பூங்காற்று 42

Image
  நீரஜாட்சி திருமணம் முடிந்த மறுநாளே ரகுநந்தனிடம் தனது நிறைவேறாத திட்டம் பற்றி சொல்ல தக்க தருணத்தை எதிர்நோக்கியிருக்க அவன் ஹோட்டலின் வேலை காரணமாக சென்றுவிட அவளால் அவனிடம் அதை கூறவே முடியவில்லை. அதை தொடர்ந்த நாட்களில் வீட்டில் அனைவரும் ஒரு புறம் ஹர்சவர்தனின் ஹோட்டல் திறப்புவிழாவை பற்றி பேசிக் கொண்டிருக்க இன்னொரு புறம் கிருஷ்ணஜாட்சியும் கரோலினும் சேர்ந்து அவர்கள் திறக்கப் போகிற " டாம் ' ஸ் கஃபே" தொடர்பான வேலைகளில் அலைந்து திரிய இந்த இரண்டு திறப்புவிழாக்களே அங்கிருந்தவர்களின் மொத்த நேரத்தையும் எடுத்துக் கொண்டன. ஹர்சவர்தன் அது விஷயமாக ரகுநந்தனை அழைத்துச் சென்றுவிட நீரஜாட்சி அலுவலக வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினாள். பெரும்பாலான நேரங்களில் அவன் வீடு திரும்பும் போது அவள் உறங்கிப் போயிருக்க அந்த உண்மை வெளிவராமலே இருந்தது. ஆனால் அவளது தோழி கவிதா இது ரகுநந்தனுக்கு தெரியவருவது அவர்களின் உறவுக்கு நல்லதல்ல என்று ஒவ்வொரு முறை போனில் பேசும் போதும் நீரஜாட்சிக்கு அறிவுறுத்துவாள். நீரஜாட்சிக்கு தன்னை இவ்வளவு காதலிக்கும் தன் கணவனிடம் அவன் சம்பந்தப்பட்ட விஷயத்தை மறைத...

பூங்காற்று 10

 



நீரஜாட்சியின் பொதுத்தேர்வு முடிந்தநிலையில் மைத்ரேயியின் திருமணப் பேச்சுவார்த்தை ஆரம்பித்திருந்தது. சேஷனின் தூரத்து உறவினர் ஒருவரின் பேரனுக்கு மைத்ரேயியைப் பார்க்கலாம் என்றப் பேச்சு வர வீடே அன்று பரபரப்பாக இருந்தது. மாப்பிள்ளை வருமானவரித்துறையில் அதிகாரியாக வேலை பார்ப்பதால் அவருக்கு வசதியாக ஞாயிறு அன்று பெண் பார்க்க வருமாறு கூறியிருக்க கிருஷ்ணஜாட்சியும் அன்று வீட்டில் இருந்து அவளது இளைய மாமிக்கு வேலையில் உதவிக் கொண்டிருந்தாள்.

நீரஜாட்சி வழக்கம் போல பட்டாபிராமனிடம் "பட்டு ட்வெண்டி ஃபோர்லாம் கல்யாணத்துக்கான ஏஜா? மைத்திக்காவை ஏன் அதுக்குள்ள துரத்தி விடப் பார்க்கிறிங்க?" என்று கேட்க

தரையில் அமர்ந்து பூ தொடுத்துக் கொண்டிருந்த சீதாலெட்சுமி "உன் மைத்திக்கா வயசுல நான் இருக்கறச்ச நேக்கு ரெண்டு  பசங்க பிறந்துட்டாள்டி. இந்தக் காலத்து பெண்பிள்ளைங்க தான் விவாகம்னு சொன்னாலே காததூரம் ஓடறேள்" என்று கேலி செய்ய பட்டாபிராமன் சிரித்தார்.

