பூங்காற்று 43

Image
  அந்த ஆடியோவால் நீரஜாட்சிக்கும் ரகுநந்தனுக்கும் இடையே சத்தமே இல்லாமல் ஒரு பனிப்போர் ஆரம்பித்தது. இருவரும் ஒருவரையொருவர் முறைத்தபடியே திரிய ரகுநந்தன் இப்போதெல்லாம் பெரும்பாலான நேரத்தை அலுவலகத்திலேயே கழித்தான்.   ஆனால் அலுவலகத்தில் கூட கணவனும் மனைவியும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை. நீரஜாட்சி அவனை ஏளனமான உதட்டுவளைவுடன் கடந்துவிட அவனால் தான் எதையும் மறக்க முடியவில்லை. அவள் இந்த பிரச்சனையை இலகுவாக எடுத்துக் கொண்டதற்கும் அவனது புத்தி தப்பர்த்தம் செய்து கொண்டது. " அது சரி! நான் மட்டும் தானே லவ் பண்ணுனது. அவ தான் என்னை பத்தி நினைச்சு கூட பார்த்தது இல்லையே. அப்புறம் எப்பிடி அவளுக்கு வருத்தமா இருக்கும் ?" என்று அவன் நினைத்துக் கொள்ள நீரஜாட்சியோ "உண்மையை சொல்ல சொல்ல கேக்காம போனா நான் இவன் பின்னாடியே போய் கெஞ்சணுமாக்கும் , பெரிய இவன்! உண்மையை புரிஞ்சுகிட்டு தானா பேசுனா பேசுறான் , இல்லைனா வாழ்க்கை முழுக்க இப்பிடி முசுடாவே இருந்துட்டு போறான். எனக்கு என்ன வந்துச்சு ?" என்று சிறிதும் தனது நிலையை விட்டு விலகாதவளாய் அவனை சமாதானம் செய்ய முயலவில்லை. அவளின் விலக...

பூங்காற்று 18

 



அன்று வீட்டுக்குத் திரும்பிய ரகுநந்தனுக்கு அவன் தந்தையிடமிருந்து கன்ஸ்ட்ரெக்சன் கம்பெனிக்கு வருமாறு அழைப்பு வர நீரஜாட்சியை வீட்டில் இறக்கிவிட்டு கம்பெனியை நோக்கிச் சென்றான். அண்ணன் நிச்சயதார்த்தம் ஒரு புறம் இருந்தாலும் அவனது இலட்சியமான அந்த கம்பெனியும் அவனது மனதிலிருந்து அகலவில்லை.

அங்கே சென்றதும் கம்பெனி செகரட்டரி, ஆடிட்டர் மற்றும் சட்ட ஆலோசகர் அனைவருக்கும் மகனை அறிமுகப்படுத்தி வைத்த வேங்கடநாதன் இனி கம்பெனியின் பொறுப்பை அவன் தான் பார்த்துக் கொள்ளப் போகிறான் என்பதையும் அவர்களிடம் தெரிவிக்க அவர்கள் அவனுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு கம்பெனியின் நடைமுறைகள் மற்றும் தற்போதைய நிலையைப் பற்றி அவர்கள் பங்குக்கு அவனுக்கு ஆலோசனை வழங்கினர்.

அவர்களிடம் பேசிவிட்டு வழியனுப்பியவனை தந்தையும், சித்தப்பாவும் அலுவலகத்துக்குள் அழைத்துச் செல்ல அவனும் பின் தொடர்ந்தான். என்ன தான் வளர்ந்து வரும் நிறுவனம் என்றாலும் அதன் உள்கட்டமைப்பும், அலுவலகம் இருக்கும் நேர்த்தியும் அவன் மனதை நிறைக்க உள்ளே பணியாளர்களின் கேபின் காலியாக இருப்பதை ஒரு புருவச்சுழிப்புடன் பார்த்தவாறே அவர்கள் செல்லும் திசையில் அவனும் நடந்தான்.

இருவரும் கான்ஃபரென்ஸ் ரூமை நோக்கி நடைப்போட்டவர்கள் உள்ளே நுழைந்ததும் அவர்களுக்கு முன்பே அங்கே குழுமியிருந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வணக்கம் தெரிவிக்க அவர்களும் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றுவிட்டு கோதண்டராமன் கையைசப்புக்குப் பின் இருக்கையில் அமர்ந்தனர்.

