பூங்காற்று 39

Image
  பூங்காற்று 39 திருமண நாளின் விடியல் அழகாக ஆரம்பிக்க நீரஜாட்சியை அதிகாலையிலேயே எழுப்பி விட்டாள் கிருஷ்ணஜாட்சி. அவள் கண்ணை கசக்கிக் கொண்டு எழும்புகையிலேயே   அவுட் ஹவுசினுள் நுழைந்தார் பத்மாவதி. " கிருஷ்ணா நீரஜா எழும்பிட்டாளா ? தலையில எண்ணெய் வச்சிக்கணும்டி" என்று கூறியபடி நீரஜாட்சியிடம் வந்தவர் அவளைச் சீக்கிரமாக குளித்துவிட்டு தயாராக கூற அவளும் அவர்சொன்னபடி குளித்துவிட்டு   புடவையை சுற்றிக் கொண்டு வந்தாள். அதன் பின்னர் அடுத்த சடங்குக்கு அவளை அழைத்துச் செல்ல கிருஷ்ணஜாட்சியும் சீக்கிரமாக குளித்துவிட்டு நீரஜாட்சிக்கு நலங்கு வைப்பதற்காக அவளும் சென்றுவிட்டாள். அங்கே மைதிலி , சீதாலெட்சுமி , மைத்திரேயி , ஸ்ருதிகீர்த்தி இவர்களுடன் அவர்களின் மாமியார்களும் இருக்க பத்மாவதியே முன் நின்று நீரஜாட்சிக்கு மஞ்சள் பூசி நலங்கு வைக்க மற்றவர்களும் அதைப் பின்பற்றி சடங்கை ஆரம்பித்தனர். அதே நேரம் மண்டபத்தில் ரகுநந்தன் விரதத்துக்காக தயாரானான். ஹர்சவர்தனும் , அவனது தந்தை , சித்தப்பா மற்றும் சகோதரிகளின் கணவர்கள் என அனைவரும் சூழ்ந்து கேலி செய்ய அவனும் திருமணச்சடங்குகளில் ஐக்கி...

பூங்காற்று 7

 



பத்மாவதி வந்துவிட்டுப் போனதற்கு அடையாளமாய் அவரது மல்லிகைப்பூ வாசம் இன்னும் அறையைச் சுற்றி வர கிருஷ்ணஜாட்சி மெதுவாக எழுந்து சுவரில் மாட்டி வைத்திருந்த அன்னையின் போட்டோவை தடவியவள்

"மா! உங்க அப்பா அந்த காலத்துலயே உங்களை பி.ஏ படிக்கவச்சார்னு எவ்ளோ பெருமையா சொல்லிப்பிங்க! ஆனா இன்னைக்கு உங்க பொண்ணுக்கு மேல படிக்கிற அதிர்ஷ்டம் இல்லம்மா. படிப்பா சுயமரியாதையானு பார்த்தா எனக்கு இப்போதைக்கு என்னோட சுயமரியாதை தான் எனக்கு முக்கியம். இப்போ படிக்கலைனா என்னமா நான் கொஞ்ச நாள் கழிச்சு படிச்சுக்கிறேன்" என்றாள் மறைக்கப்பட்ட வேதனையுடன்.

அதற்குள் மைத்ரேயியும் நீரஜாட்சியும் விண்ணப்பத்தோடு வருவது அவர்களின் பேச்சுச்சத்தத்தில் அறிந்து கொண்டவள் அவர்கள் அவுட் ஹவுஸிற்குள் வராமல் வீட்டிற்குள் செல்வதை அறிந்ததும் பதற்றமாகிவிட்டாள்.

இது அவளது மாமா இருவரும் மதியவுணவுக்காக வரும் நேரம். இந்த நேரத்தில் அவர்களிடம் போய் நான் படிக்க விரும்பவில்லை என்று எப்படி கூறுவது என்பது தான் அவளின் யோசனை. ஆனால் அதைப் பார்த்துக் கொண்டிருந்தால் தனக்கும் தங்கைக்கும் இன்னும் அவமானங்கள் வருங்காலத்தில் வர வாய்ப்புள்ளதால் அவளும் ஒரு முடிவோடு வீட்டை நோக்கிச் சென்றாள்.