அவர் மனையாளை கேலியோடு பார்த்தவர் "சீதே நீயும் என் பேத்திகளும் ஒன்னாடி? அவா என்ன உன்னாட்டம் சமையலறையே கதினு கெடக்கறவாளா? நேக்கே மைத்திக்கு இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்கிற எண்ணம் தான். உன் மூத்த மருமாள் தான் மைத்திக்கு முடிச்சா தான் ஹர்சாவுக்கு முடிக்க முடியும்னு அவசரப்படறா" என்றுச் சொல்ல

சீதாலெட்சுமி "நீங்க சும்மா இருங்கோண்ணா. இந்த மாப்பிள்ளையாண்டான் நல்ல வேலையில் இருக்கான். நம்ம தேடுனா கூட இப்பிடி ஒருத்தன் கிடைக்கறது கஷ்டம். நம்ம மைத்தியை விட ரெண்டு வயசு தான் பெரியவன். அதுக்குள்ள எவ்ளோ பெரிய போஸ்டிங்ல இருக்கான்னு பார்த்தேளா? மைத்தி குடுத்து வச்சவண்ணா!" என்று மனநிறைவுடன் கூறிவிட்டு கணவரின் அருகில் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்த இளைய பேத்தியைப் பார்த்து கணவரிடம் கண் காட்டினார்.

"அடியே நீரஜா என்னடி யோசனை?" என்று வினவிய சீதாலெட்சுமியை நோக்கிய நீரஜாட்சி "சித்தம்மா நான் இந்த வீட்டை விட்டு வேற எங்கேயும் போக மாட்டேன். நான் உன் கூடவும் பட்டு கூடவும் தான் இருப்பேன்" என்றுச் சொல்ல

சீதாலெட்சுமி கேலியாக "நோக்கு இன்னும் கல்யாணவயசு வரலடி. வந்தா உன்னையும் ஆம்படையான் ஆத்துக்கு பார்சல் பண்ணி அனுப்பிடுவோம். இல்லையாண்ணா?" என்க

நீரஜாட்சி சிணுங்கிக் கொண்டு பட்டாபிராமனைக் கட்டிக் கொண்டபடி "பட்டு இந்த சித்தம்மா வாயை மூடச் சொல்லு. நான் எங்கேயும் போக மாட்டேன். அப்பிடி யாரும் என்னை வீட்டை விட்டு அனுப்ப பார்த்தா என் பேட்டால அவங்க மண்டைய ஒடச்சிடுவேன்" என்றுச் சொல்ல பட்டாபிராமன் நகைப்புடன் அவளது சிகையை வருடிக் கொடுத்தார்.

சீதாலெட்சுமி "ஆமாடி! நோக்கு அந்த பேட்டை வாங்கிக் குடுத்தது தான் தப்பாப் போச்சு. ரொம்ப செல்லம் கொஞ்சாதேள்ணா! அவளுக்கும் பதினேழு ஆகறது. இன்னும் என்ன ரவுடியாட்டம் அவா மண்டைய ஒடைப்பேன், இவா மண்டையை ஒடைப்பேனு பேசறது? நான் சொல்றதை நன்னா கேட்டுக்கோடி! நீ இந்த ஆத்துலயே தான் இருக்கணும்னா உன் மாமா பெத்து வச்சிருக்கானே சீமந்திரப்புத்திரன் அவனை தான் நோக்கு விவாகம் பண்ணி வைக்கணும். ஹர்சாக்கு பொண்ணு ரெடியா இருக்கா! உன்னை வேணும்னா நந்துவுக்கு முடிச்சுடுவோமா?" என்று கிண்டல் செய்ய

நீரஜாட்சி முகத்தை அஷ்டகோணலாக மாற்றியபடி "சீ! அவனா? எனக்கு அவனைச் சுத்தமா பிடிக்காது சித்தம்மா. நீ சும்மா குடுத்தா கூட எனக்கு அவன் வேண்டாம்" என்றுச் சொல்ல பட்டாபிராமன் அவள் சொன்ன விதத்தில் சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தார்.

