அன்பு 5
- Get link
- Other Apps
“வாழ்க்கை
வயலில் எதிர்பார்ப்புகளை விதைத்து கருத்து வேறுபாடுகளை நீராய் இறைத்து ஏமாற்றத்தை அறுவடை
செய்தவர்கள் நாம்! வெறுப்பெனும் மிச்சமீதி நிரம்பியிருக்கும் வாழ்க்கை வயலில் அடுத்த
விளைச்சலுக்குப் பயிரிடப் போவது எதை?”
“இன்னைக்கு நவீனோட பொண்ணுக்கு ஃபர்ஸ்ட் பர்த்டே...
ஹோட்டல்ல செலிபிரேட் பண்ணுறாங்க... ஈவ்னிங் போயிட்டு வந்துடுவோம் சம்மு”
“சரி தனு... என்ன கிப்ட் வாங்கிட்டுப் போகலாம்?”
“குழந்தைனா வேற என்ன எதிர்பார்க்கப் போகுது?
பிங் கலர்ல ஒரு டெடி வாங்கிட்டுப் போவோம்”
“அது எப்பிடி நீ ப்ரீ-டிஃபைண்டா யோசிக்கிற
தனு? பொண்ணுனா பிங் கலர் டெடி தான் பிடிக்கணுமா? அவளுக்குனு வேற எதாச்சும் ஆசைகள் இருக்கும்டா”
“அச்சோ! குழந்தைக்கு அவ்ளோ தூரம் யோசிக்க வராது
சம்மு... நீ ஓவரா யோசிக்காம உன் ஆபிசுக்குக் கிளம்பு”
சம்விருதா கிளம்ப எத்தனிக்கையில் சாந்தனு யோசனையில்
ஆழ்ந்தான்.
நவீனுக்கும் ப்ரியாவுக்கும் திருமணமாகி ஒரு
வருடம் தான் ஆகிறது. ஆனால் தனக்கும் சம்விருதாவுக்கும் மணமாகி இரண்டாண்டுகள் கழிந்து
விட்டது.
இருப்பினும் சம்விருதா திருமணமாகி முடிந்த
கையோடு கேட்ட வாக்குக்காக குழந்தை வேண்டாமென அவர்கள் தள்ளிப் போட்டது தவறோ என்று வழக்கம்
போல தவிப்போடு சிந்தித்தான் அவன்.
சம்விருதாவின் மீது கொண்ட காதலுக்காக அனைத்தையும்
தனது குழந்தை ஆசையைத் தள்ளி போட்டவன் தான் அவன். அப்படிப்பட்டவன் தான் இன்று இப்படி
மாறிவிட்டான்.
பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்த சம்விருதாவை
நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது சாந்தனுவின் சிரிப்பு சத்தம்.
அவர்களின் அறை அமைந்திருக்கும் மாடி வராண்டாவில்
அங்குமிங்குமாக அலைந்தபடி நண்பனுடன் மொபைலில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான் அவன்.
“அதர்வா தானே? அவன் தான் டெய்லி அஸ்வதி கூட
லவ்வாங்கியா பேசி தீர்க்குறானே... சும்மா சொல்லக்கூடாது... அஸ்வதி ரொம்ப நல்லப்பொண்ணுடா...
வசதியான வீட்டுப்பொண்ணா இருந்தாலும் ரொம்ப காம் அண்ட் ஹம்பிள்”
அவன் பேசிக்கொண்டிருக்க சம்விருதாவோ பெருமூச்சு
விட்டபடி அவனைக் கடந்து கீழ்த்தளத்துக்குச் சென்றுவிட்டாள்.
கீழே சமையலுக்கான வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
இதோ இன்னும் ஐந்தே நாட்களில் திருமணம். திருமணம் பெண் வீட்டார் பொறுப்பில் தான் நடக்கவிருக்கிறது.
எனவே மாப்பிள்ளை வீட்டாருக்குப் பெரிதாக வேலை
ஒன்றுமில்லை. அதனால் சாவகாசமாக கிடைத்த விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
“கடைசியா நம்ம ஒன்னா சேர்ந்து இருந்தது தனுவோட
கல்யாணத்துல தான்... ரெண்டு வருசமாச்சுல்ல... இனிமே அடுத்து எப்ப ஒன்னு கூடுவோமோ?”
குலசேகரநாதன் ஏக்கமாக கூறியபடி கீரையை ஆய்ந்து
கொண்டிருந்தார்.