ஒவ்வொரு டிப்பார்ட்மெண்டிலும் தலைமை பொறுப்பு வகிப்பவரை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் வேங்கடநாதனின் உதவியாளர் மோகன். அனைவரிடமும் இன்முகமாகப் பேசி அறிமுகமாகிக் கொண்டவனை ஊழியர்களுக்கும் முதல் முறை பார்த்ததுமே பிடித்துப் போய் விட போர்ட் மீட்டிங் பற்றிய தகவல்களை அவர்களிடம் தெரிவித்துவிட்டு அவர்களின் பணியைத் தொடரச் செல்லுமாறு மோகன் அனுப்பி வைத்தார்.

அதன் பின் அவரிடம் "அங்கிள்! என்னோட செகரட்டரியா ஒர்க் பண்ண போறது என்னோட அத்தை பொண்ணு தான். பட் ஷீ டஸிண்ட் ஹேவ் எக்ஸ்பீரியன்ஸ். உங்க கிட்ட தான் டிரெயினிங் வர சொல்லிருக்கேன். அவளும் கற்பூரம் மாதிரி, நீங்க சொல்லி குடுத்தா உடனே புரிஞ்சிப்பா. அவளை எப்போ வரச் சொன்னா உங்களுக்கு வசதியா இருக்கும்?" என்றுக் கேட்க தனக்கு கட்டளையிடும் இடத்தில் இருந்தாலும் அவரது வசதியை கேட்கும் அவனது பணிவு அவரது மனதைத் தொடவே அவரும் நாளையே வரும்படி சொல்ல ரகுநந்தன் தலையசைத்துவிட்டு அவனுக்கு இந்த துறையில் இருக்கும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டு மாலையில் தான் வீடு திரும்பினான்.

அவன் வீடு திரும்பும் போது மணி மூன்று. அந்நேரத்தில் அவனது அம்மாவும், சித்தியும் மற்ற வேலைகளை முடித்துவிட்டு சிறிது நேரம் கண்ணயருவர். வயிறு வேறு கபகபவென்று பசி எடுக்க சமையலறைக்குள் சென்று உருட்டத் தொடங்கினான்.

நீரஜாட்சி அப்போது தான் தாத்தாவிற்கு மாத்திரை கொடுத்து தூங்கச் சொல்லிவிட்டு அவரது அறையை பூட்டிவிட்டு வந்தவள் சமையலறையில் ஏதோ உருட்டும் சத்தம் கேட்கவே என்னவென்று எட்டிப் பார்க்க அங்கே பாத்திரங்களை நொறுக்கிக் கொண்டிருந்தவனிடம் "இப்போ ஏன் இங்கே வந்து உருட்டிட்டு இருக்க? இந்த சத்தத்துல எல்லாருக்கும் தூக்கம் ஸ்வாகா ஆயிடும்" என்று கேலி செய்ய

அவன் "நீ ஏன் சொல்ல மாட்ட? நல்லா மூக்கு முட்ட சாப்பிட்டு நெக்ஸ்ட் ரவுண்டு தூக்கத்துக்கு ரெடியாகப் போற. நான் அப்பிடியா? ஆபிஸ் போய்ட்டு மீட்டிங்லாம் அட்டெண்ட் பண்ணிட்டு பசியோட வந்திருக்கேன்மா" என்று அடுக்களையில் அதகளம் செய்ய நீரஜாட்சி உள்ளே வந்தாள்.

"நீ போய் டைனிங் டேபிள்ல உக்காரு! நான் கொண்டு வர்றேன்" என்றுச் சொன்னவளை நம்ப முடியாமல் பார்த்துவிட்டு கை கழுவி விட்டு சாப்பிட அமர்ந்தான். அவள் எல்லாவற்றையும் டைனிங் டேபிளில் எடுத்து வைத்து அவனுக்கும் பரிமாற ரகுநந்தனுக்கு தான் காண்பது கனவோ என்ற ஐயம் தோன்றிவிட்டது.

"நீரு கொஞ்சம் என் கையில கிள்ளு" என்றபடி கையை நீட்ட அவளோ புரியாமல் பார்த்தபடி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டவளாய் நன்றாகக் கிள்ளி வைத்துவிட அவன் "அம்மா! ஏய் ராட்சஸியாட்டம் நகம் வளர்த்திண்டு இருக்க. முதல்ல அதை வெட்டுடி" என்றபடி வலித்த கையைத் தடவி விட்டுக் கொண்டான்.

