பூங்காற்று 43

Image
  அந்த ஆடியோவால் நீரஜாட்சிக்கும் ரகுநந்தனுக்கும் இடையே சத்தமே இல்லாமல் ஒரு பனிப்போர் ஆரம்பித்தது. இருவரும் ஒருவரையொருவர் முறைத்தபடியே திரிய ரகுநந்தன் இப்போதெல்லாம் பெரும்பாலான நேரத்தை அலுவலகத்திலேயே கழித்தான்.   ஆனால் அலுவலகத்தில் கூட கணவனும் மனைவியும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை. நீரஜாட்சி அவனை ஏளனமான உதட்டுவளைவுடன் கடந்துவிட அவனால் தான் எதையும் மறக்க முடியவில்லை. அவள் இந்த பிரச்சனையை இலகுவாக எடுத்துக் கொண்டதற்கும் அவனது புத்தி தப்பர்த்தம் செய்து கொண்டது. " அது சரி! நான் மட்டும் தானே லவ் பண்ணுனது. அவ தான் என்னை பத்தி நினைச்சு கூட பார்த்தது இல்லையே. அப்புறம் எப்பிடி அவளுக்கு வருத்தமா இருக்கும் ?" என்று அவன் நினைத்துக் கொள்ள நீரஜாட்சியோ "உண்மையை சொல்ல சொல்ல கேக்காம போனா நான் இவன் பின்னாடியே போய் கெஞ்சணுமாக்கும் , பெரிய இவன்! உண்மையை புரிஞ்சுகிட்டு தானா பேசுனா பேசுறான் , இல்லைனா வாழ்க்கை முழுக்க இப்பிடி முசுடாவே இருந்துட்டு போறான். எனக்கு என்ன வந்துச்சு ?" என்று சிறிதும் தனது நிலையை விட்டு விலகாதவளாய் அவனை சமாதானம் செய்ய முயலவில்லை. அவளின் விலக...

பூங்காற்று 9



கிருஷ்ணஜாட்சியின் வாழ்க்கை சீராக பராமரிக்கப்படும் இயந்திரம் பழுதின்றி ஓடுவது போல எந்த வித தடையுமின்றி ஒழுங்கானப் பாதையில் சென்று கொண்டிருந்தது. அவளது நான்கு மாத பயிற்சி நல்ல முறையில் முடிய அவளது தோழி கரோலின் ஒரு மாத சிறப்புப்பயிற்சியிலும் கிருஷ்ணஜாட்சியைக் கலந்து கொள்ளுமாறு கூற அவளும் சந்தோசமாகவே அதையும் முடித்தாள்.

இதற்கு இடையில் மாமாவின் ஹோட்டலிலும் அனைத்து ஊழியர்களிடமும் அன்போடு பழகுவதாகட்டும், தலைமை செஃபிடம் பணிந்து நின்று அவரது கட்டளைப்படி வேலையை முடிப்பாதகட்டும் அவளுக்கு நிகர் அவளே என்று நிரூபித்தாள். ஐந்து மாத கால பயிற்சியின் முடிவில் கரோலின் சொந்தமாக பேக்கரி ஆரம்பிக்க முடிவு செய்தவள் கிருஷ்ணஜாட்சியும் தனக்கு இதில் உதவியாக இருக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்ள அவளும் சம்மதித்தாள்.

கரோலின் தந்தை தாமஸ் திடீரென்று ஏற்பட்ட முடக்குவாதத்தால் கை கால் செயலிழந்து வீல்சேரே வாழ்க்கை என்றாகிவிட அவளது அன்னை மெர்லின் அவர்களின் பொக்கே ஷாப் வருவாய் மூலமாகத் தான் அவளைப் படிக்க வைத்தார். இப்போது மகளின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவளுக்கு பேக்கரி ஆரம்பிக்க வங்கியில் தனது பொக்கே ஷாப் மீது தான் தொழில்க்கடன் வாங்கியிருந்தார். அவளது குடும்பநிலையே கிருஷ்ணஜாட்சிக்கு அவள் மீது பிரியம் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைய மெர்லினுமே அவ்வபோது வீட்டுக்கு வந்து தன்னிடமும் கணவரிடமும் இன்முகமாகப் பேசிவிட்டுச் செல்லும் கிருஷ்ணஜாட்சியைத் தனது சொந்த மகளாகவே கருதுவார்.