அவள் நினைத்தபடி அங்கே முழுக்குடும்பமும் கூடியிருக்க மைத்ரேயி தாத்தாவிடம் "நான் பி.பி.ஏக்காக தான் அப்ளிகேசன் ஃபார்ம் வாங்கியிருக்கேன் தாத்தா. அவ காமர்ஸ்ல நல்ல மார்க் வாங்கியிருக்கா. அக்கவுண்டன்சியும் செண்டம். நீங்க கார்டியன் பிளேஸ்ல கையெழுத்து போடுங்கோ. நான் மத்ததை ஃபில் அப் பண்ணிப்பேன்" என்றுச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தாள் கிருஷ்ணஜாட்சி.

தாத்தாவின் அருகில் உரிமையுடன் அமர்ந்திருக்கும் நீரஜாட்சியைப் பார்த்தவள் அப்படியே விழியை சுழற்றியதில் அவளது பார்வை பத்மாவதியிடம் வந்து நிலைத்தது. அவரின் பார்வை கூறும் செய்தியை உணர்ந்து கொண்டவள் தயக்கத்துடன் "மைத்திக்கா இந்த அப்ளிகேசன் ஃபார்முக்கு அவசியம் இல்ல. ஏன்னா மேல படிக்கப் போறது இல்ல" என்று அவளது நலம்விரும்பிகள் அனைவரின் தலையிலும் இடியைத் தூக்கிப் போட அப்போது மாடிப்படியில் இறங்கிக் கொண்டிருந்த மாமன் மகன்களின் செவியையும் அந்தச் செய்தி தாக்கியது.

மைத்ரேயியும் நீரஜாட்சியும் நீர் நிரம்பிய விழிகளுடன் விண்ணப்பத்தைப் பார்க்க மைதிலியோ "கிருஷ்ணா என்னடிம்மா பேசற நீ?" என்று குழப்பத்துடன் வினவ பாட்டியிலிருந்து தாத்தா வரை அனைவரையும் அவளது முடிவின் மூலம் அவள் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டாள்.

பத்மாவதியின் அருகில் அமர்ந்திருந்த ஸ்ருதிகீர்த்தி உதட்டைச் சுழித்துக் கொண்டு "பெரியம்மா! எதோ பாவம் பார்த்து மைத்திக்கா இதுக்கு அப்ளிகேஷன் வாங்கிண்டு வந்தா இதுக்கு திமிரைப் பாருங்கோ. பெரிய இவனு நெனைப்பு" என்க பத்மாவதி தங்கை மகளை அமைதிப்படுத்தினார்.

அவர்கள் யோசனையுடன் கீழே வர ரகுநந்தனை பார்க்க விரும்பாத நீரஜாட்சி முகத்தைச் சுழித்துக் கொண்டு எழுந்து வெளியே சென்றுவிட்டாள். அவளுக்கு அக்கா படிக்கப் போவதில்லை என்றுச் சொன்ன எரிச்சல் வேறு. வெளி வராண்டாவுக்கு வந்து கையைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டாள்.

கிருஷ்ணாஜாட்சி அவர்களின் முகத்தைப் பார்த்துவிட்டு தலையைக் குனிந்தபடி "பெரியமாமா நான் இனிமே உங்களோட ஹோட்டலுக்கு வர்றேன். நான் தான் நல்லா சமைக்கிறேன்ல, என்னையும் அங்கே குக்கா சேர்த்துக்கோங்க மாமா. எனக்கு அங்கே ஒர்க் பண்ணனும்னு ஆசையா இருக்கு. அந்த சம்பளத்தை வச்சு..." என்று அவள் சொல்லும் போதே

