அன்பு 3
- Get link
- Other Apps
“நொடிப்பொழுதில்
காதல் கொண்டோம்; கணப்பொழுதில் கரம் பிடித்தோம்; நிமிடப்பிரிவைக் கூட நொந்து கொண்டோம்.
இன்றோ முகம் காண பிடிக்காமல் திரும்பி நிற்கிறோம் இருவரும்”
“அங்க உக்காந்து என்ன புத்தகத்தைத் திருப்பி
திருப்பி புரட்டிட்டிருக்க சம்மு? கல்யாணத்துக்கு லீவ் போட்டுட்டு வந்திருக்கனு பேரு
தான்”
கீழ்த்தளத்திலிருந்து கேட்ட அன்னையின் உரத்தக்குரலில்
புத்தகத்திலிருந்து கவனம் கலைந்தாள் சம்விருதா.
“ப்ச்”
ஒட்டுமொத்த சலிப்பையும் ஒற்றை ‘ப்ச்’சில் கொட்டிச்
சொன்னவளின் குரலைக் கேட்டு மடிக்கணினியும் கையுமாக அமர்ந்திருந்த சாந்தனு அதிருப்தியாய்
விழித்தான்.
“என்ன ப்ச்? நேத்து பொன்னுருக்குனப்பவும் நீ
இப்பிடி தான் புக்கும் கையுமா இருந்தியாம்... அத்தை சொன்னாங்க... ஆடிட்டர் ஆகுறதுக்கு
இப்பவே பிராக்டிஷ் பண்ணுறிங்களோ?”
எகத்தாளமாக வினவியபடி மீண்டும் மடிக்கணினிக்குள்
புதையவிருந்தவனை சம்விருதாவின் விரல் சொடுக்கும் சத்தம் நிமிர்ந்து பார்க்க வைத்தது.
அவன் முன்னே நின்று கொண்டிருந்தவள் பட்டென
அவனது மடிக்கணினியின் திரையை வேகமாக அறைந்து மூடவும் சாந்தனுவுக்குக் கோபம் வந்துவிட
“ஏய் அறிவிருக்காடி?” என்று கத்தியபடி எழுந்தான்.
“உன்னை விட நிறையவே இருக்கு... நீ பார்டர்ல
பாஸ் பண்ணுன கிளாஸ் எல்லாத்துலயும் நான் டாப்பராக்கும்”
அலட்சியமாய் கூறினாள் சம்விருதா.
“அந்த
டாப்பர் திமிரு தானே நீ ஆடாத ஆட்டம் ஆடுறதுக்குக் காரணம்” என்றான் சாந்தனு.
“அப்ப பொண்டாட்டி நல்லா படிக்குறாளே, நம்மளை
விட டாப் பொசிசனுக்குச் சீக்கிரம் போயிடுவாளேங்கிற பொறாமையும் இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்சும்
தானே நீ ஆடுற ஆட்டத்துக்குக் காரணம்” என்றாள் அவளும் சளைக்காமல்.
“படிச்சா பணிவு வரணும்டி... உன்னை மாதிரி கர்வப்படக்கூடாது”
“அதை நீ சொல்லுறியா? என்னை மட்டும் எக்சாமுக்குப்
படிக்கிறதை விட்டுட்டு போனு துரத்துற, நீ மட்டும் ஏன் லேப்டாப்பும் கையுமா உக்காந்திருக்க?
உன் வேலை மட்டும் பெரிசு... என் படிப்பு ஒன்னுக்கும் உதவாதது... அப்பிடி தானே?”
சாந்தனு எரிச்சல் மேலிட “உன் கிட்ட மனுசன்
பேசுவானாடி? நான் வந்ததுல இருந்து முடிஞ்சளவுக்கு இயல்பா இருக்கேன்... நீ தான் ஆமை
ஓட்டுக்குள்ள சுருங்கிக்கிற மாதிரி புக்குக்குள்ள சுருங்கி ஓவர் ஆக்ட் பண்ணுற... எப்பிடியோ
போய் தொலை” என்றபடி அவ்வறையை விட்டு வெளியேறினான்.
