பூங்காற்று 39

மறுநாள் விடியலின்
பூபாள ராகத்தைப் பறவைகள் பாட விழித்துக் கொண்டாள் கிருஷ்ணஜாட்சி. அருகில் உறங்கிக்
கொண்டிருக்கும் நீரஜாட்சிக்குப் போர்வையை நன்றாக மூடிவிட்டு படுக்கையிலிருந்து எழுந்தாள். அவுட் ஹவுஸின்
கதவைத் திறந்தவளின் பார்வை துளசிமாடத்தில் விளக்கேற்றி அதைச் சுற்றி வந்து கொண்டிருந்த
பாட்டியின் மீது பட காலை நேரத்தின் இனிமை அவரது தரிசனத்தால் இன்னும் அதிகரித்ததுப்
போல தோன்றப் புன்னகையுடன் பாட்டியை நோக்கிச் சென்றாள்.
“பாட்டி” என்ற அழைப்புடன்
வந்த பெரிய பேத்தியைக் கண்ட சீதாலெட்சுமி “கிருஷ்ணா
முதல்ல போய் குளிச்சிட்டு பாட்டியண்ட வரணும். நான் மடியா
இருக்கேன்டி” என்க அவள் சரியென்று தலையசைத்துவிட்டுக் குளிக்கச் சென்றாள். வாசலில் பால்
பாக்கெட்டுகள் இருக்கவே அதை எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்றாள் அவள்.
அதற்குள் விழித்துவிட்ட
நீரஜாட்சி அவளுக்கு முன்னர் குளிக்கச் சென்றுவிட அவள் வரும் வரை காத்திருந்தவள் நீரஜாட்சி
வெளிவரவும் “நீரு காபி போட்டுருவியாடி? அக்கா குளிச்சிட்டு
வந்து பிரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணுறேன்” என்க அவளும் தலையை
ஆட்டிவிட்டுச் சென்றாள்.
கிருஷ்ணஜாட்சி குளித்துவிட்டு
வந்தவள் அவுட்ஹவுஸின் வெளியே சென்று நின்றபடி கூந்தலை உலர்த்த ஆரம்பிக்க ரகுநந்தனுடன்
ஜாக்கிங் சென்றுவிட்டு வந்த ஹர்சவர்தனின் பார்வையில் நீண்ட கூந்தலை உலர்த்தும் அவள்
படவே அவனது கால்கள் நகர மறுத்து நின்று விட்டது.
ரகுநந்தன் அண்ணனின் பேச்சுச்சத்தம் ஏன் நின்றுவிட்டது
என்று திரும்பி பார்க்க தமையனின் பார்வை அங்கே காலை வெயிலில் கூந்தல் உலர்த்தும் கிருஷ்ணஜாட்சியின்
மீதிருக்க அவன் ஆச்சரியத்துடன் அண்ணனின் அருகில் வந்தான்.
அதே நேரம் காபி போட்டுக்
கொண்டிருந்த நீரஜாட்சிக்கு எத்தனை ஸ்பூன் காபிப்பொடி போடுவது என்ற சந்தேகம் வரவே அக்காவிடம்
கேட்பதற்காக அவுட் ஹவுஸின் வெளியே வர, அவள் கண்ணில் சிக்கிக்
கொண்டான் கிருஷ்ணஜாட்சியைக் கண்டு மெய்மறந்து நின்ற ஹர்சவர்தன். ஒரு நிமிடம்
ஆச்சரியப்பட்டவள் கிருஷ்ணஜாட்சியைப் பார்க்க அவளோ இதை அறியாமல் அவள் வேலையைச் செய்து
கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்துக்
கொண்டிருந்த ஹர்சவர்தனைக் கண்டவளின் மூளையில் நேற்று இதே நேரத்தில் அவன் வாயிலிருந்து
உதிர்த்த முத்துக்கள் நினைவுக்கு வரவே சுறுசுறுவென்று கோபம் வர வேகமாக கிருஷ்ணஜாட்சியையும்
தாண்டி நடந்தவள் மாமா மகன்களின் முன் சென்று நிற்க இருவரும் அவளை வினோதமாகப் பார்த்து
வைத்தனர்.