அவளின் சின்னமாமா "போதும். இதுக்கு மேல நீ எதையும் பேச வேண்டாம். ஹோட்டல்ல சமையல்காரியா ஆக்கறதுக்கா உன்னை நாங்க தஞ்சாவூர்ல இருந்து அழைச்சிண்டு வந்தோம்? யாருடா உன் மனசைக் கண்டபடி பேசி கலைச்சது? யார் வேணா சொல்லட்டும். இந்த ஆத்துல எங்களுக்கு என்னென்ன உரிமை இருக்கோ அதே உரிமை மதுரவாணிக்கும் இருக்கு. அவளோட பிள்ளைகள் படிக்காம யாருக்கோ சேவகம் பண்ணுறதை அவ பார்த்தான்னா அவ ஆத்மா கூட எங்களை மன்னிக்காதுடிம்மா. ஏற்கெனவே தேவையில்லாத விஷயங்களால எங்க தங்கயை நாங்க உயிரோடு இருந்தப்போவே ஒதுக்கிவச்சு பெரிய பாவம் பண்ணிட்டோம். அவ பிள்ளைகளை அடிமை வேலை செய்ய வச்சு இன்னும் பாவத்துக்கு ஆளாக விரும்பலடிம்மா" என்று அவரது அண்ணன் மனைவி பத்மாவதியை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தவாறே கூறி முடித்தார்.

வேங்கடநாதனும் "நீ ஹோட்டலுக்கு எப்போ வேணும்னா வரலாம். ஆனா வேலை பார்க்கறதுக்கு இல்ல. அதோட முதலாளியா. இந்த எண்ணத்தை உன் மனசை விட்டு அழிச்சிடும்மா கிருஷ்ணா" என்று தணிந்த குரலில் அவளுக்குப் புத்தி கூற

கிருஷ்ணஜாட்சி நிமிர்ந்தவள் இரு சகோதரர்களும் நிற்பதைக் கண்டதும் ஒரு கணம் தடுமாறியவள் சுதாரித்துக் கொண்டு நிமிர்வாக

"என்னைத் தப்பா நெனைச்சுக்காதிங்க மாமா! இந்த வீட்டுக்கு அம்மா அப்பாவோட நாங்க வந்திருந்தோம்னா நீங்க சொல்லுற மாதிரி உரிமையா நடந்துக்கலாம். ஆனா நாங்க இங்க அனா... உங்களைச் சார்ந்து பிழைக்கிறதா நாளைக்கு ஒரு பேச்சு வந்துட்டா அது என்னை பெத்தவங்களுக்கு தான் அசிங்கம்" என்று அனாதை என்ற வார்த்தையை விழுங்கிவிட்டுப் பிடிவாதமாக தன் முடிவிலேயே நிற்க அவள் பேசிய வார்த்தைகள் குற்றமுள்ள நெஞ்சங்களைக் குறுகுறுக்க வைத்தது என்னவோ உண்மை.

அவள் மாமாவின் அருகில் சென்று அமர்ந்தபடி "மாமா உழைச்சுச் சாப்பிடறது ஒன்னும் கேவலமான விஷயமில்லையே. நான் ஏன் நம்ம ஹோட்டலுக்கு வர்றேனு சொன்னேன்னா அங்கே எனக்கு சேஃப்டியா வொர்க் பண்ண முடியும்னு தான்,. அதோட ஏன் நீங்க சமையல்காரினு நெனைக்கிறிங்க? உங்க ஹோட்டலோட நியூ செஃப்னு நெனைச்சுக்கோங்க மாமா" என்று அவருக்குப் புரியவைக்க முயன்றாள்.

மைதிலி அவளை ஆதுரத்தோடு பார்த்தபடி "கிருஷ்ணாம்மா! அதுக்கு கூட படிக்கணும்டி. படிக்காத செஃபை யாரும் ஹோட்டல்ல சேக்கறதில்லனு நோக்கு தெரியாதா?" என்று வினவ பட்டாபிராமனுக்கு இளையமருமகளின் பேச்சில் பொறிதட்டியது.

தன் எதிரே அமர்ந்திருக்கும் மூத்தமருமகளின் முகத்தில் தெரிந்த வெற்றிப்புன்னகையைக் கண்டவர் மனதிற்குள் "இது உன் வேலையாடிம்மா? நான் பார்த்து இந்த ஆத்துக்கு அழைச்சிண்டு வந்த உனக்கே இவ்வளவு மூளை இருந்தா நான் உன்னோட மாமானார். என் பேத்திங்க வாழ்க்கையை எந்த திசையில கொண்டு போகணும்னு நேக்கு நன்னா தெரியும்டிம்மா" என்று சூளுரைத்துக் கொண்டவர் "டேய் வேங்கடநாதா நீ சேஷனுக்கு போன் போடு. நான் அவனண்ட கொஞ்சம் பேசணும்" என்றவாறு எழும்ப இரு மகன்களும் அவரைப் பின்பற்றி நடந்தனர்.