வெளியே சென்றவன் கையோடு மடிக்கணினியை எடுத்துக்
கொண்டு தான் சென்றான். அவன் எங்கே செல்கிறான் என்று மாடிப்படியிலிருந்து எட்டிப் பார்த்தாள்
சம்விருதா.
பெரியவர்கள் கூடத்தில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருக்க
செயற்கையாய் வரவழைக்கப்பட்ட புன்னகையோடு அமர்ந்தவன் அவர்களோடு பேசியபடி வேலையை மடிக்கணியில்
கவனிக்க ஆரம்பித்தான்.
“சம்மு எங்கடா?” என்ற அன்னையின் கேள்விக்கு
“அவ படிச்சிட்டிருக்காம்மா” என்றவன் வேலையைத்
தொடர்ந்தான்.
மீண்டும் அறைக்குள் புகுந்த சம்விருதாவால்
புத்தகத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. சாந்தனுவின் சொற்களே காதுக்குள் ரீங்காரமிட்டது.
ஏன் நாங்கள் இப்படி மாறிப்போனோம்? ஒருவரை ஒருவர்
வார்த்தையால் குத்திக் கிழிக்கவா காதலித்தோம்?
இதே எண்ணம் தான் கீழே பெரியவர்களிடம் போலி
கலகலப்பைக் காட்டிப் பேசிக்கொண்டிருந்த சாந்தனுவுக்கும்.
எங்கள் காதலில் குறைவில்லை. ஆனால் உறவு உறுதிபெற
செய்ய வேண்டிய முயற்சி எதையும் நானும் அவளும் செய்யவில்லையோ!
யோசனையுடன் அமர்ந்திருந்தவனின் தோளில் அழுத்தமாகப்
படிந்தது அவனது தந்தையின் கரம்.
“என்னப்பா?” என்று திடுக்கிட்டு விழித்தவனிடம்
“ரூம்ல பேசுறப்ப கொஞ்சம் சத்தத்தைக் குறைச்சு
பேசுங்க... வராண்டால நாங்க நடமாடுனதால கண்டுக்கல... இதுவே உங்க தாத்தா பாட்டியா இருந்தா
அவங்க மனசு என்ன பாடுபடும்னு யோசி... உங்க சண்டைய சென்னைக்குப் போய் கூட வச்சுக்காலம்”
என்றார்.
சாந்தனு தந்தையின் முன்னே கூனிக் குறுகிப்
போனான்.
“சாரிப்பா”
விஸ்வநாதனோ “எவ்ளோ ஈசியா தகப்பன் கிட்ட இறங்கி
வர முடியுது? இதையே உன் பொண்டாட்டி கிட்டவும் செஞ்சிருந்தா ஏன் இந்த நிலமை வந்திருக்கப்
போகுது?” என்று கேட்டுவிட்டு மீண்டும் தன்னைப் பெற்றவரிடம் உரையாட ஆரம்பிக்க சாந்தனுவுக்கு
வலித்தது.
அந்த வலி பிரவாகமாகப் பரவி பழைய நினைவுகளைக்
கிளறி விட்டது.
கல்லூரி முடித்துவிட்டு தானியங்கி வாகனங்கள்
உற்பத்தி நிறுவனத்தில் அவனுக்கு உதவி மேலாளர் பணி கிடைத்திருந்த சமயம் அது. ஆஃபர் லெட்டர்
வந்திருக்க அதை பெரியவர்களிடம் காட்டிக் கொண்டிருந்தான்.
அப்போது மொபைல் சிணுங்க அதில் ‘சம்மு’ என்று
வரவும் “அர்ஜெண்ட் கால்... பேசிட்டு வந்துடுறேன்” என்றபடி மெதுவாக பின்பக்கத்து கிணற்றடிக்கு
நழுவினான்.