அவள் கோபத்துடன் ஹர்சவர்தனைப்
பார்த்து “இப்போ எதுக்கு கிருஷ்ணாவை குறுகுறுனு பார்த்துட்டிருக்கிங்க? ரெஃப்யூஜிஸ்
கேம்ப்ல இருக்கிறவங்களை இப்பிடி தான் பார்ப்பாங்கன்னு யாராவது உங்க கிட்ட சொன்னாங்களா?” என்று கேட்க
ஹர்சவர்தன் அவளது கோபத்தைக் கண்டு அயர்ந்துவிட்டான்.
இந்தச் சின்னப் பெண்ணுக்கு
தான் எவ்வளவு கோபம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே கிருஷ்ணஜாட்சி தங்கையின்
காட்டுக்கத்தலில் திடுக்கிட்டவளாய் யாரும் வீட்டிற்குள் இருந்து வரும் முன் அவளை அவுட்
ஹவுஸினுள் அழைத்துச் செல்வதற்காக அவள் அருகில் வந்தாள்.
நீரஜாட்சியின் பேச்சில்
எரிச்சலான ரகுநந்தன் கடுப்பில் “ஏய் ஆழாக்கு சைசுல இருந்துண்டு நோக்கு வாய் மட்டும் எட்டூருக்கு
நீள்றதோ? எங்கண்ணா என்னடி பண்ணுனான்? அப்பிடியே
உன்னோட அக்கா ரதிதேவி பாரு! ஓவரா பேசாம வேலையைப் பார்த்துண்டு போ” என்று பதிலுக்கு
அவளை வறுத்தெடுத்தான்.
கிருஷ்ணஜாட்சி நிலமை
கை மீறும் முன் நீரஜாட்சியை வீட்டிற்குள் வரும்படி இழுத்துச் செல்ல முயல அவளோ கல் போன்
நின்று கொண்டு “நீ முதல்ல உங்கண்ணாவ அழைச்சிட்டுப் போடா” என்று பதிலுக்குப்
பதில் பேச கிருஷ்ணஜாட்சி சிரமத்துடன் அவளை அழைத்துச் சென்றாள்.
ரகுநந்தனும் தன் அண்ணனைக்
கைப்பற்றி அழைத்துச் செல்ல அந்நேரத்தில் வீட்டின் காம்பவுண்டுக்குள் ஒரு கார் நுழைந்தது. காரிலிருந்து
இறங்கிய பெண்மணிக்கு பத்மாவதியின் வயது தான் இருக்கும்.
இறங்கியதும் அவரது
பார்வை அங்கே நின்று கொண்டிருந்த ஹர்சவர்தன் மற்றும் ரகுநந்தன் மீது படிய வாயெல்லாம்
பல்லாக “ஹர்சா என்னடாப்பா காத்தாலேயே வாக்கிங்கா?” என்றுக் கேட்க
ரகுநந்தன் அவரைப்
போலவே பாவனை செய்து “இல்ல விஜி மாமி! பீச்சுக்குப்
போய் துணி துவைச்சிண்டு வந்தோம்” என்று நக்கலடிக்க மனதுக்குள் கடுப்பானாலும் அவனை அவரால் எதுவும்
சொல்ல முடியவில்லை.
பின்னே என்னவாம்! அவர் தனது
மகள் வர்ஷாவுக்கு ஹர்சவர்தனை மணாளனாக வரித்து வைத்த பிறகு அவனது தம்பியை அவரால் எவ்வாறு
கடிந்து கொள்ள முடியும்.
இருந்தாலும் சமாளிப்பதற்காக “உனக்கு எப்போவுமே
ஜோக் தான். ஆனா ஒன்னு வர்ஷாவும் உன்னை மாதிரி தான்டா ஹர்சா. இந்த ஃபிட்னெஸை
மெயிண்டெயின் பண்ணுற விஷயத்துல அவளையும் அடிச்சிக்க முடியாது” என்றுச் சொல்ல
வர்ஷா என்ற பெயரைக் கேட்டதும் ஹர்சவர்தனின் முகம் பூவாய் மலர அந்தப் பெண்மணியைத் தன்னுடன்
அழைத்துச் சென்றான் அவன்.
