அத்தியாயம் 20 வராண்டாவில் அமர்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள் தரங்கிணி. அவளது மனதைப் போலவே வானமும் கருமேகங்களால் சூழப்பட்டிருந்தது. சூள் கொண்ட மேகங்கள் எப்போது வேண்டுமானாலும் மழையைப் பிரசவிக்கலாம் என்ற நிலமை. சில்லென்ற காற்று வேறு வீசிக்கொண்டிருந்தது. அதை எல்லாம் ரசிக்கும் மனநிலை தரங்கிணிக்கு இல்லை. அவளது மனதைத் தான் மனோரதி அந்தளவுக்குக் குழப்பிவிட்டாரே! அன்னையின் தவிப்புக்கும், மைந்தனின் சுதந்திர வாழ்க்கைக்கான கனவுக்கும் இடையே சிக்கித் தவித்துக்கொண்டிருந்தாள் தரங்கிணி. அதிரதனிடம் மனோரதியின் நிலையை எடுத்துச் சொன்னால் அவன் புரிந்துகொள்வானா? அவனது மனதில் தன்மீதுள்ள விருப்பத்தைச் சொன்னதால் துரத்திவிடுவதாக எண்ணிக்கொள்வானோ? அதிரதன் தன்னைத் தவறாக எண்ணிவிடக்கூடாதே என்ற ஆதங்கம். என்ன தான் செய்வது? இந்தப் பிரச்சனைக்கு யார் தான் தீர்வு சொல்வது? முந்தைய தினம் முழுவதும் குழம்பித் தவித்தவளுக்கு அனுபமா ஒரு யோசனை கூறினாள். என்ன பிரச்சனை என்று அவளிடம் வெளிப்படையாகச் சொல்லவில்லை. “எனக்கு ஒரு பிரச்சனை அனு… இப்போதைக்கு வெளிய சொல்ல முடியாத நிலமை… நான் ரெண்டு பக்கத்துக்கும் பா...