கரோலினின் பேக்கரி விஷயத்தை தாத்தாவிடமும், மாமாக்களிடமும் தெரிவித்த கிருஷ்ணஜாட்சி இனி காலையிலிருந்து மதியம் வரை அவர்களின் ஹோட்டலிலும், மதியத்திலிருந்து இரவு வரை கரோலினின் பேக்கரியிலும் தான் வேலை செய்யப் போவதாகச் சொல்ல அவர்களும் கரோலின் மீது வைத்த நம்பிக்கையில் மறுப்பு சொல்லவில்லை. ஏனெனில் அப்பாவிப்பெண்ணாக இருந்த கிருஷ்ணஜாட்சி இன்று ஓரளவுக்கு நிமிர்வுடனும், தெளிவுடனும் இருக்கிறாளென்றால் அதில் கரோலினின் பங்கு மிகவும் அதிகம். அவளுடன் பேசி பேசி கிருஷ்ணஜாட்சியின் ஆங்கிலப்புலமையும் தெளிவாகி விட்டது என்பது வேறு விஷயம்.

வங்கிக்கடனும் கிடைத்து மெர்லினின் பொக்கே ஷாப்புக்கு அருகிலேயே சிறிய கைக்கு அடக்கமான ஒரு கடையை வாடகைக்கு எடுத்தவர்கள் அதன் உள்கட்டமைப்பு பணிகளை முடித்துவிட்டு ஒரு நாள் பட்டாபிராமன், வேங்கடநாதன் மற்றும் கோதண்டராமனை அழைத்துவந்து காட்ட மூவருமே இந்த பதினெட்டு வயது பெண்களுக்குள் சொந்தமாக உழைக்கவேண்டும் என்று இவ்வளவு ஃவெறியா என்று ஆச்சரியப்பட்டவர்கள் உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரக்களுக்காக மெர்லின் தாமஸை பாராட்டத் தவறவில்லை.

கடைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள் என்று கேட்க கரோலின் தயக்கமின்றி "கிராண்ட்பா அவர் பேக்கரிஸ் நேம் இஸ் மது'ஸ் கேக் வேர்ல்ட், ஹவ் இஸ் இட்?" என்று கேட்க கிருஷ்ணஜாட்சியோடு சேர்ந்து தாத்தா மற்றும் மாமாக்களும் கண் கலங்கிவிட கரோலின் தயக்கமின்றி "கிரிஷ் என்னோட பேக்கரியில எம்பிளாயியா வொர்க் பண்ண மட்டும் நான் கூப்பிடல கிராண்ட்பா. ஷீ இஸ் ஆல்சோ அ வொர்க்கிங் பார்ட்னர். இது நான் அவளுக்குக் குடுக்கிற மரியாதைனா இந்த நேம் வச்சது அவளோட மாம்கு குடுக்கிற மரியாதை. பிளீஸ் வேண்டானு சொல்லாதிங்க" என்று கொஞ்சும் தமிழில் அன்போடு கேட்டப்பின் யாருமே அதை மறுக்கவில்லை.

ஒரு நல்ல நாளில் அவர்களின் எட்டுமாத உழைப்பின் பலனாக அந்த பேக்கரியும் தாமஸ் கையால் திறந்துவைக்கப்பட்டது. திறப்புவிழாவுக்கு பத்மாவதியும், ஸ்ருஹிகீர்த்தியும் வர மறுத்துவிட அவர்களை யாரும் சட்டை செய்யவில்லை.  மைதிலி தனது மகள் மைத்ரேயி மற்றும் நீரஜாட்சியுடன் தனிக் காரில் வந்துவிட பட்டாபிராமன் அவரது புத்திரர்கள் மற்றும் மணையாளுடன் வந்துச் சேர்ந்தார்.