மறுமுனையில் சம்விருதாவோ “சாருக்கு ஆஃபர் லெட்டர்லாம்
வந்துருக்கு போலயே?” என்று கேட்க
“நீ இங்க ஸ்பை கேமரா எதுவும் வச்சிருக்கியா?
என்ன நடந்தாலும் உனக்கு உடனே தெரிஞ்சிடுது” என்றபடி கிணற்றடி திண்டில் அமர்ந்து கொண்டான்
சாந்தனு.
“ஆமா! ஆனா இது எலக்ட்ரானிக் ஸ்பை கேமரா இல்ல...
ஹியூமன் ஸ்பை கேமரா”
“அது யாருடி?”
“என்னது ‘டி’யா? ஒழுங்கா சம்முனு கூப்பிட்டா
கேட்ட கேள்விக்கு பதில் வரும்”
“சரிங்க சம்மு மேடம்... யாரு உங்களோட ஹியூமன்
ஸ்பை கேமரா?”
“வேற யாரு? உங்கம்மா தான்... அப்புறம், ஜாப்
கிடைச்சிடுச்சு... ஹவ் டூ யூ ஃபீல் நவ்?”
“புதுசா நிறைய பொறுப்பு வந்த மாதிரி ஃபீல்
ஆகுது... இந்த வேலையில நிறைய கத்துக்கணும்... உன்னை ராணி மாதிரி வச்சு வாழுற அளவுக்குச்
சம்பாதிக்கணும்னு ஏகப்பட்ட பொறுப்பு இப்பவே என் முதுகுல ஏறிடுச்சு” என்றான் சாந்தனு.
சம்விருதா அவசரமாக இடையிட்டவள் “என்னை சந்தோசமா
வச்சுக்க அவ்ளோ கஷ்டப்பட வேண்டாம்... நானும் ஐ.பி.சி.சி முடிச்சிட்டு ஃபைனல் எக்சாமும்
முடிச்சிட்டேனா ப்ராக்டிஷுக்குப் போயிடுவேன்... சோ என்னைப் பார்த்துக்குற அளவுக்கு
நானே சம்பாதிப்பேன்” என்றாள்.
சாந்தனுவோ “சரிங்க ஆடிட்டர் மேடம்... ஆனா காலம்
காலமா புருசன் தானே பொண்டாட்டிய பார்த்துக்குறான்... இதுல நீங்க மட்டும் விதிவிலக்கா
இருக்கணும்னு நினைக்குறிங்களே! என்னங்க இது?” என்று கேலியாக கேட்க
“சிம்பிள்! என் புருசனுக்கு நான் பொண்டாட்டியா
மட்டும் தான் இருக்க விரும்புறேனே தவிர ஃபினான்ஷியல் பர்டனா இல்ல... ரெண்டு பேரும்
சம்பாதிப்போம்... அப்ப தான் லைஃபும் ஸ்மூத்தா போகும்” என்று விளக்கமளித்தாள் சம்விருதா.
இருவரும் பேசிக்கொண்டிருந்த சுவாரசியத்தில்
பக்கத்தில் யாரும் இருக்கிறார்களா என்பதைக் கூட கவனிக்கவில்லை. ஆனால் சம்விருதாவின்
அன்னை அந்தப் பக்கம் எதேச்சையாக வந்துவிட அடுத்த நொடி மொபைல் அவளிடமிருந்து பறிக்கப்பட்டது.
பறிக்கபட்ட வேகத்தில் அழைத்தது யாரென பார்க்காமல் அழைப்பும் துண்டிக்கப்பட்டது.
அன்று சம்விருதாவுக்கு என்னவாயிற்றோ ஏதாயிற்றோ
என என்று பதறியதை அவன் மட்டுமே அறிவான்.
ஆனால் இம்மாதிரி தவிப்புகள், சின்ன சின்ன வலிகள்
இல்லாத காதலில் சுவாரசியம் ஏது! இப்போதும் அதே தவிப்பும் வலிகளும் இருக்கிறது. ஆனால்
அவற்றிற்கான காரணம் காதல் இல்லை. அவர்களிடையே சமுத்திரமாய் பெருகியிருந்த காதல் வற்றி
வெறும் கட்டாந்தரை மட்டுமே மிஞ்ச போவதற்கான அறிகுறி தான் அவை.