பத்மாவதி சென்றவர்களை ஒரு பெருமூச்சுடன் பார்த்தவர் சீதாலெட்சுமியிடம் "அம்மா! உங்க பேத்தி ரூபத்தில மட்டுமில்ல, பிடிவாதத்துல கூட மதுரவாணி தான். அவளை உங்க யாராலயும் சமாதானப்படுத்த முடியாது. அவ சொல்லுறதுக்கு ஒத்துண்டிடுங்கோ எல்லாரும். அதான் நம்ம குடும்பத்துக்கு நல்லது" என்று ஜம்பமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து ஸ்ருதிகீர்த்தியுடன் நகர்ந்தார்.

கிருஷ்ணஜாட்சி சீதாலெட்சுமியுடன் அவுட் ஹவுஸிற்கு செல்ல வெளியே வர வராண்டாவில் காத்திருந்த நீரஜாட்சி திரும்பி பார்க்கையில் ஹாலில் நின்று கொண்டிருந்த இரு சகோதரன்களும் அவள் கண்ணில் பட்டுவிட சீதாலெட்சுமியுடன் வந்த கிருஷ்ணஜாட்சியைக் கண்டதும் அவள் பொங்கிவிட்டாள்.

"இந்த வீட்டுல நம்ம இன்னும் இருந்தா இதை விட மோசமான இன்சிடெண்ட் கூட நடக்கும். இதுக்கு நம்ம தஞ்சாவூரிலே இருந்திருக்கலாம் கிருஷ்ணா. இங்கே வந்து கண்டவங்க கிட்டல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருக்கு. அம்மா அப்பா மட்டும் உயிரோட இருந்தா இதுங்கல்லாம் நம்மளை இப்பிடி கஷ்டப்படுத்துமா? நீ வரலைனா போ! நான் தஞ்சாவூருக்குப் போறேன். எனக்கு இவங்க யாரையும் பிடிக்கல" என்றுச் சொல்லிவிட்டு விறுவிறுவென்று அவுட் ஹவுஸை நோக்கி ஓட கிருஷ்ணஜாட்சி பதற்றத்துடன் "சித்தம்மா அவ சொன்னா செஞ்சிடுவா. எனக்கு பயமா இருக்கு" என்றபடி அவள் பின்னே ஓடினாள்.

ஹாலினுள் நின்று கொண்டிருந்த இரு சகோதரர்களையும் அவளின் வார்த்தைகள் சுட்டுவிட இருவருமே அமைதியாக நிற்க மட்டுமே செய்தனர். ஆனால் கிருஷ்ணஜாட்சியும் சீதாலெட்சுமியும் பின்னே ஓடிவர நீரஜாட்சி சூட்கேசுடன் வெளியே நடக்க ஹர்சவர்தன் பதறிப் போய் "டேய் நந்து! இந்த குட்டிப்பொண்ணு என்னடா பண்ணுறா? வா முதல்ல போய் அவளை நிறுத்துவோம்" என்றபடி அவள் வாயில் கேட்டை தாண்டுவதற்கு முன் சென்று வழிமறித்துவிட்டான்.

ஹர்சவர்தனை முறைத்த நீரஜாட்சி "இப்போ வழி விடுறிங்களா? இல்லையா?" என்றுக் கேட்க அவன் இலகுவான குரலில் "முடியாது. உன்னால முடிஞ்சா இங்கே இருந்து போக டிரை பண்ணு" என்றபடி அவளை முறைக்க கிருஷ்ணஜாட்சியும் சீதாலெட்சுமியும் அவளைக் கெஞ்சி கொண்டிருந்தனர்.

ஹர்சவர்தன் ரகுநந்தனிடம் "நந்து அவ கையில இருக்கிற சூட்கேசை வாங்கு" என்க நீரஜாட்சியின் சூட்கேசை அவன் பிடுங்க அவள் ஆத்திரத்தில் கத்தத் தொடங்கினாள்.