மெர்லின் அவரது வாடிக்கையாளர்களையும் அழைத்திருக்க கடைத்திறப்புக்கு வந்தவர்களுக்கு கிருஷ்ணஜாட்சியும், கரோலினும் கேக் வழங்க அனைவரும் அதன் ருசியைச்  சிலாகித்துவிட்டுச் சென்றனர். பட்டாபிராமன் குடும்பத்துக்கு கேக் கொண்டு வந்த கரோலின் "கிராண்ட்பா திஸ் இஸ் எக்லெஸ் கேக் ஸ்பெஷலி மேட் ஃபார் யுவர் ஃபேமிலி" என்று நீட்ட அவர்களும் தயக்கமின்றி எடுத்துக் கொண்டனர்.

மைத்ரேயி கரோலினிடம் "லின் இண்டீரியர் டெகரேசன் இஸ் ஆசம் பேபி. யார் ஐடியா குடுத்தது?" என்று ஆர்வம் தாங்காமல் கேட்டுவிட மெர்லினின் ஐடியா என்றதும் அவரிடம் சென்று பேச ஆரம்பித்தாள் அவள். இந்தக் காட்சிகளைக் கண்ட தாமஸிற்கு தன் மகள் இந்த உலகில் இனி யாருடைய தயவும் இன்றி சொந்தக்காலில் நின்று விடுவாள் என்ற நம்பிக்கை பிறக்க அந்த நம்பிக்கையுடன் அவர்களின் வளர்ச்சியை ஒருமாத காலம் உடனிருந்து கண்டு மகிழ்ந்தவர் மனநிறைவுடன் ஒருநாள் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

கரோலினுக்குமே தந்தையின் உடல்நிலை பற்றி முன்னரே ஓரளவுக்கு தெரிந்திருந்ததால் அவர் இன்னும் கஷ்டப்படாமல் இருக்க கடவுளே அவரை அழைத்துக் கொண்டார் என்று எண்ணி மனதைத் தேற்றிக் கொண்டாள். கிருஷ்ணஜாட்சி அவள் மனம் தேறும் வரை மைத்ரேயியின் உதவியுடன் பேக்கைரியை பார்த்துக் கொள்ள இரண்டு வாரங்களில் கரோலினும் இயல்பு வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டாள்.

கிருஷ்ணஜாட்சியும் நீரஜாட்சியும் சென்னை வந்து ஓராண்டு கடந்துவிட்டது. கிருஷ்ணஜாட்சி அவளது வேலையிலும் தங்கையைக் கவனித்துக் கொள்வதிலும் நாட்களைக் கடத்த நீரஜாட்சி அவள் விளையாட்டை ஒதுக்கி வைத்துவிட்டு பொதுத்தேர்வுக்கு தன்னை தயார்ப்படுத்த ஆரம்பித்தாள்.

அவ்வாறு இருக்க ஜென்மாஷ்டமி கொண்டாட்டம் அந்த வீட்டில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அந்த வருடமும் விமரிசையாகக் கொண்டாட பத்மாவதி தன்னுடைய அண்ணன் குடும்பத்தையும் வரவழைத்திருந்தார். மாலையில் பூஜைக்கு பலகாரங்கள் செய்யப்பட வீடே ஜெகஜோதியாக இருந்தது. குழந்தைகளூம் வந்திருக்க மைத்ரேயி ஒரு குழந்தையின் காலை மாவில் முக்கி கிருஷ்ணரின் பாதத்தை வீட்டின் வாயிலில் இருந்து பூஜையறை வரைக்கும் வைத்துவிட்டு வாயிலில் அழகான ரங்கோலி போட அமர்ந்துவிட நீரஜாட்சி அவளுக்கு உதவிக் கொண்டிருந்தாள்.