சீதாலெட்சுமி பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி "ஏன்டி என் பேரனுக்கு என்ன குறைச்சல்? அவனைக் கட்டிக்க நான் நீனு போட்டி போடுவாள்டி" என்று பேரனுக்கு ஏந்து பேச

நீரஜாட்சி உதட்டைச் சுழித்தவளாய் "அப்போ அப்பிடி வர்றவாளுக்கு உன் பேரனைக் கட்டி வை சித்தம்மா. ஏதோ வயசான காலத்துல நீங்க ரெண்டு பேரும் தனியா கஷ்டப்படக் கூடாதேனு சொன்னா நீ என்னையே பாழுங்கிணத்துல தள்ளி விடப் பார்க்கிற? பட்டு திஸ் ஓல்ட் லேடி இஸ் வெரி வெரி டேஞ்சரஸ் கிரியேச்சர். பீ கேர்ஃபுல்" என்று தாத்தாவை எச்சரிக்க சீதாலெட்சுமியும் கூடச் சேர்ந்து நகைத்தார்.

அந்நேரம் பார்த்து காரின் சத்தம் கேட்க "மாப்பிள்ளை ஆத்துக்காரானு நெனைக்கிறேன்ணா" என்றபடி சீதாலெட்சுமி நாற்பது வயது குறைந்தவராக கூடத்துக்குச் சென்றார். அதன் பின் வழக்கமான பெண்பார்க்கும் படலம் முடிய மாப்பிள்ளை விஜயராகவனிடம் மைத்ரேயி சிறிது நேரம் தனியாகப் பேச அவகாசம் கேட்டுவிட்டு அவனிடம் பேசிவிட்டு வந்தாள்.

அவர்கள் வரும் போது மலர்ந்த அவர்களின் முகங்களே அவர்களின் பெற்றோருக்கு நற்செய்தியைக் கூற ஒரு நல்ல நாளில் நிச்சயத்தார்த்ததை வைத்துக் கொள்ளலாம் என்று பேசிமுடித்தனர். மைத்ரேயி விஜயராகவனிடம் தன்னுடைய அத்தை மகள்கள் இருவரையும் அறிமுகப்படுத்தி வைக்கவும் மறக்கவில்லை. கிருஷ்ணஜாட்சிக்கும், நீரஜாட்சிக்கும் அவர்களின் இந்த புதிய சகோதரனை மிகவும் பிடித்துப் போய் விட்டது.

அதன் பின் மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப அந்த வீட்டில் கல்யாணத்துக்கான ஒரு அழகான சூழல் உருவாகிவிட்டது. அன்று இரவே ஹர்சவர்தனிடம் பேசிய பத்மாவதி விவரத்தைத் தெரிவிக்க அவனுக்கும் படிப்பு முடிந்துவிட்டதால் மைத்ரேயியின் நிச்சயத்துக்கு முன்னரே தான் இந்தியா வந்துவிடுவேன் என்று உறுதியளித்தான்.

அவனிடம் பேசிவிட்டு வந்த பிறகு பத்மாவதியைக் கையில் பிடிக்க முடியவில்லை. மகளுக்கு நல்ல இடத்தில் நிச்சயமான செய்தியுடன் மகன் இந்தியா திரும்பும் செய்தியும் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தர உடனே மாமனார் மாமியாரிடம் அதைப் பகிர்ந்துக் கொண்டார் அவர். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த வேங்கடநாதன் மற்றும் கோதண்டராமனுக்கும் ஹர்சவர்தனின் வருகை ஒரு இனிய செய்தியே. அவன் வந்த பிறகு ஹோட்டல் பிஸினஸை அவன் வசம் ஒப்படைத்துவிட்டால் அவர்களும் நிம்மதியாக இருக்கலாம் என்பது அவர்களின் எண்ணம்.