போதும் பழைய நினைவுகள் என்று அவற்றை மூட்டை
கட்டிவிட்டு அலுவலக வேலையில் ஆழ்ந்தான் சாந்தனு.
அதே நேரம் அவர்களின் அறையில் மீண்டும் புத்தகத்தில்
புதைய முயன்று கொண்டிருந்த சம்விருதாவோ அறைக்கதவு தட்டப்படவும் திறந்தாள். வெளியே அவளது
தந்தை நின்று கொண்டிருந்தார்.
“அப்பா”
“உன் கிட்ட விவாதம் பண்ணுறதுக்கு நான் வரலை...
இப்ப நீ சுயமா முடிவெடுக்கத் தெரிஞ்ச பெரிய மனுசி... அப்பன் பேச்சுலாம் இப்ப உன் காதுல
ஏறாதுனு நல்லாவே தெரியும்... நான் சொல்ல வந்தது ஒன்னே ஒன்னு தான்... சண்டை போடுங்க,
வாழ்க்கைய போராட்டமா மாத்தி நாசம் பண்ணுங்க... ஆனா அது எதையும் பெரியவங்க காதுல விழாத
மாதிரி பண்ணுங்க” என்றார் தியாகராஜன்.
“ஏன்பா இப்பிடிலாம் பேசுறிங்க?”
“வேற எப்பிடி பேச சொல்லுற? எப்பிடி பேசுனாலும்
நீயோ உன் புருசனோ பெத்தவங்க பேச்சை கேக்கப் போறது இல்ல... இப்பிடி சண்டை போட்டு வாழ்க்கைய
போராட்டக்களமா மாத்துறதுக்காகவா போராடி சாந்தனுவ கல்யாணம் பண்ணுன?”
கேட்டதோடு கிளம்பியும் விட்டார் அவர்.
இதே சாந்தனுவைக் கை பிடிக்க அவள் எப்படியெல்லாம்
வாதிட்டிருப்பாள்? அவர்களின் காதல் விவகாரம் வீட்டில் தெரிந்ததிலிருந்தே பிரச்சனை ஆரம்பித்துவிட்டது.
சாந்தனுவிற்கு ஆஃபர் லெட்டர் வந்த கையோடு அவனிடம்
சம்விருதா போனில் பேசியதை செண்பகாதேவி கவனித்துவிட்டார். அதிர்ச்சியோடு மொபைலைப் பிடுங்கியதோடு
அழைப்பையும் துண்டித்தார்.
“மா...” என்றவளைக் கண்டுகொள்ளாது அவளது கன்னத்தில்
பளாரென்று அறைந்தார் செண்பகாதேவி.
“உன்னைப் படிக்குறதுக்குச் சென்னைக்கு அனுப்புனா
என்ன காரியம் பண்ணிட்டிருக்கடி?”
செண்பகாதேவி அவளை இழுத்துச் சென்று கணவர் முன்னே
நிறுத்தியவர் அவள் பேசிய அனைத்தையும் சொல்லிவிட தியாகராஜனுக்கு அதிர்ச்சி.
சம்விருதாவோ தயக்கமின்றி “நான் சாந்தனு கிட்ட
பேசிட்டிருந்தேன்... அவனும் நானும் லவ் பண்ணுறோம்பா” என்றாள்.
அதை கேட்டதும் கொதித்துக் கொண்டிருந்த செண்பகாதேவியின்
மனம் சற்று அடங்கியது. இருப்பினும் அவருக்குத் தயக்கம் தான்.
“தனு இப்ப பெரிய வேலைக்குப் போகப் போறான்...
மதினி மனசுல என்ன நினைச்சிட்டிருக்காங்கனு தெரியாம நம்ம எப்பிடிங்க அவங்க கிட்ட பேசுறது?”
