அன்பு 2
- Get link
- Other Apps
“யாவும்
நீ தான் என்றெண்ணியிருந்த எனக்குள் நீ வேறு நான் வேறென்ற எண்ணம் வேர் விட்ட கணத்திலேயே
வெகு வேகமாக துளிர் விட்டு வளர்ந்து கிளை பரப்பி நின்றது பிரிவு என்ற விருட்சம்”
கண்ணாடி முன்னே அமர்ந்து தனது சிவப்பு வண்ண
பட்டுப்புடவையை நீவி விட்டுக் கொண்டாள் சம்விருதா. அளவான மேக்கப்புடன் பேபி பிங் வண்ண
உதட்டுச்சாயத்தை மெல்லிதாக உதட்டில் தீற்றியவள் வெறுமையான கண்களுக்கு காஜலால் கருப்பு
கரையிட்டாள்.
டிரஸ்சிங் டேபிள் முன்னே சற்று முன்னர் பார்வதி
கொடுத்த மல்லிகைச்சரம் இருக்க கூந்தலை பின்னி அதை சூடிக்கொண்டாள்.
கண்ணாடியில் பார்த்து திருப்தியுறும் போதே
வேஷ்டி சட்டையுடன் அறைக்குள் பிரவேசித்தான் சாந்தனு.
அவன் கையில் நீலவண்ண வெல்வெட் பெட்டி ஒன்று
அமர்ந்திருந்தது.
“அத்தை இதை போட்டுக்கச் சொன்னாங்க... சிம்பிளா
இருக்குறத மட்டும் போட்டுக்கோ”
சொன்னதோடு பெட்டியை வைத்துவிட்டு இடத்தைக்
காலி செய்தான் அவன்.
அதை திறந்த சம்விருதாவின் விழிகள் முதலில்
நிலைத்தது என்னவோ ரூபியால் ஆன கழுத்தாரத்தின் மீது தான். புடவைக்கு மட்டுமன்றி சுடிதாருக்கும்
போட்டுக்கொள்ளும்படி நவீன வடிவமைப்பில் அமைந்திருந்த அந்தக் கழுத்தாரம் சாந்தனு திருமணத்திற்கான
நகை எடுக்கச் சென்ற போது அவளுக்கு அளித்த பரிசு.
“ஏன் இவ்ளோ காஸ்ட்லியா வாங்குன தனு?”
“என் சம்மு பேபிக்கு முன்னாடி இதுல்லாம் ஒன்னுமே
இல்ல” என்று சொல்லி குறும்பாக நாசியை உரசியவன் அதை அணிவித்துக் கண்ணாடியில் காட்டிய
தருணம் இப்போது நினைவுக்கு வந்தது.
அவனது கூர்நாசியின் குறுகுறுப்பை அவளது நாசியும்,
அவனது விரல்களின் ஸ்பரிசத்தை அவளது பின்னங்கழுத்தும் இப்போது கூட உணர்ந்தன.
அதன் முடிவில் தீரா ஏக்கமொன்று பூதாகரமாக உருவெடுத்து
இனி இத்தகைய இனிய தருணங்கள் எல்லாம் உன் வாழ்க்கையில் இல்லையடி என்ற கசப்பான உண்மையை
அவளுக்குப் புரிய வைத்தது.
முடிவில் கண்ணீர் கூட எட்டிப் பார்க்கவும்
சம்விருதா அதிர்ந்தாள்.
“நான் ஏன் அழணும்? என்னைக் கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம
என் மனசை நோகடிச்ச சாந்தனு தான் பழசை நினைச்சு ஃபீல் பண்ணணும்!”
காஜல் அழியாமல் நாசூக்காக கண்ணீரை டிஸ்யூவால்
ஒற்றியெடுத்தவள் “பொண்ணுவீட்டுக்காரங்க வந்துட்டாங்க” என்ற சுனிலின் உற்சாகக்கூச்சலில்
கீழ்த்தளத்திற்கு வந்தாள்.
மணமகளின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்களால்
ஹாலானது நிரம்பி வழிந்தது.
“வாங்க சம்பந்தி” என முகம் மலர வரவேற்றனர்
குலசேகரநாதனும் சிவசங்கரியும்.
வந்தவர்கள் நீலகண்டனையும் பார்வதியையும் குசலம்
விசாரித்துவிட்டு அமர மணப்பெண்ணின் அன்னை சம்விருதாவைப் பார்த்து புன்னகையுடன்
“இது உங்க பேத்தியா பெரியப்பா?” என்று நீலகண்டனிடம்
கேட்க
“ஆமா... என் மூத்தப் பேரன் சாந்தனுவோட ஒய்பும்
கூட” என்றார் அவர் பூரிப்புடன்.