இருவரும் கோலம் போடும் ஆர்வத்தில் கோலமாவை முகத்தில் ஆங்காங்கே ஈசிக் கொண்டிருக்க  அப்போது வாயிலில் நின்ற காரிலிருந்து இறங்கினாள் வானிலிருந்து வந்த வெண்ணிலவு போன்ற அழகுடன் பெண் ஒருத்தி. அவள் அணிந்திருந்த தாவணி அவள் அழகுக்கு அழகு சேர்க்க அந்த முகமே சாந்த சொரூபமாக பார்ப்பவரைக் கொக்கி போட்டு இழுக்கும் விதமாக கொள்ளை அழகுடன் இருக்க அவளுக்குப் பின்னே இறங்கினர் விஜயலெட்சுமியும் ஆதிவராஹனும்.

வாசலில் சம்மணக்காலிட்டு கோலம் போட்டுக் கொண்டிருந்த மருமகளையும் அவளுக்கு உதவிச் செய்து கொண்டிருந்த பெண்ணையும் பார்த்தவர் "மைத்திம்மா" என்று அன்போடு அழைக்க மைத்ரேயி "ஆதி மாமா" என்ற  கூவலுடன் அவரை அணைத்துக் கொண்டாள்.

அடுத்து நின்ற அழகியை "வர்ஷா எப்பிடிடி இருக்க அழகி?"என்றவாறு அணைத்துக் கொள்ள அவளும் "நல்லா இருக்கேன் மைத்தி" என்றுச் சொல்ல மேத்ரேயி நீரஜாட்சியை இழுத்து வைத்து "இது நீரு! எங்க மதுரா அத்தையோட இளைய பொண்ணு. மூத்தவா இப்போ வர்ற நேரம் தான்" என்று சொல்ல

அந்த வர்ஷா சிரித்தபடி தன்னுடைய தாவணி முனையை எடுத்து நீராஜாட்சியின் முகத்தில் ஒட்டியிருக்கும் வண்ணப்பொடியைத் துடைத்துவிட அவளோ "பரவால்ல அக்கா! எப்பிடியும் மறுபடியும் வந்துடும்" என்றுச் சொல்லிவிட்டு மைத்ரேயி வர்ஷாவுடன் சேர்ந்து மீண்டும் கோலத்தில்  கவனம் செலுத்த தொடங்கினாள்.

அவள் தான் வர்ஷா. ஹர்சவர்தனுக்காகப் பிறந்தவள். அவளைத் தனது மருமகளாக்கிக் கொள்ளும் எண்ணம் அவள் பிறந்த சமயத்திலேயே பத்மாவதியின் மனதில் தோன்றிவிட விஜயலெட்சுமியும் அந்த எண்ணத்துக்கு நீருற்றி வளர்த்துவிட்டார். ஆனால்  வர்ஷா குணத்தில் அவரைக் கொள்ளவில்லை என்ற வருத்தம் என்றுமே அவருக்கு உண்டு.

இப்போது கூட கோலம் போட்டுக் கொண்டிருந்தவளைக் கைப்பற்றி எழுப்பியவர் "அந்த கழுதை கிட்ட நோக்கு என்னடி பேச்சு? அது பொல்லாததுடி. அதோட சினேகிதம் நோக்கு தேவை இல்ல" என்று கடிந்து கொள்ள வர்ஷா எரிச்சலுடன் "மா நோக்கு பிடிக்கலனா அது உன்னோட. அதை என் மேல திணிக்கப் பார்க்காதே. ஒரு சின்னப்பொண்ணு மேல ஏன்மா நோக்கும் அத்தைக்கும் இவ்ளோ வன்மம்? கொஞ்சமாச்சும் பெரியவாளாட்டம் நடந்துக்கோங்கோ ரெண்டு பேரும். இனிமேல் என்னண்ட வந்து அவா கூட பேசாதே இவா கூட பழகாதேனு சொன்னா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்! சொல்லிட்டேன்" என்றுக் கடுப்புடன் உரைத்துவிட்டுச் சென்றாள். அவள் முகத்தைப் போலவே அகமும் அவ்வளவு அழகு.

தூரத்தில் நின்ற ஆதிவராஹன் கலங்கிய கண்களுடன் நீரஜாட்சியைக் கண்டவர் மனைவியின் முறைப்பைப் புரிந்து கொண்டவராய் அவருடன் உள்ளே சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் பூஜையை ஆரம்பித்துவிடலாம் என்று பத்மாவதி கூற மைதிலி "அக்கா கொஞ்சம் வெயிட் பண்ணு. இன்னும் கிருஷ்ணா வரல்லயோன்னோ" என்க பத்மாவதிக்கு எரிச்சலாகி விட்டது.