“அடுத்து விமலுக்கும் கமலுக்கும் அவங்களை மாதிரியே
ரெட்டைப்பிறவிங்களா பொண்ணு பார்த்து கட்டி வைக்கணும் சேகர்... நாங்களும் பொண்ணு தேடுறோம்...
ஆனா ட்வின்ஸா பொண்ணு கிடைக்க மாட்றாங்க” என்றார் குருநாதன்.
சுனில் தன்னருகே அமர்ந்திருந்த கமல் மற்றும்
விமலிடம் “சுத்தம்! மாமா ஜீன்ஸ் படத்துல வர்ற நாசர் மாதிரி பேசுறார்... உங்களுக்குக்
கல்யாணம் ஆன மாதிரி தான்” என்று உசுப்பேற்ற அவர்களோ அவனை முறைத்து வைத்தனர்.
இவர்களின் அரட்டைக்குக் காது கொடுத்தபடியே
கீழ்த்தளத்துக்கு வந்த சாந்தனுவும் அதில் கலந்து கொண்டான்.
அப்போது “பார்வதி” என்று அழைத்தபடி வீட்டிற்குள்
வந்தார் பக்கத்துவீட்டு கோதை பாட்டி.
வந்தவரின் கரத்தில் இருந்த பாத்திரத்தில் நிரம்பியிருந்தது
மணத்தக்காளி வற்றல்.
“உன் பொண்ணுங்க எல்லாரும் கல்யாணத்துக்காக
வீட்டுக்கு வந்திருக்காங்கனு இன்னைக்குத் தான் என் மருமகள் சொன்னா... நான் நேத்து சாயங்காலம்
தான் காசிக்குப் போயிட்டுத் திரும்புனேன் பார்வதி... இந்தா மணத்தக்காளி வத்தல்... இதை
போட்டு வத்தக்குழம்பு வச்சுக் குடு... உன் பேரப்புள்ளைங்களுக்குத் தெம்பா இருக்கும்”
என்று பாத்திரத்தைப் பார்வதியிடம் திணித்தார் அவர்.
கூடவே பேசிக்கொண்டு ஹால் வரை வந்தவர் பார்வதியின்
மருமகன்களைக் குசலம் விசாரித்தபடியே பார்வையை சம்விருதாவின் பக்கம் திருப்பினார்.
“ஏம்மா சம்மு! எப்ப நீ நல்லச்சேதி சொல்லப்
போற? கல்யாணம் ஆகி ரெண்டு வருசமாச்சே... நீயும் உன் புருசனும் எப்ப தான் கொள்ளுப்பேரனை
எங்க கண்ணுல காட்டப் போறிங்க?”
அவர் அவ்வாறு கேட்டதும் அங்கே அமைதி!
ஆனால் அந்த பாட்டியோ “ஏன் பார்வதி பெரியவங்க
நீங்க தான் நல்லதா நாலு வார்த்தை சொல்லி உன் பேரப்பசங்களுக்குப் புரியவைக்கணும்...
நான் கிளம்புறேன்... வீட்டுல ஏகப்பட்ட வேலை இருக்கு” என்று கொளுத்திப் போட்டுவிட்டு
விடைபெற்றார்.
பார்வதியும் நீலகண்டனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்
கொண்டனர். அவர்களுக்கு இளைய தலைமுறையினரின் வாழ்க்கையில் தலையிடும் பழக்கம் என்றுமேயில்லை.
மௌனமாகச் சமையலறை பக்கம் அவர் நகர்ந்துவிட
நீலகண்டனோ வேறேதோ நகைச்சுவையாய் கூறி பேச்சை வேறுபக்கம் திருப்பினார்.
மற்றவர்கள் அனைவரும் அவரது பேச்சில் கவனம்
செலுத்த ஆரம்பிக்க சாந்தனுவோ வழக்கமான குற்றம் சாட்டும் பார்வையோடு சம்விருதாவை நோக்கினான்.
இதற்கெல்லாம் காரணம் நீ தானே என்று சொல்லாமல் சொன்னான் அவன்.
இப்போது குற்றம் சாட்டி என்ன ஆகப்போகிறது?
அவள் வைத்த கோரிக்கைக்கு முன்பின் யோசிக்காமல் செவிசாய்த்தது உன் தவறு தான் மடையா என்றது
அவனது மனசாட்சி.
சொல்லப் போனால் குழந்தையைப் பற்றிய திட்டமிடல்
அவர்களின் முதலிரவன்றே ஆரம்பித்து விட்டது.
காதலியே மனைவியாய் வாய்த்த களிப்புடன் அருகே
வந்த சம்விருதாவை நெருங்க எத்தனித்த சாந்தனுவை சம்விருதாவின் தயக்கமான முகபாவம் தடுத்து
நிறுத்தியது.