“உங்க வீட்டுப்பொண்ணை வெளிய அனுப்பாம உறவுக்குள்ளவே
கல்யாணம் பண்ணி வச்சிட்டிங்க போல” என்றார் மணப்பெண்ணின் தந்தை.
“ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புனாங்க...
நாங்களும் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டோம்... பசங்க சந்தோசத்தை விட நமக்கு வேற
என்ன வேணுங்க சம்பந்தி?” என்றார் விஸ்வநாதன்.
குரலில் இருந்த பூரிப்பு அவரது வதனத்தில் இல்லை.
அவருக்கு மட்டுமா? அவரது தர்மபத்தினி கோமதியின் நிலையும் அதுவே.
அண்ணனும் மதினியும் முகம் வாட நிற்பதை காண
சகியாத செண்பகாதேவி மகளை தான் முறைத்தார்.
“எல்லாம் உன்னால தான்”
அவரது குற்றம் சாட்டும் பார்வையால் கடுப்பானவள்
தந்தையை நோக்க அவரோ “வந்தவங்களுக்கு காபி கொண்டு வாங்கம்மா” என்று பேச்சை மாற்றினார்.
அதன் பின்னர் காபி மற்றும் காலை டிபனுடன் வீடு
களை கட்டியது.
சம்விருதாவோ பெற்றோரின் குற்றம் சாட்டும் பார்வையில்
சினத்தை அடக்க அரும்பாடு பட்டாள்.
“என்னமோ எல்லாமே என் தப்புங்கிற மாதிரி ஆளாளுக்கு
லுக் விடுறாங்க... மெயின் கல்பிரிட் அவன் தானே”
குத்தும் பார்வையால் சாந்தனுவை நோக்க அவனோ
அங்கே நடந்த பார்வை பரிமாற்றங்களுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல அதர்வாவுடன்
ஜமுக்காளத்தில் அமர்ந்து பொன்னுருக்கு நிகழ்வைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தான்.
“அந்த மனைப்பலகை பக்கத்துல கலசம் வச்சு பூஜை
பண்ணிட்டு கோல்ட் காயினை உருக்குவாங்கடா”
அதர்வா ஆர்வத்துடன் கேட்டாலும் மணப்பெண் அஸ்வதி
வரவில்லை என்ற சோகத்தை அவ்வபோது குரலில் காட்டினான்.
சாந்தனுவும் இம்மாதிரி உணர்வுகளை அனுபவித்திருக்கிறானே!
அவனது பொன்னுருக்கும் வைபவத்தில் சம்விருதா இதே ஜமுக்காளத்தில் அவனுக்கு எதிர்பக்கம்
அவளது பெற்றோருடன் அமர்ந்து அவனைத் தனது அஞ்சனம் தீட்டிய விழிகளால் சீண்டிக் கொண்டிருந்தாள்.
புருவத்தை ஏற்றியிறக்கி என்னவென்பது போல அவன்
வினவ அதற்கு நடப்பதை கவனி என்பது போல கண் காட்டினாள் அவள்.
இவர்களது பார்வை பரிமாற்றத்தைப் பார்த்து பெரியவர்கள்
சிரித்ததும், சம்விருதா கன்னங்களில் நாணச்சிவப்பேற சாந்தனுவின் மனக்கண்ணில் ஓடியது.
உடனே நிகழ்காலத்திற்கு திரும்பியவன் பூஜை முடிந்து
பொன்னுருக்கும் நிகழ்வு நடந்தேறுவதை ஆர்வத்துடன் கவனித்தான். சம்விருதாவும் அவ்வாறே!
பொன்னுருக்கி முடிந்ததும் பொற்கொல்லருக்கு
ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் வைத்து அளித்து வைபவத்தை முடித்து வைத்தனர்.
பின்னர் மதியவுணவுக்கான பந்தியை ஆரம்பித்தனர்.
உணவு பரிமாறும் போது இலையில் உப்பு வைப்பதற்கு முன்னர் சாந்தனு அவியலை வைத்துவிட்டான்.
அதை கண்ட விஸ்வநாதனோ
“உப்பு வச்சதுக்கு அப்புறம் ஸ்வீட் வைக்கணும்...
அதுக்கு அப்புறம் தான் பரிமாறணும்... இதுல கூடவா அவசரம்? இந்த அவசரக்குடுக்கைத்தனத்தை
விட்டா தான் வாழ்க்கையில நமக்கு நல்லது நடக்கும்” என்று அவனைக் குத்திவிட்டு பரிமாற
ஆரம்பித்தார்.
சாந்தனு பற்களைக் கடித்தவன் பரிமாறுவதை நிறுத்திவிட்டு
அங்கிருந்து வெளியேறிவிட்டான்.
அவன் நேரே சென்றது பின்வாயில் கிணற்றடிக்குத்
தான். தென்னைமரங்களும், மா மற்றும் நெல்லிக்காய் மரங்களும் அடர்ந்திருந்த பின்பக்க
தோட்டத்தை அந்தக் கிணற்றடி குளிர்ச்சியாக வைத்திருந்தது.