"ஏன்டி நோக்கு அறிவு கிறிவு இருக்கறதா இல்லையா? மனுஷாள் பகவானுக்காக காத்திருக்கறதா, இல்ல பகவான் மனுஷாளுக்காகக் காத்திருக்கறதா? கலி முத்தி  போயிடுச்சுடி! உன் செல்ல மருமாள் எப்போ வருவாள்னு ஸ்ரீகிருஷ்ணர் காத்திண்டிருக்கணுமா? நந்தனும் தான் ஆத்துல இல்ல! அதுக்காக அவன் வர்ற வரைக்கும் காத்திருக்க முடியுமோ" என்று அவர் ஆவேசமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மின்சாரம் போய்விட்டது.

மின்சாரம் போனதும் சளசளப்பு எழ அந்த இருளைக் கிழித்துக் கொண்டு ஒரு தீபத்தின் ஒளி தெரியவே அனைவரும் ஒளி வந்த திசையைத் திரும்பிப் பார்க்க அந்த இருளின் இடையே வெள்ளை நிற சுடிதாரில் கையில் தீபத்துடன் வந்துச் சேர்ந்தாள் கிருஷ்ணஜாட்சி. வருஷாவுக்கு இருளைக் கிழித்து வந்த மின்னல் கீற்று போல வந்த அந்தப் பெண்ணை முதல் முறை பார்த்ததும் பிடித்துவிட்டது.

அவள் நேரே சீதாலெட்சுமியிடம் சென்றவள் "சித்தம்மா நான் ரெடியாயிட்டு வர்றப்போ கரெண்ட் போயிடுச்சு. இருட்டுல வர பயமா இருந்துச்சா, அதான் வாசல்ல இருந்த தீபத்தை எடுத்துட்டு வந்தேன்" என்றுச் சொல்ல அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே மின்சாரமும் வந்துவிட்டது. அவள் தீபத்துடன் நின்ற காட்சியை போட்டோகிராபர் மறக்காமல் படம் பிடிக்க அந்த வருட ஜென்மாஷ்டமி போட்டோ கலெக்சனில் அந்த போட்டோ மட்டும் தனித்த அழகுடன் இருந்தது என்றுச் சொன்னால் மிகையாகாது. அதன் பின் பூஜை சிறப்பாக நடைபெற மகிழ்ச்சியுடன் அன்றைய நாளும் கடந்தது.

ஒரு வாரத்துக்குப் பின் அந்த போட்டோக்களை ஸ்டூடியோவில் இருந்து சிடியிலும் ஆல்பமாகவும் வாங்கி வந்த  ரகுநந்தன் மறக்காமல் அதை ஹர்சவர்தனுக்கு மெயிலில் அனுப்பி வைத்தான். ஹர்சவர்தன் வழக்கம் போல தம்பியிடம் இருந்து வந்த மெயிலைப் பார்த்தவன் அதில் இருக்கும் போட்டோக்களைத் தரவிறக்கம் செய்து ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

வர்ஷாவின் புகைப்படத்தைப் பார்த்ததும் அவனை அறியாமல் அவன் இதழில் வந்து ஒட்டிக் கொண்டது ஒரு அழகிய புன்னகை. அவளை ரசித்துக் கொண்டு அடுத்தடுத்து போட்டோக்களைப் பார்த்தவன் கிருஷ்ணஜாட்சியின் தீபத்துடன் கூடிய போட்டோவைக் கண்டதும் கண் இமைக்க மறந்தவனாய் சிலையாகி விட்டான்.

எப்போதும் போல அவளது விரித்த கூந்தலுடன் தோகை விரித்த மயிலைப் போல வெள்ளை சுடிதாரில் அழகு தேவதையாக நின்றவள் அவன் அறியாமல் அவனது இதயத்தைக் கொள்ளை கொண்டுவிட்டாள். ஹர்சவர்தனின் கைவிரல்கள் அவன் அறியாமல் மானிட்டரில் இருந்த கிருஷ்ணஜாட்சியின் புகைப்படத்தை வருடிக் கொடுத்தன.