நீரஜாட்சி "நீ தானடா கிள்ள சொன்ன?" என்றவளாய் அவனுக்கு பொறியலை வைக்க அவன் சாப்பிட்டுக் கொண்டே "ஆமா அதுக்கு முன்னாடி உன் நெயிலை செக் பண்ண மறந்துபோயிட்டேன். எனி வே இன்னைக்கு நேக்க்கு சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸா இருக்கு. நீ இவ்ளோ சாந்தமா நேக்கு சாதம் பரிமாறரதைப் பார்த்தா இதுல எதோ உள்கூத்து இருக்குமோனு சந்தேகமாவும் இருக்கறது" என்றான்.

பேசிக் கொண்டே சாப்பிட்டதில் சிரசில் அடிக்க அவள் தண்ணீர் டம்ளரை நீட்ட அதை வாங்கி அருந்தியவன் "ஒரு வேளை செகரட்டரி வேலைக்கு இப்போவே பழகிண்டிருக்கியோ?" என்றுச் சொல்லிவிட்டு சாதத்தை உள்ளே தள்ள அவளோ "பரிதாபப்பட்டு உனக்கு சாதம் போட்டிருக்கேனே தவிர இதுல வேற எந்த நோக்கமும் இல்ல" என்றுச் சொல்லிவிட்டு கையில் இருக்கும் மொபைலை நோண்ட ஆரம்பித்தாள்.

ரகுநந்தனுக்கு தன் எதிரே பொம்மை போல் அமர்ந்து கொண்டு போனில் கேம் விளையாடுபவளை அப்படியே அள்ளிக் கொண்டால் கூட தேவலாம் என்றுத் தோன்ற அவனது மனசாட்சியோ "டேய் நந்து! அவ கிட்ட போய் நிக்கறதும், சூயிசைட் அட்டெம்ப்ட் பண்ணுறதும் ஒன்னு தான். தைரியம் இருந்தா டிரை பண்ணிப் பாருடா ராஜா" என்று எச்சரிக்க அவன் அதற்கு செவிமடுத்தபடி சாப்பாட்டில் மட்டும் கண் பதித்தான்.

அவன் சாப்பிட்ட தட்டுடன் எழுந்துவிட நீரஜாட்சி பாத்திரங்களை மீண்டும் சமையலறையில் கொண்டு வைத்தவள் அவன் ஸிங்கிலேயே தட்டை போட்டுவிட்டு வெளியேற சொடக்கிட்டு அவனை அழைத்து "நீ தானே சாப்பிட்ட! தட்டை அலம்பி வச்சிட்டுப் போனா லண்டன்ல ஏறுன கொழுப்பு கொஞ்சம் போயிடுமா? இது ஈவினிங் வரைக்கும் இங்கேயே கிடக்கணுமா? அலம்பி வச்சிட்டு போ" என்றுச் சொல்ல அவனும் மறுபேச்சின்றி அதை அலம்பி ஈரம் காய வைத்துவிட்டுச் சென்றான்.

நீரஜாட்சி ஹாலுக்கு வர அவன் லேப்டாப்பும் கையுமாக இருந்தவன் திரையில் விழிபதித்தபடியே அவளிடம் "நீரு டுமாரோல இருந்து மோகன் அங்கிள் கிட்ட டிரெயினிங் போயிடு. நான் அவரண்ட பேசிட்டேன்" என்க அவள் சரியென்று தலையாட்டிவிட்டு அவுட் ஹவுஸை நோக்கிச் சென்றாள். அவனுக்கும் வேலையில் கவனம் சென்றுவிட்டதால் அவளிடம் வம்பிழுக்கும் எண்ணம் அப்போதைக்கு எழவில்லை.

ஹாலிலேயே அமர்ந்து லேப்டாப்பில் மூழ்கியவன் ஒரு மணி நேரம் கழித்து மைதிலியின் சத்தத்தில் லேப்டாப்பிலிருந்து கண்ணை விலக்கினான்.

"ஏன்டா ராஜா எப்போ வந்த? வந்ததும் சித்திக்கு சத்தம் கொடுத்திருக்கலாமோன்னோ சாப்பிட்டியாடா? இரு நான் உனக்கு சாதம் எடுத்து வைக்கறேன்" என்றபடி சமையலறையை நோக்கிச் செல்ல அவரை வேகமாகக் கைப்பற்றி தடுத்தவன் "நான் சாப்பிட்டுட்டேன். நீங்க கொஞ்சம் ரிலாக்சா உக்காருங்க" என்றபடி அமர வைத்தான்.

"நீயே எடுத்துப் போட்டுச் சாப்பிட்டியாடா?"

"இல்ல சித்தி! நீரு வந்து பரிமாறிட்டு போனா" என்றான் அவன் விழிகளை லேப்டாப் திரையில் ஓடவிட்டபடி.