“என்னாச்சு சம்மு? ஏன் ஒரு மாதிரி இருக்குற”
அக்கறையாய் அவன் கேட்க சம்விருதாவோ தனது மனதில்
இருப்பதை மறைக்காமல் பேச ஆரம்பித்தாள்.
“ரெண்டு வருசத்துல நான் ஃபைனல் முடிச்சிடுவேன்
தனு... அப்புறமா நம்ம பேபி பத்தி யோசிக்கலாமே... பிகாஸ் பேபி வந்துட்டா குறைஞ்சது ஃபைவ்
இயர்சுக்கு என்னால பேபிய தவிர வேற எதை பத்தியும் யோசிக்க முடியாதுடா”
அவள் முதலிரவு அறையில் அவ்வாறு பேசிய போதே
அதிர்ந்தவன் தான் சாந்தனு. குழந்தையும் பெற்றுக்கொண்டு படிப்பையும் கவனிக்கும் எத்தனையோ
பெண்களை உதாரணம் காட்டினான் அவன்.
“நீ சொல்லுறதுலாம் சரி... ஆனா கொஞ்சம் யோசிச்சுப்
பாரு, பேபி வந்ததுக்கு அப்புறம் பேரண்டிங்ல உன்னோட பங்குனு எதுவுமே இல்ல... அதுக்குச்
சாப்பாடு குடுக்குறதுல ஆரம்பிச்சு தூங்க வைக்குறது வரைக்கும் எல்லாமே என்னோட பொறுப்பு
தானே... சப்போஸ் குழந்தைக்கு இயல்பா உடம்பு முடியலைனா கூட எல்லாரும் என்னைத் தான் குறை
சொல்லுவாங்களே தவிர அப்பா சரியா கவனிக்கலனு உன்னைக் குறை சொல்ல மாட்டாங்க... ஒரு ஆம்பளையா
குழந்தை பெத்துட்டுப் படினு நீ ஈசியா சொல்லலாம் தனு... ஆனா குழந்தை வந்ததுக்கு அப்புறமா
ஒரு அம்மாவா என்னோட கவனம் குழந்தை மேல மட்டும் தான் இருக்கும்... அப்பிடி தான் இருக்கணும்ங்கிறது சமுதாயம் பொண்ணுங்களுக்குப்
போட்டிருக்குற விதி... அதை என்னால மீற முடியாது... சோ படிப்பை முடிச்சிட்டுக் குழந்தைய
பத்தி யோசிப்போமே.. ப்ளீஸ்”
பெண்களின் வாழ்க்கை திருமணம், குழந்தைப்பேறுக்குப்
பிறகு அடையும் நிதர்சனமான மாற்றங்களை சம்விருதா ஒளிவுமறைவின்றி கூறிவிட சாந்தனுவும்
அவள் மீதிருக்கும் அளப்பரிய காதலால் சம்மதித்துவிட்டான்.
உடனே தனியே சென்று உறங்க சென்றவனை வேகமாகத்
தடுத்தாள் சம்விருதா.
“நீ தானம்மா பேபி வேண்டாம்னு சொன்னது... அதான்
தனியா தூங்கப் போறேன்” என்றான்.
சம்விருதாவோ அவன் தலையில் குட்டிவிட்டு “பேபி
மட்டும் தானே வேண்டாம்னு சொன்னேன்டா... சரியான மக்குப்பையன் நீ” என்று சிணுங்க புரிந்து
கொண்டவன் அவளை விட்டுப் பிரிந்தால் தானே!
இப்போது யோசித்தால் அவளது பேச்சுக்குத் தலையாட்டியது
எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது புரிந்தது. சொல்லப் போனால் அவளது புத்தக மூட்டைகளை
மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்துமளவுக்கு ஆத்திரம் கூட வந்தது.
ஆனால் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து
என்ன பிரயோஜனம்? இனி இவ்வாறு செய்வதால் மட்டும் அவர்கள் மனமொத்த தம்பதிகளாக மாறி பதினாறும்
பெற்று பெருவாழ்வு வாழவா போகிறார்கள்?
மனமெங்கும் வெறுப்பு மண்ட அங்கிருந்து எழுந்து
பின்கட்டு தோட்டத்தில் இருக்கும் கிணற்றடியை நோக்கிச் சென்றான் அவன்.