ஹர்சவர்தனும் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியின் மனதைக் குளிர்விக்கும் வண்ணம் ஒரே மாதத்தில் இந்தியா திரும்பிவிட்டான். அவன் வந்த மகிழ்ச்சியில் பத்மாவதிக்குத் தலை கால் புரியவில்லை. இனி தன் மகன் தங்களைப் பிரிந்திருக்க வேண்டியதில்லை என்பதே அவரின் மனநிறைவுக்குக் காரணம். சும்மாவே அவரது தோழிகள் சிலருக்கு ஹர்சவர்தன் வெளிநாட்டில் சென்று படிப்பது பொறாமை தான். சில நேரம் கேலியாகச் சொல்வது போல "பத்மா நீ வேணும்னா பாரேன்டி உன் பிள்ளையாண்டான் வெள்ளைகாரியோட வந்து இறங்கலைனா நான் பேரை மாத்திக்கிறேன்" என்று பொறாமையை மறைத்துப் பேசியவர்கள் பலர்.

அந்தப் பேச்சு எதுவும் பழிக்காமல் போனபடி திரும்ப வந்த மகனைப் பூரிப்புடன் பார்த்தவர் மனதிற்குள் "என் ஹர்சா குணத்தில ஸ்ரீராமசந்திரமூர்த்தி! அவனால அவனுக்கு வரிச்சவளைத் தவிர வேற யாரையும் மனசால கூட நெனைக்க முடியாது" என்று பெருமிதப்பட்டுக் கொண்டார்.

ஹர்சவர்தனும் தந்தை மற்றும் சித்தப்பாவின் பொறுப்புச்சுமையைக் குறைக்க எண்ணியவனாக நான்கில் இரண்டு ஹோட்டல்களின் முழு மேலாண்மையையும் அவனேப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட பெரியவர்களுக்கும் அவனது முடிவால் மனநிறைவு தான்.

ஆனால் வீட்டுக்கு வந்த முதல் நாளே மீண்டும் நீரஜாட்சியின் வாயில் விழுந்து வாங்கிக் கட்டிக் கொண்டான் ஹர்சவர்தன். நீரஜாட்சி அவள் அக்காவிடம் நீண்டநாட்களாக பாதாம் ஹல்வா செய்துத் தருமாறு நச்சரிக்கவே அன்று பாதாமை ஊறப் போடுவதற்காக டப்பாவைத் திறந்து பார்த்த கிருஷ்ணஜாட்சி உள்ளே இருந்த கைப்பிடியளவு பாதாமைப் பார்த்ததும் "லீவ் விட்டது தான் விட்டாங்க, வீட்டுல இருக்கிற பொட்டுக்கடலையை முதற்கொண்டு காலி பண்ணி வச்சிருக்கா" என்று புலம்பியபடி "நீரு இங்கே வாடி" என்றுக் கத்த

நீரஜாட்சி பாதாம் ஹல்வாவைக் கற்பனையில் கபளீகரம் செய்தவாறே சமையல்கட்டிற்குள் நுழைந்தவள் கிருஷ்ணஜாட்சியின் கையில் இருக்கும் கைப்பிடி பாதாமைக் கண்டதும் அதில் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள். ஏற்கெனவே இது ஹல்வா செய்ய பத்தாது என்று எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு அதையும் தங்கை காலி செய்ய முனைவதைக் கண்டதும் அவள் தலையில் ஒரு குட்டு வைத்தாள் கிருஷ்ணஜாட்சி.

நீரஜாட்சி தலையைத் தடவியபடியே "இப்போ எதுக்கு என்னை கொட்டுன கிருஷ்ணா? தாயில்லாப் பிள்ளைய இப்பிடி அடிக்கடி நீ கொட்டி தான் நான் வளராம போயிட்டேன்" என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொள்ள

கிருஷ்ணஜாட்சி அவளின் நடிப்புத்திறமையை மனதிற்குள் பாராட்டியபடி காலி டப்பாவை பெருவிரலால் சுட்டிக்காட்டியபடி "ஏன்டி பாதாமை காலி பண்ணுன?" என்று கேட்க அவள் அசட்டுச்சிரிப்பை உதிர்த்தாள்.