இதைக் கேட்ட மைதிலிக்கு ஆச்சரியம். இவனைக் கண்டாலே அவள் முகம் சுழிப்பதை அந்த வீட்டிலுள்ள அனைவரும் அறிவர். அப்படிப்பட்டவளா அவனுக்குப் பரிமாறிவிட்டுச் சென்றாள் என்ற திகைப்புடன் அதை அவனிடமே கேட்டுவிட்டார். அவன் அதற்கு சாதாரணமாக தோளை குலுக்கியதோடு சரி. அவரிடம் பிடி கொடுத்து பேசவில்லை. ஆனால் அவரோ இளைய மருமகளின் மாற்றத்தை மனதிற்குள் வியந்தபடி மகன் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து வீட்டில் அனைவருமே விழித்து விட மைதிலி காபி போடச் சென்றார். பத்மாவதி மகனிடம் மதியம் ஏன் நேரத்துக்குச் சாப்பிட வரவில்லை என்று குறைபட அவன் நிறுவனத்துக்குச் சென்ற விவரத்தை அவரிடம் ஒப்பித்தான்.

அவன் கால்பந்து, பைக் என்று சுற்றாமல் பொறுப்புள்ளவனாக மாறிவிட்டதை பெருமிதத்தோடு பார்த்தவர் "என் செல்லக்குட்டிக்குப் பொறுப்பு வந்துடுச்சு. நோக்கு தெரியாதுடா! நான் உன்னை நினைச்சு தான் கவலைப்பட்டிண்டிருந்தேன். இவன் விளையாட்டுத்தனத்தை ஒதுக்கி வச்சிட்டு வாழ்க்கையில எப்போ முன்னேறுவான் பெருமாளேனு நான் அவரண்ட சண்டை போடாத நாளே இல்ல. ஒரு வழியா அவரும் கண்ணை திறந்திட்டார்" என்றுச் சொல்லி மகனுக்கு நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார் பத்மாவதி.

மகன்கள் இருவரும் வருங்காலத்தில் அளிக்கப் போகும் அதிர்ச்சிகள் எதையும் அறியாதவராய் அவர் மனம் மகிழ்வதைப் பார்த்து விதி சிரித்துக் கொண்டது.

மைதிலி காபியோடு வர சீதாலெட்சுமியும் பட்டாபிராமனும் ஹாலின் சோஃபாய்வில் ஓய்வாக அமர்ந்தனர். பத்மாவதி இருவரக்கும் காபி எடுத்துக் கொடுக்க அதை அருந்தியபடியே பட்டாபிராமன் மூத்த மருமகளிடம் "ஏன்டிம்மா நாளைக்கு டிரஸ் எடுக்கப் போறேளா இல்லையா? விவரம் சொன்னா நான் கிருஷ்ணாவை ஆத்திலேயே இருக்கச் சொல்லிடுவேன். நீங்க காத்தாலே போனேள்னா அடைஞ்சா தான் வருவேள்" என்று பெண்களின் ஷாப்பிங்கைப் பற்றி கேலி செய்யும் போதே வந்து சேர்ந்தாள் நீரஜாட்சி.

"என்ன பட்டு நான் இல்லைனதும் நீ லேடிஸை கிண்டல் பண்ணிட்டிருக்க போல?" என்றபடி அவர் அருகில் அமர வர ரகுநந்தன் வேகமாகச் சென்று பட்டாபிராமன் அருகில் அமர்ந்து அவரது கையைக் கோர்த்து கொண்டான்.

நீரஜாட்சி முகத்தைச் சுருக்கியபடி சீதாலெட்சுமியிடம் அமர்ந்தவள் "நான் எப்போ பட்டு பக்கத்துல உக்கார போனாலும் இந்த கடன்காரனுக்கு மூக்குல வேர்த்துடும். இருடா ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் நான் பட்டுவையும் சித்துவையும் என் கூடவே அழைச்சிட்டு போயிடுவேன். அப்போ நீ கண்ணீர் விட்டு அழுவ" என்று மனதிற்குள் அவனை வறுத்தெடுத்தாள்.