வழக்கம் போல பெற்றவர்கள் சங்கடத்துடன் நேரத்தைக்
கடத்த சம்விருதாவோ ஆச்சியைத் தேடி சமையலறைக்குச் சென்றாள்.
“ஆச்சி எனக்கு மோர் வேணும்” சலுகையாய் கேட்டபடி
அவரைக் கட்டிக்கொண்டாள் அவள்.
ஒரு தம்ளரில் கொத்துமல்லி தழை, பச்சைமிளகாய்,
உப்பு போட்டு பெருங்காய நறுமணத்துடன் மோரை அவள் கையில் திணித்தார் பார்வதி.
இன்னொரு தம்ளரும் அருகே இருக்க “இது யாருக்கு?”
என்று கேட்டவளிடம்
“தனுக்குத் தான்... அவனுக்கும் மோர் குடிக்க
பிடிக்கும்ல... அவன் பின்வாசல் கிணத்தடில தான் இருக்கான்... இதை அவனுக்குக் குடுத்துட்டு
நீயும் அங்கயே அவன் கூட பேசிட்டிரு போ” என்று முதுகில் கை வைத்து தள்ளாத குறையாக அவளை
அங்கிருந்து இரண்டு தம்ளர்களுடன் வெளியேற்றினார் பார்வதி.
அவள் செல்லவும் “காசி விஸ்வநாதா! என் பேரன்
பேத்திக்கு நீ தான் சீக்கிரம் ஒரு வழிய காட்டணும்” என்று வேண்டிக்கொண்டார்.
சம்விருதா கிணற்றடிக்குச் சென்றவள் மொபைலை
நோண்டிக் கொண்டிருந்த சாந்தனுவிடம் மோர் தம்ளரை நீட்ட அவனோ வாங்க விருப்பமின்றி அமர்ந்திருந்தான்.
“சரியான கல்லுளிமங்கன்” என்று வாய்க்குள் முணுமுணுத்தவள்
“ஆச்சி தான் உனக்குக் குடுக்கச் சொன்னாங்க” என்றாள் எங்கோ பார்த்தபடி.
ஆச்சி என்ற மந்திரவார்த்தைக்குக் கட்டுப்பட்டு
தம்ளரை வாங்கிக் கொண்டவன் பின்னர் மோரின் நறுமணத்திலும் அருஞ்சுவையிலும் மயங்கி சுவைத்து
அருந்தத் துவங்கினான்.
சம்விருதா அங்கேயே நிற்கவும் “நீ ஏன் இங்க
நிக்குற?” என்ற கேள்வி வேறு!
அவளோ “ஆச்சி தான் உன் கூட பேசிட்டிருக்க அனுப்பி
வச்சாங்க” என்றாள் அசுவாரசியமாக.
சாந்தனுவோ நக்கலாகச் சிரித்தபடி மோரினை அருந்தினான்.
“அன்னைக்கு நான் கேட்ட கேள்விய இன்னைக்குப்
பக்கத்து வீட்டு ஆச்சி கேக்குறாங்க... நாளைக்கு நம்ம குடும்பத்து ஆளுங்களே கேப்பாங்க...
என்ன பதில் சொல்லுறது?”
அவனது கேள்வியில் சிந்தனை படர்ந்தது அவள் முகத்தில்.
“உன்னோட பிடிவாதம், நிதர்சனத்தை யோசிக்காம
கனவுலகத்துல வாழுற உன்னோட குணம் இது ரெண்டும் தான் நம்ம வாழ்க்கைக்கு எமன் சம்மு”
மீண்டும் சிந்தனை பாவனை!
“ஏன் சைலண்டா நிக்குற? வழக்கமா புரட்சிப்பெண்னு
ப்ரூவ் பண்ணுறதுக்காக பக்கம் பக்கமா டயலாக் பேசுவியே... இப்ப என்னாச்சு?”
அவனது இந்தக் குத்தலில் எரிச்சல்பட்டு பேச்சை
ஆரம்பித்தாள் சம்விருதா.