"சிரிக்காதேடி! இது ஹல்வா பண்ணுறதுக்கு காணாது. நீ என்ன பண்ணுற சின்ன மாமி  கிட்ட போய் இந்த பவுல் நிறைய  வாங்கிட்டு வா" என்றுக் கட்டளையிட நீரஜாட்சி "நான் போக மாட்டேன்பா. அந்த என்.கே நம்பர் ஒன் வீட்டுக்கு வந்துருக்கு. அது மூஞ்சில முழிக்கவே எனக்குப் பிடிக்கல" என்றுச் சொல்லித் தோளைக் குலுக்கிவிட்டு நகர முற்பட அவளின் போனிடெயிலைப் பிடித்து நிறுத்தினாள் கிருஷ்ணஜாட்சி.

"அது யாருடி என்.கே நம்பர் ஒன்?"

"நெட்டைக்கொக்கு நம்பர் ஒன் கிருஷ்ணா! இப்போவுமா புரியல? வர்ஷாக்காவோட வருங்கால ஆத்துக்காரர் லண்டன்ல இருந்து திரும்பிட்டாரோன்னோ இனிமே நான் அந்த ஆத்துப்பக்கம் தலை வச்சு படுக்க மாட்டேனாக்கும்" என்று அவர்களின் பாஷையில் பேசி கேலி செய்ய கிருஷ்ணஜாட்சியும் கிண்டலாக "அஹான்! அப்போ நோக்கு ஹல்வாவும் சொப்பனத்துல மட்டும் தான் கெடைக்கும்டி செல்லம்" என்று பதிலடி கொடுத்துவிட்டு அவளது வேலையைக் கவனிக்க ஆரம்பிக்க நீரஜாட்சிக்கு ஹல்வாவைப் பற்றிய கற்பனையே நாவில் நீரூறச் செய்ய வேறு வழியின்றி கிண்ணத்தை எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்றாள்.

நேரே சமையலறைக்குள் சென்றவள் அங்கே நின்ற பத்மாவதியை வழக்கம் போல துச்சமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மைதிலியிடம் பாதாமை வாங்கிக்கொண்டு கிளம்பினாள். ஹாலுக்கு வரும் போது  பெருமூச்சு விட்டபடி "ஹூம்! ஒரு பாதாம் ஹல்வாவுக்காக இந்த நீரஜாட்சி எவ்ளோ கஷ்டப்பட வேண்டியிருக்கு?" என்று புலம்பியபடி ஹாலைக் கடக்க முற்பட்டவள் குனிந்தபடி வந்ததால் தன் எதிரே வந்த ஹர்சவர்தனின் மீது மோதிவிட அவளைக் கீழே விழாமல் பிடித்து நிறுத்தினான்.

நீரஜாட்சிக்கு ஏதோ பாறை மீது மோதிய உணர்வு. தலை கிர்ரென்று சுற்ற தன்னை விழாமல் தடுத்தவனைப் பார்த்தவள் அவன் பார்வை தன் கையிலிருக்கும் கிண்ணத்தில் விழவே கிண்ணத்தை மறைத்தபடி ஹர்சவர்தனை முறைத்தாள்.

அவளது முறைப்புக்குக் காரணம் புரியாமல் அவன் விழிக்க நீரஜாட்சி முகத்தைச் சுருக்கியபடி "உங்க மைண்ட்ல என்ன ஓடுதுனு எனக்கு நல்லா புரியுது? உங்க வீட்டுல இருந்து ஜாமான் எடுத்துட்டுப் போறேனு தானே பார்க்கிறிங்க. டோண்ட் வொர்ரி. இந்த மாச முடிவுல கிருஷ்ணா இதுக்கான அமவுண்டை உங்க அம்மா கிட்ட குடுத்துடுவா. நாங்க ஒன்னும் ஓசிக்கு வாங்கிட்டுப் போகல" என்று அவனைக் கடிக்காத குறையாகச் சொல்லிவிட்டு நகர்ந்தவளுக்கு என்ன பதில் அளிக்க என்று  புரியாமல் நின்று கொண்டிருந்தான் ஹர்சவர்தன்.