பட்டாபிராமன் பேத்தியின் முகவாட்டத்தைப் பொறுக்க முடியாமல் ரகுநந்தனின் காதில் "ஏன்டா உன்னால குழந்தை முகம் வாடிப்போயிடுத்து பாரு. இது என்ன சின்ன குழந்தையாட்டம் அவளும் நீயும் அடிச்சிக்கிறேள்?" என்று முணுமுணுக்க

அவனோ "இங்க பாருங்க தாத்தா! நான் ஆல்ரெடி சொன்னேன்னோல்லியோ உங்க ரெண்டு பேரையும் நான் இவளண்ட விட்டுக் குடுக்க மாட்டேனு. அவளுக்கு முன்னாடி நான் தான் உங்க பேரன். அதை மறந்துடாதேள்" என்றபடி சலுகையாய் அவரது தோளில் சாய்ந்து கொள்ள பட்டாபிராமனுக்கு உள்ளே பெருமையாய் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

பேச்சு மீண்டும் நிச்சயதார்த்ததுக்கான ஆடைகள் பற்றித் திரும்ப ரகுநந்தன் "மா! ஏன் தாத்தா பாட்டி மட்டும் வீட்டிலேயே இருக்கணும்? நம்ம எல்லாருமா போய் எடுத்திண்டு வருவோம்? எவ்ளோ நாளாச்சு நம்ம எல்லாரும் சேர்ந்து போய் டிரஸ் எடுத்து" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கிருஷ்ணஜாட்சி வந்துச் சேர அவளுக்கு ஒரு புன்னகையையும் அவனைப் பெற்றவருக்கு ஒரு மினி ஹார்ட் அட்டாக்கையும் பரிசாக அளித்தான் ரகுநந்தன்.

கிருஷ்ணஜாட்சியும் மைதிலி சமையலறையில் இருப்பதால் அவரை நோக்கிச் சென்றுவிட ரகுநந்தன் சொன்னபடி குடும்பமாக ஆடை எடுக்க செல்லலாம் என்று முடிவெடுத்தனர். பத்மாவதி இந்த விஷயத்தை உடனே விஜயலெட்சுமிக்கு போன் செய்து தெரிவிக்கச் சென்றுவிட சீதாலெட்சுமி, பட்டாபிராமனுடன் நீரஜாட்சியும், ரகுநந்தனும் மட்டுமே மீதமிருந்தனர் அங்கே.

ரகுநந்தன் பட்டாபிராமனிடம் "எப்போ தான் ஹர்சா கல்யாணம் முடியும்னு இருக்கு தாத்தா!" என்று சலித்துக் கொள்ள

பட்டாபிராமன் மனைவியிடம் கேலியாகப் பேரனைச் சுட்டிக் காட்டியபடி "ஏன்டா பெரிய மனுஷா நோக்கும் கல்யாண ஆசை வந்துடுத்து போல? பொண்ணு ஏதும் பார்த்து வச்சிருக்கியா? நம்ம ஊர் பொண்ணா இல்ல எதும் வெள்ளைக்காரியை லவ் பண்ணி உங்கம்மாக்கு அதிர்ச்சி வைத்தியம் குடுக்க போறியா?" என்றவரின் கேலியில் நீரஜாட்சி நமட்டுச்சிரிப்பு சிரிக்க

ரகுநந்தன் "தாத்தா இங்கே நிறைய பேர் என்னை அண்டர் எஸ்டிமேட் பண்ணுறா! அதை எல்லாம் பீட் பண்ணி, என்னோட கம்பெனியை ஒரு ஸ்டெடி பொசிசனுக்கு கொண்டு வந்ததுக்கு அப்புறமா தான் கல்யாணம்" என்று அமர்த்தலாக மொழிந்தான்.

சீதாலெட்சுமி "அவன் சொல்லுறது சரிதாண்ணா! அவனுக்கு என்ன அவசரம்? கிருஷ்ணாக்கும், நீரஜாக்கும் முடிச்ச பிறகு பொறுமையா அவனுக்கு முடிக்கலாம்" என்க அதைக் கேட்டு ரகுநந்தன் வெகுண்டு விட்டான்.

"என்ன பாட்டி சொல்லுறேள்? கிருஷ்ணாக்கு இப்போ கூட நீங்க நினைச்சா முடிக்கலாம். ஏன்னா அவளுக்கும் என்னோட வயசு தான். ஆனா இவளுக்கு இப்போ என்ன விவாகத்துக்கு அவசரம்?" என்று அவன் படபடக்க மூவரும் பார்த்த பார்வையில் அமைதியாக லேப்டாப்பில் முகம் மறைத்தான் அவன்.

சீதாலெட்சுமி கேலியாக "நீ ஏன்டா டென்சன் ஆகற கண்ணா? சரி நோக்கு விவாகம் நடந்து ஒரு ரெண்டு மூனு வருஷம் கழிச்சு நீரஜாக்கு பண்ணலாம். இப்போ திருப்தியா?" என்றுக் கேட்க அவனோ "க்கும், அவளை விட்டுட்டு நான் வேற யாரை மேரேஜ் பண்ணுவேன்? சரியான அசட்டு பாட்டி" என்று மனதிற்குள் பாட்டியைச் செல்லமாக வைதாலும் வாய் விட்டுச் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டி வைத்தான். மற்ற இருவரும் அவன் சொன்னதற்கு சிரித்தாலும் நீரஜாட்சி மட்டும் அவனைச் சந்தேகமாகவே பார்த்து வைத்தாள்.