சில நிமிடம் தான். அதற்குள் பழைய ஆல்பத்தில் தந்தை மற்றும் தாத்தாவுடன் நிற்கும் அத்தை மதுரவாணியின் நினைவு சுனாமியாய் அவனது மூளையைத் தாக்க மின்சாரத்தைத் தீண்டியது போல விரல்களை வெடுக்கென்று எடுத்துக் கொண்டவனின் காதில் அன்னையின் வார்த்தைகளான "ஹர்சா உன் அத்தை நம்ம குடும்பத்தை அழிக்க வந்த கோடரிகொம்புடா. எல்லாரும் அவளை எவ்ளோ நம்புனா தெரியுமா? அன்னைக்கு மணவறையில என் அண்ணாவை விட்டுண்டு எவனோ ஊர் பேர் தெரியாதவனோட அவ ஓடிப் போன அவமானம் தாங்காம தான்டா என்னோட தோப்பனாருக்கு முடியாம போச்சு. அவளை நான் என்னைக்குமே மன்னிக்க மாட்டேன்டா" என்பது காதில் ரீங்காரமிட அவன் முகம் தீவிரமான பாவத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.

அவன் மூளை "டேய் ஹர்சா! அந்தப் பொண்ணு உன் மனசை கொழப்பிட்டா. ஆனா உன் அம்மாவைப் பத்தி யோசி. என்னைக்குமே அவளை அம்மா ஏத்துக்க மாட்டாடா. அதுவுமில்லாம வர்ஷா உனக்காகவே பிறந்தவடா. அவளை விட்டுட்டு நேத்து வந்த ஒருத்தியை நினைச்சதே பாவம்டா" என்க

அவனது மனம் "ஹர்சா! நோக்கு யாரு பொருத்தமா இருப்பானு நீ தான் தீர்மானிக்கணும்டா. அதை விட்டுட்டு பழைய பேச்சைப் பிடிச்சு தொங்கிண்டு இருக்காதேடா அசடு" என்று அவனுக்கு மாறி மாறி அறிவுறுத்தி அவனைக் குழப்ப செய்வதறியாது திகைத்த ஹர்சவர்தன் மீண்டும் ஒருமுறை மானிட்டர் திரையில் தெரிந்த கிருஷ்ணஜாட்சியின் போட்டோவை பெருமூச்சுடன் பார்த்தான்.

எப்போவும் போல கொள்ளை அழகு தான். ஆனால் முன் போல் முகத்தில் அப்பாவித்தனம் இல்லை. பதினெட்டு வயதிலேயே ஒரு தொழிலைத் திறம்பட நடத்தும் நிமிர்வும் தன்னம்பிக்கையும் அவளின் அழகை இன்னும் பேரழகாக காட்ட அவளை ரசிக்கத் துடிக்கும் மனதுக்குக் கடிவாளம் போட இயலாதவனாய் தவித்துப் போனான் ஹர்சவர்தன்.


Comments

  1. பூங்காற்றிலே உன் சுவாசம்..!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 9)

    அட.. பரவாயில்லையே ! நான் கூட வர்ஷா, வர்ஷான்னு சொன்னவுடனே, அதுவும் விஜயலஷ்மி பொண்ணுன்னவுடனே
    கொஞ்சம் பயந்தேன். ஆனா, வர்ஷா அப்படியே அவங்கப்பா மாதிரின்னு தோணுது.

    பாவம் ஹர்ஷா...!
    இப்ப இது வா ? அது வா ?
    லவ் பண்ணலாமா? வேணாமா ?
    வர்ஷாவா ? கிருஷ்ணஜாட்சியா ?ன்னு மண்டையை போட்டு உடைச்சுக்கட்டும். நமக்கென்ன, நம்ம போய் ஒரு தூக்கம் போட்டுட்டு வரலாம்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  2. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1