அவரைக் கண்டதும் பூஜையறையில்
இருந்து வெளியே வந்த பத்மாவதி “விஜி மன்னி! வாங்கோ வாங்கோ. உங்களுக்காக
தான் நான் வெயிட் பண்ணிண்டு இருந்தேன்” என்று அவரை வரவேற்க
அவரது குரல் கேட்டு சமையலறையில் இருந்து வெளியே வந்தார் மைதிலி.
“வாங்கோ மன்னி” என்று அவரை
பொதுப்படையாக வரவேற்றுவிட்டு மீண்டும் சமையலறைக்குள்ளே சென்றவர் மனதிற்குள் “மதுரா இது
நீ இருந்திருக்க வேண்டிய இடம்டி! ஆனா எங்கண்ணா கொடுத்து வச்சது அவ்ளோ தான். இவா ரெண்டு
பேரும் சேர்ந்துண்டு என்ன பண்ண காத்திருக்கான்னு தெரியலயேடி. என்னை இப்பிடி
தனியா புலம்ப விட்டுண்டு நீ மட்டும் போயிட்டியேடி” என்று புலம்பிக்
கொண்டார்.
அவர் சென்ற சிறிது
நேரத்தில் சமையலறையில் நுழைந்த மாமியாரைப் பார்த்ததும் “அம்மா! விஜி மன்னி
ஆத்துக்கு வந்துருக்கா. நீங்க பார்த்தேளா?” என்று கேட்க
சீதாலெட்சுமி மவுனமாக தலையாட்டினார்.
பெருமூச்சுடன் “நீ உன் அக்காவை
எதும் சொல்லிடாதடிம்மா! அவ மனசறிஞ்சு யாரையும் வெறுக்கறவ இல்ல. என் பொண்ணு
செஞ்ச காரியத்தை அவளால மறக்க முடியல. அவா ரெண்டு பேரும்
என்னவோ பேசிட்டுப் போறா. நீ அதைல்லாம் கண்டுக்காம குழந்தேளைப் பொறுப்பா கவனிச்சுக்கோ” என்று வீட்டின்
பெரியமனுஷியாய் இளைய மருமகளுக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார் அவர்.
அதற்குள் தோட்டத்தில்
நாற்காலிகளைப் போட்டு அமர்ந்த பத்மாவதியும் அவரது அண்ணனின் மனைவியான விஜயலெட்சுமியும். ஆம் அது தான்
அவரது பெயர். பத்மாவதியின் அண்ணன் ஆதிவராஹனின் மனைவி. அதோடு அவருக்கு
ஒன்று விட்ட அத்தை மகளும் கூட. அவரது மகள் வர்ஷாவை தான் தனது மருமகளாக்கிக் கொள்ள வேண்டும்
என்பது பத்மாவதியின் நீண்டநாள் கனவு.
இருவரும் ஸ்ருதிகீர்த்தியை
அழைத்து கிருஷ்ணஜாட்சியையும், நீரஜாட்சியையும் அழைத்து வருமாறு சொல்ல அவள் முகம் சுழித்து “நேக்கு அவா
ரெண்டு பேரையும் சுத்தமா பிடிக்கல பெரியம்மா. அதிலயும்
அந்த நீளமுடிக்காரியை கொஞ்சம் கூட பிடிக்கல” என்க அவளின்
அந்த வார்த்தையைக் கேட்டதும் ஒரு குடும்பத்தலைவியாக ஒரு பெண்ணாக பத்மாவதி அவளைக் கடிந்து கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் அதற்கு மாறாக
அவளது வெறுப்பு நிறைந்த வார்த்தைகள் அவரது மனதிலிருக்கும் வெறுப்புணர்வை இன்னும் வளர்க்கவே
அவள் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சினார் பத்மாவதி.