மறுநாள் அனைவரும் உற்சாகமாகவே ஆடைகள் எடுக்க தயாராயினர். ஹர்சவர்தன் மட்டும் வரவில்லை என்று சொல்லிவிட பத்மாவதியும் அவனுக்கு ஹோட்டலில் ஏகப்பட்ட வேலை இருக்கும் என்று அனுமானித்தவர் அவனை வற்புறுத்தவில்லை. ஆனால் கணவரையும், மைத்துனரையும் அவர் விடவில்லை.

கோதண்டராமன், மைதிலி, வேங்கடநாதன், பத்மாவதி நால்வரும் ஒரு காரில் அமர அதை கோதண்டராமன் தான் ஓட்டுவதாகச் சொல்லி முன்னிருக்கையில் அண்ணனுடன் அமர்ந்து கொண்டார்.

இன்னொரு காரை ரகுநந்தன் வசம் கொடுத்தவர் அதில் பட்டாபிராமன், சீதாலெட்சுமி, கிருஷ்ணஜாட்சி மற்றும் நீரஜாட்சியை அமரச் சொல்ல ரகுநந்தன் கிருஷ்ணஜாட்சியை முன்னே தன் அருகில் அமரச் சொல்ல பத்மாவதியின் கண்பார்வையில் அவர் சொல்ல வருவதைப் புரிந்து கொண்ட நீரஜாட்சி "நீ பின்னாடி சித்தம்மா கூட உக்காந்துக்கோ கிருஷ்ணா. நான் முன்னாடி இருந்துக்கறேன்" என்றபடி அவன் அருகில் அமர அவன் விசிலடித்தபடி காரை ஸ்டார்ட் செய்தான். அவர்கள் வரும் முன்னரே விஜயலெட்சுமி வர்ஷாவுடன் காத்திருக்க இந்த குடும்பத்தாரும் அவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக ஆடைத்தேர்வில் ஈடுபட்டனர்.

போகும் போது இருந்த உற்சாகம் அவனுக்கு கடையில் ஆடைகளைத் தேர்வு செய்யும் போது முற்றிலுமாக வடிந்துவிட்டது. ஏனெனில் பத்மாவதியிலிருந்து வர்ஷா வரை யாருமே சீக்கிரமாக புடவையைத் தேர்வு செய்வதாகத் தெரியவில்லை. சீதாலெட்சுமியும் உற்சாகமாக இளைய மருமகளுடன் சேர்ந்து புடவைகளை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்க ஆண்கள் அனைவரும் ரகுநந்தனை முறைத்து வைத்தனர்.

கோதண்டராமன் ஒரு படி மேலாக "பேசாம நாமளும் ஹர்சா மாதிரி வேலை இருக்குனு சொல்லிருக்கணும். உன் பேச்சைக் கேட்டு வந்தோம் பாரு. இது முடிய இன்னைக்கு ஈவினிங் ஆயிடும்" என்று வாய் விட்டுப் புலம்பினார்.

ரகுநந்தனும் நேரம் போகாமல் போனை நோண்டிக் கொண்டிருந்தவன் கிருஷ்ணஜாட்சியிடம் மைதிலி பணம் கொடுப்பதை பார்த்துவிட்டான். அவர்கள் அறியாமல் அவர்கள் பேசுவதை கேட்டவன் "கிருஷ்ணா இதுல முப்பதாயிரம் இருக்குடிம்மா. நீயும் நீரஜாவும் உங்களுக்குப் பிடிச்சதா எடுத்துக்கோங்கோ. அவ கேட்டா வழக்கம் போல இது உங்க அப்பாவோட சேவிங்ஸ்னு சொல்லிடு" என்றுச் சொல்ல கிருஷ்ணஜாட்சியும் தலையாட்டினாள். அவர் யாரும் அறியாவண்ணம் மீண்டும் புடவை தேர்வு செய்ய சென்றுவிட கிருஷ்ணஜாட்சி திரும்பியவள் அங்கே நின்ற ரகுநந்தனைக் கண்டதும் திகைத்தாள்.