“என்னை இவ்ளோ கேள்வி கேக்குறல்ல, ஒரு நிமிசம்
நீ உன்னோட பிஹேவியரை பத்தி யோசி... ஊர் உலகம் கேக்குதுனு குடுத்த வாக்கை குப்பையில
தூக்கிப் போட்டவன் நீ... பொண்டாட்டி பெரிய வேலைக்குப் போனா எனக்கு என்ன மரியாதை இருக்குனு
யோசிக்குற டிபிக்கள் மேள் சாவனிஸ்ட் நீ... உன்னோட காதலுக்காக நான் என்ன வேணும்னாலும்
செய்ய ரெடியா இருந்தேன் தனு... ஆனா நீ எனக்கு காதலால ஆர்டர் போடலை... ஆம்பளைங்கிற ஈகோல
ஆர்டர் போட்ட... சோ நானும் என் புரட்சிகரமான பொண்ணா மாற வேண்டிய கட்டாயம்... என்னை
குறை சொல்லுறதுக்கு முன்னாடி ஒரு பொண்ணுக்குப் புருசனா காதலை மட்டும் குடுத்தா போதும்னு
யோசிக்கிறியே, இந்தப் பிற்போக்குத்தனத்த மாத்திக்க ட்ரை பண்ணு... ஏன்னா என்னை மாதிரி
பொண்ணுங்களுக்குக் காதல் மட்டும் போதாது... எங்களுக்கு மரியாதையும் வேணும்... பொண்டாட்டினா
புருசனுக்குக் கீழனு நினைக்குற உன்னோட குணம் என்னைக்கும் எனக்கு மரியாதைய குடுக்காதுனு
தெரிஞ்சதுக்கு அப்புறம் உன் பிள்ளைய வயித்துல சுமக்க எனக்கு எப்பிடி மனசு வரும்?”
மனதிலிருப்பதைக் கொட்டிவிட்டுத் தம்ளருடன்
விறுவிறுவென வீட்டை நோக்கி சென்றுவிட்டாள் சம்விருதா.
சாந்தனுவோ பாதி மோர் நிரம்பிய தம்ளரை கிணற்றடி
திண்டில் வைத்துவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.
- Get link
- Other Apps
Comments
அன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 5)
எனக்கென்னவோ பேசாம படிச்சு முடிச்சிட்டே சம்மு சாந்தனுவை கல்யாணம் பண்ணியிருக்கலாம். இப்படி ஆத்துல ஒரு காலு சேத்துல ஒரு காலுன்னு இருக்கிறதாலத் தானே, ரெண்டு பேருக்குள்ளேயும் பிரச்சினையே வந்தது. தனு அவனோட கரியரை பார்த்த மாதிரி, இவளும் படிச்சு முடிச்சு வெல் செட்டில்ட் ஆன பிறகே கழுத்தை நீட்டியிருக்கலாம்.
அப்ப இந்த பிரச்சினை எல்லாம் வந்திருக்காதோ என்னவோ...?
அப்படியும் சொல்ல முடியாது, ஏன்னா சம்மு மாதிரி நிறைய பொண்ணுங்க வெறும் காதல் மட்டுமே போதும்ன்னு நினரக்கிறதில்லை, அதோட சுயமரியாதையையும்
எதிர்பார்க்கிறாங்க....அதுல தப்பும் இல்லைத்தானே...,?
ஆனா, சாந்தனு பண்ண பெரிய தப்பே கல்யாணம் ஆன புதுசுல
எல்லாத்துக்கும் மண்டையை , மண்டையை ஆட்டிட்டு, திடீர்ன்னு கோபத்தை காட்டினவுடனே அது வேற விதமா திசை திரும்பிடுச்சு. அப்படி பார்த்தா அவன் சம்முவை படிக்கவே வேணாம்ன்னு சொல்லலையே...! படிப்பு குழந்தை ரெண்டையும் பேலன்ஸ் பண்ணுன்னுத்தானே சொல்றான். சம்முவும் வீட்டுல இத்தனை பெரியவங்க இருக்கிறதுக்கு கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாம். பட், அவ அவனை மாதிரியே தப்பாவே புரிஞ்சுக்கிட்டதாலத் தான் இத்தனை பிரச்சினையும். அதனாலத்தான் சம்மு தனுவை
தப்பா புரிஞ்சுக்கிட்டதோட.. பொண்ணுங்களை தன்னோட காலடி கீழே போட்டு மிதிக்கிறானோன்னு... ஃபெமிலீசம் பேச ஆரம்பிச்சுட்டா.
இதெப்படி இருக்குன்னா....
ஒரு மூணெழுத்துல முட்டாளா ஆகிட்ட மாதிரித்தான் தோணுது.
பட், வாழ்க்கை வாழ்வதற்கு மேல் சாவனிஷமும் தேவையில்லை, ஃபெமிலீசமும் தேவையில்லை. கொஞ்சம்
புரிதலும், கொஞ்சம் விட்டுக் கொடுத்தலூம் இருந்தாலே போதும்... ஒரே வார்த்தை,
ஓஹோன்னு வாழ்க்கை வாழ்ந்திடலாம்.
😆😆😆
CRVS (or) CRVS 2797