அதே யோசனையுடன் மாடிக்கு வந்தவன் வராண்டாவில் அமர்ந்து லேப்டாப்பில் எதையோ நோண்டிக் கொண்டிருந்த ரகுநந்தனிடம் "டேய் நந்து மதுரா அத்தையோட இளைய பொண்ணு இன்னுமாடா நம்ம மேல கோவமா இருக்கறா? சின்னப் பொண்ணு ஈஸியா மறந்துப் போயிருப்பானு நெனைச்சேன். ரெண்டு வருஷமா அதே கோவத்தோட சுத்திட்டிருக்கா" என்றான் ஆதங்கத்துடன்.

ரகுநந்தன் பெருமூச்சுடன் "அவ டிசைன் அப்பிடி அண்ணா. எப்பிடியும் போறா! ஆனா பெரிய அத்தங்கா இருக்காளே அவ பிளாட்டினம்டா" என்றுப் பெருமையாய்ச் சொல்ல ஹர்சவர்தனுக்கு தம்பியின் வாயால் கிருஷ்ணஜாட்சியைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் எழ அவன் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தான்.

"கிருஷ்ணாவை நான் ஏன் பிளாட்டினம்னு சொன்னேன்னா அவா குணம் அப்பிடிடா அண்ணா. ஆனா அவா கூட இந்த தகரடப்பா எப்பிடி பிறந்துச்சுனு தான் நேக்கு புரியல" என்று நீரஜாட்சியைப் போட்டுத் தாக்கவும் தவறவில்லை அவன்.

அவன் கிருஷ்ணஜாட்சி வேலை செய்யும் பேக்கரிக்குச் சென்ற அனுபவத்தை ஹர்சவர்தனிடம் விளக்கத் தொடங்கினான்.

ரகுநந்தன் அவன் தோழனைப் பார்ப்பதற்காகச் சென்றவன் அந்த ஏரியாவில் பைக்கை நிறுத்திவிட்டு அங்கு குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் ஆங்கிலோ இந்தியர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். அது மாலை மங்கும் நேரம். கிட்டத்தட்ட இருளின் ஆக்கிரமிப்பு ஆரம்பித்துவிட தெருவிளக்குகளின் ஒளியில் அவர்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அங்கே ஒரு பொக்கே ஷாப் பெண்மணிக்கு ஒரு பிளேட்டில் கேக்கும் காபியும் கொடுத்துவிட்டு தன் சுருள்கூந்தலை ஒரு கேப்பினுள் அடக்கியபடி ஏப்ரனுடன் நின்றது கிருஷ்ணஜாட்சியா என்று கூர்ந்துப் பார்த்தவன் அவளே தான் என்று அறிந்ததும் அவள் நின்ற கடையின் போர்டைப் பார்க்க அதில் மது'ஸ் கேக் வேர்ல்ட் என்ற வார்த்தையைக் கண்டதும் அது தான் அவள் வேலை செய்யும் இடம் என்பதை அறிந்து கொண்டான்.

உள்ளே சென்று பார்த்தாலென்ன என்ற எண்ணம் எழ அந்த பேக்கரியினுள் நுழைந்தான் அவன். சிறியதாக இருந்தாலும் பத்து பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் மேஜை நாற்காலிகள் கலைநயத்துடன் போடப்பட்டிருக்க ஒரு ஆங்கில மெலடிப் பாடல் மனதை வருட அந்த பேக்கரி கிட்டத்தட்ட ஒரு கஃபே அளவுக்கு இருந்தது என்றால் மிகையாகாது. மேஜை மீது இருந்த மெனுகார்டைப் பார்த்தவன் சத்தமாக "ஒன் கேப்புசினோ பிளீஸ்" என்க கிருஷ்ணஜாட்சி கஸ்டமரைக் கவனிக்க வந்தவள் அவனைக் கண்டதும் இவன் எங்கே இங்கே என்றபடி ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.