"உங்க எல்லாருக்கும் நாங்க இருக்கிறது தான் பிரச்சனை. நான் இனிமே இங்கே இருக்க மாட்டேன். என் சூட்கேசை குடுக்கச் சொல்லு சித்தம்மா" என்று அவனை கண்ணை உருட்டி முறைக்க அதற்குள் அவள் செய்த கலாட்டாவில் வீட்டின் வாயில் கேட்டின் முன் கூடிவிட பட்டாபிராமன் கோபத்தில் கொந்தளித்த பேத்தியிடம் வர அவள் கைநீட்டி அவரைத் தடுத்தாள்.

"நீ ஏதும் பேசாத பட்டு. எனக்கு இவங்க யாரையும் பிடிக்கல" என்று பத்மாவதி, ஸ்ருதிகீர்த்தி, ரகுநந்தன் மற்றும் ஹர்சவர்தனை அவளது தளிர்விரலால் சுட்டிக்காட்ட அவள் விரல் காட்டியவர்களை பட்டாபிராமன் பார்வையால் எரித்து பஷ்மமாக்கிவிட்டார்.

பின்னர் பொறுமையாக இளைய பேத்தியிடம் வந்தவர் "இந்த ஆத்துல இது வரைக்கும் நோக்கு பிடிக்காத விஷயங்கள் நிறைய நடந்திருக்கலாம்டிம்மா. இனிமே உன் தாத்தா இருக்கறவரைக்கும் அப்பிடி எதுவும் நடக்க விடமாட்டேன்" என்று அவர் உறுதியளிக்க யாருக்கும் அடங்காதவள் சிறிது சிறிதாக மலை இறங்கினாள்.

அவர் கண்ணால் மற்றவர்களை அழைத்தபடி அவளுடன் நடந்தவர் அவளிடம் "நீரஜா! என் செல்லமோன்னோ! இனிமே இந்த ஆத்தை விட்டுப் போக கூடாது. சரியா? இந்த கிழவன் ஏற்கெனவே பொண்ணை இழந்து பரிதவிச்சிண்டிருக்கேன். உங்க முகத்தைப் பார்த்து ஏதோ கொஞ்சம் நிம்மதியா இருக்கேன்டிம்மா. நீங்களும் போயிட்டேள்னா நான் பாதி உயிரா போயிடுவேன்" என்றுச் சொல்ல நீரஜாட்சி அவரது தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

"நீ அப்பிடில்லாம் சொல்லாதே பட்டு. ஆனா இங்கேயே இருந்தா கிருஷ்ணா படிக்க முடியாம போயிடுமே" என்று வருத்தத்துடன் கூற அவளின் கூந்தலை வருடிவிட்டபடி நடந்தவர் "அப்பிடி எதுவும் நடக்காதுடிம்மா" என்றுச் சொன்னபடி தோட்டத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

பேத்தியின் சிகையை ஒதுக்கிவிட அவளோ "கிருஷ்ணா ரொம்ப பிடிவாதக்காரி பட்டு. அவ ஒத்துக்கவே மாட்டா" என்று வருத்தத்துடன் சொல்ல அவர் சிரிப்புடன் "நான் இருக்கேனோன்னோ! நீ கவலைப்படாதே! அவ படிக்க நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன்" என்க நீரஜாட்சி அங்கே நடந்து வரும் பத்மாவதியை கண்ணால் காட்ட அவர் அதைக் கண்டுகொண்டார்.

"யாருக்கும் பிரச்சனை இல்லாம நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்மா" என்க அவளும் தாத்தாவின் மீது நம்பிக்கை வைத்தபடி அந்தக் குடும்பத்தினரைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

அனைவரும் குழுமிவிட பட்டாபிராமன் கிருஷ்ணஜாட்சியைப் பார்த்தபடியே "கிருஷ்ணா இங்க பாருடிம்மா! உன் முடிவுல நான் தலையிடப் போறதில்ல. உன் இஷ்டத்துக்கு நீ வேலைக்குப் போ. ஆனா நீ நான் சொன்ன கோர்ஸ்ல ஜாயின் பண்ணனும்" என்று கட்டளையிட்டப்படியே பத்மாவதியையும் முறைக்க அந்தப் பெண்மணியால் எதுவும் சொல்ல முடியாத நிலை.