சுடிதார் துப்பட்டாவின் நுனியை திருகியபடி என்ன சொல்லவென்று தெரியாமல் விழித்தவளின் அருகில் வந்தவன் "இது எவ்ளோ நாளா நடக்கறது?" என்று அதட்டலாக கேட்க அவளால் பதிலளிக்க இயலவில்லை.

"உன் தங்கை என்னண்ட ஒரு தடவை பெருமையா சொன்னா, நாங்க ஒன்னும் உங்காத்து மனுஷா உழைப்பில வாழலடா. எங்கப்பா கிராஜுவிட்டி, சேவிங்ஸ் இருக்கு, அதுல தான் நாங்க வாழறோம்னு அடிச்சுப் பேசுனா. ஆனா உண்மை வேற போலிருக்கே" என்று அவன் புருவம் உயர்த்தி வினவியதில் கிருஷ்ணஜாட்சி கூனி குறுகிப் போனாள்.

அவனை நிமிர்ந்து கலவர விழிகளால் பார்த்தவள் "நீரு கிட்ட இதை பத்தி சொல்லிடாதிங்க! அவளுக்கு சின்னமாமி எனக்கு பணம் குடுக்கறது தெரியாது. இப்போ மட்டும் இல்ல, நாங்க இந்த வீட்டுக்கு வந்ததில இருந்து எங்களுக்கு சின்னமாமியும், பெரியமாமா, சின்னமாமாவும் தான் எல்லா செலவையும் பண்ணிட்டு இருக்காங்க. ஆனா நான் தான் நீரு கிட்ட இது எல்லாமே அப்பாவோட பணம்னு பொய் சொல்லிருக்கேன்" என்க

ரகுநந்தன் "ஏன் பொய் சொன்ன?" என்று குற்றவாளியை விசாரிப்பது போல் விசாரிக்க கிருஷ்ணஜாட்சி உடைந்துவிட்டாள்.

கண்ணீரை அடக்கியபடி "வேற என்ன செய்ய சொல்லுறிங்க? நாங்க தஞ்சாவூர் விட்டுக் கிளம்பணும்னு சொல்லுறப்போ நீரு அதுக்கு ஒத்துக்கவே இல்ல. யாரோ ஒருத்தரோட வீட்டுல போய் ஓசியில எப்பிடி தங்குறதுனு ரொம்பவே பிடிவாதம் பிடிச்சா. எனக்கு வேற வழியில்லாம அப்பாவோட பணம் நிறைய இருக்கு, நம்ம ஒன்னும் அவங்க பணத்துல வாழப் போறதில்லனு சொல்லி கஷ்டப்பட்டு அவளை இங்கே கூட்டிட்டு வந்தேன்.

இங்கே வந்ததுக்கு அப்புறம் பெரிய மாமிக்கு எங்களைப் பிடிக்காதுனு தெரிஞ்சதுக்கு அப்புறம் என்ன பண்ணனு தெரியல. ஆனா தஞ்சாவூர் திரும்பிப் போகவும் பயமா இருந்துச்சு. நான் என்ன பண்ணுறது? அதனால தான் நான் நீரு கூட இங்கேயே தங்கிட்டேன். பெரியவங்க எங்களுக்காக குடுக்கிற பணத்தை இது வரைக்கும் அப்பாவோட பணமா தான் நீரு நினைச்சிட்டிருக்கா. ஆனா அவளுக்கு தெரியாது வி.ஆர்.எஸ் வாங்குனதால அப்பாக்கு கிடைச்ச செட்டில்மெண்ட் பணம் பூராவுமே அப்பா பிஸினஸ் தொடங்க வீட்டு மேல வாங்குன கடனுக்காக செலவாயிடுச்சுனு. பிஸினஸ் தொடங்கறேனு சொல்லி எல்லா ஏற்பாடும் முடியுற டைம்ல தான் அப்பாக்கும் அம்மாக்கும் ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு. அவங்க ரெண்டு பேரும் போனதுக்கு அப்புறம் எங்களுக்குனு யாருமில்லனு நினைச்சு ஒவ்வொரு நாளையும் நாங்க பயத்தோட கழிச்சிட்டு வந்தோம்.

பெரியமாமாவும், சின்ன மாமாவும் கடவுள் மாதிரி வந்து கடனையும் அடைச்சிட்டு எங்களையும் இங்கே கூட்டிட்டு வந்துட்டாங்க. தயவு பண்ணி இது எதையும் நீரு கிட்ட சண்டை போடுறப்போ சொல்லி காட்டிடாதிங்க. நான் வேணும்னா இது வரைக்கும் வாங்குன பணத்தை எப்பிடியாச்சும் குடுத்துடுறேன். பிளீஸ்" என்று அவள் சொல்ல அவர்கள் அனுபவித்த வேதனையைக் கேட்டவனின் கண்ணிலும் கண்ணீர் திரள திரும்பிக் கொண்டான்.