அவன் சிறு புன்னகையுடன் "என்ன அத்தங்கா நோக்கு என்னை அடையாளம்  தெரியலையா?" என்றுக் கேட்க அவள் "இல்ல அம்மாஞ்சி..அது..." என்று தயங்கியபடிச் சொல்லிவிட்டு ஏப்ரனின் நுனியைத் திருகினாள்.

"உன் பேக்கரி எப்பிடி இருக்கும்னு பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன். வீரபாகு பேக்கரி லெவலுக்கு இல்லைனாலும் ஏதோ பரவால்லாம வச்சிருக்கேள்!" என்றுச் சொல்ல கிருஷ்ணஜாட்சிக்கு அவன் சொன்னவிதத்தில் சிரிப்பு வந்தாலும் அதை அடக்கியபடி
"என்ன சாப்பிடுறேள் அம்மாஞ்சி?" என்க அவன் "நான் ஆர்டர் பண்ணி எவ்ளோ நாழியாறது? ஒன் கேப்புச்சினோ" என்றுச் சொல்ல அவள் தலையாட்டியபடி உள்ளே சென்றவள் வரும் போது கையில் கப் மற்றும் சிறு தட்டில் கேக்குடன் வந்தாள்.

"அத்தங்கா என்னண்ட காபிக்கு மட்டும் தான் காசு இருக்கறது" என்று அவன் கேலி செய்ய "கிருஷோட ரிலேட்டிவ்ஸ் எல்லாருக்கும் இங்கே கேக் ஃப்ரீ" என்றபடி வந்தாள் கரோலின். அவளை அவன் ஓரிரண்டு முறை கிருஷ்ணஜாட்சியுடன் பார்த்திருப்பதால் சினேகமாய் புன்னகைத்தான் ரகுநந்தன்.

அவர்களிடம் கலகலப்பாக உரையாடியபடி காபியைக் குடித்து முடித்தவன் கிருஷ்ணஜாட்சியிடம் "அத்தங்கா மாமா ரொம்ப கோவக்காரரோ?" என்றுக் கேட்க அவள் இல்லையேன்று தலையாட்டினாள்.

"பின்னே உன்னோட சிஸ்டர் ஏன் எப்போ பார்த்தாலும் சல்லுபுல்லுனு விழுந்துண்டே இருக்கா? அதுவும் என்னைப் பார்த்தா மட்டும் அவளோட ஃபேஸ் ஜிஞ்சர் ஈட்டிங் மங்கியாட்டம் மாறிடறது. நீ அவளண்ட போய் இதையெல்லாம் சொல்லி வைக்காதே! பின்னே அவள் பார்வையில வர்ற லாவாவை என்னால ஃபேஸ் பண்ண முடியாது" என்றவனைப் பார்த்து நகைத்த கிருஷ்ணஜாட்சி சொல்ல மாட்டேன் என்று உறுதியளிக்கவும் அவன் இருவரிடமும் இருந்து புன்னகையுடன் விடை பெற்றான்.