கிருஷ்ணஜாட்சி மறுத்துப் பேச முயல அவளைக் கையமர்த்தியவர் "அது ஒன்னும் டெய்லி காலேஜூக்கு போய் படிக்கிற படிப்பு இல்லடிம்மா. வாரத்துல மூனு கிளாஸ் அட்டெண்ட் பண்ணுனா போதும். நாலு மாச கோர்ஸ் தான். ஆனா இண்டர்நேசனல் லெவல்ல அதுக்கு வேல்யூ இருக்குனு சேஷன் சொன்னான். அது பேக்கிங் (Backing) சம்பந்தப்பட்ட டிப்ளமோ கோர்ஸ். நீ நம்ம ஹோட்டலுக்கும் வந்துக்கலாம். அதோட சேர்த்து இதையும் படிச்சிக்கலாம். மாட்டேனு சொல்ல உனக்கு வழியில்ல" என்று தீர்மானமாகச் சொல்லிவிட சமையல் கலையில் ஆர்வமுள்ள கிருஷ்ணஜாட்சி அதை ஒத்துக் கொண்டாள்.

மைத்ரேயியும், நீரஜாட்சியும் அவள் படிக்காமல் இருப்பதற்கு இந்தப் படிப்பு எவ்வளவோ மேல் என்று சமாதானமாகிவிட இண்டர்நேசனல் வேல்யூ என்ற வார்த்தையில் காண்டான பத்மாவதியும் ஸ்ருதிகீர்த்தியும் வீட்டிற்குள் சென்றுவிட்டனர். மைதிலி மூன்று பெண்களையும், மாமனார் மாமியாரையும் அழைத்துக் கொண்டு அவுட் ஹவுஸினுள் சென்றுவிட அங்கே நடந்த அத்தனை கலவரங்களிலும் தங்களின் பெயர் அடிப்பட்ட அதிர்ச்சியில் நின்றனர் அண்ணனும், தம்பியும்.

ரகுநந்தன் அவனது அண்ணனிடம் "டேய் அண்ணா நோக்கு ஒன்னு புரிஞ்சதாடா? ஒரு நாள் ஏதோ ஒரு கோவத்துல நம்ம விட்ட லூஸ் டாக்குக்கு இந்த குட்டிப்பிசாசு வாழ்க்கை முழுக்க நம்மளை கழுவி ஊத்துவா போலயே. பகவானே இதை சீக்கிரமா எவனாச்சும் வந்து விவாகம் பண்ணி அழைச்சிண்டு போயிடணும். இல்லனா டெய்லி தாத்தாவோட ஹிட்லர் பார்வையைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்றுச் சொல்ல

அவன் கேலியாக "நீ அந்த பொண்ணு கிட்ட சாரி கேக்கப் போறேனு சொல்லிண்டு சுத்துன. இப்போ என்னாச்சு? சார் அதைச் சுத்தமா மறந்துட்டேள் போல?" என்றுச் சொல்ல

அவன் தலையிலடித்தவனாய் "நான் ஒன்னும் மறக்கலடா. ஆனா இன்னைக்கு வ என்னை கழுவி ஊத்தி தாத்தாவோட பார்வையில குற்றவாளியா ஆக்குனதுக்கு அப்புறம் மன்னிப்பு கேக்கறது என்னடா ஒரு வெண்கல கிண்ணம் கூட கெடயாது அவளுக்கு" என்றுப் பொறுமியபடி அண்ணனுடன் அங்கிருந்து நகர்ந்தான்.


Comments

  1. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  2. பூங்காற்றிலே உன் சுவாசம்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 7)

    இந்த நீரஜாட்சி மட்டும் இல்லைன்னா, கிருஷ்ணஜாட்சியை எல்லாரும் போட்டு மிதிச்சிடுவாங்க போல.
    ஆனா, தாத்தா இருந்ததால
    அக்கா தங்கச்சி ரெண்டு பேரையுமே காபந்து பண்ணிட்டு வராரு.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1