“என் செல்லம்! நான் கூட
நீயும் உங்கம்மா, மைத்தியை மாதிரி அவா போடுற நாடகத்துல மயங்கிட்டியோனு நினைச்சுட்டேன்டிம்மா. பெரியம்மா
வயித்துல பாலை வார்த்த போ! நீ போய் அவா மூஞ்சியைக் கூடப் பார்க்க வேண்டாம். நான் கூப்பிட்டேனு
சொல்லி அழைச்சிண்டு வா. போதும்” என்க அவள் இன்னும் முகம் சுழித்தபடியே அவுட் ஹவுஸை நோக்கிச்
சென்றாள்.
உள்ளே நுழைந்தவளின்
நாசியை தாக்கியது கிருஷ்ணஜாட்சியின் சமையலின் இனிய மணம். அதை ரசித்தபடியே
வந்தவள் ஹாலின் நடுவில் உள்ள சோஃபாவில் அமர்ந்து மேஜையின் மீது கால் நீட்டி அமர்ந்து
புதிய கிரிக்கெட் மட்டையை ஆராய்ந்து கொண்டிருந்த நீரஜாட்சியின் பார்வையைச் சந்திக்க
நேர்ந்தது.
அவளின் துச்சமான பார்வையில்
ஒரு கணம் குன்றினாலும் இவள் என்ன என்னைப் பார்ப்பது என்பது போல உள்ளே நுழைந்தவள் அவளை
ஏறிட்டபடியே “உன் அக்காவை பெரியம்மா கூப்பிட்டாங்க. வாங்க ரெண்டு
பேரும்” என்று ஆணையிட நீரஜாட்சி கிரிக்கெட் மட்டையுடன் எழுந்தவள் அவள் அருகில் வர சற்று
பயந்தவளாய் நகர்ந்தாள்.
தன்னைக் கண்டு பயந்த
ஸ்ருதிகீர்த்தியை நினைத்து மனதில் சிரித்துக் கொண்டவள் சமையலறையை நோக்கி சத்தமாக “கிருஷ்ணா
நம்மளை மாமி கூப்பிட்டிருக்காங்களாம். வீட்டோட சர்வெண்ட்
லேடி வந்து சொல்லுறா. வா போவோம்” என்க அவளது சர்வெண்ட்
என்ற வார்த்தை ஸ்ருதிகீர்த்தியின் கோபத்தைத் தூண்ட நீரஜாட்சியை ஏதோ சொல்ல வந்தவள் அவள்
கையிலிருக்கும் கிரிக்கெட் மட்டைக்குப் பயந்து அமைதியானாள்.
அதற்குள் கிருஷ்ணஜாட்சி
சமையலறைக்குள் இருந்து வெளியே வந்தவள் அங்கே நின்ற ஸ்ருதிகீர்த்தியைக் கண்டதும் தங்கையை
முறைத்துவிட்டு அவளையும் கையோடு அழைத்துக் கொண்டு மாமியிடம் சென்றாள்.
தோட்டத்தில் அமர்ந்திருந்த
விஜயலெட்சுமி தூரத்தில் நடந்துவரும் கிருஷ்ணஜாட்சியைக் கண்டதும் “பத்மா! அதோ வர்றாளே! அதுவா மதுராவோட
பொண்ணு? பார்க்கறதுக்கு அவ அம்மாவோட ஜெராக்ஸ் காப்பியா இருக்காடி. அதே அழகு, அதே சாந்தமான
முகம்” என்றுச் சொல்ல அதற்குள் மூவரும் அவர் அருகில் வந்துவிட்டனர்.
கிருஷ்ணஜாட்சிக்கு
மனதை மறைத்த புன்னகையை வீசிய பத்மாவதி “இவா என்னோட மன்னி. என் அண்ணா
ஆதிவராஹன் அதான் உங்கம்மா வேண்டானு சொல்லிட்டுப் போனாளே அதே ஆதிவராஹனோட மனைவி” என்று குத்தலாகச்
சொல்ல ஸ்ருதிகீர்த்தி அதைக் கேட்டு நமட்டுச்சிரிப்பு சிரித்தாள்.