அந்த நிகழ்வை அண்ணனிடம் விளக்கியவன் "ரொம்ப பொறுமைசாலிடா அண்ணா! பத்தொன்பது வயசுல ரெண்டு இடத்துல வேலையும் பார்த்துண்டு தங்கையையும் கவனிச்சிக்கறா. நம்ம ஸ்ருதி ஹோட்டலுக்கு வரச் சொன்னா என்ன சொல்லுவானு நோக்கு தெரியுமா? ஹோட்டல்ல இருந்து வர்ற லாபம் மட்டும் நமக்குப் போதுமே தவிர நம்ம ஏன் ஹோட்டல்ல வியர்வை சிந்தி உழைக்கணும்னுவா! அதை மேற்பார்வை பார்க்கணும்கிற ஆர்வம் கூட அவளண்ட இல்ல. ஆனா பெரிய அத்தங்காக்கு ஸ்ருதி வயசு தானே! இப்போவே இவ்வளவு ஹார்ட்ஒர்க் பண்ணுறா. கூடியசீக்கிரம் அவளோட ஃபீல்டுல அவ கொடிகட்டிப் பறப்பாண்ணா! நீ வேணும்னா பாரேன்" என்று அவளைப் புகழ்ந்துத் தள்ள ஹர்சவர்தன் அதை உம் கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

ரகுநந்தன் அவனிடம் "நானும் ஒரு முடிவுக்கு வந்துருக்கேன்டா அண்ணா. நானும் உன்னை மாதிரி அப்ராட்ல படிக்கலாம்னு இருக்கேன்" என்றுச் சொல்ல ஹர்சவர்தனால் அவன் காதையே நம்பமுடியவில்லை.

ஏனெனில் அவனுக்குத் தெரிந்தவரை அவன் தம்பியால் அன்னையைப் பிரிந்து இருக்க முடியாது. முன்னர் கேட்டதற்கு கூட அவன் "என்னால ஃபாரின் போய்லாம் படிக்க முடியாதுடா அண்ணா. என்னால ஒரு நாள் கூட அம்மாவை பார்க்காம இருக்க முடியாது. ரசம் சாதம்னாலும் அதை அம்மா கையால சாப்பிடணும்டா" என்றுச் சொன்னவன் அவனே முன் வந்து இவ்வாறு கூற ஹர்சவர்தனுக்கு ஆச்சரியம்.

ரகுநந்தன் "நம்ம விட சின்னப்பொண்ணு எவ்ளோ ஹார்ட் ஒர்க் பண்ணுறா. இந்தச் சின்னவயசுல அவளுக்குனு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்க எவ்ளோ முயற்சி பண்ணுறா. அதுல ஒரு சதவீதமாச்சும் நானும் பண்ணனும்னு நெனைக்கிறேன்டா. நம்ம கன்ஸ்ட்ரெக்சன் கம்பெனியை பெரிய லெவலுக்குக் கொண்டு போகணும்கிறது என்னோட எய்ம். அதுக்காக தான் அப்ராட்ல எம்.பி.ஏ பண்ணலாம்னு அப்ளை பண்ணிருக்கேன். மைத்திக்கா விவாகம் முடிஞ்சதும் ஃபிளைட் ஏறிட வேண்டியது தான். நீ தான் எப்பிடியாச்சும் அம்மா, அப்பாவை சம்மதிக்க வைக்கணும்" என்றுச் சொல்ல ஹர்சவர்தன் அவன் கையை அழுத்தினான்.

"கண்டிப்பாடா! நீ தங்குற இடம் பத்தி கவலைப் படாதே! என்னோட ஃப்ரெண்ட்ஸ் இருக்கா. அவா அதையெல்லாம் பார்த்துப்பா" என்றவன் "எந்த யூனிவர்சிட்டிக்குலாம் அப்ளை பண்ணிருக்க?" என்று மற்ற விவரங்களைக் கேட்க ஆரம்பித்தான். ரகுநந்தனும் அண்ணனிடம் அனைத்தையும் விளக்கிவிட்டு மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் நாளை எதிர்நோக்கி காத்திருந்தான்.


Comments

  1. பூங்காற்றிலே உன் சுவாசம்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 10)

    எப்படியோ... அண்ணனும் தம்பியும், அக்காவையும் தங்கச்சியையும் புரிஞ்சுக்கிட்டு
    இனிமேலாச்சும் அவங்களை வாயில போட்டு மெல்லாம இருந்தா சரி தான்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1