பின்னர் தன்னை சமாளித்தவனாய் "நான் சொல்ல மாட்டேன். நீ கண்ணை துடைச்சுக்கோ" என்றபடி அவன் கைக்குட்டையை நீட்ட அவள் தயக்கத்துடன் அதை வாங்காமல் நிற்க அவள் கையில் திணித்தான் ரகுநந்தன்.

அவள் கண்ணைத் துடைத்துவிட்டு திரும்ப அளிக்க அவளைப் பார்த்தவன் "நீயும் நீருவும் நினைக்குற அளவுக்கு நாங்க மோசமானவங்க இல்ல கிருஷ்ணா! அம்மாக்கு அத்தை மேல ஏதோ கோவம். அது அவங்க பிரச்சனை. அதுக்காக உங்களை வெறுக்கற அளவுக்கு நான் ஒன்னும் மடையனோ, முட்டாளோ கிடையாது. இப்போ உன் கிட்ட இதை நான் கேட்டதுக்கு கியூரிசியாட்டி தான் காரணமே தவிர எங்காத்து பணத்தை திருப்பி குடுனு கேக்கறதுக்கு இல்ல. மதுரா அத்தைக்கும் இந்தச் சொத்துல பங்கு இருக்கு. அதை செலவு பண்ணுற முழு உரிமையும் உனக்கும் நீருவுக்கும் இருக்கு. ஆனா உன் தங்கை இதை ஒத்துக்க மாட்டா. அவளோட பிடிவாதத்துக்கு முன்னாடி பகவானே வந்தாலும் அவர் தோத்து தான் போயிடுவார். அவ கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னா அவ கண்டிப்பா விபரீதமா எதாவது செஞ்சு வைப்பா. சோ நான் எப்போவும் இதைப் பத்தி அவ கிட்டபேச மாட்டேன். இப்போ நீ ரிலாக்சா போய் பர்சேஸ் பண்ணு. இல்லனா உன்னோட ஆங்ரி பேர்ட் தங்கை இங்கேயே வந்துடுவா" என்று கேலியாய் அவளைச் சுட்டிக் காட்ட கிருஷ்ணஜாட்சியும் இத்தனை நாள் மனதை அறுத்த விஷயத்தை அவனிடம் பகிர்ந்து கொண்ட நிம்மதியுடன் நீரஜாட்சியை நோக்கிச் சென்றாள்.

செல்பவளைப் பார்த்த ரகுநந்தன் தன்னை விட இளையவளாயினும் வாழ்வில் பிரச்சனைகளை அவள் சமாளித்த விதத்தில் கிருஷ்ணஜாட்சி மீது மதிப்பு கூடியது அவனுக்கு. அதே நேரம் தமக்கையிடம் ஒரு புடவையைக் காட்டி கண்களை உருட்டி பேசிக் கொண்டிருந்த நீரஜாட்சியைக் கண்டதும் அவனுக்கு ஆயாசமாக இருந்தது.

"நீ இவ்ளோ ரோஷம் பார்க்கிறவளா பிறந்திருக்க வேண்டாம்டி. பத்மாவதியம்மா வீட்டு பணத்தையே வேண்டானு சொல்லறவா எப்பிடி தான் பத்மாவதியம்மாவோட மகனை ஏத்துக்க போறாளோ? ஹே பகவான் பிளீஸ் ஹெல்ப் மீ" என்று கடவுளிடம் வேண்டியபடி இரு சகோதரிகளையும் நோக்கிச் சென்று அவனது அன்னைக்கு இன்னொரு அதிர்ச்சியை அளிக்கச் சென்றான் ரகுநந்தன்.


Comments

  1. பூங்காற்றிலே உன் சுவாசம்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 18)

    எனக்கு நீரஜாட்சி கேரக்டர் ரொம்ப பிடிச்சிருக்கு. உண்மையிலேயே மனுசனா பிறந்தவங்களுக்கு கொஞ்சமாச்சும், தன்மானமும் ரோஷமும் இருக்கணும்.

    அடேய்... அபிஷ்டு ! நீருவை சும்மா, சும்மா சீண்டி வெறுப்பேத்துற இல்ல...
    அவ கிட்ட மாட்டிட்டு நல்லா முழி.

    ஒருத்தி க்யூட் பேபின்னா, இன்னொருத்தி ரவுடி பேபி.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1