மெதுவாய் அவனும் கோபம் தீர குளிர்ந்தான்.
இந்தக் கிணற்றடி அவனுக்கு மிகவும் பிடித்த
இடம். இப்போது மட்டுமல்ல, குழந்தை பருவத்திலேயே.
அக்னி வெயில் வாட்டி எடுத்தாலும் குளிர்ச்சியாய்
கிணற்று நீரை இறைத்து தலையில் ஊற்றிக்கொள்வது சிறுவயதில் அவனது வாடிக்கையான பழக்கம்.
வாலிபத்தில் கூட சம்விருதா மீது அவன் காதலில்
விழுந்தது இதே கிணற்றடியில் தான். பதின்வயதின் முடிவில் கல்லூரிப்படிப்பை சென்னையில்
விடுதியில் தங்கி படித்தவன் விடுமுறைக்கு வந்த போது தான் அவனது இதயத்தில் காதல் நுழைந்தது.
காலையில் பயணக்களைப்புடன் வீட்டுக்குள் நுழைந்தவனை
குளித்துவிட்டு வரும்படி கோமதி பின்வாயிலுக்கு அனுப்ப அவனும் டவலுடன் அங்கே வந்து சேர்ந்தான்.
ஆனால் அவனுக்கு முன்னரே அங்கே யாரோ இளம் ரோஜாவண்ண
டிசைனர் தாவணியில் நின்றிருந்தார்கள். அது ஒரு இளம்பெண்.
இடை வரை நீண்டிருந்த கூந்தலை உலர்த்தியவள்
அதை உதற அதன் நுனியில் அமர்ந்திருந்த நீர்த்துளிகள் சாந்தனுவின் வதனத்தில் தெறித்தன.
சில்லிட்ட நீரைத் துடைத்துவிட்டு பார்க்க அங்கே
நின்று கொண்டிருந்தவள் சம்விருதா.
பனியில் நனைந்த மலர் என்ற பதத்திற்கு பொருள்
சேர்க்கும் விதத்தில் எவ்வித ஒப்பனையுமின்றி சுருள் கூந்தல் காற்றிலாட நின்றிருந்தாள்.
திடுதிடுப்பென அங்கே அவனை எதிர்பார்க்காத அதிர்ச்சி
பரிபூரணமாக அவளது விரிந்த கயல்விழிகளில் தெரிய, இளஞ்சிவப்பு இதழ்கள் திகைப்பில் இலேசாய்
விரிந்ததில் முத்துப்பற்கள் அழகாய் காட்சியளிக்க அவனது டவல் கோலத்தைக் கண்டதும் சுதாரித்தாள்.
“அச்சோ”
ஒற்றைக்கண்ணை மூடி மற்றொரு கண்ணால் வேறுபக்கம்
பார்த்தபடி பாவாடை கிணற்றடி நீரில் நனைந்து விடாது தூக்கிப் பிடித்தபடி ஓட எத்தனித்தவள்
பாசியில் கால் வைத்து விழப் போக சாந்தனு வேகமாக அவளைத் தாங்கினான்.
அந்நொடியில் கண்கள் கலந்து இதயங்கள் சங்கமித்து
இனிய இலயமாய் உதயமானது அவர்களின் காதல்.
பழைய நினைவுகளின் ஆக்கிரமிப்பைக் காகங்களின்
குரல் கலைத்துவிட நிதர்சனத்தின் கசப்பை உணர்ந்தவனாய் முகம் இறுகினான் சாந்தனு.
இதே காட்சியை மாடியறையின் வராண்டாவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் சம்விருதா.
- Get link
- Other Apps
Comments
wow.. super scene
ReplyDeleteஅன்புடை அன்றிலே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 2)
இதான்... பிரச்சினையே..! ஏதோவொரு அசந்தர்ப்பமா சூழ்நிலையில புருசனும் பொண்டாட்டியும் பிரிஞ்சிருந்தா, எடுத்ததுக்கெல்லாம் உடனே நின்னா குத்தம், உட்கார்ந்தா குத்தம்ன்னு குத்தி குத்தி கிளறி விட்டே நிறைய ஜோடிங்க திரும்ப ஒண்ணு சேர்ந்தும் இருக்காங்க, இதனாலேயே நிறைய ஜோடிங்க நிரந்தரமா பிரிஞ்சும் இருக்காங்க...
அதான் உண்மையும் கூட.
போகட்டும், இந்த சாந்தனு & சம்விருதா ரெண்டு பேரும் திரும்ப ஒண்ணு சேரப் போறாங்களா..? இல்லை பிரியப் போறாங்களான்னு பொறுத்திருந்து பார்க்கணும்.
😆😆😆
CRVS (or) CRVS 2797