந்துகொண்டவளாக விஷ்ணுபிரகாஷிடம் சம்மதம் என தலையாட்டினாள்.

அந்த முடிவு யசோதராவின் பெற்றோருக்கும் சம்மதம் தான்! சிறிது நாட்கள் அவளுடன் சேர்ந்து இங்கேயே தங்கிவிட்டு அவள் உடல்நிலை சரியானதும் தாங்கள் மட்டுமே மதுரைக்குத் திரும்பிவிடுவோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். கூடவே மயூரி யசோதராவுக்கு உறுதுணையாக இருக்கும் போது தாங்கள் கூடவே இருந்து மகளுக்கு உதவுகிறேன் பேர்வழியென அவளது தன்னம்பிக்கையும் பழைய தைரியமும் திரும்புவதற்கு தடையாக நிற்க கூடாது என்பது அவர்களின் எண்ணம்!

“என்னால ரெண்டு வருசம் மதுரைக்கும் சென்னைக்குமா அலைஞ்சு நீங்க கஷ்டப்பட்டது போதும்... இப்போ தான் நான் பழையபடி கியூர் ஆயிட்டேனே... நீங்க ஊருக்குக் கிளம்புங்கப்பா... போதும் போதும்ங்கிற அளவுக்கு நீங்க என்னை பேம்பர் பண்ணியாச்சு” என்று சொல்லிவிட்டாள் அவள்.

“அங்கயும் இங்கயுமா அலைஞ்சு நீங்க உங்களோட ஆர்கானிக் ஃபார்மிங்கை இடைல விட்டுட்டிங்க பெரியப்பா... அதை கன்டினியூ பண்ணுங்க... நான் யசோவ பத்திரமா பாத்துக்கிறேன்” என மயூரியும் உறுதியளித்தாள்.

எனவே யசோதரா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்ததும் ஒரு வாரம் அவளுடன் லோட்டஸ் ரெசிடென்சியில் கழித்தவர்கள் ஆயிரம் அறிவுரைகளை இரு பெண்களுக்கும் வழங்கிவிட்டு மதுரைக்குச் சென்றுவிட்டனர்.

Comments

  1. வந்தாயே மழையென நீயும்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 6)

    நண்பர்களை நம்ப வேண்டியது தான், அதுக்குன்னு அந்த பேப்பர்ல என்ன இருக்குன்னு கூட பார்க்காம சைன் பண்ற அளவுக்கு போகணுமா என்ன ?
    இது முட்டாள்தனமா தெரியயையா..? படிச்சவங்களும் இப்படித்தான் முட்டாள் தனமா நடந்துப்பாங்களா...? சாந்த கோபாலனே கண்டிச்சு சொல்றாருன்னா... அவர் மனசுல ஏதோ உறுத்தல் இருக்கப்போய் தானே இப்படி சொல்றாரு. ஒருவேளை, அவருக்கு தன் மகன் ராகேஷோட நடவடிக்கையில ஏதாவது சந்தேகம் வந்திருக்குமோ...?

    அது சரி, யார் இந்த லூசி, ஆடம், ஆல்வின்...? இவங்களோட இந்த ராகேஷ்க்கு என்ன பார்ட்னர் ஷிப்..?

    யசோதரா எப்ப நம்ம கவுதம் சித்தார்த்தை சந்திக்கிறது...?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete

Post a Comment

புத்தக வெளியீடு அறிவிப்பு

உன்னில் இதயம் அளாவுதே, மதுரமாய் நின் காதல், ஒரு காதலும் சில கவிதைகளும், அன்பனின் ஆரபி - இந்த நான்கு நாவல்களும் இப்போது அருணோதயம் பதிப்பகத்தில் கிடைக்கும். வாங்க விரும்புகிறவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்
உறவுகளால் இணைந்து உறவுகளால் பிணையும் சங்கவி - சரபேஸ்வரனின் காதல் கதை - குடும்ப நாவல்

Follow this blog for story Updates - என்னுடன் இணைந்திருங்கள் மக்களே!

Followers

Nithya Mariappan Audio Novels

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்
யாவும் நீயாக மாறினாய் - புத்தம் புது முழு நாவல் - நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள் சேனலில்

Copyright ©️ 2018 - 2025 Nithya Mariappan. All rights reserved .

This blog is managed by Nithya Mariappan. All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this blog will result in immediate legal action against the person concerned.