இரு பெண்களின் முகத்திலும்
ஒரு கணம் வலி வந்து மறைந்தாலும் சமாளித்தபடி அவருக்கு வணக்கம் சொல்ல பத்மாவதி “சரி ரெண்டு
பேரும் போங்கோ! வெயில் வேற அடிக்கறது” என்க கிருஷ்ணஜாட்சி
தலையாட்டிவிட்டு நகர விஜயலெட்சுமி மெதுவாக “மூத்தது கொள்ளை
அழகா இருக்குடி பத்மா! ஆனா அந்த மதுரவாணிங்கிற பாம்புக்குப் பிறந்தது நல்லவளாவா
இருக்கும்?” என்று பத்மாவதியின் காதில் கிசுகிசுத்தார்.
அவரோ “மன்னி மூத்தது
இருக்கே அதைக் கூட விட்டுடலாம். ஆனா இளையது இருக்கே அது விஷத்திலும் விஷம் ஆலகால விஷம்” என்று தன்னைக்
குறித்துக் குறை பேசிக் கொண்டிருந்த மாமியின் பேச்சை நன்றாகவே கேட்டுவிட்டாள் நீரஜாட்சி.
தன் அருகில் நடந்து
வந்த அக்காவிடம் “இந்த மாமி மண்டையை ஒரு நாள் கிரிக்கெட் பேட்டை வச்சு பொலக்கப்
போறேன் கிருஷ்ணா, நான் அதுக்கு ஆலகால விஷமா?” என்று முகம்
சிவக்கக் கத்திய தங்கையின் வாயைப் பொத்தினாள் கிருஷ்ணஜாட்சி.
“பார்த்துடி! அவங்க காதுல
விழுந்துடப் போகுது” என்ற அக்காவை முறைத்தபடி “விழுந்தா
விழட்டும் கிருஷ்ணா! இன்னைக்கே அந்த மாமிக்கு அதுக்கான தண்டனையைக் குடுக்கல, என் பேரு
நீரஜாட்சி இல்ல” என்று சபதம் செய்துவிட்டு வராண்டாவில் குறுக்கும் நெடுக்குமாக
நடந்தபடி யோசித்த தங்கையை அங்கேயே விட்டுவிட்டு சமையலறைக்குள் புகுந்தாள் கிருஷ்ணஜாட்சி.
நீரஜாட்சி நீண்ட நேரமாக
யோசித்தவளுக்கு ஐடியா எதுவும் புலப்படாது போக அந்நேரம் அவளின் செவியைக் குளிர்வித்தது
வீதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களின் சத்தம்.
அதைக் கேட்டதும் அவள்
இதழில் ஒரு வில்லத்தனமான சிரிப்பு மின்ன “என்னையா மாமி ஆலகால
விஷம்னு சொன்னிங்க? இந்த விஷம் இன்னைக்கு என்ன செய்யப் போகுதுனு பொறுத்திருந்துப்
பாருங்க” என்றுச் சொல்லிக் கொண்டே அவுட் ஹவுஸை விட்டு வெளியேறினாள்.
வீட்டிலிருந்து யாரும்
தன்னைக் கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறு வீட்டின் வாயில் கதவை
மெதுவாகத் திறந்துவிட்டு கிரிக்கெட் மட்டை மற்றும் பந்துடன் வெளியேறினாள் அவள். ஆனால் இந்த
காட்சி ரகுநந்தனின் பார்வையிலிருந்து தப்பவில்லை. தனக்குள்ளே “இந்த குட்டிப்பிசாசு
போற விதமே சரியில்லயே! நந்து இவ ஏதோ பண்ணப் போறாடா. அது மட்டும்
நிச்சயம்” என்றுச் சொல்லிக் கொண்டான் அவன்.
பூங்காற்றிலே உன் சுவாசம்..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 4)
அட.. நீள முடியிலேயே ஆஃப் ஆகிட்டாரா நம்ம ஹீரோ...?
பெரியவா வாய் செத்தவன்னா
சின்னவ காரியத்துலயே கன்னா இருக்கிறவ. சூப்பர் காம்பினேஷன். இந்த பத்மாவதி மாமிக்கு சின்னவ கையாலத்தான் ஆலகால விஷமே கிடைக்கப்போகுது.
பின்ன என்ன..? சின்ன பொண்ணை பார்க்குற நேரமெல்லாம் வாயில போட்டு அரைச்சுட்டே இருந்தா இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமா பண்ணத் தோணும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ReplyDelete