என்றார் தியாகராஜனிடம்.
சம்விருதாவோ “எதை பத்தியும் எனக்குக் கவலை
இல்ல... நான் சாந்தனுவ லவ் பண்ணுறேன்... அவனைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்... இதுதான்
என்னோட ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் டிசிசன்” என்று விடாப்பிடியாய் தன் பிடிவாதத்தில் நின்றுவிட்டாள்.
இப்படியெல்லாம் பிடிவாதம் பிடித்து தொண்டை
வறள பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்து அடங்காப்பிடாரி பட்டத்தை வாங்கி கட்டிக்கொண்டு
எதற்கும் தளராமல் மணமேடை வரை வந்து அவன் கரத்தைப் பற்றியவளுக்கு இன்று என்னவாயிற்று?
- Get link
- Other Apps
Comments
அன்புடை அன்றிலே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 3)
ஆரம்பத்துல ரெண்டு பேருக்குள்ளேயும் டெர்ம்ஸ்
நல்லாத்தானே போயிட்டிருந்தது.... அப்புறம் என்னாச்சு...? சாந்தனுவோட நலன்ல இவ அக்கறை காட்டறதும், சம்ருதியோட படிப்பு விஷயத்துல இவன் சர்க்கரையா பேசுறதும்ன்னு
எல்லாமே ஸ்மூத்தா தானே
போயிட்டிருந்தா போல. இதோ அவனுக்கு ஆஃபர் லெட்டர் வந்ததுமே, இவ குதிச்சுக்கிட்டு அவனை போன்லயே வாழ்த்துறதும், அவன் அதுக்கு நிறைய சம்பாரிச்சு உன்னை ராணி மாதிரி வைச்சுக்கணும்ன்னு உளறதும், அதுக்கு அவ ஐ.பி.சி.சி. & பைனல் எக்ஸாம் முடிச்சு ப்ராக்டிஷுக்குப் போயிட்டா என்னை நானே பார்த்துக்கிற அளவுக்கு நானே சம்பாதிச்சுப்பேன்னு சொல்றதும், பதிலுக்கு அவன் பொண்டாட்டியை புருசன் பார்த்துக்கிறது தான் காலம்காலமா ஆண்கள் குத்தகைக்கு எடுத்திக்கிற மனுதர்மம்ன்னு டையலாக் விடறதும், அதுக்கு அவ என் புருசனுக்கு நான் பொண்டாட்டியா மட்டும் தான் இருக்க விரும்புறேன், நாட் லைக் எ ஃபினான்ஷியல் பார்டனா இருக்க விரும்பலை... ரெண்டு பேருமே தோழா, தோழா தோள் கொடுத்துப்போம்
அப்ப தான் லைஃப் ரொம்ப ஸ்மூத்தா போவும், இல்லைன்னா கூட்ஸ் வண்டி மாதிரி கவுத்துக்கும்ன்னு எதிர்கால வாழ்க்கை வரைக்கும் ரோடு போட்டவங்களுக்கு இடையே, அப்படி என்ன நடந்துடுச்சுன்னு இத்தனை பெரிய விரிசல் விமுந்ததுன்னு தெரியலையே.?
ஈகோவாலயா ? இல்லை
சரியான புரிதல் இல்லாததாலயா ?
எதுவா இருந்தாலும்,
காதலுக்கு கண் இல்லை ; கல்யாணத்துக்கு காதில்லைன்னு,
காதலுக்கு முன்னாடி ஸ்பெஷலா, தெரிஞ்சதெல்லாமே, கல்யாணத்துக்குப் பின்னாடி
எப்படி அன்ஸ்பெஷலா மாறிடுச்சுன்னுத்தான் தெரியலையே..?
இவங்க காதல் சரியில்லையா..?
இல்லை, இவங்க ரெண்டு பேரும் காதலிக்கவே இல்லையா..?
இல்லை, இவங்களோடது காதலே இல்லையா...?
என்ன கண்றாவிடா இது...????
😀😀😀
CRVS (or) CRVS 2797